Monday, November 29, 2010

அமிழ்தினும் அமிழ்து













ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும்
கொஞ்சம் பொட்டுக் கடலையும்
கொண்டு வந்து
தின்னத் தந்துவிட்டு
'என்கிட்டே வேறென்ன இருக்கு'
என்று தள்ளாமையில்
புலம்பிக் கொண்டிருக்கும்
பாட்டிக் கிழவியிடம்,
இது
அமிழ்தினும் அமிழ்து
என்பதைச் சொல்ல
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு: இப்பதிவில் இருக்கும் படம், பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி.

**************

Friday, November 26, 2010

பெருமூச்சு















மேள சத்தங்கள்
ஜொலிக்கும் மேடைகள்
ஆயத்த சிரிப்புகள்
உருட்டப்படும் பாத்திரங்கள்
மணக்கும் உணவுகள்
பரபரக்கும் மனிதர்கள்
விளையாடும் குழந்தைகள்
என நிறைந்து கிடக்கும்
திருமண மண்டபத்தின் வாசலை,
வீதியில் கடக்கும்
யாரேனும் ஒருவரின்
பெருமூச்சு
நிரப்பி விட்டுச் செல்கிறது.

படம் : இணையத்திலிருந்து : நன்றி.

************************

Tuesday, November 23, 2010

சிறு துளிகள் (23/11/2010)

பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்(சாமக்கோடங்கி ...) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும்.

இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம்.

*******************************



போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணித்து, பத்து ரூபாயை பெற்றுக் கொண்டார். எம்பெருமான் முருகன் மயில் மீது ஏறி வந்திருந்தால் கூட அவ்வளவு வேகம் இருக்காது :).





*******************************

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபமன்று, வீட்டில் அண்ணாமலையார் வழிபாடு செய்வோம். இந்த வருடமும் கார்த்திகைத் தீபத்தன்று ஏழு வகைப் பொரியல், இனிப்புகள் என விசேடமாக முடிந்தது :).



*******************************
சிட்டுக் குருவிகளும், வண்ணத்துப் பூச்சிகளும் காண முடியாத தூரத்துக்குச் சென்று விட்டது போல கண்ணிலே பார்க்க முடிவதில்லை. மழை பெய்து கொஞ்சம் பூமி குளிர்ந்து இருப்பதால் அவ்வப்பொழுது அங்கங்கே தென்படுகின்றன. ATM வரிசையில் நின்றிருந்த பொழுது ஒரு வண்ணத்துப்பூச்சி என் செல்லில் சிறைப்பட்டது. மழை வாழ்க.






*******************************
எஸ்.எம். எஸ்.

என் செல்லுக்கு வந்த சில குறுஞ்செய்திகள்:

PM finally breaks silence: The only 2G i know is SoniaG and RahulG.. I dont know SpectramG
---------
ஐம்பது ரூபா குடுத்து ஒரு லிட்டர் Fanta குடிச்சு பிரைவேட் கம்பனிக்கு லாபம் தர்றத விட எழுபது ரூபா குடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அடிச்சு கவர்ன்மேன்ட்கு லாபம் தர்றது பெட்டெர்.

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க :) ?

Thursday, November 18, 2010

அழைப்பு வராத இரு எண்கள்

"ஹலோ பிரகாஷ்

மச்சி , எப்படிடா இருக்க ?”

நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாயின் பண்ணனும். உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா

ஓகே டா மச்சான் , ஆல் பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன

சரிடா ..” என்று போனை வைத்தேன். இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று, இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஒரு வருடத்துக்கும் முன்னால், பிரகாஷ், நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம். எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால், முதலில் வாங்க, போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா, போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு.

இதில் கூத்து என்னவென்றால், என் நண்பர்களை வாங்க, போங்க எனக் கூப்பிடுவான். அவனிடம் கேட்டதற்கு, "டாய் மச்சான் நீ நம்ம ஆளு.. அவங்கள அப்படி கூப்பிட முடியல.. நீ அப்படி இல்லடா.." என்றான்.

எனக்கு பக்கத்து சீட் என்பதால், மற்றவர்களை விட, என்னிடம் அதிகம் பேசுவான். பிரகாஷின் அம்மா ஓர் இதய நோயாளி என்பதால், சில நாட்கள் இவனே காலையில் அம்மாவுக்கும் சேர்ந்து சமைத்து விட்டு, மதியம் எங்களுடன் கடையில் சாப்பிடுவான். ஒரு சில நாட்கள், டிபனில் சாப்பாடு எடுத்து வருவான். நாங்கள் தங்கியிருந்ததோ மான்சனில். மூன்று வேளையும், ஹோட்டல், கையேந்தி பவன் கடைகள்தான். அவன் வீட்டில் இருந்து டிபன் கொண்டு வரும் போதெல்லாம், “டாய் மச்சி, சாப்பிட்டு போடாஎன்பான். கொள்ளு பருப்பு, தண்டு பொரியல் என அவன் கொண்டு வந்ததில், சில கவளங்கள் எங்களால் உண்ணப்படும். “போதும்டா. .எனக்கு கொஞ்சம் மிச்சம் வைங்கஎனக் கத்துவான். சிரித்துகொண்டே நகர்ந்த நாட்கள் அவைகள்.

