Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Monday, September 16, 2024

நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். 


விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.


மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. 

நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று  எதற்கெடுத்தாலும்  சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. 

குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம்  பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். 

பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. 



நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். 

நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு.

சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான்.  இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். 

"நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க  காத்திருக்கிறாள். 


Monday, September 9, 2024

கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா

அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல். 

போக்ராம் ஒரு சந்தை வியாபாரி. சணல் அறுவடை நடக்கும் காலங்களில் அதை வாங்கி விற்பான். மற்ற மாதங்களில் துணிகளை வாங்கி விற்பான். பக்கத்து ஊர் சந்தைகளில் அவன் வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவன் குடும்பம் நடத்த உதவுகிறது. வாரத்தின் எல்லா நாளுமே அவன் சந்தைக்குப் போய்விடுகிறான். போக்ராமுக்கு மனைவி, பிள்ளைகள், தங்கை வாசந்தி, வயதான தாய் என பெரிய குடும்பம். வறுமை இல்லை என்றாலும் குடும்ப சக்கரம் போக்ராமுடைய வருமானம் கொண்டே ஓடுகிறது. 



நாவல் முழுவதும் சோனாய் ஆறு கூடவே வருகிறது. அவர்கள் இருக்கும் கிராமம் சோனாய் பரியா என்ற ஊர். அந்த ஊரில் தனஞ்ஜெயன்  என்னும் இளைஞன் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறான். தன்னால் முடிந்த உதவிகளை அவன் அந்த ஊர் மக்களுக்குச் செய்கிறான். போக்ராமும் அவனும் நண்பர்களாக இணைகிறார்கள். வாசந்திக்கு தனஞ்ஜெயனை பிடித்து போவதால் அவனை காதலிக்கிறாள். இருவரும் வீட்டாருக்குத் தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். வாசந்தியின் அண்ணி தருலதாவுக்கு அது தெரிந்து போக, உன் அண்ணனிடம் சொல்லி அவனையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அது வரைக்கும் நீ பொறுமையாக இரு என்கிறாள். 

சரியான சாலை வசதிகள் இல்லாத அவர்களின் ஊருக்கு, நவீன சாலைகள் போடப்படுகிறது. நவீனம் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிலர் அதில் பாதிப்படைகிறார்கள். போக்ராம் இதுவரை கிராமத்தில் பொருளை வாங்கி பெரிய வியாபாரிகளுக்கு விற்று வந்தான். இப்பொழுது நவீன சாலைகள் மூலம் மோட்டார் வண்டிகள் வருவதால் பெரிய ஆட்களே நேரடியாக வந்து கொள்முதல் செய்து விடுகிறார்கள். சில சந்தைகளில் துணி விற்று வந்த போக்ராம் அதுவும் செய்ய முடிவதில்லை. போக்குவரத்து வசதி வந்துவிட்டதால் பெரிய கடைகளைத் திறந்து நிறைய துணிகளை கொண்டு வந்து மக்களை ஈர்க்கிறார்கள். இவனிடம் துணி வாங்க ஒருவரும் வருவதில்லை. அவனுக்கு அந்த நவீன சாலை, கொல்ல வந்த கருப்பு பிசாசு போல தோன்றுகிறது. வங்கி லோன் வாங்கி தொழில் செய்யலாம் என்றால்  அது நடைபெறாமல் போய்விடுகிறது. 



குடும்பத்தை நடத்த பணமில்லாமல் கஷ்டப்பட்ட போக்ராமுக்கு ஒரு அரசியல்வாதியின் நட்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் தேர்தல் வர, அவருக்கு பிரச்சாரம் செய்கிறான் போக்ராம். எதிர் கட்சி வேட்பாளரை தனஞ்செயன் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறான். நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது எதிரிகள் ஆகிவிட, வாசந்தியின் காதல் கைகூடாமல் போகிறது. போக்ராம் ஆதரவு தெரிவித்தவரே தேர்தலில் வெல்வதால் அவனுக்கு வருமானம் வருகிறது. கூடிய விரைவிலேயே அவன் ஊரில் பெரிய பணக்காரனாகி விடுகிறான். 

வாசந்தியின் அண்ணி தனது கணவனிடம் வாசந்தியின் காதலைப் பற்றிச் சொல்கிறாள். அவனோ இப்போது எதிரியாகி விட்ட தனஞ்செயனுக்கு என் தங்கையை குடுக்க மாட்டேன், வேறு இடத்தில் அவளை கட்டி வைப்பேன் எனச் சொல்கிறான். சொன்னது போலவே மதுரா என்னும் வரனை அவனுக்கு கொண்டு வருகிறான். முதலில் மறுக்கும் வாசந்தி பின்னர் தனது அண்ணியின் கட்டாயத்தின் பேரில் திருமண நிச்சயம் செய்ய சம்மதிக்கிறாள். தனது அப்பா மறைந்த பின் குடும்பத்தை தன் தோளில் சுமந்து, யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் இருந்த தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தால் அவள் சம்மதித்து மோதிரம் மாற்றிக் கொள்கிறாள். 

நிச்சயம் செய்த பின்னர் வாசந்தி தடுமாறுகிறாள். அண்ணனை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். கல்யாணத்துக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. தனஜெயனிடம் இருந்து அவளுக்கு கடிதம் வருகிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், நீ ஆற்றுத் துறைக்கு இரவில் வந்துவிடு, நாம் இந்த ஊரை விட்டுப்போய் நிம்மதியாக வாழலாம் என்று கடிதத்தில் கூறியிருக்கிறான். வாசந்திக்கு அண்ணன் காட்டிய வரனை திருமணம் செய்வதா அல்லது காதலனுடன் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். அன்றிரவு  தன் காதலன் வரச் சொன்னவாறு ஆற்றுக்கும் போய்விடுகிறாள். தூரத்தில் அவளுக்காக படகில் தனஜெயன் காத்திருக்கிறான். அப்பொழுது வாசந்தி தன் விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை பார்க்கிறாள், குடும்பத்துக்கு இழிவை தேடி தர துணிந்த பெண்ணாக நான் மாறி விட்டேன் என நினைத்தவாறு திரும்ப வீட்டுக்கே ஓடிப் போய் விடுகிறாள். 

வாசந்தி அன்று எடுத்த அந்த முடிவு அவளுக்கு வாழ்க்கையில் வேறு பாதையை காட்டுகிறது. அந்த பாதை கல்லும் முள்ளும் கலந்த கடினமான பாதையாக அவளுக்கு மாறிவிட்டது. கட்டிய கணவனின் சந்தேகம், அவள் கர்ப்பமாக இருக்கும்போது அவன் இறப்பு, பின்னர் குழந்தையின் இறப்பு என பல இன்னல்கள்.  அவள் எடுத்த முடிவால் வாசந்தி பல இன்னல்களுக்கு உள்ளாகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக தான் ஒரு விதவையாக இருந்து தமது சமூகத்தின் மதிப்பையும், தனது இறப்புக்கு பின் சொர்க்கம் பெற வேண்டும் என அவள் நினைப்பதில்லை. தனஜெயனிடம் ஒரு கடிதத்தில், "இந்த உலக வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களை எனக்கு வைத்த கடவுள், நான் இறந்த பின்னர் என்னை சொர்க்கத்தில் சுகமாக வைத்திருப்பார் என்பதை நான் எப்படி நம்ப முடியும்" எனச் சொல்கிறாள். அவள் சமூகம் போட்ட தடைகளை உடைத்து தனது மனத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவளின் பழைய காதலன், சாதாரண மனிதன் போல அவளைத் துறந்து அந்த ஊரை விட்டே போய்விடுகிறான், 

அவளின் மாமனார் வைத்திருந்த புத்தகங்களை தனது அறைக்கு மாற்றி படிக்கிறாள். ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டுப் போக உதவுகிறாள் வாசந்தி. அந்த காதல் ஜோடியிடம் சொல்கிறாள்; "வாய்ப்பு என்பது ஒரு முறைதான் வரும். அதனை நீங்கள் தவற விட்டால் திரும்ப பெற முடியாது".  இழந்தவர்களுக்கு தானே அதன் வலி தெரியும். 

கங்கைப் பருந்தின் சிறகுகள் 

லக்ஷ்மிநந்தன் போரா 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 

தமிழாக்கம் - துளசி ஜெயராமன் 



Tuesday, August 20, 2024

பாரீஸூக்குப் போ - ஜெயகாந்தன்

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்கான தனி மனித சுதந்திரம், தன் சுயத்தை வெளிக்கொணர்தல் என ஐரோப்பிய சித்தாந்தத்தில் நம்பிக்கையும் கொண்டு அங்கேயே வளர்ந்த மகன் , இந்தியா வந்து தனது தந்தையிடம் சில காலம் தங்கி இருக்கும் நாட்களை அடி நாதமாக கொண்டது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாரீசுக்குப் போ நாவல். 


