Friday, January 31, 2014

தி ஷாசாங் ரெடெம்ப்சன் (The Shawshank Redemption)

சிறைச்சாலைகளில் ஒவ்வொரு நாளும் கைதிகளின் பரேடு நடப்பது வழக்கம். வழக்கம் போல ஒருநாள், அந்த சிறையின் ஒரு வார்டில் கைதிகளின் பரேடு நடக்கிறது. எல்லா அறைகளிலும் இருந்து, கைதிகள் வெளியே வந்து நிற்க.. ஓர் அறை மற்றும் திறக்கவே இல்லை. காவலர்கள் கத்திக் கூப்பிடுகிறார்கள். அப்பொழுதும் எந்த பதிலுமில்லை.

காவலர்கள், அந்த அறைக்குச் சென்று பார்க்கிறார்கள். அங்கே கைதியைக் காணவில்லை. இரவு அந்த அறைக்குச் சென்ற கைதி, எப்படித் தப்பியிருப்பான் என்பது புரியாமல் திகைக்கிறார்கள். பக்கத்து அறை நண்பனைக் கேட்கிறார்கள். அவனுக்கும் தெரியாமல், திகைத்து நிற்கிறான்.


******

ஆண்டி ஒரு வங்கி அதிகாரி. அவனின் மனைவி கொலை வழக்கில், எதிர்பாராவிதமாக ஆயுள் தண்டனை பெறுகிறான் ஆண்டி. சிறைக்கு வரும் அவன், ரெட் என்ற நண்பனின் உதவியால், ஒரு சுத்தியையும், ஒரு நடிகையின் பெரிய புகைப்படத்தையும் வாங்கி தன்னுடன், அறையில் வைத்துக் கொள்கிறான். அவ்வப்பொழுது அந்த சுத்தியைக் கொண்டு, கற்களில் சின்ன சின்னப் பொருட்களைச்  செய்கிறான்.


 அந்த சிறையின் வார்டன் பைபிள் மேல் ஆழ்ந்த பற்று கொண்டவர். ஆண்டியைச் சந்திக்கும் வார்டன், அவனுக்கு ஒரு பைபிளைத் தருகிறார். ஆண்டி, சிறையின் சுவற்றில் ஒட்டி இருக்கும் நடிகையின் புகைப்படத்தை பார்க்கிறார் வார்டன்.

 
ஒருமுறை, சிறையில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, வரி மற்றும் வங்கி பற்றிய சந்தேங்களை தீர்க்கிறான் ஆண்டி. இதனால் அங்கே அவனுக்கு ஒரு நல்ல மதிப்பு ஏற்படுகிறது. சிறையில், சில முன்னேற்றங்களைச் செய்கிறான் ஆண்டி. வெளியே இருந்து சில வேலைகளை நாம் செய்தால், நல்ல லாபம் உண்டு என்று வார்டனிடம் கூற, வார்டனும் ஒத்துக்கொள்கிறார். நூலகம் மற்றும் சிலருக்கு விட்டுப்போன கல்வியைக் கற்றுத் தருகிறான் ஆண்டி.

வார்டனோ, சிறைக் கைதிகள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் பணத்தை, ஆண்டியின் அறிவுரைப்படி இன்னொரு பினாமி பெயரில் போட்டு வருகிறார். அந்தக் கணக்குகள் அனைத்தையும் ஆண்டியே கையாள்கிறான். தினமும் இரவு வார்டனின் மேற்பார்வையில்,   கணக்கு வழக்குகளை முடித்து ஒரு அலமாரியில் வைத்து பூட்டி வைக்க வேண்டியது ஆண்டியின் வேலை.



 இப்படியே வருடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறைக்கு டாம் என்ற கைதி வருகிறான். ஆண்டி மற்றும் ரெட்டிடம் அவன் நன்றாகப் பழகுகிறான். எதேச்சையாக ஒரு நாள், ஆண்டியின் மனைவி கொலை வழக்கு பற்றிச் சொல்கிறான். அதைச் செய்தது இன்னொருவன் என்றும், ஆனால் சிறையில் இருப்பதோ இன்னொருவன் என்றும் சொல்கிறான்.