ஒரு நாள், அவன் செல் போனுக்கு கூப்பிட, அது எடுக்கப்படவேயில்லை. அடுத்த நாள் கேட்டதுக்கு, “சாரி டா மச்சி, என்கிட்டே இன்னொரு செல் இருக்கு.. அந்த போன் எடுக்கலன்னா, இந்த நம்பருக்கு ட்ரை பண்ணுஎன இன்னொரு நம்பரை கொடுத்தான். நான் அந்த நம்பரை, பிரகாஷ்II என்று செல்போனில் சேமித்து கொண்டேன்.

டீகடைக்குச்
சென்று ஒரு பஜ்ஜியை நாலு பேர் சாப்பிட்டு, அரட்டையும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அடுத்த சில மாதங்களில், நான் இன்னொரு கம்பெனிக்கு போய்விட்டேன். இருந்தாலும், அவ்வபொழுது மெசேஜ் அனுப்புவான், இல்லை என்றால் போன் பண்ணுவான். மேன்சனுக்கும், பழைய கம்பெனிக்கும் பக்கம் என்பதால், சில தடவை அவன் மேன்சனுக்கு வந்தான்.

அடுத்த சில மாதங்களில், அவனும் வேறு கம்பெனிக்குப் போய்விட்டான். அவனை கடைசியாக நேரில் பார்த்தது என் அம்மா இறந்த அன்றுதான். மருத்துவமனையில், அம்மாவை நினைத்து அழுது கொண்டிருந்தேன். அப்போது வந்த பிரகாஷ், “ சாரி டா .. அழாதடா..” என என்னை தேற்றினான். நாங்கள் மருத்துவமனையை விட்டு கிளம்பும் வரை அங்கயே இருந்தான். அவனை பார்த்து தலையாட்ட, அவனும் தலையாட்ட, ஆம்புலன்சில் ஏறியவுடன் கதவுகள் அடைக்கப்பட்டன.

அதற்கடுத்து வந்த நாட்களில், நானும் அடுத்த கம்பெனிக்கு மாற முயற்சி செய்து கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து, அடுத்த மாதம் நான் அங்கு சேர வேண்டும். அது ஒரு டிசம்பர் மாதம் என்பதால், நான் ஜனவரியில் சென்னை போக வேண்டும்.

டிசம்பர் மாதம் முடிந்து, ஜனவரி ஆரம்பித்த அந்த இரவு 12 மணிக்கு அவனுக்கு கூப்பிட்டு வாழ்த்து சொன்னேன். “ஓகே டா மச்சான்.. பசங்க சொன்னாங்க.. நீ சென்னை போறேனுட்டு.. டாய்.. எங்களை எல்லாம் மறந்திடாத.. “ என்றான்.

ஓகே டா. நான் சென்னை கெளம்பறதுக்கு முன்னாடி கால் பண்ணறேன்.. என்னஎன்றேன் நான்.

நான் சென்னைக்கு போவதற்கு முன்பு அவனுக்கு போன் பண்ணி பேசியதுதான் அவனிடம் கடைசியாக பேசியது. அடுத்த இரு வாரத்திலேயே, பொங்கல் லீவில் ஊருக்கு வந்தபொழுது மெசேஜ் அனுப்பி இருந்தான். நான் திருப்பி மெசேஜ் பண்ண மறந்துவிட்டேன்.

திரும்ப சென்னை வந்து, நானகைந்து நாட்கள் ஓடியிருக்கும். அந்த நாளும் வழக்கம் போல், எலெக்ட்ரிக் ரயிலை பிடித்து, கூட்டத்தில் கசங்கி, திரும்பி ஒரு பஸ் மாறி கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில், நல்லகுமாரிடம் இருந்து போன். அவனும் சென்னையில்தான் இருந்தான். என்ன இவன் அதிசயமாக கூப்பிட்டு இருக்கானே என ஆச்சரியத்துடன்,

ஹலோ.. சொல்லுடாஎன்றேன்.

எங்கடா.. ஆபீஸ்லய இருக்க..”. காலையில் இது என்ன கேள்வி என்று என நினைத்துக்கொண்டு,

ஆமாண்டாஎன்றேன்... அவன் மெதுவாக ஆரம்பித்தான்.

டாய்.. பிரகாஷ் இருக்கான்ல, இன்னைக்கு காலையில.. அவனுக்கு ஆக்சிடென்ட் டா..” என்றான்.

எனக்கு பக்கென்றது. இதயம் சற்று படபடத்தது,

அவனுக்கு ஒன்னும் பிரப்ளேம் இல்லைல்ல.. என்னாச்சு

இல்லடா.. அவன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போற வழியிலே இறந்துட்டாண்டாஇதயத்தில் ரத்தம் வேகமாகவே பாய்ந்தது.

