Showing posts with label எதிலும் சேராதவை. Show all posts
Showing posts with label எதிலும் சேராதவை. Show all posts

Monday, August 27, 2012

புத்தர்



















எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ..
வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ..
போதிக்க நான்
புத்தனைத் தேடுகிறேன்..

அகப்பட்ட புத்தனோ 
'நானே புத்தனில்லை'
எனச் சொல்லிவிட்டு
தனியே நடந்து போகிறார்...

புத்தரே புத்தனில்லை
எனச் சொல்லிய பின்னர்
யார்தான் புத்தன்?

படம்: இணையத்தில் இருந்து - நன்றி

Tuesday, March 27, 2012

வலி

காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும் அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன்.
"அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான்.
"சரி ஏறு"
"போலாங் ணா" என்றான்.

"ஸ்கூலுக்குப் போறியா"
"இல்லீன்னா"

"அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க"
"வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு",  எனக்கு பக்கென்றது.

"எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா"
"நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல"

"இப்போ எங்க போயிட்டு வர்றே"
"வேலைக்கு ணா"

"என்ன வேலை"
"லேத் ணா"

"நீ ஒரே பையனா"
"இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது"

"வீட்ல வேற யாரு இருக்கா..."
"பாட்டி இருக்குது"

"அப்பாவோட அம்மாவா"
"அம்மாவோட அம்மா ணா"

"ம்ம்.. அப்பா"
"அப்பா இல்லண்ணா"

"இங்கதாண்ணா... நிறுத்துங்க.. எறங்கிக்கிறேன்" . வண்டியை விட்டு இறங்கியதும், "தேங்க்ஸ் ணா.." என்றான். "பார்த்துப் போப்பா" என்பதைக் கூட கேட்க நேரமில்லாமல், சாலையைக் கடந்து சிமென்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான்.

அங்கே இருந்து நானும் நகர்ந்தேன். ஏனோ தகிக்கும் வெயிலை விட.. மனது கனமாக இருந்தது. அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை விட, வேறொன்றையும் செல்ல இயலவில்லை.

Tuesday, July 5, 2011

நாலணா

கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு.

"காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது.



சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா?

நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ஒரு பென்னி, இரண்டு பென்ஸ் என காசுகளும், ஒரு பொருளை 67, 49, 99 காசுகள் என வாங்க முடியும். மீதி சில்லறைக் காசுகளை எண்ணிக் கொடுப்பார்கள்.

ஒரு நாணயம் ஒழிக்கப் படுகிறது என்றால், என்ன பொருள்.. இனிமேல் அந்தக் காசுக்கு எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியாது. அது செல்லாக் காசு. உயர்ந்து வரும் விலை வாசியைக் குறைக்க எந்த வழியும் தெரியவில்லை.

கவிஞர் சொல்வது போல, இன்னும் கொஞ்ச நாளில் ஐம்பது காசு நாணயங்களும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

நூறு காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது அழிந்து, நூறு ஒரு ரூபாய் சேர்ந்து நூறு ரூபாய் எனப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். பேருந்து டிக்கெட்டுகளில் இனி "காசுகள்" என்ற வார்த்தைகள் இருக்காது.

பொருளாதார வேகத்துக்கு, நம்மை இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம் நாட்டின் அறிஞர்கள். அவர்களுக்கு விலைவாசியைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

சத்தமாக சொல்லிக் கொள்ளலாம், எம் நாட்டில் சில்லறைகள் இல்லை என்று. மெதுவாக சொல்லுங்கள், இன்னும் எங்கள் நாட்டில் சோற்றுக்கும் வழியின்றி, உடைக்கும் வழியின்றி, உறங்க இடமின்றி தெருவோரங்களில் லட்ச லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி

Tuesday, December 21, 2010

உலரும் குருதி















ரீங்காரமிட்டு
சுற்றி சுற்றி வந்தது
பெரும் கொசுவொன்று...
இரண்டு மூன்று முறை
அடிக்க முயற்சித்தும் தப்பி விட
இம்முறை தவற விடக் கூடாதென
ஆடாமல் அமர
முன்கையில் வந்தமர்ந்து
குருதி ருசியில் சொக்கியது..

