Monday, March 28, 2011

இதுவும்...

ஓட்டுப் பொத்தானை ஒரு அழுத்து அழுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால், கையைப் பிடித்திழுத்து கருப்பு மையை அழுத்தி வைப்பார்கள். அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் மை அப்புவார்கள். அதுவரைக்கும் எந்தக் கூட்டம் கொள்ளை அடித்தால் என்ன, ஊழல் செய்தால் என்ன, நமக்குத் தவறாமல் சன்மானமாக கருப்பு மையோடு, தொலைக்காட்சிப் பெட்டிகளும், மிக்சிகளும், செல்போன்களும் கொடுப்பார்கள்.

- தொழில்கள் வளர
- கல்விக் கட்டணங்களை குறைக்க
- அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிகள்
- விவசாயம் மேம்படுத்த
- மின்சாரம், நீர் ஆதாரம், சாலைகள் பற்றி
- ஏழை மக்கள் முன்னேற
- குழந்தை தொழிலாளர்கள் பற்றி
இவைகளைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. எல்லாமே இலவசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது தேர்தல்.

"மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

அந்த ஒருநாளும் கடந்து போகத்தான் போகிறது. "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா" என்பது போல், அன்றும் வாக்களிக்கப் போகிறோம். கருப்பு மையோடு பின்னர் எல்லோரிடமும் கடமையைச் செய்ததாக பேசிக் கொள்ளுவோம்.

மகாகவி சொன்னதும் நமக்குத் தான்:

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
கஞ்சி குடிப்பதற்கு இலார் - அதன்
காரணம் இவையென அறியும் அறிவுமிலார்
நெஞ்சு பொறுக்கு திலையே...




Thursday, March 17, 2011

ஒரு விருது


விழுதுகள் அமைப்பின் சிறந்த நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை(12/03/2011 ) அன்று சென்னை நாரத கான சபாவில், எங்கள் நண்பன் கமலக்கண்ணனுக்கு, சிறந்த சேவைக்காக, 'மாணவ சேவா தர்ம சம்வர்தினி' யின் 12 - ஆம் ஆண்டு விழாவில் 'சற்குரு ஞானானந்தா நேசனல் அவார்ட்' வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து கமலக்கண்ணன் உட்பட நால்வருக்கு மட்டுமே இந்த விருதை அளித்திருக்கின்றனர்.

இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

(புகைப்படத்தில் பெற்றோருடன் கமலக்கண்ணன்)




Monday, March 7, 2011

மரங்களின் தந்தை


திரு. கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில், மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைப் பற்றி எழுதி இருந்தார். நண்பனும் நானும் அவரைச் சந்திக்க சென்றிருந்ததைப் பற்றி இந்தப் பதிவில் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி எழுதி இருந்தேன்.

இன்று அவர் நம்மிடம் இல்லாமலாயிருக்கிறார். அவரின் குடும்பத்துக்கு எங்கள் விழுதுகளின் ஆழந்த இரங்கல்கள்.

(அவர் வளர்த்த மரங்கள் சாலை ஓரத்தில்)

மூவாயிரம் மரங்களுக்கு மேல் தனி மனிதராக வளர்த்திருக்கிறார். சாலைகளிலும், காடுகளிலும் மரங்களை அழித்து மொட்டை அடித்து வரும் சூழலில் மர வளர்ப்பு என்பது எவ்வளவு அரிதான சேவை. அதிலும் எந்த பிரதிபலனும் பாராமல்.

மேலே குறிப்பிட்ட பதிவில் நான் இறுதியில் இப்படி கூறி இருந்தேன்;

அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.



அவர் அவ்வளவு மரங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மறைந்திருக்கும் பொழுது, ஒரு மரமாவது நாம் வளர்ப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் .



Wednesday, March 2, 2011

பேரும் பெயரும்...

பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.



ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :)

என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல்வி என. அது போலவே எனக்கும் 'இளையராஜா' (யாருப்பா.. அங்க சிரிக்கறது.. சிரிக்கப்படாது.. இது வரலாறு !!) என முதலில் வைத்திருக்கிறார்கள். அப்புறம் அது நன்றாக இல்லை என்று 'இளங்கோ' என்று ஆக்கி விட்டார்கள். இப்படிதான் எனக்கும் ஒரு நாமம் சூட்டப் பட்டது.

எங்கள் ஊரில் ஒரு சிலருக்கு 'இ' வராது போல, 'என்ன எலங்கோவா...' என்று கூப்பிடுவார்கள். இதில் இன்னொரு பாட்டிக்கு நான் 'இளங்கோவு...'. பக்கத்துக்கு வீட்டில் இருந்த இன்னொருவர் பெயரை முழுதாக மாற்றி 'என்ன கோவாலு..' என்பார். எப்படியோ ஊரில் சமாளித்து விடலாம். ஆனால் இந்தப் பள்ளியில், 'சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள்' என்று புத்தகத்தில் இருக்கும். அந்தப் பாடம் முடிந்து கொஞ்ச நாளைக்கு 'என்ன இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி முடிச்சுட்டியா? ' என்று கிரௌண்டில் நின்று கொண்டு கத்துவார்கள்.

ஆனால் ஒரு நிம்மதி என்னவெனில், ஏகப்பட்ட சுரேஷ்-களும், ஆனந்த்-களும், சரவணன்-களும் இருக்கும் வகுப்பறை அட்டேண்டேன்சில் எனது ஒரு பெயர் மட்டும் தனியாக இருக்கும். அபூர்வமாகவே இன்னொரு இளங்கோவை எங்காவது கிராஸ் பண்ண முடிகிறது.

இந்தப் பெயர் மட்டும் என்றில்லை. நிறையப் பட்டப் பெயர்கள் உண்டு. அதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. இத்துடன் இந்தப் புராணத்தை நிறுத்திக் கொள்கிறேன். அண்ணன் ஆர் வி எஸ் அவர்களை போல சரளமாக என்னால் எழுத முடியவில்லை என்றாலும், அவர் என்னை மன்னிப்பாராக. :)

நானும் கொஞ்ச நண்பர்களைத் தொடர அழைக்கிறேன்;

பிரகாஷ் (சாமகோடாங்கி)
முரளி
சித்ரா
ஷஹி

மேலே உள்ள படம்: இணையத்தில் இருந்து, 'இளங்கோ' என்று தேட இது தான் கிடைத்தது :(.

நன்றி