எப்படிடா.. எப்படி நடந்துச்சு

காலையில ஆபிஸ் போகும்போது.. வீட்ட விட்டு கொஞ்ச தூரத்துல ஒரு டர்னிங்ல எதிர்ல வந்த வேன் மோதியிருக்குது. இத்தனைக்கும் அவன் ஹெல்மெட் போட்டுதான் போயிருக்கான். கழுத்துல நல்ல அடி, சின்ன சின்ன செரைப்பு தவிர வேறு அடி இல்லையாம்

ம்ம்.. ஏன்டா இப்படிஎன்றேன் உடைந்த குரலில்.

நம்ம பசங்க இப்பதான் ஹாஸ்பிடலுக்கு போய்க்கிட்டு இருக்காங்க.. இந்நேரம் அவங்க அங்க போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. எதுக்கும் அவங்களுக்கு கூப்பிட்டு பாருஎன்றான்.

சரிடாஎன்று போனை கட் பண்ணினேன். ஒரு சில நிமிடங்கள், தூரத்தில் வெறித்து பார்த்து கொண்டிருந்தேன். ஏதோதோ நினைவுகள் எழுந்து மனதிற்குள் அலைமோதியது. அவன் முகமே, எங்கு பார்த்தாலும் முன்னால் வந்து நின்றது.

ஹாஸ்பிடலில் இருந்த நண்பர்களுக்கு கூப்பிட. “இப்பதாண்டா வந்திருக்கோம்.. போஸ்ட்மார்டம் பண்ணிட்டு இருக்காங்க.. வெயிட் பண்ணிட்டு இருக்கோம்என்று வந்தது பதில்.

அடுத்த அரைமணி நேரத்தில், “பாடிய வீட்டுக்கு எடுத்துட்டு போயடிருக்காங்க.. நாங்களும் அங்கதான் போய்ட்டிருக்கோம்என்றான்.

சரிடா, அப்புறம் கூப்பிடுறேன்" என்றேன்.

அன்று மாலையே அடக்கம் முடிந்து விட்டிருக்கிறது. காலையில் கிளம்பிய அவன், அதற்கப்புறம் திரும்பவேயில்லை.

டாய் மச்சான்.. வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்டாஎன்று அடிக்கடி சொல்லி கொண்டிருக்கும் அவனின் ஞாபகங்கள் மனதிற்குள் வந்து போனது.

ஒன்றிரண்டு மாதங்கள் ஓடி போயிருக்கும். ஒருநாள், ஒரு போன் நம்பரை சேமிக்க, மெமரி இல்லை என்றது என் செல்போன். சரி, தொடர்பில் இல்லாத நம்பர்களை அழித்து விடலாம் என ஒவ்வொரு நம்பராக பார்த்துகொண்டே வந்தேன். சிலவற்றை அழித்தும் விட்டேன். பி வரிசையில் வரும்பொழுது, பிரகாஷ், பிரகாஷ்II ஆகிய இரு நம்பர்களை பார்த்தபோது, என் மனம் கனத்து போனது. அந்த நம்பெர்களை என்னால் அழிக்க முடியவில்லை. இன்னும் அந்த இரண்டு போன் நம்பெர்கள் என் செல்போனில் இருக்கின்றன.

எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான் அழிக்க இயலாமல் இருக்கின்றேன். வாழ்க்கை அவனை அழித்து விட்டது. ஆனால் அந்த இரண்டு நம்பர்களும் என் செல் போனில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

-- இது ஒரு மீள்பதிவு.

Wednesday, November 17, 2010

பெய்யும் மழை




















எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்து விடாதாகையால்
சிநேகமாய்
ஆதரவாய்
மோனத் தவமாய்
உயிர்த் துளிகளாய்ப்
பெய்து கொண்டிருக்கிறது மழை...

பெய்யும் மழையை
எதிர்த்துக்கொண்டு
நீள்சாலைகளில் விரைகிறது
என் வாகனம்
எந்தச் சலனமுமின்றி..


படம் தந்த தளம் : http://www.artiststranger.com


சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ


இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியின் சுட்டி:
சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை.

நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.


Monday, November 15, 2010

சொல்லிக்கொடுத்த பாரதி..


தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன.

ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி.

சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி.

இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும்.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் மிக வாடித் துன்புற்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. "

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" - ஒரு சிறு பொறி கூட ஒரு பெரும் காட்டை அழித்து விடும் என்று அக்னிக் குஞ்சாய் முழங்குகிறார்.

"தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம்" - என்னும் வரிகளில் அந்த மா மனிதனின் உள்ளம் தெரிகிறது.

இன்னும் நிறைய இருக்கிறது, பாரதியைப் பற்றி எழுத நினைத்தால் எவ்வளவோ வந்து விழுகின்றன.. இன்னும் ஒரு நாள் மற்றொரு பதிவில்...

