கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா
அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல். போக்ராம் ஒரு சந்தை வியாபாரி. சணல் அறுவடை நடக்கும் காலங்களில் அதை வாங்கி விற்பான். மற்ற மாதங்களில் துணிகளை வாங்கி விற்பான். பக்கத்து ஊர் சந்தைகளில் அவன் வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவன் குடும்பம் நடத்த உதவுகிறது. வாரத்தின் எல்லா நாளுமே அவன் சந்தைக்குப் போய்விடுகிறான். போக்ராமுக்கு மனைவி, பிள்ளைகள், தங்கை வாசந்தி, வயதான தாய் என பெரிய குடும்பம். வறுமை இல்லை என்றாலும் குடும்ப சக்கரம் போக்ராமுடைய வருமானம் கொண்டே ஓடுகிறது. நாவல் முழுவதும் சோனாய் ஆறு கூடவே வருகிறது. அவர்கள் இருக்கும் கிராமம் சோனாய் பரியா என்ற ஊர். அந்த ஊரில் தனஞ்ஜெயன் என்னும் இளைஞன் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறான். தன்னால் முடிந்த உதவிகளை அவன் அந்த ஊர் மக்களுக்குச் செய்கிறான். போக்ராமும் அவனும் நண்பர்களாக இணைகிறார்கள். வாசந்திக்கு தனஞ்ஜெயனை பிடித்து போவதால் அவனை காதலிக்கிற...