இதைக் கேட்ட ஆண்டி, வார்டனிடம் போய், தன்னை சிறையில் இருந்து வெளியேற உதவி செய்யக் கோருகிறான். வார்டன் மறுக்கிறார். 'உங்களைப் பற்றி, நீங்கள் செய்யும் தில்லு முல்லுகளைப் பற்றி எல்லோரிடமும் நான் சொல்வேன்'  என்று கத்துகிறான் ஆண்டி. கோபம் கொண்ட வார்டன், ஆண்டியை தனிமைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதே இரவு, ஒரே சாட்சியான டாம் கொல்லப்படுகிறான். தப்பிச் செல்லும்பொழுது, சுட நேர்ந்ததாக அவன் கதையை முடிக்கிறார்கள்.


தனிமைச் சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டி, தன் நண்பன் ரெட்டிடம், நான் இன்று வெளியே செல்லப் போகிறேன், நீ வெளியே வந்தால், (ஒரு முகவரியை சொல்லி).. அங்கே உனக்காக ஒன்று காத்திருக்கும்.. என்று சொல்கிறான். ரெட் திருதிருவென முழிக்கிறார். வழக்கம் போல, வார்டனின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, அறைக்கு வந்த ஆண்டி.. அடுத்த நாள் காலை அந்த அறையில் இல்லை.

செய்தி கேட்டு, அந்த அறைக்கு வரும் வார்டன், கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து, போஸ்டரில் சிரிதுக் கொண்டிருக்கும் நடிகையின் மீது வீச, கல் திரும்பி வராமல் போஸ்டரைக் கிழித்துக்கொண்டு உள்ளே செல்கிறது.அந்த போஸ்டரைக் கிழித்து வீசினால், அங்கே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இத்தனை நாட்களாக, அந்த சிறு சுத்தியைக் கொண்டுதான் அந்த சுரங்கத்தை அவன் தோண்டி, இப்பொழுது தப்பியும் விட்டான்.

 
வெளியே வந்த ஆண்டி, பினாமி பெயரில் போட்டிருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு, மறக்காமல் தன்னிடமிருந்த வார்டன் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் ஒரு நாளிதழுக்கு அனுப்பி விடுகிறான். அங்கே சிறையில், அலமாரியைத் திறந்து பார்க்கும் வார்டன் அங்கே பைபிளும், அதற்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட இடத்தில் அந்த சுத்தியும் இருக்கிறது. விஷயம் வெளியே கசிந்ததும் வார்டன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கிறார்.

ஆண்டியின் நண்பன் ரெட், சிறையிலிருந்து வெளியே வந்ததும்.. ஆண்டி சொன்ன இடத்துக்கு சென்று பார்க்கிறார். அங்கே ஒரு மரத்தினடியில், ஆண்டியின் முகவரியும், கொஞ்சம் பணமும் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார் ரெட். ஒரு கடற்கரை ஓரத்தில், ஆண்டியை ரெட் சந்திப்பதுடன் படம் முடிகிறது.

வல்லவனுக்கு ஒரு சிறு சுத்தி கூட ஆயுதம் தான்.



******

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் ஒரு பாடலை, ஒலிபெருக்கியில் அனைவரும் கேட்குமாறு மெய்மறந்து ஓட விட்டுக் கேட்கிறான் ஆண்டி. அந்த இசை சிறை முழுவதும் வலம் வருகிறது. காவலர்கள் அந்த அறையை உடைத்து வந்த பின்னரே அந்த இசையை நிறுத்த முடிகிறது. அதற்காக தண்டனையும் பெறுகிறான் ஆண்டி.

வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தவர்கள், வெளியே வந்ததும் தடுமாறிப் போகிறார்கள். சிறையிலாவது சிலர் இருந்தார்கள். அதுவும் வயதின் தனிமையில் அவர்கள் அடையும் துன்பம் சொல்லில் அடக்கி விட முடியாதது. சிறை வாழ்வை முடித்துவிட்டு, வெளியே வேலை செய்யும் இடத்தில, 'நான் சிறுநீர் கழிக்கப் போகலாமா?' எனக் கேட்க, அவர்களோ ஒரு புன்னகையுடன் 'நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்' எனச் சொல்கின்றனர். சிறுநீர் கழிப்பதற்கு கூட, அனுமதியை வேண்டி காத்திருக்கச் சொல்கிறது அவரின் சிறை வாழ்க்கை.

சிறையில் இருந்து வெளியே வந்ததும், முன்பொரு நாள் ஒரு பெரியவர் தூக்கிட்டு இறந்த அதே அறையில் ரெட் தங்க நேர்கிறது. அந்தப் பெரியவரின் முடிவையே எடுக்க நினைக்கும் ரெட், அதை மறந்து தன் நண்பன் ஆண்டியைத் தேடிச் செல்கிறார்.


பார்க்க வேண்டிய படம்.

படங்கள்: இணையத்தில் இருந்து...

******

Tuesday, January 28, 2014

யேசு கதைகள் - பால் சக்காரியா (தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ)

பால் சக்கரியா அவர்களின் 'யேசு கதைகள்' படித்தபொழுது அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து போனது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை சர்ச்சையும் சிலுவையையும் காணும் போது, அம்மா கையெடுத்து வணங்குவதை மறந்ததில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவை, இயேசு எப்படி ஈர்த்தார் எனப் புரியவில்லை.

நான் பிறந்த சமயம், கொஞ்ச நாள் கிறித்துவ மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகியிருக்கலாம். வாடிப்போன முகமும், குருதி வடியும் கைகளும், துயரமும் என அவர் சிலுவையில் தொங்கியிருந்த சிற்பங்களைப் பார்த்து, அட நம்மில் ஒருவர் என அம்மாவை நினைக்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறை பேருந்தில் போகும்பொழுதும், சர்ச்சைக் கடக்கும்போது வணங்கத் தவறவில்லை அம்மா.

இந்தக் கதைகளிலும், யேசுவைச் சுற்றி பெண்கள்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, யேசு பெண்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தங்கள் துயரங்கள், சந்தோசங்கள் என அவரிடம் சொல்ல ஆயிரம் இருக்கின்றன பெண்களுக்கு.



*********

யாருக்குத் தெரியும் என்ற கதையில்,ஏரோது மன்னனின் உத்திரவுப்படி, குழந்தை யேசுவைக் கொல்ல அனுப்பப்பட்ட ஒரு படைவீரன், ஒரு வேசியின் இல்லத்தில் தங்குகிறான். அந்தப் பகுதிகளில், இரண்டு வயசுக்கு கீழ் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளைக் கொன்ற குருதி வீச்சத்துடன் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும், படை வீரனுக்கும் நடக்கும் உரையாடலே கதை.

"குழந்தைகளுடன் உங்களுக்கு யுத்தமில்லை அல்லவா?"
அவன் சொல்கிறான், "படைவீரர்களுக்கு யாருடன்தான் யுத்தம்"

"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடாகவா ஒரு ரட்சகன் வருகிறான்?"

"நான் வேசியாக இருப்பதும், இந்த ரட்சகன் குழந்தைகளின் குருதியினூடாக பிறக்க வேண்டும் என்பதும் விதியா?. இந்தக் குழந்தைகளின் குருதிச் சிதறலுக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்?"