என்னையும் தமிழை நேசிக்க வைத்த மகா கவிக்கு என் நன்றிகள்.

***************
ஒரே பாரதி புலம்பல் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நானும் ஒரு சில வரிகள் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு பாரதியைப் போன்றவர்களும், எனக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்களுமே காரணம். இந்தப் பதிவு எனது நூறாவது பதிவு. இந்நேரத்தில் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக என் நன்றிகளையும், இந்த எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கூடவே பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கு - என் வணக்கங்களும் நன்றிகளும்.

படம் தந்து உதவிய கூகிளாண்டவருக்கு நன்றி.


Thursday, November 11, 2010

சிறு துளிகள் (11/11/2010)

நேற்று காலை சன் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது புதிது, புதிதாக வரும் சிறப்புத் தினங்கள் பற்றி. அதில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு கவிதை சொன்னார்;

"தினங்களை விட்டு விட்டு
எப்போது
குழந்தைகளைக்
கொண்டாடப் போகிறீர்கள்" . (குழந்தைகள் தினம் வரப் போகிறது இன்னும் இரண்டு நாட்களில்)

சொல்லப் போனால் குழந்தைகளை கவனிக்க முழுவதும் மறந்து விட்டோம். பள்ளி, டியுசன், டிவி, வீடியோ கேம்ஸ் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறை. கேட்டதெல்லாம் உடனே கிடைக்கிறது. ஒரு பொருளைப் பெற காத்துக் கிடப்பது இல்லை. எல்லாம் உடனே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

இதற்கு நேர் எதிர் ஏழைக் குழந்தைகள். எதுவுமே கிடைக்காமல், (உணவும்தான்) சிக்னல்களிலும், பேருந்து நிலையங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கிறது பிஞ்சு கைகள்.

ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?.

கொஞ்சம் குழந்தைகளைக் கவனியுங்கள்....

**************************************

கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. உலகம் தெரியாத குழந்தைகளை தங்கள் நோக்கத்துக்காக கடத்துவது தவிர்க்க முடியாத குற்றங்கள். இன்னும் குழந்தைகள் கொடுமைச் சட்டங்கள், தண்டனைகள் அதிகமாக வேண்டும்.

குழந்தைகள் கூடி விளையாடுவது இந்தக் காலத்தில் குறைந்து வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகைப் புரிந்து கொள்ள முடியாத சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, பள்ளிகளும், பெற்றோர்களும் இனியாவது விழிப்புணர்வு கொண்டு, கொஞ்சம் உலகைப் பற்றி விவரிக்கலாம்.

இலக்கியம், தினமும் படிப்பு என்று கூட வேண்டாம், தினச் செய்திகள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு எந்திரன் படத்தின் வெளியீட்டு நாள் தெரிகிறது. கொஞ்சம் வாசிப்பை அவர்களுக்கு பழக்கப்படுத்தலாம்.

சிறுவர் கொடுமைகள் என்றால் அது எங்கேயும் இருக்கிறது.

- ஒரு குழந்தையையும் இன்னொரு குழந்தையையும் ஒப்பீடு செய்வது.
- நிறம், உயரம் போன்றவற்றை இழிவு செய்வது
- பள்ளியிலும் வெளியிலும் உள்ள பாலியல் தொந்தரவுகள்
- முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது
- பெற்றோர்களின் பிரச்சினைகள் (விவாகரத்து, சண்டை... )

இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது. இந்தக் கொடுமைகள் குறைய நாம் என்ன செய்யப் போகிறோம்? .

****************************************

கோவை என்கவுண்டருக்குப் பிறகு, குழந்தைகளைக் கடத்தும் மற்றவர்கள் பயந்திருப்பார்கள். இனி குழந்தை கடத்தல் நடக்காதிருக்க வேண்டும். ஒரு குற்றவாளி இறக்கும் போது அவனுடன் சேர்ந்து ரகசியங்களும் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை அவன்தான் முழுக் குற்றவாளி என்றால் இந்த என்கவுண்டர் நியாயமானதே.

"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.. "

***************************************

குழந்தைகள் தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களும் குழந்தைகளைக் கொண்டாடுவோம்.

Tuesday, November 9, 2010

அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்..

இந்த மாதம் குமுதம் தீரா நதியில் ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்றுள்ளது. இவர் எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு 'காலம் ஆகி வந்த கதை'.

