Tuesday, March 25, 2014

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை

பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள்.

அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி.



ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது.





குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்த்துக் கொண்டே இருந்தோம்.



ஒரு நாள் மேல் சீப்பில் ஒரே ஒரு பழம் மட்டும் ரோஸ்  நிறத்துக்கு மாறி இருந்தது. அன்றே வெட்டி வைக்க, இரண்டு மூன்று நாட்களில் அனைத்து சீப்புகளும் பழுத்து விட்டது. முதல் சீப்பில் பதினேழும், மற்ற சீப்புகளில் 15 முதல் 16 வரையிலும் பழங்கள் இருந்தன. எந்தச்  செயற்கை உரமும் போடாமல் விளைந்த செவ்வாழையின் ருசி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அடுத்த பக்க கன்று வளர்ந்து வருகிறது, அடுத்த வருடமும் செவ்வாழை உண்டு. :)



Friday, March 21, 2014

மௌனி - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

மௌனியின் படைப்புகள் - புத்தகம் வாங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கும். இதற்கிடையில் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

நேரடியான கதை சொல்லலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. குறைந்த கதைகளே எழுதியிருந்த போதிலும், புதுமைப்பித்தன் இவருடைய எழுத்துக்களைப் பாராட்டி  இருக்கிறார்.

இரண்டு மூன்று முறை படித்த போதும், சில பத்திகள் ஒன்றும் புரியாமல் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். ஆனால், மற்ற நாவல்களைப் போல மௌனியின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாக கடந்து போக முடிவதில்லை. நினைவில் ஆழ்ந்து அப்படியே சில நாட்கள் தூங்கி இருக்கிறேன்.

சில வரிகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. திரும்ப எத்தனை முறை படித்தாலும், புதியது போலவே இருக்கிறது.

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

குடும்பம் ஒரு இயந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று போவதில்லை. அதற்கு பிரதி பாகம் தானாகவே உருவாகி விடும்.

வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி.

போன்ற வாக்கியங்கள் கவித்துவம் மிக்கவை. அவரின் எழுத்துக்களில் சொல் புதிது, பொருள் புதிது. மீண்டும் படிக்க வேண்டும்.

அவரின் எழுத்துக்களை முழுதும் படிக்காமல், நானோவெனில்(!) இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

[நானோவெனில், அவனோவெனில் -  என அவரின் கதைகளில் வருகிறது.]

அழியாச்சுடர்கள் தளத்தில்: மௌனி



Tuesday, March 18, 2014

தேர்தலோ.. தேர்தல் !


மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...

சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....

தலைவர்கள் வருகிறார்கள்..

தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில்
சாக்கடை..
அதன் ஓரத்தில்தான்
எம் மக்களின் இல்லங்கள்..
எம் குழந்தைகள்
அள்ளி விளையாடுவதும்
குளித்து மகிழ்வதும்
அங்கேதான்..
எல்லா சமையத்திலும்
கழிப்பதும் அங்குதான்..
அங்கேயும்
எம்மை
காக்க வந்த
ரட்சகர்களான
கட்சிகளின் கொடிகள்
மட்டும்
அழுக்கில்லாமல்
உயரத்திலேயே பறக்கின்றன !