Showing posts with label ஆ.மாதவன். Show all posts
Showing posts with label ஆ.மாதவன். Show all posts

Friday, June 14, 2019

புனலும் மணலும் - ஆ.மாதவன்

ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில். 

அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார். 



தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்றால் தங்கம்மை அவ்வளவு அழகு. கணவன் இறந்த பின்னர் வந்த நாட்களில், நிறையப்பேர் அவளைப் பெண்கேட்டுச் செல்கிறார்கள். அவர்களை மறுத்துவிட்ட அவள், அங்குசாமிக்கு சரி என்கிறாள். அவளின் தகப்பன் சமையல்காரர் குட்டன் , 'இனிமேல் நீங்கள் இந்த மூட்டை சுமக்கும் வேலைக்குச் செல்லக்கூடாது' என்று சொல்லி, ஆற்றுக்கடவில் மணல் வாரும் தொழில் செய்யும் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். மணல் வண்டிகளை கணக்கெடுத்து, மணல் வாரி நிறைப்பதை மேற்பார்வை செய்வது அங்குசாமியின் வேலை. 

தங்கம்மையுடன் பழகிய நாட்களிலேயே, அங்குசாமிக்கு பங்கியைப் பிடிப்பதில்லை. முதல்முறை அவர்கள் தனிமையில் இருக்கும்போது, பங்கி அழுதவுடன் தங்கம்மை எழுந்து போய்விடுகிறாள். அங்குசாமிக்கு எரிச்சல் இருந்தாலும் தங்கம்மைக்காக பொறுத்துப் போகிறார். 

தாமோதரன் என்னும் இளவயதுப் பையனைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் அங்குசாமி. அவனும் அவரைப்போலவே சிறுவயதில் ஊரைவிட்டு வந்தவன். தனது குடிசையை அடுத்து அவனுக்கும் ஒரு குடிசை அமைத்து தங்கவைக்கிறார். சிறுமியாய் இருக்கும் பங்கியுடன் தாமோதரன் விளையாடுகிறான். தன்னுடைய சகோதரி என்றே அவளை எண்ணுகிறான். பங்கி வளர்ந்த பின்னரும் கூட அங்குசாமிக்கு அவள் மேல் கோபம் தீர்வதில்லை. பார்த்தாலே எரிந்து விழுகிறார். ஊரில் உள்ள மற்றவரிடம் பேசுவதிலும், தாமோதரனிடம் பழகுவதில் எந்த பாரபட்சமும் பார்க்காத அங்குசாமிக்கு பங்கி என்றால் மட்டும் ஆகாது. 

பங்கியும் இப்பொழுது ஆற்று வேலைக்கு வருகிறாள். முதலில் அவள் வேலைக்கு வருவதை மறுத்த அங்குசாமியை, தாமோதரன் சமாதானம் செய்து, தான் பார்த்துக்கொள்வதாக வேலைக்கு அழைத்து வருகிறான். சில நாட்களில், தங்கம்மைக்கு வந்த காய்ச்சலால் அவள் இறந்துபோகிறாள். அங்குசாமிக்கு தங்கம்மை போனது பெரும்துயராய் இருக்கிறது. இந்தப் பெண் பங்கி இல்லாவிட்டால், நானும் நீயும் எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று தாமோதரனிடம் சொல்கிறார். முன்பு ஆற்றுக்கடவில் வேலை அவ்வளவாய் இருப்பதில்லை. கூலி வாங்குவதும் தினப்படி செலவுக்கும் சரியாய் இருக்கிறது. 

