Thursday, January 4, 2024

கொற்றவை - கொடுங்கோளூர் கண்ணகி

கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். 


திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். 


கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி. 

மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே எல்லாவற்றையும் வெல்லும் என்கிறான் மன்னன். காவற்படையே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. 

மாதவியுடனான வாழ்க்கையை மறந்து, செல்வம் அனைத்தையும் இழந்து கண்ணகி காலில் இருக்கும் சிலம்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மதுரை வருகிறார்கள். அதே நேரம் அரண்மனையில் அரசியின் சிலம்பும் காணாமல் போகிறது. ஒரு சிலம்பை விற்க கோவலன் கடைவீதியில் பொற்கொல்லனைத் தேடி வருகிறான். அரசியின் சிலம்பு போலவே கண்ணகியின் சிலம்பும் இருப்பதால், தீர விசாரிக்காமல் கொல்லப்படுகிறான் கோவலன். 

படுகொலையை அறிந்த கண்ணகி இன்னொரு ஒற்றைச் சிலம்புடன் நீதி கேட்கிறாள். குற்றத்தை அறிந்த மன்னன் அப்பொழுதே இறந்து விழ, அரசியும் இறக்கிறாள். கொற்றவை கோலம் கொண்டு கண்ணகி மதுரையை அழித்த பின்னர் சேர நாடு நோக்கிச் செல்கிறாள். 

===

ஓரிடத்தில் மக்களை விலைக்கு வாங்கும் சந்தையில் கண்ணகியும், கோவலனும் புக நேர்கிறது. அதைப்பார்த்து கோவலன் பதறி 'நான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கலாகாது. உன்மனம் என்ன பாடுபடும்' என்கிறான். ; கண்ணகி அதற்கு பதில் சொல்கிறாள்; 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண்டிர் தன் கணவர்களை நம்பி இருக்க வேண்டியதில்லை. ஒருவகையில் அதுவும் நல்லதுதான்'. கோவலன் அவளின் மனவோட்டம் அறிந்து தலை கவிழ்கிறான். 

'பயிரென்பதன் பொருட்டுப் பிறவெல்லாம் களையப்படும் மண்ணை மருதமென்றனர் மூதாதையர். பச்சை பொலிந்து தலைகுனிக்கும் ஒவ்வொரு செடிக்கும் இறந்த களைகளின் உதிரமே உணவு.' - இது  போல பல வரிகள் கொற்றவையில் கவிதையாக உள்ளது. 

அறமே தலையாயது என்று பாண்டிய நெடுஞ்செழியனின் அமைச்சர் கூற, "மறமன்றி இம்மண்ணில் அறம் இருக்க முடியாது" என்று கோப்பெருந்தேவி சொல்ல மன்னன் அதையே பின்பற்றுகிறான். இறுதியில் அறமே வெல்கிறது. 

===


சிலப்பதிகாரம் தோன்றிய தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் இல்லை. மலையாள நாடான சேர நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் உண்டு. முனைவர். வி. ஆர். சந்திரன் அவர்கள் எழுதி, எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்த்த  'கொடுங்கோளூர் கண்ணகி' எனும் நூல் கண்ணகி கோவில் பற்றி விளக்குகிறது.  கொடுங்கல்லூர் அம்மை கண்ணகியாகவே வழிபடப்படுகிறாள். கையில் சிலம்புடன் சிலை உள்ளது. மேலும் பல பகவதி கோவில்கள் கண்ணகி கோவில்களே என்று சந்திரன் அவர்கள் கூறுகிறார். 

மலைவாழ் மக்களான குறும்பர்களே கண்ணகியை முதலில் கண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடுங்கல்லூர் அம்மைக்கு 'குறும்பா தேவி' என்ற பெயரும் உண்டு. மீன மாதம் நடக்கும் பரணித் திருவிழாவில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. முன்பு குறும்பாடு என்னும் செம்மறியாட்டை பலி கொடுக்கும் வழக்கமும் இந்த கோவிலில் இருந்திருக்கிறது. 

முற்காலத்தில் வஞ்சி என்னும் பெரிய ஊராக இருந்துள்ளது கொடுங்கல்லூர். போர்களை மிகப்பெரிய அளவில் சந்தித்த இடமாக வஞ்சி இருந்த்துள்ளது என்று குறிப்பிடுகிறார் முனைவர் சந்திரன். 

கொற்றவை நாவலுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது 'கொடுங்கோளூர் கண்ணகி' புத்தகம். 


Tuesday, December 26, 2023

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன். 


மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது. 


மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி. 



சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.