அந்தப் பேட்டியிலிருந்து சில பத்திகள்;

நாங்கள் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தாலும் அப்பா படிச்சு ஆசிரியராகி தென் இலங்கையில் சிங்களர்களும், முஸ்லீம்களும் அதிகமாக வாழ்ந்த மினுவாங்கொடை கல்லுழுவ கிராமத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கதைகளை நான் எப்படிச் சொல்வேன்? நான் அப்போது பிறந்திலன். என் வாழ்வுக்கு முந்தைய வாழ்வு அது. 1958 எண்டு எனக்குச் சொன்னார்கள். இக்கதைகளை ஆயிரம், ஆயிரமாய் நான் பிறந்த பிறகு அம்மாவும், அப்பவும் சொன்னார்கள். மூன்று வயதிலிருந்து அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். கல்லுலுவவில் அவர் படிப்பிக்கிறார். அப்பா அம்மாவுக்கு அழகுக் குழந்தையா அக்கா இருக்கிறா. பெரிய வால். பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஹாஜியார் குடும்பத்துக்கும் செல்லப்பெட்டை. இந்த மோள் எனக்குத்தான் என்று கடிச்சுக் கொஞ்சுவார். ஹாஜியார் ஆரிபும், அவர் மனைவி பாத்திமாவும் எங்கள் மீது அன்பைப் பொழிந்தனராம்.

கல்லுலுவவில் அப்பாவிடம் படித்தவர்கள் மாஸ்ரர் என்று அப்பாவை அழைத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் அன்னையர், அப்பாமார் ஊரில் அனைவருக்கும் அப்பா மாஸ்ரர்தான். கொத்த வந்த நாகத்தையும் சாது.. சாது.. என்று பற்றைக்குள் அனுப்பி வைத்த பன்சாலை புத்த பிக்குவிற்கும் அப்பா மாஸ்ரர். ஆருக்கும் அக்காவின் பேரைச் சொல்லி அவளது அம்மா என்றுதான் அழைத்துப் பழக்கம். அக்கா அனைவருக்குமே மோள்தான். அங்கு நான் பிறக்கயில்லை. அதுபற்றி அம்மாவிலும் ஹாஜியாரின் உம்மாவுக்குத்தான் கவலை அதிகம்.

நோன்புக் காலத்தில் உம்மா வேண்டிக் கொண்டதில் அம்மாவுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறக்க வேண்டும் என்பது முக்கியமானது.

ஹாஜியாரின் மகன் ஒரு வெடிபாக்ரறி (பட்டாசு ஆலை) வைத்திருந்தார். தைப்பொங்கல் வந்தால் அப்பாவுக்குப் படார் என வெடிக்கும் வேடிகள்தாம் பிடிக்கும். பொங்கலுக்கு வெடி கொளுத்தும்போது அம்மாவுக்குச் சினமா வரும் 'உந்தக் கோதாரி மனுஷன் இப்பவும் குழந்தைப் பிள்ளைகள் வெடி கொளுத்தி விளையாடுது' என்று சலிப்பாள். தமிழனின் தனித்துவம் பொங்கல் என்று அப்பா கல்லுலுவவின் ஒற்றைத் தமிழனாக ஊருக்கு அறிவித்தார். அது அப்போது முடிந்தது. அம்மாவும் அதைத்தான் செய்தா. அவ்வளவு வடையும், அவ்வளவு மோதகமும், அவ்வளவு சக்கரைப் புக்கையும் தின்ன வீட்டில் யார் இருக்கினம். ஆனால் ஊரில் ஆக்கல் இருந்தினம். பொங்கல் முடிய, பெட்டி, சருவச் சட்டி, வாழை இலை, தாமரை இலை, பேசின், கும்பா, சட்டி, கேப்பை, தட்டு எண்டு எல்லா ஏனங்களிலும் மோதகமும், வடையும், சக்கரைப் புக்கையும் கல்லுலுவவின் ஒழுங்கைகளில் திரிந்தன. எல்லா வீடுகளுக்கும் போயின. புத்த பிக்கு அதை அமிர்தமாய் உண்டார். ஹாஜியார் தேறல் உண்ட தித்திப்பில் ஆழ்ந்தார். நந்தா கூட்டி அள்ளிக் கொண்டை போட்டு நாக்கு கண்டுணர்ந்த ருசியில் மயங்கினார்.

அதே அக்கிராமத்தில் ரமலான் நோன்பும் எல்லோருக்குமானது என்றார்கள். கல்லுலுவ விழாகோலம் பூண்டது. எல்லார் வீடுகளிலும் 'வெசாக்' கூடு ஒளிர்ந்தது. கொண்டைப் பணியாரம், கொக்கீஸ், களுகொதல், அரிதாரம், பால் ரொட்டி, கிரிபத் எல்லாவற்றையும் எல்லாரும் இனிக்க இனிக்க உண்டார்கள். பகலை விட இரவுக்கு நல்ல ஊர். ஆரிலும் அதிகம் பேதம் தெரியவில்லை. சிங்களப் பெண்கள் அம்மாவை நங்கி என்று அழைத்தனர். பண்டார நாயகவா, ஜீ.ஜீ.பொன்னம்பலமா என்பதில் தான் சிறு அரசியல் பேதம், தனது செல்வரத்தினக் குருக்களிடம் என்ன பக்தி வைத்திருந்தாரோ அதே பக்தி பிக்குவிடமும் வைத்திருந்தார் அப்பா.

