Monday, December 31, 2018

பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்.

--

ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல். 

நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே. 

எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை,  அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மாமியார் அம்மா தன் கால்களைப் பிடித்து மருதாணி பூசியதை, கணவனின் பிரிவை 'கிணத்து தண்ணி எங்கேயும் போய்டாது' என்று மாமியார் சொன்னதை என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதுகிறாள். 

அது தீபாவளி சமயம். மேல்மாடியில் படுத்த படுக்கையாயிருக்கும் பாட்டியைக் கீழே அழைத்து வந்து குளிக்க வைக்கிறார்கள். அதற்குப் பின்னர், ஒரு குழந்தையின் திடீரென்ற அழுகுரல் கேட்கிறது. எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடுகிறார்கள். அந்தக் குழந்தை, அந்த வீட்டின் இன்னொரு மருமகளான காந்தியைக் காட்டி 'அம்மா என்னை அடித்துவிட்டாள்' என்று அழுகிறது. மாமியார் மருமகளைத் திட்டுகிறாள். எதற்கு அடித்தாய் என்று கேட்டதற்கு, ஒரு மத்தாப்பு குச்சியைக் கொழுத்திக் கொண்டு என் முன்னால் வந்தான் பையன் என்கிறாள் மருமகள். 

தன் கணவன் பட்டாசுக் கடை விபத்தில் இறந்து போனதால், காந்திக்கு பட்டாசுகள் என்றாலே பிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தையை அடித்திருக்கிறாள். மாமியார் அவளிடம்,  'நல்ல நாளும் அதுவுமா எதுக்கு குழந்தைய அடிக்கிறே. என் பையன் போனதுக்கு குழந்தை என்ன பண்ணுவான். எனக்கு மட்டும் துக்கம் இல்லையா?. எல்லாத்தையும் மறந்துட்டு நான் இருக்கலையா' என்று கேட்கிறாள். உடனே காந்தி, 'உங்களுக்கு பிள்ளை போனதும் எனக்கு புருசன் போனதும் ஒண்ணாகிடுமா?' என்று கேட்கிறாள். அவள் கேட்ட கேள்வியால் எல்லோரும் வாயடைத்துப் போகிறார்கள். மாமியார் ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். மருமகளைத் தேற்றுகிறாள். 

ஜகதா கடைசிப் பத்தியில் இப்படி எழுதுகிறாள்;
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் நீங்கள் எனக்கு கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்..

--

ஜகதா இன்னும் கடிதத்தை முடிக்கவில்லை. குடும்பம் ஒரு  பாற்கடல் போல. அதனை ஒரு சிறு கடிதத்தில் அடைக்க முடியுமா. ஜகதா இன்னும் எழுதிக்கொண்டிருப்பாள். 

ஓரிடத்தில், 'இப்பொழுது நால்வராய் இருக்கிறீர்கள். முன்பு ஐவராய் இருந்தவர்கள்தானே?' என்று எழுதுகிறாள். தலையும் புரியாமல், வாலும் புரியாமல் படித்துக்கொண்டே வந்தால், இறந்து போன காந்தியின் கணவனோடு சேர்த்து அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். 

இணையத்தில் கதையைப் படிக்க;



Monday, December 24, 2018

நிழலின் தனிமை - தேவிபாரதி

மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது.
- சுகுமாரன் 

--

ஏதோ ஒரு நேரத்தில் சில வஞ்சினங்களை உரைத்திருப்போம் நாம். அது பணப்பிரச்சினை, காதல் தோல்வி எனப் பல காரணங்களால் வந்திருக்கலாம். காலங்கள் போகப்போக அவற்றை நாம் மறந்திருப்போம். சில மனிதர்கள் எப்பொழுதும் அதை மறப்பதில்லை. இறக்கும் வரையிலும் அந்த வஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளம் தகிக்கும் கையாலாகாத மனிதர்கள் அதிகம். நினைத்துப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் விடையாய் இருப்பது மரணம் மட்டுமே. 