சாரங்கன் தனது தந்தை சேஷையாவின் தொழில் நண்பருடன் சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயே வளரும் அவனுக்கு வயலின் இசையில் நாட்டம் ஏற்பட அதைக் கற்றுக்கொள்கிறான். இங்கிலாந்துக்கு அவனை அழைத்துச் சென்றவர் அவனுக்கு கொஞ்சம் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு இயற்கை எய்துகிறார். பின்னர் பாரிஸுக்கு வரும் சாரங்கன் தனது பாதை இசையே எனக் கண்டு கொண்டு அதிலேயே முழு மூச்சாக இருக்கிறான். அவனுக்கு குடியும், புகை பிடித்தல் பழக்கமும் ஏற்படுகிறது. ஒரு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து விவாகரத்தாகி தனியே வசிக்கிறான். இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட, அன்றாடச் செலவுக்கு அவனது வயலின் துணை செய்கிறது. நாற்பது வயதான சாரங்கன் தனது குடும்பத்தைச் சந்திக்க இந்தியா வருகிறான். 


சாரங்கனின் தந்தை சேஷையாவுக்கு மகனைப் பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும் 'இத்தனை நாள் கழிச்சு, இப்போ இவன் எதுக்கு வர்றான்' என்கிறார். ஏனென்றால் முன்பு அவர் சொன்ன எதையும் அவன் கேட்கவில்லை, அந்த கோபம் அவருக்கு. அவரைப் பொறுத்தவரை பெரியவர்கள் சொல்வதை சின்னவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். 

சேஷையாவுக்கு நான்கு பிள்ளைகள். பாலம்மாள் என்ற ஒரு மகளும், நரசிம்மன், ரங்கையா, சாரங்கன் என மூன்று மகன்களும் அவரின் பிள்ளைகள். மனைவி காலமாகி விட்டார். இந்தப் பிள்ளைகளில் பாலம்மாள் தனது மகன் முரளி மற்றும் மருமகள் லீலாவுடன் அதே வீட்டில் வசிக்கிறார்கள். நரசிம்மனும் அவரின் மனைவியும் அங்கே வசித்தாலும் எதிலும் தலையிடுவதில்லை. நரசிம்மனுக்குப் பிள்ளைகள் இல்லை. ரங்கையா மட்டுமே தனது தந்தைக்கு அணுக்கமாக இருந்திருக்கிறான். அவனும் சில வருடங்கள் முன்பு இறந்து விட, அவனின் மனைவி லட்சுமியும் குழந்தை கண்ணனும் இருக்கிறார்கள். வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் மகள் வயிற்று பேரனான முரளியே பார்த்துக் கொள்கிறான்.சாரங்கன் வெளிநாட்டில் இருந்து வந்து, இந்த குடும்ப உறுப்பினர்களோடு அவனும் ஒருவனாய் இருக்கிறான். 

குடிப் பழக்கம் உள்ள சாரங்கனுக்கு அந்த வீடு வசதிப்படாததால் ஒரு தோட்டத்து வீட்டை சரி செய்து அங்கே செல்கிறான். சென்னையின் வெயில் தாங்காமல் குளிரூட்டி ஏற்பாடு செய்து கொடுக்கிறார் தந்தை. பெர்மிட் மூலம் வாங்கிய சாராயம் அவனுக்கு போதுமானதாக இருப்பதில்லை. "குடிப்பது என்பது வேறு, குடிகாரன் என்பது வேறு. நான் குடிகாரனாக மாறி விட்டேன்." எனச் சொல்லும் சாரங்கன் வீட்டு வேலைக்காரன் கன்னியப்பன் மூலம் நாட்டுச் சாராயம் வாங்கி குடிக்கிறான். வெளிநாட்டில் வளர்ந்த தன் முதலாளி மகன், கண்ட  கண்ட சாராயத்தை குடிப்பதைப் பார்த்த கன்னியப்பன் , "இந்த வெயிலிலும், இதையும் குடித்து ஏன் கஷ்டப் படணும். நீ பாரீஸூக்குப் போ" என்கிறான். 



நாற்பது வயதுக்கு மேல் வந்து நிற்கும் தன் மகன், இன்னும் கல்யாணம் செய்யவில்லை, தொழில் இல்லை, அவன் கையில் காசு இல்லை, எனவே அவனுக்கு ஒரு தொழிலை ஏற்பாடு செய்து தர முயல்கிறார் சேஷையா. அதற்கு பேரன் முரளி, நானும் சாரங்கன் மாமாவுடன் இணைந்து கொள்கிறேன் எனச் சொல்கிறான். இத்தனை நாள் தனது தாத்தாவுக்கு வேலைக்காரனாக இருந்தது போதும், ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கிறான் முரளி. சாரங்கன் தான் ஒரு இசைக் கலைஞன், எனக்கு தொழில் எல்லாம் ஒத்து வராது எனச் சொல்லி மறுத்து விடுகிறான். வேண்டும் என்றால் முரளிக்கு அந்த தொழிலை ஏற்பாடு செய்து கொடுங்கள் எனக் கேட்கிறான் சாரங்கன். சேஷையா "நீ தானே என் மகன். என்ன இருந்தாலும் அவன் மகள் வயிற்றுப் பேரன் தானே" எனச் சொல்லி விடுகிறார். இத்தனை நாட்கள் தாத்தாவுக்கு வேலை செய்தும் அவர் என்னை நம்பவில்லை என முரளி வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

தான் சொல்வதை சாரங்கன் கேட்கவில்லை, அவனை வழிக்கு கொண்டுவர செலவுக்கு கொடுக்கும் பணம், அவன் தங்கி இருக்கும் வீட்டுக்கு மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தி விடுகிறார் சேஷய்யா. சாரங்கன் கோபமுற்று, எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்கிறான். அதெல்லாம் முடியாது, வேண்டும் என்றால் நீதிமன்றம் போய் பெற்றுக்கொள் என்கிறார் சேஷையா. பெரிய மகன் நரசிம்மன் "அப்பா எப்பவுமே இப்படித்தான். அவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கிறார். நாம் கோர்ட்டுக்குப் போய் நம் பங்கை வாங்கி கொள்ளலாம்" என்கிறான். சாரங்கன் சோர்ந்து போகிறான். எதை நம்பி இங்கே காலம் தள்ள முடியும் என நினைக்கிறான். 

சாரங்கனுக்கு, மகாலிங்கம், லலிதா என்ற தம்பதிகளிடம் நட்பு உருவாகிறது. லலிதா எழுத்தாளர் என்பதால், ஒரு பத்திரிகையில் சாரங்கனின் இசை பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறாள். அந்தக் கட்டுரைகளுக்கு வரவேற்பும், சிலருக்கு கருத்து வேறுபாடும் உருவாகிறது. "மேல்நாட்டு இசை உணர்ச்சி மயமானவை, ஆனால் நமது இசை கணக்கை அடிப்படையாக கொண்டது" என்கிறான் சாரங்கன். சங்கீதத்தில் புலமை பெற்ற தந்தை சேஷையாவுக்கு அவன் கருத்துக்கள் பிடிப்பதில்லை. லலிதா அவனிடம் நெருங்கிப் பழக ஆரம்பிக்க அது காதலாக மாறுகிறது. மகாலிங்கத்தை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் வந்துவிடு என்கிறான் சாரங்கன். சில நாட்கள் செல்ல, தனது கணவரை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்கிறாள் லலிதா. லலிதாவின் மேல் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர் மகாலிங்கம். நம் காதல் அப்படியே இனிய நினைவுகளாக இருக்கட்டும், நீங்கள் பாரிசுக்குப் போய் விடுங்கள் என லலிதா சொல்ல, சாரங்கனும் ஒத்துக் கொள்கிறான். 

இசை வேலைக்காக, ஒரு பெரிய சினிமா இயக்குநருடன் அவனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. தான் ஒரு பெரிய படம் இயக்கப் போவதாகவும், அப்படத்துக்கு நீங்கள் தான் இசை அமைக்க வேண்டும் எனச் சொல்கிறார் இயக்குனர். சில மேற்கத்திய இசையைக் கேட்கச் செய்து இது மாதிரி வேண்டும் எனச் சொல்ல, சாரங்கனுக்கு கோபம் வருகிறது. இயக்குனரோ, 'நான் போட்ட பணத்தை எடுக்க முயல்கிறேன். உங்களுக்கு இந்த வேலை எல்லாம் செய்ய வராது. நீங்கள் பாரிசுக்குப் பொய் விடுங்கள்' எனச் சொல்கிறார்.

ஆக எல்லோருமே சாராங்கனை பாரிசுக்குப் போகச் சொல்கிறார்கள்.  விமான நிலையத்தில் பாரீஸ் செல்ல காத்திருக்கும் பொழுது, தனது கட்டுரைகளின் வாசகர் மூலம் சாரங்கன் இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்கிறான். அவனுக்கு பிடித்த இசைத் துறை என்பதாலேயே சாரங்கன் அந்த வாசகரோடு செல்கிறான். 