பங்கியை கல்யாணம் செய்து தரலாம் என்றால், யாரும் அமையவில்லை. ஒருவன் வந்து பங்கியைப் பார்த்துவிட்டு, இப்படி இருப்பவளை நான் கட்ட மாட்டேன்.. வேணும்னா நீ கட்டிக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். தாமோதரன் 'இங்க பாரு, தங்கம்மை அக்கன் கிட்டே உனக்கு கல்யாணம் செய்து வைப்பது என்னோட கடமைன்னு சொல்லி இருக்கறேன். நீ எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி யாராவது வரவில்லை என்றால். நானே உன்னை கட்டுவேன்' என்று பங்கியிடம் சொல்கிறான். பங்கிக்கும் அவன் மேல் பாசம் உண்டென்றாலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவனுக்கு தான் மனைவியாய் இருக்கக்கூடாது என்றெண்ணுகிறாள். 




அங்குசாமிக்கும், பங்கிக்கும் சில நேரங்களில் வாதம் ஏற்படும்பொழுது 'உன்னைக் கொண்டு போய் ஆற்றில் தள்ளினால்தான் எனக்கும், இதோ அடுத்தாப்பிலே இருக்கற தாமோதரனுக்கும் விமோசனம்.' என்று அங்குசாமி கத்துவார். அந்த நேரங்களில் தாமோதரன் வந்து சமாதானம் செய்வான். ஒரு நாள் அங்குசாமி ஆற்றங்கரையில் கீழே விழுந்து கையை முறித்துக்கொள்கிறார். வைத்தியர் எண்ணெய் போட்டு கட்டுப்போட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. தாமோதரனும், பங்கியும் அவருக்குப் பணிவிடை செய்கிறார்கள். பங்கி கொண்டு வரும் காசில் தான் பசியாற வேண்டியிருக்கிறதே என்று இன்னும் கோபம் அதிகமாகிறது அங்குசாமிக்கு. 

கை கொஞ்சம் சரியாகி கட்டுப் பிரித்தாகிவிட்டது. ஆனால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஆற்றில் மணல் அள்ளும் வேலையும் குறைந்துவிட்டது. சில நாட்களாக தாமோதரனும், பங்கியும் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்களில், மழைபெய்ய ஆரம்பிக்கிறது. இடைவிடாத மழை.மூன்று நான்கு நாட்களுக்கு மேல் பெய்கிறது. அவர்கள் குடியிருந்த குடிசையும் ஒழுக ஆரம்பிக்கிறது. இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது. காசிருந்தாலும், வெளியே கடைகள் எதுவுமில்லை. ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம். மழை நின்றாலும், நீர் வடியாமல் ஆற்று வேலைக்குப் போக முடியாது. மழை நின்ற ஒருநாள் தாமோதரன் அக்கரையில் உள்ள சூளையில் வேலை இருப்பதாக அறிந்து அங்கே போகலாம் என்கிறான். ஆட்களைக் கூட்டிக்கொண்டு, அங்குசாமி தாமோதரன் பங்கி என எல்லாரும் ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.

நீர் ஓடும் வேகத்தைப் பார்த்ததும் தாமோதரன் வள்ளத்தில் அக்கரைக்குப் போகத் தயங்குகிறான். அங்குசாமியோ, இது நம்ம ஆறு, நாம தொழில் செய்யற இடம், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது எல்லாரும் வள்ளத்தில் ஏறுங்க என்று அதட்டுகிறார். எல்லோரும் வள்ளத்தில் ஏறிக்கொள்கிறார்கள். தாமோதரன் வள்ளம் வலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கொஞ்ச தூரம் போனதும் ஒரு சுழிப்பில் மாட்டி வள்ளம் கவிழ்ந்துபோகிறது. கரையில் இருந்த ஆட்கள் வள்ளம் முங்குவதைப் பார்த்துக் கத்துகிறார்கள். ஆற்றில் கவிழ்ந்த ஒவ்வொருவராக நீந்திக் கரையேறுகிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறது. இரண்டு பெண்களில் ஒருத்தி இருக்கிறாள். அப்படியென்றால் இன்னொரு பெண்ணான பங்கி ஆற்றோடு போய்விட்டாள். 

'ஆ பங்கியா' என்று கரையேறிய அங்குசாமி நினைத்துப்பார்க்கிறார். ஆற்றில் அவர் நீந்தும்பொழுது ஒரு கை அவர் காலைக் கெட்டியாகப் பிடிக்கிறது. அவர் அந்தக்கையை ஒரு உந்து உந்தி உதறிவிட்டு மேலே நீந்தி வருகிறார். அப்பொழுது அவர் கால்களில் ஒரு பெண்ணின் தலைமுடி படுகிறது. அப்படியென்றால் அது பங்கி தான் என்று எண்ணுகிறார் அங்குசாமி. 

இது அங்குசாமியின் பிழையா என்றால், ஆமென்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். 


Friday, May 24, 2019

கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்

நீங்கள் ஒருவரை நல்லவன் என்றோ,கெட்டவன் என்றோ தீர்மானம் செய்யலாம். ஆனால்  நன்மையும், தீமையும் கலந்தவன் மனிதன்.  ஒரு கொலைகாரன் கோவிலுக்குச் செல்லும்போது அங்கே அவன் பக்தியுள்ளவனாக இருக்கிறான். ஒரு குழந்தையைப் பார்த்து சிரிக்கும்பொழுது அவன் அன்பை உணர்கிறான், அப்பொழுது அவன் கொலைகாரனாக இருப்பதில்லை. எப்படி அவன் கொலை செய்தவன் என்பது உண்மையோ, அதுபோலவே அவன் கோவிலுக்குப் போவதும், அன்பாய் இருப்பதும் உண்மை. மனிதர்களின் இந்த பண்பினை, தனது பெரும்பாலான கதைகளில் சொல்கிறார் ஆ.மாதவன். 



சாலைத்தெருவின் ஒரு ஓரத்தில் அந்த தோட்டவிளை அமைந்துள்ளது. குருஸ்வாமி அதன் சொந்தக்காரர். தாத்தா காலத்தில் அழிந்த சொத்துக்களோடு, அப்பாவும் சேர்ந்து அழிக்க, இந்த தோட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது குருஸ்வாமிக்கு. அந்த தோட்ட வளாகத்தில் அவர் குடியிருக்கும் வீடு தவிர, ஒரு தேவி கோவில், தென்னை மரங்கள் மற்றும் சில குடியிருப்புகள் உண்டு. அந்த குடியிருப்புகளில் ஏழைப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களிடம் வாடகை என ஏதோ ஒரு பணத்தை குருஸ்வாமி வாங்கி கொள்கிறார். ஓவியம் வரையும், சாலைகளில் பாட்டுப் பாடும், பழைய பாத்திரங்களைச் சரிசெய்யும் குடும்பம் என எல்லோரும் சாதாரண மக்கள். அங்கு குடியிருக்கும் எல்லோருமே குருஸ்வாமிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். ஊரிலும் பெரிய மதிப்பு. எல்லாருக்கும் அவர் 'சாமியப்பா'.

குருஸ்வாமியின் மனைவி சுப்புலட்சுமி. இரண்டு குழந்தைகளைப் பெற்று இரண்டும் இறந்துவிட, மூன்றாவது பேற்றில் மனைவியும் இறந்துவிடுகிறாள். மனைவியுடனான வாழ்க்கையை அவர் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். மறுமணம் செய்துகொள்ள மனமில்லை.புத்தக படிப்பும், கோவில் சிற்ப ரசனையும் போக மேல்மாடியில் அமர்ந்துகொண்டு உலகை ரசிப்பதுமாக நாட்கள் நகர்கின்றன. தூரத்தில் வந்தமரும் ஒரு கிருஷ்ணப் பருந்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். சில நாட்கள் வரும் அந்தப் பருந்து சில நாட்கள் வருவதில்லை. அவருக்கு வீட்டு வேலைகளுக்கு உதவியாக பார்வதி என்ற கிழவி உண்டு. அந்த விளையில் உள்ள தேவி கோவிலைச் சுத்தம் செய்யும் பார்வதிக்கு சாமி வருவதுண்டு. 

சின்ன வயதிலேயே படிப்பு வராமல், குருஸ்வாமியின் அரவணைப்பில் வளர்பவன் வேலப்பன். அவனின் தந்தை, அந்த வளாகத்தில் வேலப்பனோடு குடியிருந்தார். தாய் இல்லை. வேலப்பன் வளர, வளர பால் கறப்பதில் தேர்ந்தவனாகிறான். ஒரு மாட்டுப்பண்ணையில் வேலைக்கும் சேர்கிறான். ஒரு நாயர் இனத்தைச் சேர்ந்தவன் மாடு, பால் கறவை என வேலைக்குப் போவது வேலப்பனின் தந்தைக்குப் பிடிக்காமல் அவர் எங்கேயோ போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. வேலப்பனுக்கு இனி குருஸ்வாமிதான் எல்லாம். 


வேலப்பன் தான் வேலை செய்யும் பண்ணை முதலாளியின் மகள் ராணியை காதலிப்பதாக சொல்ல, இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார் குருஸ்வாமி. படிப்பு, வசதி என எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருக்கும் வேலப்பனுக்கு ராணியை கட்டிக்கொடுத்து ஊரை விட்டே அனுப்பிவிட்டார் என அவள் குடும்பத்தார் பேசுகிறார்கள். ஒருமாதம் கழித்து அவர்களை அழைத்து தன் தோட்ட வளாகத்திலேயே வைத்துக் கொள்கிறார் குருஸ்வாமி. ஒரு குழந்தையும் பிறக்கிறது. 

வேலப்பன் ஒரு பால் சங்கம் அமைத்து அதன் மூலம் வருவாய் பார்க்க ஆரம்பிக்கிறான். வருமானம் பார்க்க ஆரம்பித்ததும் குடி, புகை என கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான். அவன் சங்கத்தில் இருப்பவர்கள் கூடிப் பேசும்பொழுது, பணக்காரர்கள் நாம் எப்பொழுதும் ஏழையாகவே இருக்க விரும்புவார்கள்; நம் மேல் பாசம் காட்டுவது போல் நடித்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்வார்கள்; அதற்கும் மேல் நம் வீட்டுப் பெண்களை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் பேச, வேலப்பனுக்கு பொறி தட்டுகிறது. குருஸ்வாமியின் மேல் ஐயம் கொள்கிறான்.

ஒருநாள் யதேச்சையாக சாமியப்பாவின் அறைக்கு வருபவன், அங்கே ஒரு பெண் நிர்வாணமாக இருக்கும் ஓவியத்தைப் பார்க்கிறான். வேலப்பன் அதன் பின்னர் அவரை மதிப்பதில்லை. ராணி அவரிடம் பேசினால், கோபம் கொண்டு அவள் அவருடன் படுக்கையைப் பகிர்வதாகச் சொல்கிறான். ராணி அழுது புலம்புகிறாள். வளாகத்தில் உள்ள அத்தனை மக்களும் அவன் போக்கை கண்டு, உலகத்தில் இப்படியும் ஆட்கள் உண்டோ என ஆச்சரியம் கொள்கிறார்கள். 

ஒருநாள் பார்வதி சாமி வந்து ஆடும் சமயம், வேலப்பன் அவள் கைகளில் சுடு பாயாசத்தைக் கொட்டி விடுகிறான். பார்வதியால் வேலை செய்ய முடியாததினால் ராணி குருஸ்வாமிக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்கிறாள். சாமியப்பாவுக்கு, இப்பொழுது ராணியின் மேல் பார்வை மாறுகிறது. சில நாட்களில் ஒரு சண்டையில், வேலப்பன் சிறை செல்ல நேர்கிறது. சாமியப்பா மனது வைத்தால் அவனை வெளியே கொண்டு வர முடியும். அவரோ அமைதியாக இருக்கிறார். 'நீ என்னை பிரசாதிக்கணும் ராணி' என்று அவளிடம் சொல்கிறார். 

பார்த்தால் எவ்வளவு பெரிய ஆள் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணலாம். அவரும் மனிதர்தானே. துறவி போல் வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளேயும் அவருக்கு ஆசைகள் உண்டு. அல்லது அவரின் ஆசையை ராணி தூண்டியிருக்கலாம். அவள் கேட்கிறாள் 'சாமியப்பா வேலப்பனை வெளியே கொண்டு வந்துருவீங்களா நாளைக்கு'.  அவர் மலங்க மலங்க விழிக்கிறார். 'கொண்டுவர்றேன் ராணி' என்றவாறு தெருவில் இறங்கி ஓடுகிறார். 

சாமியப்பா அவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் அம்மன் தேவியை வழிபாடு செய்பவர். அந்தக்கோவிலின் சுவரில் வரைந்திருக்கும் பிரும்மாண்டமான தேவி ஓவியத்தை அடிக்கடி பார்த்து ரசிக்கிறார். ராணி அவரைத் தழுவும்பொழுது இறைவியான தேவியின் நினைவு வந்திருக்கலாம். அவள் கேட்டவுடனே, இறங்கி ஓடுகிறார் ஒரு பக்தனைப் போல.




Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.


Sunday, January 23, 2011

கடைத்தெருவின் கலைஞன்

திரு.ஜெயமோகன் அவர்களின், ஆ.மாதவன் புனைவுலகு பற்றிய 'கடைத்தெருவின் கலைஞன்' படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் இருக்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



திரு.ஆ.மாதவனிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருக்கும்போது, மாதவன் அவர்கள் சொல்லுவதாக;

'நாம கண்ணுக்குப் பட்டதை அப்டியே எழுத நினைக்கிற ஆளு. நாம நினைகப்பட்டதுக்கு யதார்த்தத்திலே எடமில்லை. வாழ்க்கை கண்ணு முன்னாலே ஓடிட்டு இருக்கு' என்றார். 'அதோ பார்த்தீங்களா?' என்று ஒருவரைக் காட்டினார். ஒரு ஆசாமி சபரிமலை பக்தர் கோலத்தில் சென்று கொண்டிருந்தார். 'அய்யப்பனாக்கும். விஷூவுக்கு மலைக்குப் போக மாலை போட்டிருக்கான். இந்த சாலைத் தெருவிலே பேரு கேட்ட கேடி. மூணு சீட்டும் முடிச்சவுப்பும் ஜோலி. குடி கூத்தி எல்லாம் உண்டு. மாசத்திலே எட்டு நாள் லாக்கப்பிலே உறக்கம். எடைக்கிடைக்கு ஜெயிலுக்கும் போவான். நாலஞ்சாளை குத்தியிருக்கான். ஆனா இப்பம் பார்த்தேளா... இந்தக் கோலம் சத்யமாக்கும். உண்மையிலேயே மன்சலிஞ்சுதான் மலைக்குப் போறான். பெரிய பக்திமான். இதை நாம் எப்படி புரிஞ்சுக்கிட முடியும்?. நாம இதைப் பதிவு பண்ணி வைக்கலாம். வாசகர்கள் அவங்க வாழ்க்கைய வெச்சு புரிஞ்சுகிட்டா போரும். அல்லாம நாமறிஞ்ச அரசியலை எல்லாம் அவன் மேலே கேற்றி வச்சா அது அசிங்கமா இருக்கும்.'


****************************************

ஒரு பக்கத்தில் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளது கீழே;

சமீபத்தில் கேரளத்தில் கவி என்ற ஊருக்கு மலைப்பயணம் சென்றிருந்தேன். பஷீர் என்ற நண்பர் காட்டு அட்டைகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மழைக் காலத்தில் கோடிக் கணக்கான முட்டைகளில் இருந்து கோடிக் கணக்கான அட்டைப் பூசிகள் பிறந்து வருகின்றன. புல் நுனிகளில் பற்றி ஏறக் காத்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரத்தில் ஒன்றுக்குக் கூட உணவு உண்ணும் வாய்ப்பு அமைவதில்லை. உடலே நாசியாக குருதி மணத்துக்குக் காத்திருந்து காத்திருந்து நெளிந்து நெளிந்து நாட்கள் செல்ல அந்த மழைக் காலம் முடிந்ததும் அவை வெயிலில் காய்ந்து சக்கையாகிப் புழுதியாகின்றன.

ஏதோ ஒன்று ஓர் உடல் மேல் தொற்றி ஏறுகிறது. அதன் பல்லாயிரம் சகாக்களுக்கும் அதற்கும் அளிக்கப்பட்டுள்ள அத்தனை உடல் நுட்பங்களும் அந்த ஒரு செயலுக்காகவே உருவானவை. அது குருதியை நீர்க்கச்செய்து வலியில்லாமல் உறிஞ்சுகிறது. பின்பு உதிர்ந்து விடுகிறது. உணவு உண்ண நேர்ந்தமையாலையே அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அந்தக் குருதியில் அது முட்டைகளை நிரப்பிக் கொள்கிறது. ஆழ்ந்த மரணத்துயில். முட்டைகள் அதைப் பிளந்து வெளிவந்து மண்ணில் பரவி அடுத்த மழைக் காலத்துக்காக காத்திருக்கின்றன.

'இந்த அட்டைகளைப் பார்க்கையில் கடவுள் காட்டும் ஒரு வேடிக்கை போலத் தோன்றுகிறது' என்றேன். பஷீர் சிரித்துக் கொண்டு 'மனித வாழ்க்கை மட்டும் என்னவாம்?' என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன? அவன் படைத்த இந்த நாகரீகம், இந்த இலக்கியம், இந்தச் சிந்தனைகள், கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டான்? எந்த அர்த்தத்தை அடைந்து விட்டான்? உடனே சாளைப் பட்டாணி என் நினைவுக்கு வந்தான்.

(குறிப்பு: ஆ.மாதவன் அவர்களின் 'எட்டாவது நாள்' குறு நாவலில் வரும் பாத்திரம் சாளைப் பட்டாணி.)

*********************************

கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு ஜெயமோகன் தமிழினி


மேலே உள்ள படம் உடுமலை.காம் தளத்தில் இருந்து. நன்றி
http://udumalai.com/?prd=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D&page=products&id=8723

Friday, December 24, 2010

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்..




ஒரு கடைத் தெருவுக்கு நாம் சென்றால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டுத் திரும்பி விடுவோம். ஆனால் அந்த கடைத் தெருவில்தான் எத்தனை விதமான மனிதர்கள். தி நகர், ரங்கநாதன் தெருவையே எடுத்துக் கொள்ளுங்கள். பூ விற்கும் பெண்கள், கைக்குட்டை சாக்ஸ் விற்பவர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொருள் விற்பவர்கள், ஐஸ் கிரீம் கடைகள், துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள், கடைக்கு வாங்க எனக் கூவிக் கொண்டிருப்பவர்கள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், பழச் சாறு கடைகள், பேக்கரிகள், அந்த கூட்டத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள், வேகமாகப் போகிறவர்கள், வீதி பெருக்குபவர்கள், திருடர்கள்... என எத்தனை விதமான மக்கள். இது போன்ற கடைத் தெருவில் வாழும் மக்களின் வாழ்வைச் சுற்றி எழுதியவர் திரு. ஆ.மாதவன் அவர்கள்.