மின்மயானத்தில் ஒலிக்கப்படும் பாடலில் இந்த வரிகள் உள்ளது. மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும். 

--

நாவலின் கதாநாயகன் அரசுப்பள்ளியில் பணியாளர். ஒரு ஊருக்கு மாற்றலாகப் போகும்போது கருணாகரன் எனும் மனிதரைச் சந்திக்க நேர்கிறது. பல வருடங்களாக கருணாகரனைப் பழி தீர்க்க காத்திருக்கிறான். 

கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் கருணாகரன், பணப்பிரச்சினையில் நாயகனின் தமக்கை சாரதாவை பள்ளி செல்லும் வயதிலேயே கெடுத்து விடுகிறான். சாரதாவிடம், நீயும் நானும் சேர்ந்து ஒருநாள் அவனைக் கொல்லுவோம் என்று தேற்றுகிறான் சிறுவனான நாயகன். காலம் கனிந்து இன்று அவனை நேரில் பார்த்ததை, சாரதாவிடம் சொல்கிறான். இருவரும் முடிவு செய்து, அவனுக்கு ஒரு மொட்டைக்கடிதம் போட்டு அச்சுறுத்தலாம் என முடிவு செய்கிறார்கள். முன்னால் எந்த ஊரில் அவர்கள் இருந்தார்களோ, அந்த ஊரிலிருந்தே தபால் பெட்டியில் போடுகிறான். 



அலுவல் வேலையாக கருணாகரன் வீட்டுக்குச் செல்பவன், தான் எழுதிய கடிதம் கிடைத்ததா, இல்லையா என்பதை அறிய முடிவதில்லை. பின்னர் கருணாகரனுடன் அவனுக்கு நட்பு வளர்கிறது. கருணாகரனின் பெண் சுலோச்சனா அவனை  விரும்புகிறாள். இருவரும் பழகுவதை அறிந்த சாரதா அவனைக் கண்டிக்கிறாள். ஒரு கொலையில் கருணாகரனின் மகன் சிறை செல்ல நேர்கிறது. இப்பொழுது அந்த குடும்பத்துக்கு கதையின் நாயகன்தான் துணை. யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்தானோ, அவனது வீட்டுக் காரியங்களை நாயகன்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான். 

சுலோச்சனாவுக்கு வேறிடத்தில் மணம், நாயகன் ஊரை விட்டுப்போதல், அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு என கதை நகர்கிறது. இறுதியில், கருணாகரனைச் சந்திக்க நேர்கிறது. உடம்பு முடியாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என இருக்கிறான். சாரதா அவனைச் சந்திக்க வருகிறாள். அவனைப் பார்த்து விட்டு வருபவள், மிகச் சாதாரணமாக 'இந்தக் கருணாகரன் வேறு யாரோ. இது அவனில்லை' என்று, நாயகனிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். 

---

கருணாகரனைச் சாரதா பார்க்கப் போகும்பொழுது, அறைக்கு வெளியே பயத்துடனே நிற்கிறான் நாயகன். சாரதா அவனை ஏதாவது செய்துவிடுவாள் என நினைத்துக்கொண்டிருக்கும்போது, வெளியே வந்தவள் அவனில்லை என்று சொல்லும் காட்சியில் மானுடத்தின் பெருங்கருணை வெளிப்படுகிறது. உண்மையில் அந்தக் கருணை இன்னும் இருப்பதால்தான் இவ்வுலகும், நாமும் வாழ முடிகிறது. 

