Showing posts with label தகழி. Show all posts
Showing posts with label தகழி. Show all posts

Thursday, May 7, 2020

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி.

அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார்.

கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.  



திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது. 

கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத்து பேசும் தங்கம்மாள்; அலங்கார விஷயங்களிலோ, பொதுவான தகவல்களையோ அறிந்திராத கார்த்தியாயினி, எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் தங்கம்மாள் என இரண்டு பெண்களும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில், கார்த்தியாயினி எல்லாம் அறிந்த கணவனுக்கே புத்தி சொல்கிறாள், இக்கட்டான நேரங்களில் ஒரு விவேகியாய் அவனுக்கு வழிகாட்டுகிறாள். மாறாக தங்கம்மாவோ, கணவன் என ஒருவனுக்காக, அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆண்டுகள் பல கடந்து ஆசைப்படுகிறாள்.  

சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்த கேசவபிள்ளை, தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அந்தப் பதவிக்காக காத்திருந்த எல்லோரின் தலைக்கு மேல் பறந்து சென்று அவர் அதை அடைகிறார். அரசு இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒரு பட்டப்படிப்பு படித்தவன் குமாஸ்தா வேலை செய்வதா என அவரை ஏளனம் பேசியவர்கள், இன்று வாயடைத்துப் போகிறார்கள். கொஞ்சம் பொறுமை, தெளிவு என மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு அவர் மேலே செல்கிறார். அதற்கு முதல் படியில் ஏற உதவியது தங்கம்மாள், எனவே அவளை எப்போதும் மறக்காமல் இருக்கிறார். 

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியில் இந்தியா சுதந்திரம் பெற போராட்டம் நடக்கிறது. அதனால் இங்கேயும் போராட்டம் நடக்கிறது. கேசவபிள்ளை காங்கிரஸ் போராட்ட வீரர்களை அடக்கி ஒடுக்குகிறார். திருவாங்கூர் தனி நாடாகும் என நினைத்திருக்கும் கேசவபிள்ளை போன்றோருக்கு அது நடக்காமல் இந்தியாவோடு இணைந்து சுதந்திரம் பெறுகிறது. சுதந்திரம் பெற்றாலும் அரசாங்க இயந்திரம் அதேதானே. இப்பொழுது காங்கிரஸ் ஆட்களுக்கு ஆட்சி நடத்த கேசவபிள்ளையின் உதவி தேவைப்படுகிறது. பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி முடிந்து கம்யூனிஸ்ட் ஆட்சி வரும்போதே கேசவபிள்ளை பதவியைவிட்டு விலக நேர்கிறது. 

சுதந்திரம் பெற்றாலும், அந்தச் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். தியாகிகளுக்கு கொடுக்கக் கூடிய நிலம் கூட மற்றவர்களால் பறிக்கப் பட்டு, அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பின்னர் தளர்ந்து போய், மடிந்து சாகிறார்கள். இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதை தகழி நாவலில் சொல்லிச் செல்கிறார். தியாகம் செய்தவன் வீதியிலும், தியாகம் செய்தது போல நடித்தவர்கள் மின்விசிறிக்கு கீழே அமர்ந்துகொண்டு அடுத்தவர்களை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது.

கேசவனின் பெண்பிள்ளை கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவருக்கு தங்கம்மாளிடம் தொடர்பு ஏற்படுகிறது. ஆசிரமம், சாமியார் என சுற்றிக்கொண்டிருந்த தங்கம்மாள் இப்பொழுது கேசவபிள்ளை தன்னுடன் இருந்தால் போதும் எனச் சொல்கிறாள். கொஞ்ச நாட்களில் அவளிடம் இருந்து விடுபட்டு வருகிறார். தங்கம்மாள் இந்த 45 வயதில் கர்ப்பமாக இருக்கிறாள். கம்யூனிஸ்ட் ஆட்சி வருவதால் தான் வேலையை விட்டு விலக நேரிடும் என நினைக்கிறார் கேசவப்பிள்ளை. மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும், அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என மனைவி சொல்ல; என்று அவருக்கு இப்பொழுது நிறைய பிரச்சனைகள். 

லஞ்சம் ஊழல் என ஒவ்வொரு அரசாங்க காரியத்துக்கும் பணம் கொடுத்தே வெற்றி பெற முடிகிறது. கஞ்சி குடித்தாவது உயிர் வாழ்வோம் என்று சொல்லும் கார்த்தியாயினி கூட ஓரிடத்தில் ஏலக்காய் தோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். இந்த அரசாங்க வேலையால், கேசவபிள்ளை தாய், தந்தையை இழக்கிறார். சொந்த ஊரில் யாரும் அவருடன் பழகுவதில்லை. ஏன் நண்பர்கள் என்று கூட யாருமில்லை. அவர் பெற்ற செல்வம் அதிகம். அவர் மேலே இருக்கும் படிகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் கீழே உள்ளவர்களை மறந்து விடுகிறார். ஒரு காலத்தில் கேசவபிள்ளை எந்த வேலையும் இல்லாமல், காசு இல்லாமல் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம், ஒரு கிழவியின் கடையில் காசு கொடுக்காமல்  சாப்பிட முடிகிறது. நிறைய ஆண்டுகள் கழிந்து அவருக்கு அந்த கிழவியின் முகம் நினைவுக்கு வருகிறது. 