===

முரளியின் அம்மா பாலம்மாள், தனது கணவர் நரசய்யா ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவியாகி விட்டார் எனச் சொல்கிறாள். ஆனால் அவர் கலையின் மேல் நாட்டம் கொண்டு கங்கா என்ற நாட்டிய மங்கையிடம் போனதாலேயே, அவரை விட்டு அம்மா விலகி விட்டாள் என முரளி அறிந்து தாத்தாவிடம் 'என் அப்பாவிடம் உங்களின் பணத்தை காட்டி அவருடனான உறவை முறித்து, என் அம்மா தனியே வாழ நீங்கள் தான் காரணம்' எனச் சொல்கிறான். அதற்கு சேஷையா, 'ஒரு தகப்பனாக அவளின் உணர்வுகளை நான் மதித்தேன். போக்கிடம் இல்லாதவளாக என் மகள் எண்ணி விடக் கூடாது என்றே நான் நினைத்தேன். உன் அப்பா ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை' எனச் சொல்கிறார். அவரவருக்கு அவரவர் நியாயங்கள். 

ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கே மனம், குணம் என ஒன்றுமே ஒத்துப் போவதில்லை. அதிலும் வெளிநாட்டில் வளர்ந்த சாரங்கனுக்கு தம் குடும்பத்தினர் செய்வது எல்லாமே ஒரு நடிப்பு போல தோன்றுகிறது. தன் தந்தை பழைய காலத்தில் இருந்து வெளியே வர மறுக்கிறார். ஒரு காலத்தில் அவர் அவனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்கும் நவீன மனிதராக இருந்தாலும் இப்போது அப்படி இல்லை. சாரங்கனுக்கோ அவரோடு இணக்கமாக போக தெரிவதில்லை. 

சேஷையா போன்ற தந்தைகளுக்கு தனது கைகளுக்குள் அடங்கும் ரங்கையா போன்ற பிள்ளைகளே தேவைப்படுகிறார்கள்.  சாரங்கன் போன்ற பிள்ளைகள் கலையை வளர்க்க, அது பற்றிய கருத்துக்களைப் பகிர ஒத்த மனங்களைத் தேடுகிறார்கள். 

 

Monday, August 12, 2024

தாரா - ம.நவீன்

புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள். 

ஷரியா நிருத்ய என்னும் நடனம் பரதம் போன்ற ஒன்று. நேபாளில் இக்கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இக்கலையில் பிரகாசிக்க தாராவின் அருள் வேண்டும் என்று நம்பப்படுகிறது. 

தாராவைப் பற்றியும்,  ஷரியா நிருத்ய நடனம் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வல்லினம் தளத்தில் கோகிலவாணி எழுதிய பச்சை நாயகி , கடவுளும் கலையும் கட்டுரைகளைப் படிக்கலாம்.  


 
தமிழ், நேபாளி என இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் பூசல் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது எனச் சொல்லும் கதை தாரா. மலேசியாவில் இரண்டு சமூகமும் தன் வாழ்க்கையை அந்நிலத்தில் வாழ, படும் அவலங்களை பேசுகிறது இந்நாவல். முதலாளிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குபவர்கள். உள்ளூர் தொழிலாளிகள் சம்பளம் கூட கேட்டு பிரச்சினை செய்தால், வெளியூரில் இருந்து குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை இறக்குகிறார்கள். குறைந்த கூலிக்கு தன்னுடைய வேலைக்கு  புதிதாக வந்த நேபாளிகள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைச் சீண்டுகிறார்கள். அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் நேபாள் மக்களின் தலைவராக சனில் இருக்கிறான். 

அரசியல்வாதி மருது இப்பிரச்சினைகளை பற்றி பேசும்போது "பட்டா இல்லாத பூமியில் நாம் இருக்கிறோம். அரசாங்கத்துடன் நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. நாம முந்தா நாள் வந்தோம். அவன் (நேபாள மக்கள்) நேத்து வந்தான். அவன் வேலையை அவன் செய்யட்டும். உங்க வேலையை நீங்க பாருங்க." என்று கூறுகிறான். அவரைப் பொறுத்தவரை, அடுத்த தேர்தலில் நேபாள மக்களுக்கு தேர்தல் வாக்குரிமை தந்தால் அதைப் பெற்றாக வேண்டிய கணக்கு அவருக்கு.

ஆனால் அவரின் பேச்சு எடுபடாமல் அந்தக் கம்பத்தைச் சேர்ந்த குகனோடு சேர்ந்து பிரச்சினை வருகிறது. அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு அவன் தலைவன் போல, எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறான். சிறைக்கும் சென்று வருகிறான். அவன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த சனிலை பழிவாங்க  வேண்டும் என அவனின் நண்பர்கள் நினைக்கிறார்கள். 

குல தெய்வம் இல்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு கோயில் ஒன்று கட்டப்படுகிறது. சில பிரச்சினைகள் ஏற்படுவதால் கோவில் பூட்டியே வைக்கப்படுகிறதது. அதற்கு காரணம் அம்மன் கோபமாக இருக்கிறாள் என்று சொல்லுகிறார்கள். முன்னொரு காலத்தில் பழங்குடியினரோடு மோதிய சண்டையில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதால் அம்மன் கோபத்தோடு இருக்கிறாள் என ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அக்குடியின் தலைவன், தமிழ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்  "ஒரு தலைவனிடம் அறம் இல்லாமல் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அக்குடியின் பெண்கள் அறம் பற்றி நினைக்காமல் கொண்டாடுவதைக் கண்டு கவலைப்படுகிறேன்" எனச் சொல்கிறான். அன்று அறம் பிறழ்ந்த தன் மக்களை இன்றும் கோபத்துடன் நோக்குகிறாள் கந்தாரம்மன். எனவேதான் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன எனப் பேசுகிறார்கள் ஊர் மக்கள். 



அந்தக் கோவிலை கட்ட நிலம் கொடுத்த அஞ்சலை, கோவிலை சுத்தம் செய்தல், மாலை கட்டுதல் போன்ற சிறுசிறு வேலைகள் செய்கிறாள். கோவில் சார்பாக அவளுக்கு சொற்ப வருவாய் கிடைக்கிறது. அஞ்சலை வேறு சாதி என்பதால் அவளிடம் தள்ளியே பழகுகிறார்கள் கம்பத்து மக்கள். தன் கணவன் சங்கரனை மதித்த ஊர் சனம் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அவளுக்கு கோபம் இல்லை. கணவன் இறந்த பின்னர் ஒரே மகளான அமிர்தவள்ளி காதல் திருமணம் செய்து ஊரை விட்டுப் போகிறாள். அவளுக்கு பிறந்த மகளான கிச்சி என்கிற மீனாட்சி நகரத்தில் படிக்கிறாள். தன் பாட்டி அஞ்சலையின் வீட்டுக்கு வரும் கிச்சிக்கு பார்க்கும் இடமெல்லாம் பசுமை நிறைந்து இருக்கும் கம்பம் பிடித்துப் போகிறது. ஒவ்வொரு விடுமுறைக்கும் தன் அம்மாவை நச்சி நச்சி பாட்டியிடம் கொண்டு வந்து விடச் சொல்கிறாள். அவளுக்கு அங்கே தோழர்களாக லிங்கமும், கோகியும் அமைகிறார்கள். 

நேபாள் மக்களின் தலைவன் சனிலின் ஒரே மகளான அந்தராவுக்கு ஷரியா நிருத்ய நடனம் மேல் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நடனம் ஒரு சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அந்தராவின் சாதி அந்நடனம் ஆட தடையாக இருக்கிறது. அந்தரா குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களை எளிதாகப் பறிப்பாள். ஷரியா நடனத்துக்கு தாமரைப் பூக்கள் வேண்டும் என்பதால் அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் அவள் அப்படியே ஓரமாக நின்று கற்றுக்கொள்கிறாள். ஒருநாள் தனியாக அவள் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது மேல்சாதி பெண் பார்த்து விட பிரச்சினையாகி அவளை அடித்து விடுகிறார்கள். இந்தப் பிரச்சினையின் காரணமாகவே அந்தராவின் குடும்பம் மலேசியாவுக்கு குடி பெயர்கிறது. அவளைப் பொறுத்தவரை, நடனம் ஆட குரு தேவை. அப்படி குரு அமையவில்லை எனில், நீலத் தாமரையையே குருவாக பாவித்து ஆட தொடங்கலாம். ஆனால் நீலத் தாமரை எல்லா நாட்களிலும், எல்லா குளத்திலும் கிடைக்காது. அதுவும் வருடத்தின் ஒரு முறை மட்டுமே மலரும் நீல மலரை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் அந்தரா. 