ஆயினும் எல்லாரும் எல்லாமும் உள்ளேயோ கனன்றதோ என்னமோ? பிக்கு சாது, சாது என்று பற்றைக்குள் அனுப்பிய நாகப் பாம்புகள் படம் எடுத்துத் திரண்டு வந்தன. "நங்கி எண்ட தங்கையை முல்லைத் தீவில் எரித்துப் போட்டார்கள்" எண்டு அழுதழுது சொன்னார் பெரைரா. ஆனால் அவர்தாம் எங்களைப் பாதுகாத்தார். "எண்ட உயிர் போனாலும் உங்களுக்கு ஒண்டும் நடக்க விடேன்" என்றார். ஆனாலும் காலம் மோசமாகியது. பெரைராவின் ஆதரவில் அவர் வீட்டில் ஒளிந்திருந்தனர். பிக்கு காலமையும், பின்னேரமுமாக வந்து பார்த்தார். "சிறீலங்காவுக்கு என்ன கேடு ? பற்றி எரிகிறது" என்றார்.

எங்கும் கலவரம். கொலைகள் விழுகின்றன. உருகுகிற தாரினால் தமிழர்கள் உடலில் சிங்கள சிறீ எழுத்து எழுதினார்கள். ஹாஜியார் வீட்டில் தங்கி இருப்பதுதான் பாதுகாப்பு என்று பிக்கு சொன்னார். ஆனால் அம்மாவின் கவலையோ அது அல்ல. 'ஒரு ஆம்பிளைப் பிள்ளை வேண்டும். ஊரார் மலடி எண்டு சொல்லுமுன் ஒரு ஆம்பிளைப் பிள்ளை கொடு தாயே' என்று அம்மனை உருண்டு புரண்டு வேண்டினா. ஹாஜியார் இருக்க, பிக்கு இருக்க எங்களுக்கு ஒண்டும் பயமில்லைதான். இருந்தாலும் எத்தனை நாள் எண்டு தெரியவில்லை. கல்லுலுவை இனிக் காண மாட்டோம் எண்டு அம்மாவுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. உம்மவைக் காண மாட்டம். நந்தாவைக் காண மாட்டம். வாய்க்கால் நீரில் நெளிகிற பூரணை (நிலா) இனி இல்லை. பஞ்சி பாராமல் நிறையத் தேங்காய்ப் பால் விட்டு காய்ச்சுகிற மீன் சொதி இனி இல்லை. மாசிக் கருவாட்டுச் சம்பல் இனி இல்லை. பஸ் ஒரு குளக்கட்டில் நின்றது. இரவில் முதலைகள் தண்ணீரில் வாலால் அடித்த சத்தம் குழந்தைகளைப் பயமுறுத்தின. சலசலக்கிற சனத்தைப் பொலிஸ் அதட்டியது. "சத்தம் போட்டு உங்களைக் காட்டிக் கொடுக்காதியுங்கோ. அனுராதபுரம் ரவுனுக்கை (டவுன்) பெரிய குழப்பம் (கலவரம்) நடக்குது. ஆர்மி வருமட்டும் நாங்கள் இங்கை நிக்கிறது எவைக்கும் தெரியக்கூடாது" என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

அனுராதபுரம் தாண்டி மதவாச்சி ஏறி வவுனியா போக வேண்டும். வவுனியா எங்கள் தேசம். பிறகு எவன் எங்களை என்ன செய்துவிட முடியும்?. ஆனால் அதற்கிடையில் குரும்பை வெட்டுகிற கத்திகள் வைத்திருக்கிறார்கள் தமிழர் தலைகளை வெட்டுவதற்கு.

தமிழர் இராசதானியாக இருந்து பிறகு சிங்களவர் இராசதானியாக மாறிய அனுராதபுரம் தமிழர்களை கொல்வதில் முன்னுக்கு நிற்கிறது. தமிழர்கள் நிணம் குடிக்கவும், சதைகளைத் தின்னவும் சிங்கங்கள் அலைகின்றன. அவற்றின் வாயிலிருந்து எங்களை எப்படிக் காப்பாற்றி அங்கிட்டு அனுப்புவது என்ற கவலை இன்ஸ்பெக்டருக்கு. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. 'ராணுவம் வந்துவிட்டது' என்றார் இன்ஸ்பெக்டர். அப்பாவும் நம்பினார். அம்மாதான் முதலில் சந்தேகப்பட்டா. அது பேய்கள் கடலில் இருந்து வருகின்றன என்று. இன்ஸ்பெக்டருக்கும் புரிந்தது. நாங்கள் இங்க நிற்கிறது குறித்து ஆர்மிக்கு ரகசியமாத்தான் இன்ஸ்பெக்டர் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் இப்போது எல்லாம் புரிந்து விட்டது. வெளிச்சம் வெறி கொண்டு முன்னேறியது. இன்ஸ்பெக்டர் சுதாரித்தார். கை நடுங்கியது. அவரது ரிவால்வரால் முதல் வெடி வெடித்தார். பின்னும் சில வெடிகள். கூட்டம் பின்னுக்கு ஓடியது. நாங்கள் காலை வவுனியா சேர்ந்து விட்டோம். 'எங்கடை நாட்டுக்கு வந்தினம்' என்று சனங்க விம்மினர். அம்மா இன்ஸ்பெக்டருக்குக் கையெடுத்துக் கும்பிட்டா. பின்னர் சேதி தெரிந்த சிங்களக் காடைகள் குலத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு எண்ட விசனத்தில் அன்று இரவே இன்ச்பெக்டரைச் சுட்டுக் கொன்றன. யாரும் பேதமற்ற அந்தக் காலம் அத்துடன் முடிந்தது. வவுனியா வந்துதான் நான் பிறந்தேன்.