திவான்களின் ஆட்சியில் இருந்து, சுதந்திரம் பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்த அன்றைய திருவாங்கூரின் சரித்திரத்தை சொல்லிச் செல்கிறார் தகழி. பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள், பின்னர் ஊழலில் திளைத்து வருமானம் ஈட்டுபவர்கள், அரசாங்க கதவை தட்ட முடியாத ஏழைகள் என அவர் அன்றைய நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி. 

தமிழில்: சி.ஏ. பாலன்  




Thursday, October 17, 2013

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (நாவல்)

ஒரு கடலோரக் கிராமத்தில் நடக்கும் கதை 'செம்மீன்'. தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று அந்த வருவாயை வைத்துப் பிழைப்பவர்கள் மீனவர்கள். சேமிப்பு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மீன் கிடைக்காத காலத்தில், இருப்பதை உண்டு காலம் தள்ள வேண்டியது தான். மரக்கான் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது, அவனுக்குத் தான் இந்த பரந்த விரிந்த கடல் இருக்கிறதே !. எப்பொழுதும்  கடல் அன்னை நம்மைக் கை விட்டுவிட மாட்டாள் என்பது அவர்களது நம்பிக்கை.

தினம் தினம் கிடைக்கும் வருவாயை செலவழித்து வரும் மீனவர்களுக்கு மத்தியில், செம்பன்குஞ்சு கொஞ்சம் வித்தியாசமானவன். சொந்தமாகத் தோணி வாங்க வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும், விதவிதமாக உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் மனைவி சக்கி-யும் பாடுபடுகிறாள். இருவரும் சேர்ந்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. மூத்தவள் கறுத்தம்மா. இளையவள், பஞ்சமி. தோணி வாங்கி, நன்றாகச் சம்பாதித்த பின்னர்தான், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதென முடிவோடு இருக்கிறான் செம்பன்குஞ்சு.


சின்ன வயதிலேயே அந்தக் கடலோரத் துறைக்கு வியாபாரம் செய்ய வந்தவன் பரீக்குட்டி. துலுக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இவனிடம் கறுத்தம்மா சின்ன வயதிலிருந்தே பழகிக் கொண்டு இருக்கிறாள். வளர்ந்த பின்னர் அது காதலாக மாறுகிறது.

செம்பன்குஞ்சு தோணி வாங்க முடிவு செய்கிறான்.கொஞ்சம் பணம் பற்றாமல் இருக்கவே, யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள். பரீக்குட்டியிடம் வாங்கலாம் என முடிவு செய்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு முன்னரே, கறுத்தம்மா பரீக்குட்டியிடம் 'கடன் தருவாயா' எனக் கேட்டதற்கு, அவனும் மகிழ்ந்து 'நான் தருகிறேன்' என்கிறான். சொன்னவாறே, பணம் தருகிறான்.

கறுத்தம்மாவின் மேல் உள்ள காதலால்தான் அவன் பணம் தந்தான் என்பதை அறிந்த, அவளின் தாய் சக்கி, 'பரீக்குட்டி வேறு சமூகம். இது நமக்கு ஒத்து வராது. கடல் தாயின் குழந்தைகள் நாம் தப்பு செய்யக் கூடாது. நமது துறையில் பிறந்த நீ, தோணி பிடிக்கும் ஒரு மரக்கான் வீட்டுக்குத் தான் போக வேண்டும். பரீக்குட்டியும் உன்னை கல்யாணம் செய்ய முடியாது' என்றெல்லாம் அறிவுரை கூறுகிறாள். கறுத்தம்மா, தன் தாயிடம் 'ஒரு நாளும் நான் தவறு செய்ய மாட்டேன், ஆனால் பரீக்குட்டியிடம் வாங்கிய கடனைக் குடுக்க வேண்டும்' என்று கூறுகிறாள்.

இப்பொழுது, தோணி சொந்தமாக இருப்பதில், நன்றாகச் சம்பாதிக்கிறான் செம்பன்குஞ்சு. கறுத்தம்மா ஏதாவது செய்து விடுவாளோ என்று சக்கி பயந்து கொண்டே இருக்கிறாள். விரைவில் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என செம்பன்குஞ்சுவிடம் சொன்னால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அவன் இரண்டாவதாக இன்னொரு தோணியையும் வாங்கி இருந்தான்.