ஆனால், அதே பெண்தான் யேசுவைக் காப்பாற்றி வைத்து அந்த இரவில் இன்னொரு இடத்துக்கு அனுப்புகிறாள். விடைபெறும்போது, தாயிடம் சொல்கிறாள்; "அவன் வளர்ந்து ராஜாவாகும் எங்களைக் காப்பாற்றச் சொல். அப்படியே அந்தப் படைவீரனையும் காப்பாற்றச் சொல்".

*********

அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள் என்ற கதை, மிக முக்கியமான கதை. தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த டீச்சர் இன்னும் முதிர் கன்னியாக இருக்கிறார். திருமணம் செய்தால், அவர் தரும் வருமானம் நின்று விடும் என்று அவரின் பெற்றோர்கள் திருமணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்னம்மா டீச்சர் இயேசுவை, தம்பி என்றே அழைக்கிறார். சிலுவையில் மரித்த பொழுது, இயேசுவின் வயதை விட இப்பொழுது தன் வயது அதிகம் என்பதால் அப்படிச் சொல்கிறார். ஓரிடத்தில், "இன்றைய உன் மகிமையை கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா?" என்று சொல்கிறார். 

ஒருநாள், அதுவும் புனித வெள்ளியன்றே ஒரு புல்வெளி மேல் இறந்து கிடக்கிறார் டீச்சர். இறந்த பின்னர், ஒரு இளைஞனை அன்னம்மா டீச்சர் சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. "நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும்  சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்."

*********

போந்தியஸ் பிலாத்து என்பவர் தான், யேசுவுக்கு தண்டனை வழங்கியவர்.  இந்த பிலாத்து தன் நண்பர், அன்தொனியஸ் என்பவருக்கு எழுதும் கடிதங்கள் இந்தப் புத்தகத்தில் குறுநாவலாக  இருக்கிறது. பிலாத்துவின் செயலாளர் யூதப் பெண் ரூத் மற்றும் பிலாத்துவின் மனைவி ஜூலியா இருவரும் இந்த கதைகளில் வருகிறார்கள்.

பிலாத்து தன் கடிதங்களில் இப்படிச் சொல்கிறார்;
"ஒரு கணம் மீட்பனாகவும், மறுகணம் மீட்கப் படுபவனாகவும் அவன் இருக்க முடியாது."

"தன் வலையில் தானே வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நேர்மையானவன் என்று நான் உணர்ந்தேன். ஆனால், நான் முதலில் சொன்னது போல தப்பிக்கச் சம்மதிப்பவர்களைத்தானே, நாம் தப்ப வைக்க முடியும்"

*********

சிலுவை மலை மீது, கண்ணாடி பார்க்கும் வரை மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் கதை போன்ற கதைகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மதத்துக்கு அப்பால், யேசுவைப் பற்றி ஒரு சிறு வெளிச்சத்தையாவது இந்த கதைகள் நமக்கு காட்டுகின்றன.


Friday, January 24, 2014

பாலுமகேந்திரா - சந்தியா ராகம்

கிராமத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கும், சின்ன வாடகை வீட்டில் நகரத்துக்கே உரிய பிரச்சினைகளுடன் வாழும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியே சந்தியா ராகம்.

இந்தப் படத்தில் வரும் கிராமத்தை, இப்பொழுது தேடினால் கூட கிடைக்காது.
சொக்கலிங்க பாகவதர், அவரின் மனைவி, மகன், மருமகள், பேத்தி, குடியிருப்பில் வசிக்கும் மக்கள் என எல்லாரும் நாம் சந்தித்த மக்கள் தான்.

பகுதி-1



பகுதி-2



பகுதி-3



பகுதி - 4




Part 1 - http://www.youtube.com/watch?v=RlSsmZKvADo
part 2 - http://www.youtube.com/watch?v=PQnrU7vwnB0
part 3 - http://www.youtube.com/watch?v=sVKlo0pECHA
part 4 - http://www.youtube.com/watch?v=oJXSjXq6DL8


Friday, January 10, 2014

நகரப் பொங்கல்



புதுச் சுண்ணாம்பு
பூசிய மண் சுவர்கள்
சாணம் மெழுகிய தரை
தோரணம் கட்டிய கோவில்கள்
'பூ பறிக்கப்போகிறோம்' எனும் பெண் பிள்ளைகள்
சொந்தபந்தங்கள் கூட்டம்
எனப் பொங்கலை வரவேற்கிறது
கிராமம்.