கடந்த ஞாயிறு அன்று கோவையில், ஆ.மாதவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவுக்கு சென்றிருந்தேன். இது வரையிலும் மாதவன் அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நிறையப் புத்தகங்களிலும், குறிப்பாக திராவிட ஏடுகளில் நிறைய எழுதியிருக்கிறார் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். ஒருவேளை, அவரின் கதைகளை எங்காவது படித்திருந்தாலும் கூட அவரின் பெயர் என் நினைவில் இல்லை. இனிமேல் அவரின் பெயர் மறக்காது, அதற்கு இந்த விழாவே காரணம்.

ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் வெளிச்சத்தில் இருக்க, சிலரைப் பற்றி வெளியே தெரிவதில்லை. அவர்கள் எழுதியதும் வெளியே தெரிவதில்லை. அப்படி இருக்கும் கால கட்டத்தில், மூத்த எழுத்தாளர்களைப் பற்றி, நல்ல இலக்கியங்களைப் பற்றி விவாதித்து வெளிக் கொணர வேண்டியது அவசியம். இந்த விழாவை நடத்தி, ஆ.மாதவன் என்னும் 'கடைத்தெருவின் கலைஞனை' என் போன்றோருக்கு அறிமுகம் செய்வித்த 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட' நண்பர்களுக்கு என் நன்றிகள்.




திருப்பூர் மற்றும் கோவையை சேர்ந்த பதிவர்கள் வந்திருந்தார்கள். பதிவர்களை அன்பே சிவம் முரளி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். விழா முடிந்த பின்னர் முரளி மற்றும் திருப்பூர் பதிவர்கள் ஒன்றாகவே கிளம்பினோம். ஆ.மாதவன் அவர்களின் 'கிருஷ்ணப் பருந்து' நாவல் நான் வாங்குவதற்குள் தீர்ந்து விட்டது. பிறகு, அவரின் 'ஆ.மாதவன் கதைகள்' தொகுப்பையும், ஜெயமோகனின் 'கடைத்தெருவின் கலைஞனை' யும் வாங்கிக் கொண்டேன்.

விழாவில் ஜெயமோகன், நாஞ்சிலார், வேத சகாய குமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, மணிரத்தினம், எம்.. சுசீலா, கோவை ஞானி ஆகியோர் கலந்து கொண்டார்கள். புனத்தில் அவர்கள் மலையாளத்தில் பேசி, அதை ஜெமோ அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் பேசும்பொழுது, 'ஒருவன் எந்த மொழியில் கனவு காணுகிறானோ.. அதுதான் அவன் தாய் மொழி' என்றார்.



ஆ.மாதவன் அவர்கள் தனது ஏற்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். விழா முடிந்ததும், சுசீலா அம்மாவிடம் சென்று 'நான்தான் இளங்கோ.. எப்படி இருக்கீங்க?' என்றேன். 'நீங்கதான் இப்படிக்கு இளங்கோவா?' என்று நலம் விசாரித்து விட்டு விடை பெற்றார்கள். ஆ.மாதவன் அவர்களிடம், கையெழுத்துப் பெற்றுக்கொண்டு நாங்களும் திரும்பினோம். அடுத்த நாள் நாஞ்சில் நாடனுக்கு 'சாகித்ய அகாடாமி விருது' அறிவிக்கப்பட்டது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த இடைப் பட்ட நாட்களில், ஆ.மாதவன் சிறுகதை தொகுப்பிலிருந்து பாச்சி(சொல்வனத்தில் பாச்சி), கோமதி, தூக்கம் வரவில்லை, நாலு மணி போன்ற கதைகளைப் படித்தேன். அனைத்துக் கதைகளுமே தெருவில் இருப்பவர்களைப் பற்றிய கதை. அனைத்துக் கதைகளையும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.

இப்படி ஒரு விழாவை நடத்திய இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

தொடர்பு பதிவுகள்:
ஜெயமோகன்: விஷ்ணுபுரம் விருது விழா 2010
எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...1.