கிச்சிக்கும் அந்தராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. கிச்சிக்கு ஆங்கிலம் தெரியுமென்பதால் அவளுடன் உரையாட முடிகிறது. நீலத் தாமரையை நான் போன வருடம் பார்த்தேன், இந்த வருடம் கண்டிப்பாக  பறித்தே விடுவேன் என்கிறாள் அந்தரா. கிச்சி, எங்கள் கோவிலில் உள்ள அம்மனிடமும் நீலத் தாமரை உண்டு என்கிறாள். அதைக் கேட்டு ஆச்சரியப்படும் அந்தரா, உங்கள் தெய்வத்துக்கு சூட்ட நான் நீலத் தாமரையை கொண்டுவருகிறேன் என்கிறாள். 

குழந்தைகள் நீல மலருக்கு காத்துக் கொண்டிருக்க, பெரிய மனிதர்களான இளைஞர்கள் திட்டம் போடுகிறார்கள். குகனை ஒருமுறை எட்டி உதைத்திருக்கிறாள் அந்தராவின் அம்மா திமிலா. ஒரு நேபாள் பையன் தமிழ் பெண்ணை காதலித்து ஊரை விட்டு போவதால், அதை சாக்காக வைத்து பிரச்சினை பெரிதாகிறது. திமிலா பழைய பகையில் கொல்லப்படுகிறாள். சனில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்று விடலாம் என்றால், நீலத் தாமரையை பறித்து விட்டே நான் இந்த ஊரை விட்டு வருவேன் என்கிறாள் அந்தரா. 

பகை முற்றிக் கொண்டே போய், அந்தராவை சீரழிப்பதிலும், சனிலைக் கொல்வதிலும் முடிகிறது. ஆனால் அந்தரா அவ்விரவில் நீல மலரைக் கொண்டு வருகிறாள் கிச்சிக்கு. எல்லோரும் கோவிலில் கூடியிருக்க, தெய்வமேயான அவள் சொல்கிறாள் 'நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்' என்கிறாள். இரக்கமும் கருணையும் நிரம்பிய தாரா தெய்வம் அவளில் இறங்கியிருக்கிறது. அவள் மலரைக் கொடுத்துவிட்டு ஒரு மின்னல் போல காணாமல் போகிறாள். 

அவளின் நிலையைப் பார்த்த தமிழ் பெண்கள் அதற்கு காரணமான தன் பிள்ளைகளான இளைஞர்களை வெட்டுகிறார்கள். அந்த ரத்தம் அம்மனின் காலடியில் விழ, கிச்சி நீல மலரை சூட, முன்னொரு காலத்தில் அறம் பிறழ்ந்த அம்மக்களின் மீது கோபம் கொண்ட அவளின் கோபம் தணிகிறது. 


Friday, August 2, 2024

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி

நாடு, ஊர் என்ற பிரிவினை இல்லா காலத்தில் ஒரு பழங்குடி பரந்து விரிந்த காட்டில் ஒரு முளைக் குச்சியை அடித்து, தனது எல்லையை நிறுவி அங்கே தனது குடும்பத்தை நடத்துகிறான். பின்னர் அவன் குலம் பெருக அவ்விடம் ஊராக, கிராமமாக பிரபலம் அடைகிறது. அதன் பின்னர் அரசாங்கமும், பணக்கார மனிதர்களும், வட்டிக்கு விடுபவர்களும் அவர்களின் நிலத்தை அபகரிக்கிறார்கள். தன் நிலமும், அதில் செய்த விவசாயம் மட்டுமே அறிந்த அந்தப் பழங்குடிகள் பின்னர்  என்ன செய்வார்கள்?. 



தங்கள் சுயத்தை மீட்க அதிகாரத்தின் மேல் போருக்குச் சென்ற பழங்குடிகள் பற்றிய உண்மைக் கதை காட்டில் உரிமை. நம் நாட்டை பிரிட்டிஷ் மன்னர்கள் ஆண்ட 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது. 

முண்டா பழங்குடிகளிடம் இருந்து நிலத்தை அபகரித்துக் கொள்கிறார்கள் ஜமீன்தார்கள், வட்டிக்கு பணம் குடுக்கும் லேவாதேவி ஆட்கள், மற்றும் ஆங்கிலேயர். ஆங்கிலம் தெரியாத முண்டாக்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தாலும் வெல்ல முடிவதில்லை. மேலும் வழக்கு தொடுத்த காரணத்துக்காக மேலும் மேலும்  இன்னல்களையே சந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, முன்பு தன் நிலமாக இருந்து இப்போது  ஜமீன்தாரின் உடமையாக இருக்கும் நிலத்தில் காலம் முழுதும் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டும். வழக்காட மொழியும் தெரியாமல், நீதியும் கிடைக்காமல் வறுமையிலேயே இருக்க வேண்டிய சூழல். தெரியாமல் அவசரத்துக்கு வட்டிக்கு பணம் வாங்கி விட்டால், இருக்கும் சுதந்திரமும் போய் விடுகிறது. 

ஒரு காலத்தில் மூன்று வேலையும் அரிசி சோறு உண்ட முண்டா பழங்குடிகளுக்கு, இப்பொழுது காட்டோ எனப்படும் கஞ்சிதான் உணவு. அரிசி சோறு கிடைப்பதே இல்லை. இந்தச் சூழலில் தான் பீர்ஸா முண்டா பிறக்கிறான். அவன் பிறக்கும்போதே நல்ல சகுனங்கள் தோன்றியது என மக்கள் பேசுகிறார்கள். கிறித்துவ மிஷனில் கல்வி கற்கும் பீர்ஸா முழுதும் முடிக்காமல் அங்கே இருந்து வெளியேறுகிறான். முண்டா குடிகளைப் பற்றி அங்கே இருக்கும் பாதிரியார் தரக்குறைவான வார்த்தைகளை விட வெகுண்டு வெளியேறுகிறான். நன்றாக படிக்கும் மாணவனான பீர்ஸா பின்னர் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. 





"சுதந்திரம் இல்லாமல் இருக்கும் நமக்கு மத கொண்டாட்டமோ, விழாக்களோ எதுவுமே தேவை இல்லை. யாருக்கும் அடிமையாக இல்லாத முண்டாவே நமது கனவு." எனக் கூறும் பீர்ஸா தன்னுடைய புதிய வழிக்கு பீர்ஸாயித் எனப் பெயரிடுகிறான். அவன் இப்பொழுது பகவான் என்று அழைக்கப்படுகிறான். அவனின் ஒரு சொல்லுக்கு அந்த சமூகம் காத்திருக்கிறது. அவனின் தந்தையான சுகானாவுக்கு தன் மகன் பகவான் ஆனதில் சந்தோசம். பகவானின் தந்தையான அவனுக்கு ஊரில் இப்பொழுது பெரிய மரியாதை. ஆனால் தாய் கருமிக்கோ தன் மகன் தன்னை விட்டுப் போய்விடுவான் என அழுகிறாள். சேர்த்து வைத்த செல்வம் போல் இருந்த மகன் கைவிட்டுப் போய் விடுவானோ எனப் புலம்புகிறாள் முண்டாவின் தாய். 

ஒரு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் முண்டாக்கள் பீர்ஸாவின் தலைமையில் காவல் துறையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வாகனங்கள் கொண்ட காவல் துறையின் மீது முண்டாக்கள் சிறு அம்புகள் கொண்ட வில்லுடன் போரிடுகிறார்கள். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்குகிறது. பீர்ஸா சிலருடன் காட்டுக்குள் சென்று ஒளிகிறான். ஒவ்வொரு கிராமங்கள் தோறும் அவனை சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். முண்டாக்களின் வீட்டில் உள்ள தானியங்கள், அரிசி, நிலத்தின் பட்டா என எல்லாவற்றையும் அபகரிக்கிறார்கள். 

பீர்ஸா பொறி வைத்து பிடிக்கப்படுகிறான். சிறையில் யாருடனும் பேச முடியாமல் தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறான். கை கால்களில் கட்டி இருக்கும் இரும்புச் சங்கிலிகளை அந்த சின்ன இடத்தில் அவன் இழுத்து நடக்கும் ஓசையே அவனின் பேச்சு. ஒருநாள் அச்சத்தம் நின்று போய்விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் சிறையில் தண்டிக்கப்பட்டு காலரா பாதித்து இறந்ததாகச் சொல்லி பீர்ஸாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து விடுகிறது ஆங்கிலேய காவல்துறை. விசாரணை கைதியாகவே முண்டாக்களின் பகவான் இறந்து போகிறான். 

பீர்ஸாவுக்கு முன்பே தன்னை இவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தது. தன்னைச் சேர்ந்தவர்களிடம் எதற்கும் பயப்பட வேண்டாம், முண்டா ஒருநாளும் பயப்பட மாட்டான், நான் இல்லையென்றாலும் நமது போராட்டமான உல்குலான் நடக்கும் எனச் சொல்கிறான். 

வரலாற்றில் முண்டா கலகம் எனக் குறிக்கப்படும் இந்நிகழ்ச்சி சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. இக்கலகத்தை ஆட்சியாளர்கள் அப்பொழுதே அடக்கி விட்டாலும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நமது உரிமைகள் என்ன, சுதந்திரத்தின் அருமை என்ன மக்கள் உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. 

காட்டில் உரிமை கதை, தன் மக்கள் படும் துயரம் தாளாமல் அரசாங்கத்தை நோக்கி போர் தொடுத்த ஒரு மாவீரனின் வரலாறு. 


காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி
சாகித்திய அகாதெமி 
தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி 


Monday, July 15, 2024

நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய - தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி

நீலகண்டப் பறவையைத் தேடி - ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல. அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு. குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவை எல்லாவற்றையும் காண்கிறோம். 

பத்தாண்டு கால உழைப்பில் உருவான இந்நாவலின் முன்னுரையில் மேற்கண்ட குறிப்பு உள்ளது. 

வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை நீலகண்டப் பறவையைத் தேடி. அவ்வூரின் இயற்கை, ஆறுகள், ஏரிகள், மக்கள் என விவரித்துச் செல்கிறது நாவல். காதல், காமம், பசி, அன்பு, துரோகம் என அனைத்து உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் நாவல் இது. 



கிராமத்தில் பெரிய மனிதரான மகேந்திர நாத்துக்கு மூன்று ஆண் பிள்ளைகள். செல்வாக்கான குடும்பம் கூட, அவர்களை ஊர் மக்கள் டாகுர் என அழைக்கிறார்கள். மூத்த பிள்ளையான மணீந்திரநாத் ஆங்கிலேயப் பெண்ணை காதலிக்கிறார். காதலை தந்தை எதிர்க்க, வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. காதல் கைகூடாத ஏக்கத்தால் அவர் மனநிலை பிறழ்ந்து விடுகிறார். 

படிப்பில் படுசுட்டியாக விளங்கிய, நல்ல திடகாத்திர உடல்நிலை கொண்ட மணீந்திரநாத் சில நாள்கள் குடும்பத்தை விட்டுப் போய் விடுகிறார். ஆற்றிலோ, நாணல் புதர்களிலோ, காடு கரைகளிலோ நீலக்கண்கள் கொண்ட அவரின் காதலியைத் தேடுகிறார் மணி. பின்னர் எப்போதாவது தன் மனைவியின் நினைவு வரவும் வீடு திரும்புகிறார். அவர் பேசும் ஒற்றை வார்த்தை 'கேத்சோரத் சாலா'. 

அதே ஊரில் நெசவு செய்யும் நரேன்தாஸின் தங்கை மாலதி கணவனை இழந்து நரேனின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறாள். திருமணம் ஆன கொஞ்ச வருடங்களிலேயே போராட்ட கலகத்தில் கணவனை இழந்த மாலதி தன் நிலையை நினைத்து வருந்துகிறாள். அவளிடம் அத்துமீறவும் சிலர் முயற்சிக்கிறார்கள். அவளின் பால்ய கால நண்பனான ரஞ்சித் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். தேச சேவையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறான். உண்மையில் ஒரு அதிகாரியை கொலை செய்துவிட்டு, காவல் துறையிடம் மாட்டாமல் இருக்கவே கொஞ்ச நாட்கள் இந்த ஊரில் இருக்கிறான். மாலதிக்கு அவனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவள் கவலைகள் அனைத்தையும் மறந்து ரஞ்சித்தை காதலிக்கவும் செய்கிறாள். 

மகேந்திர நாத்தின் இன்னொரு மகனுக்குப் பிறக்கும் பேரனான சோனாவைச் சுற்றியே நாவல் வளர்கிறது. அவன் பிறப்பில் இருந்தே நாவல் தொடங்குகிறது. சோனாவுக்கு ரஞ்சித் மாமா முறை. தனது பெரியப்பாவான மணீந்திரநாத்துடன் அவன் பைத்தியக்கார மனிதர் என எண்ணாமல் பழகுகிறான். அவரும் அவனைப்  பல இடங்களுக்குச் கூட்டிச் செல்கிறார். சுற்றியுள்ள ஆறுகளையும், தர்மூஜ் பழத் தோட்டங்களையம், நாணல் காடுகளையும் அவர்கள் சுற்றுகிறார்கள். ஒருமுறை யானையின் மீதேறி பாகனைத் தவிக்க விட்டுவிட்டு மணி காட்டுக்குள் கிளம்பிவிடுகிறார்.  வழக்கம்போல் அந்த நீலக் கண்களைத் தேடி அவர் சென்றுவிட்டார். ஊர் மக்கள் தேடியும் கிடைக்காமல், நீண்ட நேரம் கழித்து ஒரு ராஜா போல திரும்பி வருகிறார் யானையுடன். 

இந்து குடும்பங்களைப் போலவே முஸ்லீம் குடும்பத்தினரும் அவ்வூரில் வசிக்கிறார்கள். நகரங்களில் இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்பட்டாலும் இங்கே அவ்வாறில்லாமல் இருக்கிறது அல்லது நீறுபூத்த நெருப்பாய் இருக்கிறது. மாலதியின் இன்னொரு பால்ய நண்பனான சாமு எனப்படும் சம்சுதீன் லீக் கட்சியில் இருக்கிறான். அவனுக்கும் மாலதிக்கும் கட்சி போஸ்டர் ஓட்டும்பொழுது சிறு சச்சரவு ஏற்படுகிறது. ரஞ்சித், மாலதி மற்றும் சம்சுதீன் ஆகிய மூவரும் பழைய நாட்களை நினைத்துப் பார்க்கிறார்கள். சம்சுதீனுக்கு பாத்திமா என்ற பெண் மகள் உண்டு. அவளும் சோனாவும் நண்பர்கள். பாத்திமாவை நேசிக்கும் சோனா போலவே, பாத்திமாவும் சோனாவை நேசிக்கிறாள். பாத்திமாவை கூட்டிக்கொண்டு சம்சுதீன் நகரத்துக்கு கிளம்பிவிடுகிறான். 

வயிற்றுப் பசிதான் உலகத்திலேயே தீராமல் கிடக்கிறது. பெரிய நெருப்பாக நாவல் முழுதும் பசி தொடர்கிறது. சுற்றியும் ஏரியும், ஆறுகளும் கிடந்தாலும் சாப்பிட அல்லி கிழங்கையும், காட்டுக் கீரைகளையம், கொஞ்சம் அவலையும் தின்று உயிர் பிழைக்க நேரும் அவலம். கொஞ்சம் சோறும் மீனும் இருந்தால் அது விருந்து போலவே தான். 

13 பிள்ளைகளைப் பெற்ற ஜோட்டனுக்கு வயிற்றுப் பசியுடன் கூடவே உடல் பசியும் வருகிறது. நான்கு கல்யாணம் முடிந்து தன் தம்பி ஆபேத் அலியின் வீட்டில் இருக்கும் ஜோட்டன், தன்னை யாராவது கல்யாணம் செய்து கூட்டிப் போக மாட்டார்களா என நினைக்கிறாள். அப்படியாவது தன் வயிறுக்கும், உடலுக்கும் உள்ள பசி நீங்காதா என எண்ணுகிறாள். அவளை கூட்டிப் போகிறேன் என்று சொன்ன பக்கிரி சாயபு நாட்களை கடத்திக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் வந்து அவளை அழைத்துக் கொண்டு செல்கிறார். 13 குழந்தைகளை பெற்ற எனக்கே தாம்பத்ய நாட்டம் இருக்கும்பொழுது மாலதி என்ன செய்வாள் என நினைக்கிறாள் ஜோட்டன். 

ஆபேத் அலியின் மனைவி ஜலாலியும் ஏழ்மை நிலைமையிலேயே உழல்கிறாள். மாற்றிக் கட்டுவதுக்கு ஒரு துணி இல்லாத கொடுமை அவளுடையது. ஒருநாள் மாலதியின் ஆண் வாத்தை பிடித்து சமைத்து விடுகிறாள் ஜலாலி. மாலதி வாத்தை தேடும்பொழுது அங்கே வரும் சாமு, நான் தேடி வருகிறேன் நீ வீட்டுக்குப் போ எனச் சொல்கிறான். ஜலாலி தான் திருடி இருக்கிறாள் என்பதை அறிந்த சாமு, அவளின் குடிசையை எட்டிப் பார்க்கிறான். அங்கே தீராத பசியில் வாத்து இறைச்சியை  உண்ட ஜலாலி தொழுகை செய்வதை பார்த்த அவன் ஒன்றும் பேசாமல் திரும்பி வந்து விடுகிறான். உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் இந்த ஏழைகளை கடைத்தேற்ற வேண்டும் என நினைக்கிறான். 

ஜலாலி ஒருநாள் அல்லிக் கிழங்கு தேடி ஏரியில் நீந்தும் பொழுது நீரில் மூழ்கி இறக்கிறாள். அந்த நிகழ்ச்சியை இரண்டு மூன்று பக்கங்கள் விவரிக்கிறது புத்தகம். அவளின் கனவில் வந்த மீன்கள், மீனின் உடம்பில் காலம் காலமாக ஆன தழும்புகள், அவளை நோக்கி வருபவை என.. அவளின் கனவா இல்லை நிஜமா என்பது போல இருக்கிறது. மூழ்கிப் போன அவளின் உடலை எல்லோரும் தேடுகிறார்கள். எதற்கும் பயப்படாத, சோனாவின் பெரியப்பா நேராக ஏரியில் இறங்கி ஒரு பொம்மையைத்  தூக்கி கொண்டு வருவது போல அலுங்காமல் நடந்து வருகிறார். 

தசரா பூஜைக்கு தன் தந்தை வேலை செய்யும் மாளிகைக்கு சகோதரர்களுடன் செல்கிறான் சோனா. மணீந்திர நாத் சோனாவுடனே புறப்பட தயாராகிறார். ஆனால் அவரைப்  படகில் இருந்து இறக்கிவிடுகிறார்கள். சோனாவுக்கு அங்கே அவனுக்கு அமலா, கமலா என இருவர் அறிமுகம் ஆகிறார்கள். அந்த வீட்டின் பேத்திகளான இருவரும் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பிறந்தவர்கள். அவர்களின் தந்தையும் காதல் திருமணம் செய்தவர். அதனால் குடும்பத்துடன் வசிக்காமல் கல்கத்தாவில் இருக்கிறார். தசராவுக்கு மட்டும் தன் குழந்தைகளுடன் வருவார். தன் வளர்ப்பு நாயுடன் சோனாவின் பெரியப்பா மணி எப்படியோ அங்கே வந்துவிடுகிறார். அப்பெண்களின் நீலநிறக் கண்களைப் பார்த்ததும் அவருக்குள் சிறு திடுக்கிடல் ஏற்படுகிறது. அதற்கு பின்னர் மற்றவர் சொல்வதை அவர் கேட்டுக்கொள்கிறார். சோனாவுக்கு தன் பெரியப்பா மனநிலை சரியானதால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தர்மூஜ் வயலில் வேலை செய்யும் வேலைக்காரன் ஈசம், பேலு, பேலுவின் மனைவி ஆன்னு, பக்கிரி சாயபு என ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலில் வாழ்கிறார்கள். சோனா, நாவல் முழுதும் சிறுவனுக்கே உரிய ஆச்சரியத்துடனும், ஆவலுடனும் ஒவ்வொன்றையும் அணுகுகிறான். அழகுப் பையனாக இருக்கும் அவனை அமலா பயன்படுத்திகொள்ளும்போது அவனுக்கு தான் பெரியவன் என்ற மகிழ்ச்சியும், கூடவே பாவம் பண்ணியது போல பயமும் ஏற்படுகிறது.  மனிதர்களின் வாழ்க்கை விவரிப்புடன்  இயற்கையின் விவரிப்பு தான் நாவலை நிறைத்திருக்கிறது. 

நிகிலேஷ் குஹா தன் முன்னுரையில் இறுதியில் இப்படிச் சொல்கிறார்;
"மரத்தில் வாழ நேர்ந்தாலும் ஆகாயத்தில் சஞ்சரிக்க கூடிய நீலகண்டப் பறவை உலகத்துக்கும் சுவர்க்கத்துக்கும் மையமாக விளங்கும் ஞானி போல ஒரே நேரத்தில் புழுதியாலும் நட்சத்திரக் கூட்டத்தாலும் கவரப்பட்டு அந்தக் கவர்ச்சியில் தன்னையிழந்து விடும் நீலகண்டப் பறவை - இந்தப் பறவைதான் இந்நாவலின் குறியீடு..."

நீலகண்டப் பறவையைத் தேடி 
ஆசிரியர்: அதீன் பந்த்யோபாத்யாய 
தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா

Friday, May 17, 2024

பருவம் - எஸ்.எல். பைரப்பா

எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா.



ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது. 


மகாபாரதத்தில் பீஷ்மர், பீமன், அர்ஜுனன், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் எதையும் செய்து முடிப்பவர்களாக, கிருஷ்ணன் தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றப்படுவார்கள். ஆனால் பருவத்தில் அவர்களும் மனிதர்களாகவே காட்டப்படுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டு. பலராமன் தீராத பல் வலியாலும், சல்லியன் வயோதிகத்தாலும் கஷ்டப்படுகிறார்கள். 


சிற்சில மாற்றங்கள் அங்கங்கே தெரிந்தாலும் மூலக்கதையை விட்டு நாவல் பிரிவதில்லை. நியோகம் மூலம் குந்தியுடன் சேர்பவர்கள் சூரியன், இந்திரன், தருமன் போன்ற தெய்வங்கள் என்று மூலத்தில் வரும். ஆனால் பருவத்தில் அவர்கள் இமயமலையில் வாழும் குலத்தைச் சேர்ந்தவர்களாக காட்டப்படுகிறார்கள். தெய்வங்களுக்கு என்னென்ன குறியீடுகள் உண்டோ அவைகள் அந்த மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


போர்க்களத்தில் அத்தனை படைகளும் இருக்கும்போது உணவு, தண்ணீர், உறக்கம் என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. கழிவுகளின் வாசம், அகற்றப்படாத உடல்கள் என விவரிக்கிறது நாவல். 
தன் ஐந்து புதல்வர்களை இழந்த திரௌபதி தன் கணவர்களை பார்க்கிறாள். அபிமன்யு இறந்தபோது அர்ஜுனன் அழுத அழுகையையும், கடோத்கஜன் இறக்கும்போது பீமன் அழுத  அழுகையையும்  பார்த்த அவளுக்கு இன்று அந்தளவுக்கு கண்ணீர் வராததைக் கண்டு அவளுக்கு ஏதோ புரிந்ததுபோல இருக்கிறது. 

பாரதக்கதையில் நாம் வியந்து பார்த்த மனிதர்கள் தான் இந்நாவலில் வருகிறார்கள். ஆனால் தெய்வங்களாக அல்ல. பொறாமை, ஆசை, வீரம், நோய் என நமக்கு உள்ள அத்தனை குணங்களுடன் அவர்கள் இந்நாவலில் உலா வருகிறார்கள். அதுவே இந்நாவலுடன் நம்மை நெருக்கமாக பிணைக்கிறது. 
 
கன்னட மூலம்: எஸ்.எல். பைரப்பா
தமிழில்: பாவண்ணன் 
வெளியீடு: சாகித்திய அகாதெமி 

Wednesday, March 20, 2024

மானக்கேடு - ஜெ.எம்.கூட்ஸி : தமிழில் - ஷஹிதா

உறவினர் ஒருவருக்கு இன்னொருவருடன் நிலப் பிரச்சினை வந்தது. அவர் அதை விற்றுவிடலாம் அல்லது அவருடன் சமாதானமாகி போய்விடலாம். அப்படி சமாதானம் செய்துகொண்டால் உறவினர் சில அடிகளை இழக்க நேரிடும். உறவினர் கடைசி வரை அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. 'என்ன ஆனாலும் சரி, நான் தோற்க மாட்டேன். ஓரடி கூட நான் இழக்க தயாராயில்லை' என்றார். 

உண்மையில் இது என் நிலம், எனக்கானது என்பது சுயநலம் போன்று தோன்றினாலும் நம் வாழ்வுக்கு பிடிப்பாக அந்த சுயநலமே அமைகிறது. ஒரு அடியில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் அது அவரவர் நிலம். நாவலில் லூசி இதையே சொல்கிறாள். என்ன நடந்தாலும் சரி நான் இங்கேயே இருப்பேன், இது என் துண்டு நிலம் என்கிறாள். 

இரண்டு திருமணம் ஆகி, இருவரையும் விவகாரத்து செய்துள்ள டேவிட்க்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகிறது. தனிமையில் வாழும் அவர், தமது இச்சைகளை பாலியல் தொழிலாளிகளுடன் போக்கி கொள்கிறார். அதுவும் ஒரே பெண் தொடர்ந்து அவருக்கு வருகிறாள். அவளை அளவுக்கு அதிகமாக அவர் விரும்புகிறார். அப்பெண் ஒரு நீண்ட விடுமுறையில் செல்கிறார். அவளின் நிறுவனம் அவள் பற்றிய தகவல்களை இவரிடம் சொல்வதில். அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடுகிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. 