முந்தின இரவே
போட்ட கோலத்தில்
'Happy Pongal'
எனத் தனிமையில்
வரவேற்கிறது நகரம்
பொங்கலை.


Monday, January 6, 2014

குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்

அரசன் குடை கொண்டு ஆட்சி செய்ய வேண்டியவன். இதோ இந்தக் குடை நம்மைக் காப்பது போல, நான் உங்களைக் காப்பேன் என்று அதற்கு அர்த்தம். அந்தக் குடை நிழலில் மக்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். அந்தக் கால மன்னர் இந்தக் குடையை வைத்துக் கொண்டு மக்களை இரட்சித்தது எல்லாம் சரி, இப்பொழுது மன்னன் கிடையாது என்ற கேள்வி வரலாம். அப்பொழுது மன்னர்கள் என்றால் இப்பொழுது அரசியல்வாதிகள், நம்மை ஆள்பவர்கள். குடை மட்டும் தான் அவர்கள் கைகளில் இல்லை, மற்றபடி அவர்களும் மன்னர்களே!.

குடைநிழலும் குஞ்சரமும்(அவர்கள் வரும் வண்டி) இருந்து ஆட்சி செய்பவர்கள், நீதி, நியாயம் என்றா பார்க்கிறார்கள்?. அதெல்லாம் அவர்களுக்கு ஒத்து வராத விஷயம்.

********

கதை நடக்கும் இலங்கையில், இரவு வேளையில் தன் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன். இந்த ஒருவன் என்பவன் 'எவனோ ஒருவன்', 'உங்களில் ஒருவன்' என யாராகவோ இருக்கலாம். அயர்ந்து தூங்கும் நடு இரவில், கதவைத் தட்டி உள்ளே வருகிறது போலிஸ். 'உன் வீட்டில் யார் யாருக்கோ தஞ்சம் கொடுக்கிறாய். எங்களுடன் வா' என்று அவனை அழைத்துச் செல்கிறார்கள். எங்கே, எதற்கு.. எந்த பதிலுமில்லை. அம்மா, மனைவி, தங்கை, பிள்ளைகள் என இவனைச் சுற்றியே இருந்தவர்கள், கலங்கிப் போகிறார்கள்.

இவனுக்கு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. போகிற இடத்தில் வைத்து, தற்கொலை செய்து கொண்டான் அல்லது தப்பி ஓடும்போது சுடப்பட்டு இறந்தான் என பேப்பரில் செய்தி வருவது போல் நினைத்துக் கொள்கிறான். எதற்காக தன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் பேசுபவனாக இருப்பதுதான் பிரச்சினை என்றும் நினைக்கிறான்.



சிங்களப் பள்ளியில் சிங்களர் பெருமைகளும், தமிழ் பள்ளியில் தமிழர் பெருமைகளும் பாடமாக இருக்க, இருவருக்குமிடையே எங்கே இருந்து வரும் ஒற்றுமை. சிங்களப் பள்ளி இல்லாமல்,  பையனுக்கு வேறு நல்ல தமிழ் பள்ளி பார்க்க வேண்டும் என நினைத்து, வீடு மாற்ற முடிவு செய்கிறான். ஒரு வீட்டையும் பார்த்து பிடித்திருக்க, அந்த வீட்டையே முடிவு செய்கிறான். இப்பொழுது இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி, முன்பணமாக குடுத்திருந்த பணத்தை வாங்கி புது வீட்டுக்குத்  தந்தாகி விட்டது.