******************************************

இரவில் யாழ்பாணத்தில் நின்றோம். வாழைகள், தோரணங்கள், சிகரங்கள், சப்பரங்கள், மூங்கில் மரங்கள், சவுக்கு மரங்களில் கலர் பல்புகள் தொங்கின. எங்கட ஊர்த் திருவிழாக்களை விட பெரிய திருவிழா. பெரிய சப்பரங்கள். பெரிய அலங்காரங்கள். பெரிய கொண்டாட்டங்கள். எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. எல்லாருமே அப்போது மகிழ்ச்சியாக இருந்தனர். வீரசிங்கம் மண்டபத்தின் முன் நிற்கிறோம். முன் கூட்டத்தால் என்னால் பார்க்க முடியவில்லை. என் உயரம் ஒருவரையும் காட்ட முடியாதிருந்தது. கால் நுனியில் நின்று கால் வலித்தது. அப்பாவாலும் என்னைத் தூக்கிக் காட்ட ஏலாது. ஒலிப்பெருக்கி வழியாக வந்த சவுன்ற்தான் ஒரே உதவி. திடீரென ஒலிப்பெருக்கி நின்றது. பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது. அதன் பிறகு வேறொண்டும் எனக்கு நினைவில்லை. லைற்றுகள் திடீரெண்டு நின்றன. நெருப்புத் தணல்கள் பறந்தன. அப்பா 'ராசா..ராசா' எண்டு என் கையை இறுகப் பிடித்தார். இழுத்துக் கொண்டு ஓடினார். துவக்கு வெடிச் சத்தங்கள் கேட்டன. வெடிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. கண் எரிந்தது. கண் எரிய, எரிய அப்பா இழுத்துக் கொண்டு ஓடுகிறார். கால் தடுக்கப்பட்டு விழுகிறேன். விழுந்து எழுந்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். திடீரென அப்பா ஒரு குழிக்குள் விழுகிறார். நானும் தலைகுப்புற விழுகிறேன். சேறு அப்பியது. மேலும் பொத்து பொத்தென்று ஆக்கள் விழுகிறார்கள். அப்பா முதுகைத் தடவுகிறார். 'ராசா.. ராசா' எண்டு முணுமுணுக்கிறார். 'அப்பா நான் அழேல்லை' என்று முணுமுணுக்கிறேன். தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன.

இக்கதைகளைத்தான் 'காலம் ஆகி வந்த கதை' எண்டு எழுதினன். கதை முடிவிலும் 'ஊரும் நாடும் ஐயோ என்று குமுறுகின்ற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கின' எண்டும், 'இப்போது அப்பாவும் இல்லை. அம்மாளும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சில வேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.' எண்டும், 'அன்றிலிருந்து அண்ணாக்கள் சில பேரைப் போர்க்களத்தில் கண்டேன்' எண்டும், 'எங்கள் சிரிப்புகளைப் பறித்தவர் யார்' எண்டும், 'அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது' எண்டும், 'நாடு காண் காலம் வரைக்கும் காடுகள் சுடுகின்ற காலம் ஆகி விட்டது' எண்டும், 'தமிழுக்காக அழுதால் அதிலை என்ன பிழையிருக்கு?' எண்டும் வார்த்தைகளைப் போட்டனம்.

*************

நன்றி: குமுதம் தீராநதி, நவம்பர் 2010 .





Thursday, November 4, 2010

பட்டாசைச் சுட்டு சுட்டு..


நரகாசுரர்கள், கிருஷ்ணர்கள், தீபாவளி போன்றவை பொய் எனக் கூறினாலும்,

அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை எனக் கூறினாலும்,

இது திணிப்பு என்று கூறிக் கொண்டாலும்,

பெரிய கடைகளின் விளம்பரங்கள், காசை இழுக்கும் பண்டிகை, கரியாக்கும் பண்டிகை எனச் சொல்லிக் கொண்டாலும்.......................

"ஹை.. புது டிரஸ் நல்லா இருக்குப்பா.. இன்னும் ரெண்டு மத்தாப்பு பெட்டி வாங்கி கொடுங்க " என்ற நச்சரிப்பிற்கும்,

"இந்த தீபாவளிக்கு என் பையன் எடுத்து கொடுத்த புடவை" என்ற மகிழ்ச்சிக்கும்,

"பயிறு பாயசம் சூப்பரா இருக்கு" என்று வயிறு நிறைந்த நிறைவுக்கும்,

"எத்தனை நாள் ஆச்சு.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு.." என்பதற்கும்

இது போன்ற சிறு சிறு சந்தோசங்களுக்கு ஆகவேனும் அடுத்த வருடமும் வேண்டும் தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒரு பட்டாசுப் பாடல்:

Tuesday, November 2, 2010

புதிய இடம்: சுருளி அருவி



சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பனின் திருமணத்துக்காக நிலகோட்டைக்கு நண்பர்கள் சென்றோம். இதுவரைக்கும் செல்லாத இடங்கள். கரூர் டூ மதுரை நெடுஞ்சாலையில் பயணித்து நிலகோட்டையை அடைந்து, மணமக்களை வாழ்த்திய பெரும் வாழ்த்து அட்டைகளையும், ஒலி பெருக்கிகளையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு புகைப்படத்திற்கு சிரித்து விட்டு வெளியே வந்தோம்.

நான் உட்பட நண்பர்கள் நான்கு பேருமே அலுவலுக்கு விடுமுறை போட்டிருப்பதால், வெளியே எங்காவது சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவோம் என்று முடிவு செய்தோம். சாலையை அடைந்து சிலரிடம் 'பக்கத்தில் எங்காவது சுற்றி பார்க்கற மாதிரி இடங்கள் எதாவது இருக்குங்களா ?' என்று கேட்டோம். கும்பக்கரை அருவி, சுருளி அருவி, வைகை என்றார்கள். நண்பனின் அப்பாவிடமும் கேட்டதில் 'சுருளி அருவி நல்லா இருக்கும். அங்க போயிட்டு வாங்க' என்றார். எங்கள் வண்டி சுருளி அருவியை நோக்கிப் பயணித்தது.



நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் அனைவரும் வெளியே செல்வதால் சந்தோசமாக இருந்தது. வழியில் தோன்றிய வழிகாட்டிகளையும், மக்களிடமும் கேட்டு அருவியை அடைந்தோம். தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.



வழியில் ஒரு பெரியவரிடம் கேட்க, வழியைச் சொன்ன அவர் மேலும் 'தம்பி, தப்பா நெனச்சுக்காதிங்க. சில பேரு வந்து தண்ணில விழுந்து பிரச்னை ஆகிடுது, எங்கயோ இருந்து வர்ரிங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க' என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பதிவில் 'அவ்வப்போது வழியில் தோன்றும் மனித மேன்மை கூசச் செய்கிறது' என்று கூறியிருந்தார். அப்படிதான் எங்களுக்கும் தோன்றியது.



அருவிக்கு கொஞ்சம் முன்னால் திராட்சைத் தோட்டங்கள் நிரம்பிய சாலையில் ஒரு அம்மா திராட்சைக் கூடையோடு அமர்ந்திருக்க ஒரு ரெண்டு கிலோ வாங்கி கொண்டு புறப்பட்டோம். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும், அங்கே இருந்த குரங்கார்கள் எங்களை நோக்கின. அருவிக்கு கொஞ்ச தூரம் இறங்கி நடக்க வேண்டும் என்பதால், கொஞ்சம் திராட்சை கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தோம். எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன, திராட்சைக்கு தான் வருகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நடந்தோம். கொத்தை எடுத்த குரங்குகள், அழகாக ஒவ்வொரு திராட்சையாக திங்க ஆரம்பித்தன.



அருவி, ஆறு, ரயில், மழை, மலை, யானை போன்றவை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். மழைக் காலம் என்பதால் தண்ணீர் நிறைய வருவதாகச் சொன்னார்கள். சிறிய அருவி, ஆனால் வேகம் அதிகம். மொத்து மொத்தென்ற விழுந்த குளிர் தண்ணீரில் நடுங்கிக் கொண்டே குளித்தோம்.



ஒரு அரை மணித் துளிகள் அருவியில் நனைந்து விட்டு வண்டிக்கு வந்தால் நம் குரங்குகள் மேலே ஏறி விளையாடியதில் முன் கண்ணாடி முழுவதும் மண்ணும், துப்பப்பட்ட திராட்சைத் தோல்களும் ஒட்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைப் பிடித்து வந்து கழுவி விட்டு கிளம்பினோம்.

ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு, வீடுகளுக்கு கொஞ்சம் சேர்த்து திராட்சைகளை வாங்கி விட்டு, திராட்சைத் தோட்டக்காரரிடம் கேட்டு தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு, கூடுகளை நோக்கித் திரும்பும் பறவைகளாக வீடுகளை நோக்கிப் பயணித்தோம்.



(அருவிக்கு அருகில் இருந்த ஒரு பெரும் மாமரம்)