மேல்சாதி, கீழ்சாதி அடுக்குகள் நிரம்பிய கிராமத்தில் பிறந்ததால் இந்தக் கதையின் மாந்தர்கள் நெருக்கமாக அறிந்தவர்களாக இருந்தார்கள். சிறு வயதுப்பிள்ளைகள் கூட, வயது முதிர்ந்த ஒரு நாவிதரையோ, வண்ணாரையோ பெயர் சொல்லி அழைக்கலாம் கிராமங்களில். அதுபோலவே குன்னடையாக் கவுண்டன் கதையும். என்னுடைய சிறுவயதில் ஒரு பெரியவர் 10 நாட்களுக்கு மேலாக வந்து கதை சொல்லிவிட்டுப் போவார். கோயில் திடலில் உக்காருவதற்கு கோணிச்சாக்கும், போர்த்துவதற்கு போர்வையும் கொண்டுபோய் இரவில் தூங்கி விழுந்த நாட்கள் அவை. அந்நாட்களை நினைவுபடுத்தியது நாவல். 

வஞ்சத்தையும், இயலாமையையும், தனிமையையும் வென்று நிற்கிறது காலமெனும் வெளி. 


Wednesday, December 12, 2018

வண்ணதாசன்

அப்பா ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த, இரண்டு வாழைக் கிழங்குகளை வீட்டின் கொல்லையில் நட்டு வளர்த்துவருகிறோம். ஒன்று செவ்வாழை, இன்னொன்று தேன்வாழை. இரண்டிலுமே அவ்வப்போது பழைய பட்டைகளை உரிக்கும்போது, உள்ளே இருக்கும் புது பட்டையின் பசுமை கலந்த அந்த மினுமினுப்பு, கை விரல்களை வைத்து நீவினால் மெலிதாக வரும் ஒலி என எப்போதும் அஃதோர் ஆச்சரியம்.



அதிலும் நெடுநெடுவென வளர்ந்திருக்கும். செவ்வாழையின் செம்மை நிறமும், வனப்பும் கண்களை விட்டு அகலாதவை. வண்ணதாசன் ஒரு கதையில் வாழை மரத்தின் மினுமினுப்பை எழுதியிருப்பார்.

நாம் பார்த்த அதே அரச, ஆல் இலைகள்தான். அதே வாழை மரம்தான். அதே மரத்தின் நிழல்தான். அதே பவள மல்லி, பன்னீர் பூக்கள்தான். அதே மனிதர்கள்தான். அதே உலகுதான். ஆனால், அவரின் வார்த்தைகளில் வெளிப்படும்பொழுது, நாம் பார்க்க மறந்ததை, நாம் உணர மறுத்ததை.. அதுவல்ல இது என்று சொல்கிறார்.

'சின்னத்தேர் என்ன, பெரிய தேர் என்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தானே ரதவீதி இருக்கிறது' - ரதவீதி எனும் கதையில் அவர் சொல்லும்பொழுது, சிறிதென்ன, பெரிதென்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த உலகம் இருக்கிறதே என்று தோன்றும்.

'உயரப் பறத்தல்' கதையில், புகைப்படத்தில் பறவைகள் இருப்பதைக் காட்டி 'எவ்வளவு உயரத்தில் பறக்குது பாரு..' என்று சொல்வார். அதுபோலவே, அவரும் மிக உயரத்தில் இருந்து இவ்வுலகைப் பார்க்கிறார். அன்பெனும் உயரம் அது.


Wednesday, September 26, 2018

அஞ்சலை - கண்மணி குணசேகரன்

'இப்படியும் ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து துயரம் நேருமா?' என்று அஞ்சலை நாவலைப் படிக்கும்போது நமக்குத் தோன்றலாம். ஆனால், ஒரு கிராமத்தில், பொருளாதாரப் பின்புலம் இல்லாத குடும்பங்களில் நடக்க கூடியதுதான் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது அஞ்சலை போன்ற பெண்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அஞ்சலையைப் போன்றவர்கள் விழுந்து எழுந்து கண்ணீர்விட்டு ஈரமேறிய மண்ணைக் கொண்டது நம் கிராமங்கள். 

கார்குடல் கிராமத்தில், இரண்டு அக்காக்கள் மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவள் அஞ்சலை. மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அடுத்தது அஞ்சலை தான். காடு தோட்டத்துக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் அஞ்சலைக்கு, கல்யாணம் முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறாள் அம்மா பாக்கியம். மூத்த அக்காள் கல்யாணி தன் கொழுந்தனாருக்கு அஞ்சலையைக் கேட்கிறாள். அம்மா மறுத்துவிடுகிறாள். 