செம்பன்குஞ்சு, பரீக்குட்டிக்குத் தர வேண்டிய பணத்தையும் அவனுக்குத் தருவதில்லை. திருப்பித் தருவார்கள் என்று அவன் கடன் கொடுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் அவன் பணம் கொடுத்திருந்தான். கையில் பணம் இல்லாமல் அவன் பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டது. தொழில் முன்னர் போல இல்லை அவனுக்கு.

இதற்கிடையில், செம்பன்குஞ்சு ஒரு மரக்கானைச் சந்திக்கிறான். அவன் பெயர் பழனி. தாய் தந்தை, ஏன் உறவினர்கள் கூட இல்லை. வீரம் மிக்க அவனைப் பார்த்ததும், கறுத்தம்மாவுக்கு இவனையே கல்யாணம் செய்வதென முடிவு செய்கிறான். அவனுக்குத் தாய் தந்தை இல்லாததால் அவன் நம்முடனே இருப்பான் எனக் கணக்குப் போடுகிறான் செம்பன்குஞ்சு. திருமணத்துக்கு பழனியும் சம்மதிக்கிறான்.  வேறு வழியின்றி கறுத்தம்மாவும் ஒத்துக் கொள்கிறாள்.

கல்யாணத்தன்று நடக்கும் சிறு பூசலில் 'கறுத்தம்மா கெட்டுப் போனவள். அதனால் தான் யாரும் இல்லாத பழனிக்கு மணம் முடிக்கப் பார்க்கிறார்கள்' என்ற பேச்சு எழுகிறது. இதைக் கேட்டதும் சக்கி மயங்கி விழுகிறாள். செம்பன்குஞ்சு அவர்களைச் சமாதானம் செய்து கல்யாணம் முடித்து வைக்கிறான். சக்கியோ இன்னும் மயங்கி மயங்கி விழுகிறாள். இந்த நிலையில், 'கறுத்தம்மாவை அழைத்துச் செல்ல வேண்டாம், சக்கி சரியானதும் கிளம்பலாம்' என்கிறான் செம்பன்குஞ்சு. பழனி மறுத்து விடுகிறான். கறுத்தம்மா தாயின் முகம் பார்க்க, 'இங்கயே இருந்து அந்த பரீக்குட்டியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கிறாயா?' என்கிறாள். உடனே அவளும் நான் பழனியுடன் புறப்படுகிறேன் என்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கிளம்பும் தன் மகளை, 'இனி நீ என் மகளே இல்லை' என்கிறான் செம்பன்குஞ்சு.

****************

சொந்தத் துறையில் அவள் கெட்டுப் போனதால்தான், அவளைக் கல்யாணம் செய்து வைத்து பழனியுடன் அனுப்பி விட்டான் செம்பன் குஞ்சு என பழனியின் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். சக்கியோ கொஞ்ச நாளில் 'நீ இன்னொரு பெண்ணைக் கட்டிக்கோ' என செம்பன்குஞ்சுவிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். அவன் மறு கல்யாணம் செய்தானா? கறுத்தம்மா தன் தாயின் இறப்புக்கு வந்தாளா? சிறு பெண் பஞ்சமி என்ன ஆனாள்?

"தோணி ஓட்டிச் செல்லும் மரக்கானின் உயிர், கரையில் உள்ள அவனின் மனைவியின் கையில் தான் இருக்கிறது. அவள் நெறி தவறிப் போனால், கடல் அன்னை பொறுக்க மாட்டாள். அவனை விழுங்கி விடுவாள்" என்பது அந்த மக்களின் நம்பிக்கை. உயிருக்குப் பயந்து, அவனை இப்பொழுது யாரும் தோணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அவனுடன் சேர்ந்து நாமும் பலியாக வேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். தனியனான அவன் என்ன செய்தான்?

கரையில் பாடிக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, கறுத்தம்மாவை மறந்து விட்டானா? நட்டம் இல்லாமல் தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறானா? பரீக்குட்டியிடம், செம்பன்குஞ்சு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தானா?

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்த கறுத்தம்மா, தனது குலத்தின் நீதிகளுக்கு இணங்க பழனியைக் கல்யாணம் செய்து கொண்டாள். பரீக்குட்டி இன்னும் அவள் நினைவில் இருக்கிறானா? எத்தனை நாள் மூடி வைத்தாலும் ஒருநாள் வெளியே வரத்தான் போகிறதே எனப் பயந்தாளா? . பழனியிடம், பரீக்குட்டி பற்றிச் சொன்னாளா?.

ஊரார் தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும்பொழுது பழனி என்ன செய்தான்?. கடலுக்குள் மீன் பிடிக்க போக அவன் என்ன செய்தான்?. மாமனார் செம்பன்குஞ்சுவை அவன் போய்ப் பார்த்தானா?. வேறு பையனிடம் கறுத்தம்மா பழகி இருக்கிறாள் என்பதை அறிந்த அவன் அவளிடம் அவனைப் பற்றி கேட்டானா?

நாவலைப் படித்துப் பாருங்களேன்.


செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி