ரெயினீஸ் ஐயர் தெரு
நீங்கள் குடியிருக்கும் தெருவில் எத்தனை பேர் உங்களுக்கு பழக்கம் ?. எல்லாரிடமும் நிறைய பழக்கம் வேண்டாம் , ஒரு புன்னகையை பகிர நேரம் இருக்கிறதா ?. எதிர் வீடு மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியுமா ?. நேரம் இல்லாமை ஒரு புறம் இருந்தாலும் , நாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் இருந்தது போல இருக்க முடிவதில்லை . டிவி , சீரியல் என எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அவர்களுக்கு நேரம் போவது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம்தான் . எங்கள் கிராமத்தில் மழை பெய்தால் வீதிக்கு புது மண் வரும் , அந்த மழை ஈரத்து மண்ணில் மெத்து மெத்தென பாதம் படிய நடப்பது ஒரு சுகம் . சிமெண்டும் , தாரும் கலந்த இந்த பெரு நகரங்களில் மழை பெய்தால் சாக்கடை மண்ணும் , பாலிதீன் பைகளும் தான் தெருவில் விரவி இருக்கின்றன . வண்ணநிலவன் அவர்கள் எழுதியுள்ள ' ரெயினீஸ் ஐயர் தெரு ' நாவலில் வரும் தெருவில் மொத்தம் ஆறே வீடுகள் தான் இருக்கின்றன . ஒவ்வொரு வீட்டிலும் வித விதமான மனிதர்கள் , அவர்களின் ஆசைகள் , ஏக்கங்கள் , நோய்கள் , துக்கங்கள் ...