இரண்டாவது அக்காவின் கணவன் மணக்கொல்லை என்னும் ஊரிலிருந்து ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறான். அஞ்சலையை இரண்டாம் தாரமாக கேட்டும் கொடுக்காத காரணத்தால் கோபத்திலிருக்கும் அக்கா கணவன், மாப்பிள்ளையை மாற்றிக் காட்டிவிடுகிறான். எல்லோரும் கல்யாணத்துக்கு சரி என்று சொல்கிறார்கள். தாலி கட்டிய பின்னர் தான் அஞ்சலைக்கு தான் ஏமாந்தது தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறாள். எப்படியோ நாட்களை நகர்த்துகிறாள். 

மணக்கொல்லையில் சண்டை போட்டுவிட்டு, அம்மா வீட்டுக்குப் போனவளை நடுவழியில் மூத்த அக்கா கூட்டிவந்து தன் கொழுந்தனாருக்கு கட்டிவைக்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. வெண்ணிலா என்று பெயர் வைக்கிறார்கள். பிறகு அங்கேயும் பிரச்சினை ஏற்பட்டு, அம்மா ஊரான கார்குடலுக்கே வருகிறாள். திரும்பவும் அங்கேயும் இருக்க முடியாமல் முதல் கணவன் கணேசன் வீட்டுக்கே திரும்ப வருகிறாள். ஊர் அவளை ஒரு மாதிரியாக பேசுகிறது. அங்கேயும் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை வெண்ணிலாவை கார்குடலில் அம்மா பாக்கியம் வளர்க்கிறாள். 

எப்படியோ அஞ்சலையின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே ஓடிப்போனவள் என்று அவளைப் பேசுகிறார்கள். 

ஒருவிதத்தில் பார்த்தால், அஞ்சலை தைரியமானவளாகத் தெரிகிறாள். ஆனால், இன்னொரு பக்கம் எடுப்பார் கைப்பிள்ளையாக மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிறாள். மூத்த அக்கா சொல்வதை கேட்காமல், நான் அம்மாவிடம் போய்க்கிறேன் என்று அவளால் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், அக்காவின் கொழுந்தனார் ஆறுமுகம் அவளுக்குப் பிடித்த மாதிரி இருக்கிறான். ஒரு பெண்ணுக்கு உள்ள ஆசையை அஞ்சலை மறைப்பதில்லை. சில சமயங்களில், அதை பேச்சிலும் வெளிப்படுத்தி விடுகிறாள். 

வெண்ணிலா பிறந்த பின்னர், அம்மா வீட்டில் இருந்தவள் திரும்பவும் முதல் கணவன் வீட்டுக்கு போக முடிவெடுக்கிறாள். அப்போதும் அவள் அம்மாவிடமோ, சொந்த ஊரில் உள்ள தன் அக்காவிடமோ எந்த கருத்தும் கேட்பதில்லை. உண்மையில் பெண்கள் ஒரு செயலைச் செய்யும் முன்னர் பலவகையில் யோசிப்பார்கள். ஆனால், அஞ்சலை செய்த பின்னரே யோசிக்க ஆரம்பிக்கிறாள். அதுவே அவளுக்கு பிரச்சினையாகி விடுகிறது. 

இறுதியில், சாகப்போன அஞ்சலையை முதல் பிள்ளையான வெண்ணிலா காப்பாற்றி கூட்டிவருகிறாள். இதற்கு முன்னரும் தற்கொலைக்கு முயன்றவள்தான், ஆனால் அப்பொழுது அம்மா காப்பாற்றிவிட்டாள். இப்பொழுது வெண்ணிலா. 'இத்தன பட்டாச்சு. இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்காம ஏஞ் சாகப்போற நீனு' என்று திட்டும் வெண்ணிலாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறாள் அஞ்சலை. நாவல் இங்கே முடிகிறது. 

