Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Friday, April 22, 2011

பெண்ணும் எழுத்தும்

'தீராத விளையாட்டுப் பிள்ளை' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன்.

ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்னும் சமூகம், ஒரு போதும் கோவலனை கெட்டுப் போனவனாக எண்ணுவதில்லை. அது எப்படி முடியும், கண்ணகியை பண்பாட்டுச் சின்னமாக என்னும் தலைவர்கள் வீட்டில் எத்தனை பெண்டாட்டிகள். பெண்களை நாம் கண்ணகியாகவோ, மாதவியாகவோ எண்ணாமல், ஒரு பெண் ஆக எப்போது பார்க்கப் போகிறோம்?.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத் தளத்தில் 'சொந்தக்குரல்' என்கிற கதை வெளியாகி இருக்கிறது. இந்தக் கதையில், அம்மா தன் மகனிடம் கதை சொல்வதாக இருக்கும். தனது கணவன் செய்த கொடுமைகளையும் தாண்டி ஒரு கதை எழுத அவள் கஷ்டப் பட்டதையும், இன்னும் ஒரு கதை எழுதப் படாமல் இருப்பதாகவும், அதை சொல்லப் போவதாகும் சொல்லிக் கொண்டே உறங்கிப் போகிறாள். இந்த அம்மாவைப் போலவே, ஊரில் உள்ள அத்தனை பெண்களிடமும் ஒரு நீள் கதை உறங்கிக் கொண்டிருக்கும் அல்லவா? .

பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அனுராதா ரமணன், சிவசங்கரி மற்றும் வாஸந்தி ஆகியோரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதிலும் மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் அனுராதா ரமணன் அவர்களின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். இப்பொழுது வாஸந்தி அவர்கள் எழுதி வரும் 'பெற்றதும் இழந்ததும்' தொடர் குமுதம் தீராநதியில் வெளிவருகிறது. ஒரு திறந்த கோணத்தில் எழுதப் படும் தொடராகவே இது எனக்கு பிடித்திருக்கிறது. ஆண்களில் எல்லோருமே பெண்களைப் பற்றி எழுதாமல் கடந்து போக முடிவதில்லை. நான் படித்த அனைத்து எழுத்தாளர்களுமே பெண்களை உயர்வாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

எழுத்து என்று வரும்போதும் நினைத்ததை எல்லாம் எழுத முடிவதில்லை. ஒரு ஆண் காமம் பற்றியோ அல்லது பாலியல் பற்றியோ விவரமாக எழுத முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி எழுதும் அனைத்துப் பெண் எழுத்தாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.

இறுதியாக, மலையாளக் கவிஞர் கமலாதாஸ் அவர்களின் கவிதை ஒன்றை, எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் இந்த மாத குமுதம் தீராநதியில் தனது 'பெற்றதும் இழந்ததும்' பகுதியில் எழுதியிருக்கிறார்.

தூக்கணாங்குருவியை உன் உள்ளங்கைக்குள்
பொத்தி வைக்கத் திட்டமிட்டாய்
உனக்குத் தெரியும்,
உனது அன்புப்பிடியில் இறுக்கிக் கொண்டால்
அவளது இயல்பு மாறுமென்று
பருவங்களும் சொந்த வீடும் மட்டும் மறக்கவில்லை,
போயின மறதியில்..
பறக்கும் ஆர்வமும் முடிவற்ற வானத்தின் எல்லைகளும்..




இந்தப் பதிவை தொடர விருப்பமுள்ள அனைத்து நண்பர்களும் எழுதவும்.


Wednesday, March 2, 2011

பேரும் பெயரும்...

பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.



ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :)

என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல்வி என. அது போலவே எனக்கும் 'இளையராஜா' (யாருப்பா.. அங்க சிரிக்கறது.. சிரிக்கப்படாது.. இது வரலாறு !!) என முதலில் வைத்திருக்கிறார்கள். அப்புறம் அது நன்றாக இல்லை என்று 'இளங்கோ' என்று ஆக்கி விட்டார்கள். இப்படிதான் எனக்கும் ஒரு நாமம் சூட்டப் பட்டது.

எங்கள் ஊரில் ஒரு சிலருக்கு 'இ' வராது போல, 'என்ன எலங்கோவா...' என்று கூப்பிடுவார்கள். இதில் இன்னொரு பாட்டிக்கு நான் 'இளங்கோவு...'. பக்கத்துக்கு வீட்டில் இருந்த இன்னொருவர் பெயரை முழுதாக மாற்றி 'என்ன கோவாலு..' என்பார். எப்படியோ ஊரில் சமாளித்து விடலாம். ஆனால் இந்தப் பள்ளியில், 'சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள்' என்று புத்தகத்தில் இருக்கும். அந்தப் பாடம் முடிந்து கொஞ்ச நாளைக்கு 'என்ன இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி முடிச்சுட்டியா? ' என்று கிரௌண்டில் நின்று கொண்டு கத்துவார்கள்.

ஆனால் ஒரு நிம்மதி என்னவெனில், ஏகப்பட்ட சுரேஷ்-களும், ஆனந்த்-களும், சரவணன்-களும் இருக்கும் வகுப்பறை அட்டேண்டேன்சில் எனது ஒரு பெயர் மட்டும் தனியாக இருக்கும். அபூர்வமாகவே இன்னொரு இளங்கோவை எங்காவது கிராஸ் பண்ண முடிகிறது.

இந்தப் பெயர் மட்டும் என்றில்லை. நிறையப் பட்டப் பெயர்கள் உண்டு. அதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. இத்துடன் இந்தப் புராணத்தை நிறுத்திக் கொள்கிறேன். அண்ணன் ஆர் வி எஸ் அவர்களை போல சரளமாக என்னால் எழுத முடியவில்லை என்றாலும், அவர் என்னை மன்னிப்பாராக. :)

நானும் கொஞ்ச நண்பர்களைத் தொடர அழைக்கிறேன்;

பிரகாஷ் (சாமகோடாங்கி)
முரளி
சித்ரா
ஷஹி

மேலே உள்ள படம்: இணையத்தில் இருந்து, 'இளங்கோ' என்று தேட இது தான் கிடைத்தது :(.

நன்றி