Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Wednesday, March 14, 2018

குறும்படம் - PAROKSH

12 நிமிடங்கள் மட்டுமே வரும் குறும்படம் என்றாலும், படைப்பாக்கம் வியக்க வைக்கிறது. படம் பார்த்து முடிக்கும்பொழுது இறுதியில், உங்களிடமிருந்து வரும் புன்னகையே இப்படத்தின் வெற்றி.




Tuesday, August 20, 2013

குறும்படம்: ஆந்தை பாலத்தில்.. (An Occurrence at Owl Creek Bridge)

(மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்.)

இந்தக் குறும்படம் பற்றி, இரண்டு மூன்று வருடங்கள் முன்பு எங்கேயோ படித்து, பார்த்திருக்கிறேன். குறும்படம் பற்றித் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தப்  படம் நினைவுக்கு வந்தது. மனதை மிகவும் பாதிக்கும் படம்.

ஒரு ஆற்றின் மீது ஆந்தைப் பாலம் அமைந்து இருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடுவதற்காக, ஆந்தைப் பாலத்தின் மீது அவனைக் கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தூக்கு கயிறு இறுக்கப்படுகிறது. அப்பொழுது, தூக்கு கயிறு அறுந்து, குற்றவாளி ஆற்றில் விழுந்து விடுகிறான்.

கயிற்றில் இருந்து தப்பிய அவன், ஆற்றில் நீந்த ஆரம்பிக்கிறான். உடனே, சுற்றி இருக்கும் காவலர்கள் துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். கரையில் இருந்து அவனைச் சுட்டுக் கொண்டே துரத்துகிறார்கள். அவன் நீந்திக் கொண்டே இருக்கிறான்.

ஒரு சமவெளியை அடைந்து, காடு தோட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில், ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். அவனின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். தூரத்தில் அவன் ஓடி வருவதைப் பார்த்து, அவளும் அவனை நோக்கி வருகிறாள். அவன், தனது இரு கைகளையும் அவளை நோக்கி அணைக்க ஓடி வருகிறான். பக்கத்தில் வந்ததும், அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்துகிறான்.

அதே சமயம், அவனை அந்தத் தூக்கு கயிறு இறுக்குகிறது. ஆம், அவன் தூக்கில் இருந்து தப்பிக்கவும் இல்லை. ஓடிப் போகவும் இல்லை.

ஒரு கண நேரத்தில் அவன் கண்ட கனவாக இருக்கலாம் அல்லது அவன் தப்பிக்க நேர்ந்து இருந்தால் இப்படிக் கூட நடந்து இருக்கலாம்.

கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று.


An Occurrence at Owl Creek Bridge


An Occurrence at Owl Creek Bridge from Jaime Puente on Vimeo


 

Tuesday, January 8, 2013

குறும்படம்: தணல்

ஒரு சிலிண்டர் வெடிக்க நிறைய காரணம் இருக்கலாம். இப்படிதான் வெடித்தது என்று வெடித்த பின்னர் நிரூபிக்கலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு என்பது முடிந்து போன ஒன்று.

சிலிண்டர் வெடிப்புக்கே நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது, அணு உலைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. என்னதான் அது பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தாலும், இந்தக் குறும்படத்தில் சொல்வது போல நிகழக் கூடும். மனிதர்களை இழந்த பின்னர் நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்போம் ஒரு காலத்தில், அது யாருக்காக?.

இந்தக் குறும்படத்தில் எங்கள்  நண்பன் பாலா ஒரு பாத்திரமாக நடித்துள்ளான். வாழ்த்துக்கள் பாலா.

'தணல்' குழுவுக்கு வாழ்த்துக்கள். 



Thursday, December 20, 2012

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.?

மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம்.

ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைப் பற்றி ஏற்கனவே வார இதழ்களிலும், இணையத்திலும் படித்திருந்த போதிலும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக நாப்கின் தயாரிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் என்றாலும், முக்கியமாக ஆண்கள் பார்க்க வேண்டும்.

முடிந்த அளவு இந்த குறும்படத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Tuesday, July 10, 2012

குறும்படம்: Two solutions for one problem

Abbas Kiarostami - இயக்கிய இந்தக் குறும்படம் பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது.

Nader மற்றும் Dara இருவரும் நண்பர்கள். நடேரிடமிருந்து, டரா ஒரு புத்தகத்தை வாங்கி இருக்கிறான். அதைத் திரும்பிக் கொடுக்கிறான் அன்று. புத்தகத்தின் அட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் கோபத்தில் டராவின் புத்தகத்தை கிழிக்கிறான். அவன் திருப்பி, புத்தகப் பையை கிழிக்க, அவன் பேனாவை உடைக்க, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் இருவருக்கும் தலையில் காயம் மற்றும் கண்ணில் காயம் ஏற்படுகிறது. இது ஒரு தீர்வு.

இன்னொரு தீர்வு. புத்தகம் கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் டராவிடம், புத்தகம் கிழிந்து இருப்பதைச் சொல்கிறான். டரா புத்தகத்தை ஒட்டித் தருகிறான். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வருவது இரண்டு சிறுவர்கள் என்றாலும், இது பெரியவர்களான நமக்கும் தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கோபம் இல்லாமல் பேசினால் எல்லோருமே நமக்கு நண்பர்களாகவே நீடிப்பார்கள்.

அது போல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வு மட்டும் தான் என்பதை இந்தப் படம் பொய்யாக்குகிறது. கொஞ்சம் யோசித்தால், நல்ல தீர்வை நாம் கண்டடையலாம். 

Two solutions for one problem

Thursday, July 5, 2012

கர்ண மோட்சம்

எனது சிறு வயதில், ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் 'நல்லதங்காள்' கதையைப் படிக்க ஒரு பெரியவர் வருவார். மைக் வைத்து, ரேடியோ கட்டி, அவருக்கு பெரிய வீட்டில் இருந்து கொண்டு வந்த சேரைப் போட்டு, பூஜை போட்டு என வாரக் கணக்கில் கதை சொல்வார். உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாடும் போதும், உடுக்கையை நிறுத்தி விட்டு கதை சொல்லும்போதும், அனேகமாக பெண்கள், நல்லதங்காளை தங்கள் சகோதரி போல நினைத்துக் கொண்டே அழுவார்கள். கீழே போட்டு உட்கார சாக்குப் பையும், போர்த்திக்கொள்ள போர்வையும் கொண்டு போய் விடிய விடிய கதை கேட்டு, அங்கேயே தூங்கி விடிகாலையில் எழுந்து வருவோம்.

கொஞ்ச வருடம் கழித்து, அந்தப் பெரியவரை அழைக்காமல், வீடியோப் படம் என்று ஒரு திருவிழாவன்று சொல்லி, ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கினார்கள். 'திருவிளையாடல்' படத்தில் தொடங்கி, கரகாட்டக்காரன், முதல் மரியாதை என்று தொடர்ந்து மூன்று படம் காட்டினார்கள். ஊரே கைகொட்டி, விடிய விடிய சொக்கிக் கிடந்தது 'டெக்' படத்தின் முன்னால்.

இப்போதெல்லாம் அதுவும் வெறுத்துப்போய், ஆர்கெஸ்ட்ரா, குத்து நடனம் என ரசனை மாறிக் கிடக்கிறது கிராமங்களில்.

ஆமாம், ஒரு காலத்தில் 'நல்லதங்காள்' கதை சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்ன ஆனார். அந்தக் கலை என்ன ஆனது. அவரின் வாரிசுகள் அந்தக் கதையைச் சொல்லி இப்பொழுது சம்பாதிக்க முடியுமா... இது ஒரு உதாரணம் மட்டும் தான், இது போல எத்தனை எத்தனை கலைகள் இங்கே மறைந்து கொண்டிருக்கின்றன...

இந்தக் கர்ண மோட்சம் குறும்படம் கூட ஒரு கலையைப் பற்றிதான் பேசுகிறது. அந்தக் கலைஞர்களை நாம் எவ்வாறு மதிக்கிறோம், அந்தக் கலைக்கு நாம் தந்த மரியாதை என்ன?.