ஓங்கி அடித்த அடியில்
வெளிவந்த குருதி
இப்பொழுது
என் உடம்பிலும் இல்லை
கொசுவின் உடம்பிலும் இல்லை
காற்றில் உலர்ந்து கொண்டிருந்தது..!

படம்: இணையத்தில் இருந்து. நன்றி.

பின்குறிப்பு: கவனிக்க, இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை !! :)


Wednesday, November 17, 2010

சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ


இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியின் சுட்டி:
சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை.

நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.


Monday, November 15, 2010

சொல்லிக்கொடுத்த பாரதி..


தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன.

ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி.

சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி.

இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும்.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் மிக வாடித் துன்புற்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. "

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" - ஒரு சிறு பொறி கூட ஒரு பெரும் காட்டை அழித்து விடும் என்று அக்னிக் குஞ்சாய் முழங்குகிறார்.

"தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம்" - என்னும் வரிகளில் அந்த மா மனிதனின் உள்ளம் தெரிகிறது.

இன்னும் நிறைய இருக்கிறது, பாரதியைப் பற்றி எழுத நினைத்தால் எவ்வளவோ வந்து விழுகின்றன.. இன்னும் ஒரு நாள் மற்றொரு பதிவில்...

என்னையும் தமிழை நேசிக்க வைத்த மகா கவிக்கு என் நன்றிகள்.

***************
ஒரே பாரதி புலம்பல் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நானும் ஒரு சில வரிகள் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு பாரதியைப் போன்றவர்களும், எனக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்களுமே காரணம். இந்தப் பதிவு எனது நூறாவது பதிவு. இந்நேரத்தில் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக என் நன்றிகளையும், இந்த எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கூடவே பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கு - என் வணக்கங்களும் நன்றிகளும்.

படம் தந்து உதவிய கூகிளாண்டவருக்கு நன்றி.


Thursday, November 4, 2010

பட்டாசைச் சுட்டு சுட்டு..


நரகாசுரர்கள், கிருஷ்ணர்கள், தீபாவளி போன்றவை பொய் எனக் கூறினாலும்,

அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை எனக் கூறினாலும்,

இது திணிப்பு என்று கூறிக் கொண்டாலும்,

பெரிய கடைகளின் விளம்பரங்கள், காசை இழுக்கும் பண்டிகை, கரியாக்கும் பண்டிகை எனச் சொல்லிக் கொண்டாலும்.......................

"ஹை.. புது டிரஸ் நல்லா இருக்குப்பா.. இன்னும் ரெண்டு மத்தாப்பு பெட்டி வாங்கி கொடுங்க " என்ற நச்சரிப்பிற்கும்,

"இந்த தீபாவளிக்கு என் பையன் எடுத்து கொடுத்த புடவை" என்ற மகிழ்ச்சிக்கும்,

"பயிறு பாயசம் சூப்பரா இருக்கு" என்று வயிறு நிறைந்த நிறைவுக்கும்,

"எத்தனை நாள் ஆச்சு.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு.." என்பதற்கும்

இது போன்ற சிறு சிறு சந்தோசங்களுக்கு ஆகவேனும் அடுத்த வருடமும் வேண்டும் தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒரு பட்டாசுப் பாடல்:

Wednesday, October 6, 2010

துக்கம் மறையும் இரவு


இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று ஒரு வழக்கு உண்டு. ஆயிரம் கண்கள் இருக்கிறதோ இல்லையோ, இரவு என்பது நாம் இளைப்பாற ஏற்பட்டது என்றுதான் எனக்குப் படுகிறது. காலை எழுந்தவுடன் விழித்த கண்கள் ஓய்வை நோக்கி காத்திருக்கும் நேரம் இரவு. உடல் மனம் என அனைத்தும் ஓய்வெடுத்து அடுத்த நாளுக்கு தயாராவதும் இரவில்தான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் நாவலில் 'எல்லாருடைய துக்கத்தையும் மறக்கச் செய்யும் இரவு' என்று சொல்லியிருப்பார். ஆம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேதனைகள், பிரச்சனைகள், சங்கடங்கள் அவை எல்லாவற்றையும் மறந்து போகச் செய்யும் ஆற்றல் இரவுக்கு உண்டு.

நிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது.

எண்ணிப் பார்த்தால் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் ஒரு 'கால்' தான் வித்தியாசம். துக்கம் - தூக்கம்.

இரவில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதாவது செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் நம் கண்களை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த வார்த்தைகளைக் கூட ஓர் இரவு நேரத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆறுதல் கூறும் நண்பன் போல தினமும் இருப்பது இந்த இரவு மட்டும் தான் அல்லவா ?.

இரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :) ]

Monday, August 30, 2010

இன்று(30/08/2010) காணாமல் போனோர் தினம்...


புதிய தலைமுறை இதழுக்கு நன்றி, இப்படிப்பட்ட ஒரு தினத்தை அறிமுகம் செய்ததற்காக. காதலர் தினம், அன்னையர் தினம் போல் இதுவும் ஒரு தினமாக கண்டிப்பாக இருக்காது. ஏனெனில், அந்த தினங்கள் நம்மோடு வாழ்பவர்களுக்காக. ஆனால் இந்த தினமோ, உயிரோடு இருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாமல் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.நா. அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து இந்த தினத்தைக் கடை பிடிக்கிறது. அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் காணாமல் போன மக்கள் மிக அதிகம். அடக்கு முறைகளால் கைது செய்யப் பட்டு, குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், என்ன செய்தார்கள் என்ற நிலைமை தெரியாமல் "காணாமல் போனோர்" பட்டியலில் அடைத்து விடுகிறார்கள்.

பள்ளிச் சிறுவர்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள் எனத் தினமும் காணாமல் போவோர் ஏராளம். ஏதோ ஒன்றுக்கு பயந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சக குடும்பத்தினர் மீது நம்பிக்கை இல்லாமலோ, குடும்பத்தினரின் தொந்தரவுகளினாலோ அவர்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனதன் பின்னர் விளம்பரம் கொடுத்து நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா, இல்லை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

காணாமல் போனவர்கள் எங்காவது ஒரு அடைக்கல இல்லத்தில் தங்கியோ, பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டோ, தள்ளு வண்டிக் கடை, ஹோட்டல் போன்றவற்றில் வேலை செய்து கொண்டோ, ரயில்களில் பெருக்கி கொண்டோ, ஏன் நாட்டை விட்டுக் கூடப் போயிருக்கலாம். அவர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கும் நாளாக இது இருக்கட்டும்.

Wednesday, August 18, 2010

முரண்கள்

அரசு மதுபானக் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி, அரசின் 'குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்' வாசகம்.
********

லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்றுதான் இருந்தேன். முட்டிக் கொண்டு வரும்போது, சிறுநீர் கழிக்க ரூ.1 க்கு பதில் ரூ.3 வாங்கும் அவனிடம் சட்டம் பேச நேரமில்லை.

********

இப்போதெல்லாம் மசாலாப்(கம்மர்சியல் ?) படங்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதையும் கை தட்டி ரசித்தோம் என்பதை மறந்து விடுகிறேன்.
********

சின்ன வயதில் அப்பா என்ன வாங்கி வந்தாலும் ருசித்தது. இப்போதோ, எதாவது வாங்கி வந்தால் 'நல்ல கடை கெடைக்கலியா?' என்பதே வார்த்தைகளாக வருகிறது.
********

ஆம்பளைப் பையன் பூவை ரசித்தால், ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதுவே கையில் ஒரு ரோஜாவோடு இருந்தால் புன்னகைக்கிறார்கள். (சமயத்தில் அடியும் கிடைக்கக் கூடும்)
********

குளிர் காற்று நிறைந்த அங்காடிகளில் பில் போட்ட விலையைத் தருகிறோம். நடை பாதைக் கடைகளில் ரூ.10 உள்ள பொருளுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
********

சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஆனோம் என்கிறார்கள். இருந்தாலும் சம்பளம் போதவில்லை என்று கதறுகிறார்கள்.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டில்....