அடுத்த தலைமுறையான பிள்ளைகளுடன் அஞ்சலை கொஞ்சம் சுகப்பட்டிருப்பாள் என்றே தோன்றுகிறது. எத்தனை பட்டாலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டிருக்கமாட்டாள் அஞ்சலை. 

நாவலில் வரும் கிராமங்களான, கார்குடல், மணக்கொல்லை மற்றும் தொளார் போன்ற ஊர்கள், நாம் அங்கே இருந்ததுபோலவே நாவலில் சித்தரிக்கிறார் கண்மணி குணசேகரன். பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால் கூட எட்டிப்பார்க்காது இருக்கும் நகரங்களில், ஒரு பெண் ஒருவனைச் சும்மா பார்த்தால் கூட கதைகட்டி விடும் ஆட்கள் நிறைந்த கிராமங்களை நம் முன்னால் கொண்டுவருகிறார் ஆசிரியர். 

இரண்டு மாதங்களுக்கு முன்னர், எங்கள் சொந்த ஊரில் இருந்த நிலம், வீட்டை விட்டுவிட்டு இங்கே நகரத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பெரியவரைப் பார்க்க நேர்ந்தது. 'அங்கே எல்லாம் இருக்க முடியாது சாமி. கண்டதையும் பேசுறாங்க. வெளியிலே போக வர.. ஏன் எதுக்குன்னு ஊர்ல இருக்கற ஒவ்வொருத்திகிட்டயும் சொல்லனும். எவளாவது ஒருத்திகிட்ட மாத்தி சொல்லிட்டா போதும், ஊரே கேள்விக்கு வந்து நிக்கும். இங்கே பாரு, என்ன ஒரு சுதந்திரம். எவனும் எதுவும் கேட்க முடியாது. கொஞ்சம் நிம்மதி. ஆனா, ஊரவிட்டு வந்தது வருத்தம் தான். என்ன பண்ண, நிம்மதியா தூங்கி எழுந்திருக்கணும். அது எங்க இருந்தா என்ன? ' என்றார். உண்மையில், கிராமங்கள் நாம் நினைப்பது போல சொர்க்கம் அல்ல. 

தேடிப்பார்த்தால் இப்பொழுதும் சில அஞ்சலைகள் எங்காவது நம் கிராமங்களில் அழுதுகொண்டிருக்கலாம்.



Thursday, June 28, 2018

வீட்டுத் தோட்டத்தில் மிளகு

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன்' என்றார். அவரின் சொந்த ஊர் வால்பாறை.

சொன்னவாறே நான்கு மிளகு குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தார். அந்த நான்கில் மூன்று குச்சிகள் பட்டுப் போக, ஒன்று மட்டும் எப்படியோ தழைந்து, பக்கத்தில் இருந்த பலாவைப் பற்றிக்கொண்டது.

நீண்ட நாட்கள் கழித்து, இப்பொழுது பூத்திருக்கிறது. இதில் மிளகு காய்க்குமா, இல்லையா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.








Monday, June 25, 2018

நான்கு இட்டலிகள்

உலகத்துக் கவலைகளில்
மூழ்கியிருந்தேன் நான்.
நான்கு இட்டலிகளை
வட்டிலில் வைத்து
'தின்று இளைப்பாற்றுங்கள்
நன்கு செரிக்கும்'
என்கிறாள் அரசி.
செரிப்பது மனமா, வயிறா
எனக் குழம்புகிற
அரசனாய் நான்.

Wednesday, May 16, 2018

அன்பே கடவுள்

தல்ஸ்தோயின் சிறுகதை.

கடவுள் ஒரு தேவதை செய்த தவறால், அத்தேவதைக்குச் சாபம் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். கூடவே, பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து மூன்று கேள்விகளுக்கு விடைகள் கண்டறிந்தால், மீண்டும் தன்னிடம் வந்து சேரலாம் என்கிறார் கடவுள்.