தென்னாப்பிரிக்காவின் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் டேவிட் லூரிக்கு  தனது மாணவி மெலனியுடன் தொடர்பு ஏற்படுகிறது. மெலனியின் சம்மதத்துடனேயே அது நிகழ்கிறது. அவர் இதை பற்றி நினைக்கும்போது, இது தற்காலிக உறவுதான், நீண்ட காலம் இதைக் கொண்டுபோக போவதில்லை என்றே நினைக்கிறார். ஆனால் மெலனி ஒரு பிரச்சினையில் இவருடன் சிலநாட்கள் வந்து தங்கிக்கொள்கிறாள். பல்கலையில் ரொமான்டிக் பிரிவு துறையில் இருக்கும் அவருக்கு, அவரின் மகள் வயதுள்ள மெலனி அழகியாகத்  தெரிகிறாள். அவள் அழகியும் கூட. அப்படியென்றால் அவளுக்கு யாராவது காதலன் நிச்சயம் இருப்பான் என நினைக்கிறார். அவர் நினைத்தது போலவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்.

டேவிட்டின் வீட்டில் இருந்து கிளம்பும் அவள்  தன் காதலன் துணையுடன் பல்கலையின் குழுவில் அவரைப் பற்றி முறையிடுகிறாள். குழு அவரை விசாரிக்கிறது. அவர்கள் இவரை மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதித்  தரச் சொல்கிறார்கள். இவரோ 'நான் அப்படி எதுவும் நான் கேட்க மாட்டேன், மெலனியுடன் உறவு இருந்தது உண்மை. உங்கள் கடமையைச் செய்யுங்கள்' என்கிறார். இறுதியில் அவர் பல்கலையை விட்டு வெளியேற்றப்படுகிறார்.  

வேலையிழந்து மானக்கேட்டுக்கு உள்ளான டேவிட் தன் மகள் லூஸி தங்கியிருக்கும் பண்ணை நிலத்துக்குச் செல்கிறார். அங்கே சென்றதும் அவளின் வாழ்க்கையில் இவர் குறுக்கிடுவதாக சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவன் லூஸியின் பண்ணை வீட்டை கொள்ளையடித்து, டேவிட்டின் காரையும் ஓட்டிச் செல்கிறார்கள். லூஸியை வல்லுறவு செய்து, டேவிட்டை அடித்து அவரின் தலையில் தீ வைத்தும் செல்கிறார்கள். லூஸி காவல் துறையிடம், திருடுபோன பொருட்களை பற்றி மற்றும் சொல்கிறாள். அவள் வன்புணர்வுக்கு ஆட்பட்டதை தெரிவிப்பதில்லை. 

முதலில் அவளுக்கு வேலையாளாக வந்த பெட்ரூஸ் என்பவன், இப்பொழுது பக்கத்து நிலத்தை வாங்கி உரிமையாளன் ஆகிவிட்டான். லூஸி, கொஞ்சம் தள்ளி உள்ள நிலத்துக்கு சொந்தக்காரரான எட்டிங்கர் போன்றவர் மட்டுமே வெள்ளையர்கள். பெட்ரூஸ் தன்னுடைய பாதுகாப்பின் கீழ் லூஸியை கொண்டுவரத் திட்டம் போடுகிறான். அவனுக்கு அவளின் நிலம் வேண்டும். சுற்றிலும் அவனுடைய ஊர்க்காரர்கள். லூஸியை வன்புணர்வுக்கு உள்ளாக்கியதும் அவனுக்குத் தெரிந்தவர்களே. அவளை பயமுறுத்தவே அவன் திட்டமிடுகிறான்.

டேவிட் தன் மகளை நீ இங்கே இருக்க வேண்டாம், வேறு நாட்டுக்குச் செல். அதற்கான எல்லா செலவுகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். லூஸியோ மறுத்துவிடுகிறாள், நான் இங்கேயே இருப்பேன், இது என்னுடைய நிலம் என்கிறாள். டேவிட் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. அன்றைய சம்பவத்தால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள். முன்னரே டேவிட் தக்க பாதுகாப்பு எடுக்கச் சொல்லியும் அவள் அதைக் கேட்காமல் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். 

லூசியைப் பொறுத்தவரை, வெள்ளையர்களான நாம் இங்கே இருப்பதற்கு இந்த மாதிரியான செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என தன் தந்தையிடம் சொல்கிறாள். பெட்ரூஸையே அவள் திருமணம் செய்யவும் முடிவு செய்கிறாள். அவனுக்கு இந்த நிலம் வேண்டும், எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறாள் லூசி. 



டேவிட் அங்கே விலங்கு நல மருத்துவமனையில் பணிபுரியும் பெவ் ஷா என்னும் பெண்மணிக்கு உதவுகிறார். நோய்ப்பட்ட, முடமான, யாருக்கும் தேவையில்லாத நாய் மற்றும் பூனைகளை வலியில்லாமல் முடித்து வைக்கிறாள். பெவ் ஊசி போடும்பொழுது உதவுவதும், இறந்து போன விலங்குகளின் உடல்களை எரி மையத்துக்கு கொண்டு செல்வதும் டேவிட்டின் வேலை.  அங்கேதான் டேவிட் தன்னுடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காண்கிறார். இது ஒரு தண்டனையாக கூட இருக்கலாம் என்றாலும் அவர் அதை விரும்பியே செய்கிறார். 

டேவிட் தன்னால் உறவுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி மெலனியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவர் அவளின் பெற்றோர் மற்றும் தங்கையைச் சந்திக்கிறார். மெலனியின் அப்பா அவரை இரவுணவுக்கு கூட அழைக்கிறார். விருந்து முடிந்ததும் எங்களிடம் நீங்கள் எதையாவது எதிர்பார்த்து எங்கே வந்தீர்களா என்று அவர் கேட்க, டேவிட் மெலனியின் அம்மா மற்றும் தங்கை அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று மன்னிப்பு கேட்பது போல கீழே முழங்காலிட்டு தலை வணங்குகிறார். நீங்கள் இப்போது இருக்கும் பாதை கடவுளை நோக்கிய பாதை என அவர்கள் டேவிட்டை வழியனுப்பி வைக்கிறார்கள். 

===

கவிதைத் துறையில் பேராசிரியராக இருக்கும் டேவிட்டுக்கு பைரனின் வாழ்க்கையை எழுத வேண்டும் என்ற ஆவல். நாவலில் பைரனுக்கும் தெரேசாவுக்கும் இடையே உள்ள காதல் பற்றிய அத்தியாயங்கள் மீண்டும் வாசிக்க வேண்டியவை. 

எத்தனையோ வருடங்களாக வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் மேலே வரும்பொழுது அவர்கள் அதையே திரும்பி மற்றவர்களுக்கும் செய்கிறார்கள். பெட்ருஸ் அவர்களில் ஒருவன். லூஸி மீது அவனுக்கு விருப்பம் அல்ல, அவளின் நிலமே வேண்டும். வரலாறு எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. 

லூஸி தன்பால் மோகியாக இருந்தாலும் தனக்கு நடந்த கொடூரத்தை அவள் பெரிதுபடுத்துவதில்லை. இங்கே இருப்பதற்கு  இந்த நிகழ்வெல்லாம் ஒரு வாடகையாக ஏன் இருக்க கூடாது என்கிறாள். தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை நன்றாக வளர்ப்பேன் என்கிறாள். 

பெவ் டேவிட்டிடம், உங்களுக்கும் லூஸிக்கும் என்ன பிரச்சினை எனக் கேட்க, 'எனக்கும் அவளுக்கும் இடையில் பிரச்சினைகளே இல்லை. சுற்றி இருப்பவர்களிடம் தான் பிரச்சினை. அதை அவள் அணுகுவது வேறு மாதிரி. நான் பார்ப்பது வேறு மாதிரி' என்கிறார் டேவிட். தன் வயதை விட குறைந்த, அழகான பெண்களையே விரும்பிய டேவிட் இப்போது மாறிவிட்டார். பெவ் கூட உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். 

நம் வாழ்க்கையில் ஒருநாள் ஒவ்வொன்றாக கைவிட வேண்டிய காலகட்டம் வரும். உறவுகள், சொந்த விருப்பு வெறுப்புகள், படிப்பு என ஒவ்வொன்றாக. நாம் விரும்பி நேசிக்கும் நாயைக் கூட ஒருநாள் பிரியத்தான் வேண்டும். நாவலில் டேவிட் ஒரு முடமான நாயிடம் பாசம் வைத்திருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கூட அதனால் உயிர் வாழ முடியும். ஆனால் அதன் வாழ்வை முடிக்க விரும்புகிறார் டேவிட். பெவ் அது பற்றி கேட்க, 'நான் இப்பொழுதே கைவிடுகிறேன்' என்கிறார் டேவிட். 

==

இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர்.ஷஹிதா அவர்களுக்கு என் நன்றிகள். நான் திரும்ப திரும்ப படிக்க வேண்டிய வரிசையில் இந்நாவல் கண்டிப்பாக இருக்கும். மூன்றாவது வாசிப்பிலேயே இப்பதிவை எழுதியுள்ளேன். 