கர்ணன் பற்றி சொல்லும்போது;
"மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் வழங்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்"

"கொடுத்துச் சிவந்தன கர்ணனின் கைகள்" என்று சொல்லுவார்கள்.

ஆனால், கர்ணன் வேஷம் போட்ட இந்தக் கலைஞனுக்கு.. ??



Monday, June 11, 2012

எழுத்தின் வல்லமையும் ஒரு குறும்படமும்

அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள், கதைகள் என்று சொல்வதை விட, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை குறிப்புகள் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அவரின் தளத்தில் வெளியாகியிருக்கும், உடனே திரும்பவேண்டும் என்ற கதையில், நம்மூரில் பேருந்தில் இருக்கை பிடிக்க சண்டை போடுவதைப் போல, விமானத்தில் இருக்கை பிடிக்க அவர் பட்ட துன்பங்களைச் சொல்லுகிறார். கதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், சொல்ல முடியாத ஒரு வேதனை இல்லை மனத் துயரம் என்னை ஆட்கொண்டது. அந்த இடத்தில் அவருக்கு உதவும் முன்பின் தெரியாத மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

*******

முன்னரே, சித்ரா என்ற குறும்படத்தைப் பார்த்து மனது ஒரு மாதிரியாக இருந்தது. இப்பொழுது, அந்தப் படத்துக்கு 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' விருதை அறிவித்திருப்பதை தனது தளத்தில்  பகிர்ந்திருந்தார் அ.முத்துலிங்கம். இந்தக் குறும்படத்தை இதற்கு முன்னர் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். குறுகிய நேரத்தில், ஒரு தகப்பனின் வலியையும், மனைவியின் கண்ணீரையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விதம்... நீங்களே பாருங்களேன்.







Tuesday, August 9, 2011

குறும்படம்: துருவ நட்சத்திரம்

நேற்று இந்த 'துருவ நட்சத்திரம்' குறும்படம் கண்ணில் பட்டது.
பிடித்ததால் உங்களுக்காக இங்கே;






Tuesday, August 10, 2010

குறும்படம் - மற்றவள்

ஒரு பக்கம் பள பளக்கும் துணியுடன், முதுகில் புத்தக மூட்டையுடன் பள்ளிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்னொரு பக்கம் எதற்கும் வழியின்றி தெருவோரங்களில் பல குழந்தைகள். காலை நேரங்களில், தெருவின் ஓரங்களில் நடத்தப் படும் பூக் கடை, இட்லிக் கடை, தள்ளு வண்டிக் கடை, சிறு காய்கறி கடைகள் என சிறுவர்களைப் பார்க்கலாம்.

கொஞ்சம் வசதி இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளுக்காவது தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகிறார்கள். அந்த வசதி கூட இல்லாமல் இருக்கும்பொழுது, மூன்று வேலை உணவா இல்லை கல்வியா என்று வரும்போது அங்கே கல்வி பின்னுக்கு தள்ளப்படுகிறது. பெரும்பாலும், குழந்தை தொழிலாளர்கள் சம்பாதிப்பது கொஞ்சம் தான் என்றாலும் அதுவே அவர்களின் குடும்பத்துக்கு பெரிய உதவியாய் இருக்க கூடும். பெற்றோரை இழந்தவர்கள், மறுமணம் செய்து விட்டு குழந்தைகளைத் தனியாக விட்டு விட்டு செல்பவர்கள் என ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சிறு சிறு வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதில் தாத்தா, பாட்டி போன்றவர்களும், உறவினர்களும் அடக்கம். இதில் தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டான் என்றால், தாயால் உடம்புக்கு முடியவில்லை என்றால், குடும்ப பாரம் அந்தப் பிஞ்சுகளின் கையில்.

குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எவ்வளவோ எச்சரிக்கைகள் இருந்தாலும், திரை மறைவில் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் கதையை திரு.லோகேஷ் அவர்கள் குறும்படமாக எடுத்திருக்கிறார். திரைக் கதையையும், வசனத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே எழுதியுள்ளார். 'மற்றவள்' ஒரு சிறுமியின் கதையைச் சொல்லும் குறும்படம்.

ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும், ஈசல் என்கிற மகேஸ்வரி, தன் டீச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில், தான் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என்றும், பள்ளிக்கு லேட் ஆனதால் முட்டி போடச் சொன்ன நீங்க, நான் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்கவே இல்லை என்கிறாள். மீன் வியாபாரம் செய்யும் என்னோட அம்மா, கடைசி மீனை வித்ததுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாங்க, அதுக்கு அப்புறமா நான் ஸ்கூல்-க்கு வர லேட் ஆயிடுது. ரெண்டு நாள் லீவு போட்டா லீவ் லெட்டர் கேப்பிங்க, இனிமேல் நான் வரமாட்டேன் என்று எழுதிக் கொண்டே போகிறாள். தனக்கு ஒரு பணக்காரத் தோழி இருப்பதாகவும், அவளிடம் தான் நான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுவேன் என்று சொல்லுமவள், கடைசியில் அது தானே என்றும் கடிதத்தில் குறிப்பிடுகிறாள்.

தான் வேலை செய்யும் வீட்டின் கழிவறையில் அமர்ந்து இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள் ஈசல். அவளைத் தேடி வரும் வீட்டின் தலைவி அந்தக் கடிதத்தை வாங்கிக் கிழித்து விட்டு 'போய் உருபடர வழியைப் பாரு' என்று திட்டி விட்டுச் செல்கிறாள். கீழே கிடக்கும் அந்தக் காகிதத் துண்டுகளை அவளே சுத்தம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதுடன் படம் முடிகின்றது.நாளைக் காலையும் ஈசல் அந்த வீட்டுக்கு வேலைக்கு வருவாள் என்பது மட்டும் நிச்சயம்.

இச் சிறுமியைப் போல நாம் வாழும் இடங்களில் எவ்வளவோ பேர் உண்டு. அதனால்தான் என்னவோ, தலைப்பு கூட 'மற்றவள்'. இதற்கு முன்னர் திரு. முரளி மனோகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ண மோட்சம்' திரைப்படம் பெரிய விருதுகளையும், தேசிய விருதையும் வென்ற படம். அப்படத்திலும் ஒரு வேலைக்கார சிறுமி இருப்பாள். கலையை நேசிக்கும் அவளுக்கும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

'கர்ண மோட்சம்' குறும்படம் போல, 'மற்றவள்' படமும் பல விருதுகளை வெல்ல அப்படத்தின் திரைப் படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு : மற்றவள்

மற்றவள்:



Tuesday, May 12, 2009

Chicken Ala Carte

பசி... மனிதன் வெல்ல முடியாத நோய்...
பாரதி கூட, தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம் என்கிறார்.

ஒரு பக்கம் தட்டு தட்டாக ஆர்டர் செய்து விட்டு சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டும் ஒரு கூட்டம், குப்பையில் கிடைத்ததையே உண்டு வாழும் ஒரு கூட்டம் என சமூக முரண்பாடுகள்.

Chicken Ala Carte குறும்படம் இதைத்தான் விளக்குகிறது. உணவின் மீது மரியாதையும், இல்லாதவர் மீது இரக்கமும் ஏற்பட்டால் அதுவே இப்படத்தின் வெற்றி.
http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

Monday, May 4, 2009

தாயம்

தாயம் குறும்படத்தின் இணைப்பு
பகுதி 1 http://www.youtube.com/watch?v=25D3LgdURnY
பகுதி 2 http://www.youtube.com/watch?v=mJgmFjuumfk

Probability என்பதை கல்லூரியில் படித்ததோடு சரி.. அது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்து இருக்கும் என்பதை இப்பொழுதுதான் கற்றேன்....

இசை, நடிப்பு, இயக்கம் என அசத்தி விட்டார்கள்... வாழ்த்துக்கள் !