ஆறு மாதத்துக்கு முன்னால், ஊத்துக்குளி அருகே ஒரு சிறு கிராமத்தின்
வழியாகச் சென்ற போது " இங்க பாரு.. மெழுகு பீர்க்கங்காய்".. என்று
அப்பாவும், அக்காவும் கத்தினார்கள். ஒரு வீட்டின் வேலி முழுவதும் கொடி
படர்ந்து காய்கள் நிறையக் காய்த்திருந்தன. வண்டியை நிறுத்தி, அவர்களிடம்
கேட்டு காய்களை வாங்கிக் கொண்டோம். அவர்களிடம் விதை இருக்கிறதா எனக் கேட்க,
அவர்களும் கொஞ்சம் விதையை சந்தோசமாக கொடுத்தார்கள்.
"இப்பதான் நான் மொத மொதல்ல இந்த பீர்க்கையைப் பார்க்கிறேன்" என்று சொன்னதும், அக்கா "நீ சின்னப் பையனா இருந்தப்போ.. நம்ம வீட்டு வேப்ப மரத்துல நெறையப் பிடிச்சுதே.. ஞாபகம் இல்லையா.." என்று கேட்க... எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.
வீட்டுக்கு வந்ததும், மூன்று நான்கு விதைகளை மண்ணில் போட.. முளைத்து வந்ததில் ஒரே ஒரு செடி மட்டும் நன்றாக வளர்ந்தது. ஒரு கயிற்றில் கட்டி மொட்டை மாடிக்கு இழுத்து விட்டு, ஒரு சிறிய பந்தல் போல செய்து அதன் மேல் படர விட நன்றாக காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த மருதாணிச் செடியின் மேல் நன்றாக படர்ந்து கீழேயும் காய்கள் பிடித்தது.
இப்பொழுதெல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை பீர்க்கங்காய் சட்னி, பொரியல், கூட்டு தான் வீட்டில். மருந்தடிக்காத, நம் மண்ணில் விளைந்த காய் என்பதால் சுவை அதிகம். அது போலவே கொஞ்சம் முற்றினால் கசப்படிக்கிறது.
காயை முற்ற விட்டு, அதன் பின்னர், அதனை உடைத்தால்.. உள்ளே இருக்கும் நார் ஒரு பொம்மை போல அவ்வளவு அழகாக, மென்மையாக இருக்கிறது. சின்ன பையனாக இருந்த போது, இந்த நாரில் தேய்த்து குளித்தது நினைவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் Sponge Gourd என்று சொல்கிறார்கள்.