அந்த மூன்று கேள்விகள்;

1. மனிதனிடம் குடிகொண்டிருப்பது எது?
2. மனிதனுக்குக் கொடுக்கப்படாதது எது?
3. மனிதன் எதனால் வாழ்கின்றான்?



தேவதை கண்டுபிடித்த பதில்கள்;

1. அன்பு
2. வரப்போவதை அறியக்கூடிய அறிவு
3. தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மனிதன் வாழவில்லை; பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலமே அவன் வாழ்கிறான்.


அன்பே கடவுள். (Leo Tolstoy)



Monday, April 9, 2018

தென்னாப்பிரிக்காவில் காந்தி (ராமச்சந்திர குஹா) - Gandhi Before India

துளியும் வன்முறையை நாடாமல், சமரசம் மூலமாக எவ்வாறு வெற்றியைப் பெறுவது என்பது காந்தி கண்ட வழிமுறை.  காந்தியம் என்பது வெறும் வார்த்தையல்ல. வாழ்க்கை முறை.

நன்கு படித்த, அதுவும் நூறாண்டுகளுக்கு முன்னர் லண்டனில் சட்டக்கல்வி பயின்ற காந்தி போன்ற ஒருவர், தன்னுடைய துறையிலேயே மேலே வர முயல்வார். அவரின் காலத்தில் அவர் பெற்ற கல்வி மதிப்புமிக்கது. ஆனால், அவர் அதை உதறித் தள்ளிவிட்டு சத்தியாகிரகத்தை கைக்கொண்டார். அவர் அப்படி மாறுவதற்கு என்னென்னெ காரணங்கள், அவர் சந்தித்த ஆளுமைகள் என இந்தப் புத்தகம் விளக்குகிறது.



'வன்முறையை நான் ஒருபொழுதும் ஆதரிக்க மாட்டேன்.  எதிர்த்தரப்பை கொல்வதன் மூலம் ஒருவன் ஆட்சிக்கு வரலாம். ஆனால், அந்த ஆட்சி கொலைகாரர்களால் ஆனது. மக்களை அவர்கள் எப்படி காப்பார்கள்.'  என்கிறார் காந்தி. வெள்ளையர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களை நம்மை மதிக்கச் செய்ய முடியும் என்று நம்புகிறார். அவ்வாறே, பல வெள்ளையின நண்பர்களைப் பெறுகிறார்.

இருபது வருடங்கள் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்திருக்கிறார். இந்த காலகட்டத்திலேயே, சத்தியாகிரகம் மற்றும் அதனால் விளையும் நன்மைகளைக் கண்டறிகிறார். காலன்பாக், போலாக், சென்ஷி ஷிலேசின் போன்றோரைச் சந்தித்து நண்பர்களானதும் இங்கேதான். காலன்பாக் மூலமாக தல்ஸ்தோய் மேல் ஈடுபாடு ஏற்படுகிறது. தல்ஸ்தோயின் அன்பும், அறமும், நீதி உணர்வும் காந்தியை ஈர்க்கிறது. அவருக்குச் சில கடிதங்களை எழுதுகிறார் காந்தி. பதில் கடிதம் போடுகிறார் தல்ஸ்தோய்.

தல்ஸ்தோய் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, நண்பர்கள் சேர்ந்து தல்ஸ்தோய் பண்ணையை ஆரம்பிக்கிறார்கள். அப்பண்ணையில் தற்சார்பு முறையில் வாழ்கிறார்கள். குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, சின்ன சின்ன வேலைகளைக் கொடுக்கிறார்கள். காந்தி அதற்கு முன்னரே, பீனிக்ஸ் என்ற பண்ணையை நடத்தி வருகிறார். அங்கிருந்து, தல்ஸ்தோய் பண்ணைக்கு குடி பெயர்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில், புலம் பெயர்ந்த மக்களுக்குண்டான சில சிக்கல்களுக்காக போராட ஆரம்பிக்கிறார் சட்டம் படித்த காந்தி. தலைக்கு 3 பவுண்டு வரி சட்டம், திருமண சட்டம் போன்றவை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும் துன்பங்களைப் புரிந்து கொண்டு சத்தியாகிரகம் மூலம் போராடுகிறார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயல்கிறார். ஆனால், எக்காரணம் கொண்டும் வன்முறையை நாடுவதில்லை.