இன்று நண்பர்கள் இருவர், செம்மொழி மாநாட்டுக்கு சென்றார்கள். கலைஞரின் புகழ்களை கேட்டு விட்டு, மதியம் முப்பது ரூபாய் குடுத்து உணவு வாங்கி இருக்கிறார்கள். தயிர் சாதம், புளி சாதம், சிப்ஸ், ஊறுகாயோடு இருந்தது ஒரு இனிப்பு அல்வா துண்டு...

சொல்லாமல் சொல்லி விட்டார்கள் மாநாட்டை நடத்தியவர்கள்.. புரியாமல் நாம் மரமண்டைகளாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்.... :)

Saturday, January 30, 2010

ஜெயமோகன் - கோவை வாசகர் சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த 23/01/2010 அன்று கோவையில் நடைபெற்ற அவருடைய வாசகர் சந்திப்புக்கு வந்திருந்தார். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனை தவிர தெரிந்த முகம் எதுவும் இல்லை. ஆதலால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கவனித்தேன். எதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் ஓரமான இருக்கை.

சிறிது நேரம் கழித்து என்னை சுற்றியும் இருக்கையை போட்டு விட்டார்கள். கூட்டம் முடியாமல் நம்மை வெளியே விட மாட்டார்கள் என மனதிற்குள் பயம். நாம்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ள மாட்டோமே !. சிறிது நேரம் கழித்து நாஞ்சில், ஜெயமோகன் என மேடைக்கு வந்தார்கள்.


வரவேற்பு முடிந்தவுடன், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்டவர்கள் கேட்ட தொனியை பார்த்த பொழுது, 'ரூம் போட்டு யோசிச்சு இருப்பங்களோ' என தோன்றியது. இந்த கூட்டத்தில்தான் முதன் முதலாக கோவை ஞானி அவர்களை பார்த்தேன். இதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை.


ஒரு சில கேள்விகளின் பதில்கள் புரிந்தன. சில கேள்விகளும், பதில்களும் புரியவில்லை. இது எனக்கு மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். மார்க்சியம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நெறைய படிக்க வேண்டும் என தோன்றியது. மற்றவர்கள் கேட்ட கேள்விகளில் நான் கேட்க நினைத்த கேள்வி அடியோடு மறந்து விட்டது.

கூட்டம் முடிந்தவுடன் ஜெயமோகன் மேடையை விட்டு கீழே வந்தார். அவரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என அருகில் சென்றேன். வாசகர்களால் புடை சூழ இருந்தார். சிறிது நேரம் கழித்து கிடைத்த இடைவெளியில், 'நான்தான் இளங்கோ.. அடிக்கடி மெயில், சாட்ல வருவேனுங்க...' என்றேன். 'அது நீங்கதானா.. !' என்று புன்னகைத்தார். பேசி கொண்டும் கேள்விகள் கேட்டு கொண்டே இருந்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அவரிடம் சொல்லிவிட்டு நடக்கலானேன். கூடவே ஒரு புகைப்படமும். என்னுடைய செல்லில் புகைப்படம் எடுத்த அன்பருக்கும், அனுமதி அளித்த ஜெயமோகனுக்கும் என் நன்றிகள்.


இது நான் கலந்து கொண்ட முதல் எழுத்தாளர் சந்திப்பு. கேள்வி கேட்ட வாசகர்கள் தாங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றார்கள். ஜெயமோகனே ஒரு கட்டுரையில் சொன்னது போல "ஒருவருடைய விடைகள் இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை" என்ற வாக்கியம் மனதில் வந்து போனது.

Saturday, January 2, 2010

புத்தாண்டே வருக வருக...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

போன வருடம் போல் இல்லாமல்
இந்த வருடம்
டாஸ்மாக் விற்பனை குறையட்டும்.. !!
இலவசங்கள் கொடுக்காமல்
நம் அரசியலாளர்கள் இருக்கட்டும்... !!
முடிந்தால்
விலைவாசி குறைக்கட்டும்... !!
கல்வி விலை குறையட்டும்...!!
தரமில்லாத சினிமாக்கள்
குறையட்டும்...!!

இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட, இந்த வருடம் சிறப்பானதே...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...