புது வீட்டு உரிமையாளர், கொஞ்சம் பழுது பார்ப்பு வேலைகள் இருப்பதாகச் சொல்லி இருப்பதால், வாரமொரு முறை சென்று பார்க்கிறான். வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. அப்படி எதேச்சையாக ஒருமுறை செல்லும் போது, தோரணம்,  வாழை மரம் கட்டி, வேறு யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு மயங்கி விழாத குறை. அந்தப் புது வீட்டு உரிமையாளர், அந்த வீட்டை இன்னொருவருக்கு விற்று இருக்கிறார். அவர்கள்தான் அந்த வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள். அந்த உரிமையாளரைப் பார்த்தால், நீங்கள் வந்து போனதைப் பற்றி சொல்லுகிறேன் என்று கூறுகிறார் வீட்டை வாங்கியவர்.

வேறு வழியில்லாமல் அவரிடம் விடைபெற்று, வீதியில் நடந்து வரும்பொழுது தனது பழைய நண்பனைச் சந்திக்க நேர்கிறது. அவன் வழக்கறிஞர் என்பதால், போலீசில் வழக்குப்  பதியச் சொல்கிறான். அவனும் அவ்வாறே வழக்குப் பதிந்து காத்திருக்கிறான். தான் கனடா செல்லவிருப்பதால், அதற்கு முன்னர் நான் உனக்கு உதவி செய்து அவனிடம் பணத்தை வாங்கிய பின்னரே  நான் புறப்படுவேன் என்கிறான் நண்பன். இடையில் அந்த முன்பணம் வாங்கிய உரிமையாளர், வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார், இவன் தன் நண்பனின் அறிவுரைப்படி வாபஸ் வாங்க மறுக்கிறான். இது எதுவும் அவன் வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி ஆகியோருக்குத் தெரியாது.

அன்று அவனை அழைத்த, அந்த வழக்கறிஞர் நண்பன் தான் இன்று கனடா செல்வதாகவும், இந்த போலிஸ் உனக்கு உதவி செய்வார்கள் எனச் சொல்லி விடை பெறுகிறான். அதற்கப்புறம் தான் தன்னை, போலிஸ் இரவில் கைது செய்து காவலில் வைத்திருக்கிறது. இப்பொழுது இருக்கும் வீட்டுக்காரரிடம் இருந்து முன்பணம் வேறு வாங்கியாயிற்று, அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும். அது இல்லாமல், போலிஸ் வேறு இவனை அழைத்து வந்து விட்டதை அறிந்த வீட்டுக்காரர், என்ன சொல்கிறாரே தெரியவில்லை. பிள்ளை, மனைவி, அம்மா, தங்கை என எங்கே செல்வார்கள் என நினைத்துப் பார்க்கிறான்.

பிடிக்க வேண்டும் என்பதற்காக பிடித்துக் கொண்டு வந்திருப்பதைப் போல, அடிக்க வேண்டும் என்பதற்காக அங்கே இருக்கும் சுவர் கடிகாரம் மணி அடித்து ஓய்கிறது.நல்லவேளையாக, ஒரு காவல்காரன் இவனுக்கு உதவி செய்கிறான். அவன் குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து அவனிடம் சொல்கிறான். அவன் இங்கே வந்து இருப்பதற்கான காரணமும் பெரிதாக ஒன்றுமில்லை. அதை அறிந்த அவன் மனம் வேதனை அடைகிறது.

இப்படி நினைத்துப் பார்க்கிறான், "குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது நடை மெலிந்து நலிவுறும் எங்களின் நிலைமை. அதனால்தான் சொல்கிறோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று. குடையை மட்டுமல்ல, குஞ்சரத்தையும் சேர்த்தே என்கிறது மனம். "

********

அதிகாரத்தாலும், ஆட்சிப் பீடங்களாலும் நசுக்கப்படும் ஒரு எளிய  மனிதனின் கதை. படிக்க வேண்டிய நாவல்.