போராட்டம் மூலமாக சிறை செல்ல நேர்கிறது. அவர் மட்டும் செல்லாமல், கஸ்தூரிபா காந்தி மற்றும் மகன்கள் ஆகியோரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார். அவர்களும் சிறை செல்கிறார்கள். சிறையில் தனிப்பட்ட சைவ உணவு இல்லாமல், கஸ்தூரிபா அவர்களின் உடல்நிலை குன்றுகிறது. விடுதலை ஆனவுடன் தேறுகிறார்,

தென்னாப்பிரிக்காவுக்கு கூலி வேலைக்குச் சென்ற இந்தியர்களில் கணிசமானோர் தமிழர்கள். மொழி புரியாவிட்டாலும், அவர்கள் காட்டிய அன்பில் வியக்கிறார் காந்தி. குஜராத்திகளை விடவும், தக்க சமயத்தில் தமிழர்கள் உதவியிருக்கிறார்கள் என பலமுறை சொல்கிறார் காந்தி. தம்பி நாயுடு என்னும் தமிழர், காந்திக்கும், தமிழ் மக்களுக்கும் பாலமாக இருந்திருக்கிறார். தன்னுடைய மகன் மணிலாலை தமிழ் படிக்கச் சொல்கிறார். பெரும்பான்மையினர் பேசும் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என விரும்புகிறார்.

இந்தியா திரும்பிய பின்னர் காந்தி மேற்கொண்ட போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைகிறது அவரின் தென்னாப்பிரிக்கா வாழ்க்கை.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஒரு தென்னாப்பிரிக்க நண்பர் இந்த வரிகளைச் சொல்கிறார்; 'நீங்கள் எங்களுக்கு ஒரு வழக்கறிஞரைத் தந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு மகாத்மாவாக திருப்பிக் கொடுத்தோம்.'.

பலதரப்பட்ட மக்களுடன், சமயங்களுடனும் காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ நேர்கிறது. குஜராத்திகள், தமிழர்கள், முஸ்லீம்கள் என எல்லோரும் அங்கே வாழ்ந்ததால் அவருக்கு இது வாய்ப்பாக அமைகிறது. இதுவே, இந்தியாவில் அவர் இருந்திருந்தால், பெரிய வழக்கறிஞராகவோ, ஆங்கிலேய ஆட்சியில் பெரிய பதவியையோ பெற்றிருக்க கூடும். இந்தியாவைப் பற்றி ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அவர் தென்னப்பிரிக்க வாழக்கையிலேயே பெறுகிறார் என்கிறார் நூலின் ஆசிரியர்  ராமச்சந்திர குஹா.

கிட்டத்தட்ட 800 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பல தகவல்களைப் பெற்றே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்புகளையும், வரலாற்றுத் தகவல்களையும் எங்கிருந்து ஆசிரியர் பெற்றார் என்பதும் இணைப்பாக உண்டு. மகாத்மா பற்றி அறிய வேண்டுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி -  Gandhi Before India
ராமச்சந்திர குஹா - Ramachandra Guha
தமிழில்: சிவசக்தி சரவணன்
கிழக்கு பதிப்பகம்



Wednesday, March 14, 2018

குறும்படம் - PAROKSH

12 நிமிடங்கள் மட்டுமே வரும் குறும்படம் என்றாலும், படைப்பாக்கம் வியக்க வைக்கிறது. படம் பார்த்து முடிக்கும்பொழுது இறுதியில், உங்களிடமிருந்து வரும் புன்னகையே இப்படத்தின் வெற்றி.