Showing posts with label கதையெனும் நதியில். Show all posts
Showing posts with label கதையெனும் நதியில். Show all posts

Friday, July 4, 2014

இரு கதைகள்

எதார்த்த சிறுகதைகள் என்ற வரிசையில் 'சொல்வனம்' இதழில் சில கதைகள் வெளியாகி உள்ளன.

அறுபது வயதுக்கு மேல் ஒரு பெண்மணி, தன் கணவன், பிள்ளைகள் என அவர்களுடன் இருக்கவே விருப்பபடுவார்கள். தனியாக, தான் விரும்பியபடி வாழ அவர்கள் நினைக்கும்போது, வயதை காரணமாக வைத்து மற்றவர்கள் தடுப்பார்கள். பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்த வயதுக்கு மேல் எப்படி தனியே சென்று வாழ்வது என்ற பயமும் இருக்கும்.

அம்பை அவர்களின் 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' கதையில் வரும் சந்தியாபாய், கணவன் மற்றும் பிள்ளைகளிடம், இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது, நானும் என் நகைகளைக் குடுத்து இருக்கிறேன், என் பங்கை எனக்கு கொடுங்கள். நான் எங்கள் கிராமத்துக்குச் சென்று என் தங்கையுடன் வாழ்கிறேன்.. என்று சொன்னதும் குடும்பத்தினர் ஆடிப் போகிறார்கள். புத்தி பிசகி விட்டது என்று எண்ணுகிறார்கள். சந்தியா பாயின், கணவரும் பிள்ளைகளும் மோசமானவர்கள் இல்லை, அவர்கள் எல்லோரும் இவரைத் தாங்குகிறார்கள். ஆனால், எதையே இழந்தது போல இருக்கும் இருக்கும் இந்த வாழ்க்கையை அவர் துறந்து, தான் நேசித்த தோட்டங்களும் பூச் செடிகளும் குருவிகளும் இருக்கும் தனது பால்ய கால இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா?.. கதையைப் படித்து பாருங்களேன்.

------------

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் 'மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்'  இந்தக் கதை, தான் பிறந்த மண்ணை விட்டு எங்கேயோ இருக்கும் அந்தோணிசாமியைப் பற்றிய கதை. வெளிநாட்டில், மாரியம்மன் கஞ்சி விழாவில்.. சொந்த மண்ணை விட்டுப் போன அந்தோணிசாமி, தன்னைப் போலவே இருக்கும் அந்தோணிசாமிகளைக் கண்டுகொள்கிறார்.

---------
இந்த இரண்டு கதைகளும் எனக்கு பிடித்திருந்தன.

Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.


Wednesday, February 2, 2011

கதையெனும் நதியில்..

ஒட்டகம்:



காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர்.

இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான்.

அறம்:

ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம். ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை.

பிறந்த நாள்:

ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மறந்து விடும். அவர்களுக்கு அது கூட்டம் கூடும் இன்னும் ஒரு நாளே. அதைப் பற்றிய சுகா அவர்களின் நினைவுகள் தான், சொல்வனத்தில் வெளியாகியுள்ள பிறந்த நாள்.

பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாத இன்னொரு குழந்தையின் மேல் நினைவுகளை அடுக்கி விட்டு நிறைவடைகிறது.

மூங்கில் மூச்சு:

இதுவும் ஆனந்த விகடனில் வெளிவரும், சுகா அவர்களின் தொடர். இந்த வாரம் சென்னை மாநகரில் வீடு தேடுவதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறார் சுகா.

முதலில் அட்வர்டைசிங் கம்பனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் நடிகர் ஆர்யா வீட்டுக்கு வந்ததை வீட்டுக்காரரின் பெண் பார்த்து விடுகிறாள். அப்பாவிடம் அந்தப் பெண் சொல்லி விட, வீட்டுக்காரர் இவரை வரச் சொல்கிறார். இவர் வீட்டுக்காரரிடம் என்ன சமாதானம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு போகிறார். 'சினிமாவில் வேலை செய்வதை மறைத்து ஏன் பொய் சொன்னீர்கள்' என்று ஒரு தலைமை ஆசிரியர் போலக் கேட்டுவிட்டு, இன்னும் ஒரு கேள்வி கேட்கிறார்..."நீங்கள் சினேகாவைப் பார்த்து இருக்கீர்களா".

படம்: இணையத்தில் இருந்து.
நன்றி: சொல்வனம் மற்றும் ஆனந்த விகடன்.