Thursday, November 9, 2023

பதேர் பாஞ்சாலி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவது பொருந்தும்.' என இந்நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்கிறார்



சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்நாவலை கொண்டே எடுக்கப்பட்டது. நாவலை அதன் அழகு குன்றாமல் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருப்பார் ராய். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமமே நிச்சிந்தாபுரம். ஹரிஹரனும், மனைவி சர்வஜெயா என சிறு குடும்பம். புரோகிதம் செய்வதால் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடக்கிறது. அப்பு, துர்கா என இரு பிள்ளைகள். பக்கத்து வீட்டில் தூரத்து சொந்தமான வயதான அத்தை பாட்டியும் இவர்களுடன் இருக்கிறார். 

துர்கா வீட்டிலேயே இருப்பதில்லை. கிராமத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கிறாள். கொய்யா, மாங்காய் என தோட்டங்களில் சில காய்கள் பறிக்கிறாள். ஒருகாலத்தில் இவர்களின் சொத்தாக இருந்த அந்த தோட்டத்தில் பழம் பறித்ததற்கு ஜெயாவுடன் சண்டைக்கு வருகிறார்கள் இப்போதைய உரிமையாளர். சாலையில் கிடந்த தேங்காயை பொறுக்கி கொண்டு வந்தாலும் திட்டுகிறார்கள். வறுமை வாட்டும் கொடுமையில் சர்வஜெயா இருப்பதை வைத்து குழந்தைகளுக்கு ஏதாவது செய்து தருகிறாள். 

பழைய வீடு என்பதால் மழைக் காலங்களில் ஒழுகுகிறது. குளிருக்கு போர்த்த சரியான போர்வைகள் கூட இல்லை. 

சரியான வேலை இல்லாமல் திணறும் ஹரிஹரன் நான் வேறு ஊருக்கு சென்று வருமானத்துக்கு வழி பிறக்குமா எனப் பார்க்கிறேன் என்று ஊரை விட்டு கிளம்புகிறார். சென்றவர் இரண்டு மாதங்களை கடந்தும் எந்த தகவலும் இல்லை. கொஞ்சம் பழைய பொருட்களை விற்று சர்வஜெயா சமாளிக்கிறாள்.  கிராமத்திலே மழை அடித்து பெய்கிறது. துர்காவுக்கு காய்ச்சல் வந்து படுக்கையில் இருக்கிறாள். ஒரு உப்பு பிஸ்கெட்டாவது வாங்கி கொடு என்கிறாள் துர்கா, கஞ்சிக்கே வழியில்லை பிஸ்கெட்டுக்கு நான் என்ன செய்வேன் என்கிறாள் ஜெயா. நாளாக நாளாக காய்ச்சல் அதிகமாகி துர்கா உயிர் துறக்கிறாள். எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹரிஹரனுக்கும் தகவல் சொல்ல முடிவதில்லை. 

திரும்ப வரும் ஹரிஹரனிடம் இனி இந்த ஊரில் இருக்க முடியாது, கிளம்புவோம் என சர்வஜெயா சொல்ல அவனும் சரி என்கிறான். காசி சென்று ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். ஹரிஹரன் கோவில் வேலை தவிர, மாலை வேளைகளில் புராண கதைகளை மக்களுக்குச் சொல்கிறான். கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதுவும் பொய்த்து போகிறது. ஹரிஹரன் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். ஜெயாவும் அப்புவும் வேதனையில் மூழ்கிப் போகிறார்கள். 




ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய ஆள் வேண்டும் என்பதை அறிந்து அங்கே போய்த் தங்குகிறார்கள். வேலை அதிகம் என்றாலும் இருப்பதற்கு இடம் கிடைத்ததே என்று இருக்கிறார்கள். ஒருநாள் அங்கே இருக்கும் பிள்ளைகளுடன் சண்டை வர, அந்த வீட்டுப் பெரியவர்கள் அப்புவை அடித்து விடுகிறார்கள். ஜெயா இந்த அடிமை வேலை வேண்டாம், நாம் நம் ஊருக்கே செல்வோம் என நினைக்கிறாள். அங்கே வறுமை இருந்தாலும் நிம்மதியும், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. 

அவன் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கடவுளிடம் எங்களை நிச்சிந்தாபுரத்துக்கு அனுப்பி வை என்று வேண்டுகிறான். அதற்கு கடவுள் சொல்வதாக கீழ்கண்ட வரிகள்; 
'சோனாடங்கா மைதானத்துக்கு முன்னால் இச்சாமதியைக் கடந்து, தாமரை பூக்களால் நிரம்பிய மதுக்காளி ஏரியைத் தாண்டி, வேகவதியை படகில் கடந்து மேலே செல். உன் பாதை முன்னால் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த ஊரை விட்டு அயலூரிலும், சூரியோதயத்தை விட்டுவிட்டு அஸ்தமன திசையிலும், ஞானத்தை விட்டுவிட்டு அஞ்ஞானத்திலும் உழன்று கொண்டிருக்கிறாய்' என்று தெய்வம் மகிழ்ச்சியுடன் கூறியது. 

கிராமங்கள் இயற்கையும் அழகும் நிரம்பி வழியும் இடம். ஆறுகளும் மலைகளும் பசுமையை அள்ளிக் கொடுப்பவை. ஆனால் அங்கே வாழ்வதற்கு பெரிய வருமானம் இல்லை என்றாலும், கொஞ்சமாவது தேவை. தன் கிராமத்தில் ராணி போல இருந்த சர்வஜெயா, வெளி உலகை கண்டு மலைத்துப் போகிறாள். நிச்சிந்தாபுரம் அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்க காத்திருக்கிறது.
  
தமிழில் - ஆர். ஷண்முக சுந்தரம்

Monday, September 4, 2023

தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

சிறு குடும்பம் சந்திக்கும் சிக்கல்களில் பெரும்பாலும் ஊர் என்ன சொல்லும், பங்காளிகள் என்ன சொல்லுவார்கள் என்று செய்யும் செலவுகள்தான். பழக்க வழக்கம், பாரம்பரியம் என்கிற பெயரில் ஒவ்வொரு விழாவுக்கும் செய்யும் செலவுக்கு பெரிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். இன்று இலைமறை, காய்மறையாக இருக்கும் வரதட்சணை அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய செலவை இழுத்து வைத்துள்ளது. 

தலைமுறைகள் நாவலில் திரவியத்துக்கு, இரண்டு அக்கா மற்றும் ஒரு தங்கை. ஆக மூன்று பெண்கள். பெண்கள் சமைந்த கொஞ்ச நாளிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ள குடும்பம். பெரிய அக்கா உண்ணாமலையை கட்டி கொடுத்ததிலேயே செலவு அதிகமாகி விட, அடுத்த பெண் நாகம்மைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார் அப்பா நாகருப்பிள்ளை. குடும்பத்துக்கு அவரின் ஒரு வருமானம் மட்டுமே, அதுவும் விவசாயத்தில் வருவது. 

சொந்த ஊரிலேயே நாகம்மைக்கு ஒரு வரன் வருகிறது, மாப்பிள்ளையின் பெயர் செவந்த பெருமாள். கொஞ்சம் குறைவாக கொடுத்தாலும் போதும் என்று முதலில் சொல்லும் மாப்பிள்ளையின் அம்மா, பின்னர் ஒவ்வொன்றாக வரதட்சிணை கேட்கிறாள். கடனை வாங்கி அவர்கள் கேட்டவாறே கல்யாணம் செய்து வைக்கிறார்கள். செவந்த பெருமாள் வசதியான குடும்பம் என்பதால், நாளைக்குப் பின்னர் நாகம்மைக்கு எந்த குறையும் வராது என திரவியத்தின் குடும்பம் நினைக்கிறது. 





ஆனால், நாலைந்து மாதத்திலேயே நாகம்மையை கொண்டு வந்து மாப்பிள்ளை விட்டுவிடுகிறார். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின்  பஞ்சாயத்து அவனிடம் பேசிப்பார்க்கிறது. 'அவள் ஒரு ரெண்டும் கெட்ட, பெண்ணே இல்லை ' என்று பழி சுமத்தி விடுகிறான் செவந்த பெருமாள். எவ்வவளவோ பேசிப் பார்த்தும் அவன் அதையே சொல்லுகிறான். நாகம்மை அம்மா வீட்டிலேயே இருக்கிறாள். இந்த கவலையிலேயே குடும்பம் வேதனை அடைகிறது. திரவியமும், தங்கை சாலமும் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். 

நாகம்மையை விலக்கி வைத்தவன், ஊரில் யாருக்கும் தெரியாமல் அதே ஊரில் உள்ள வடிவுவைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊர் பஞ்சாயத்து அதை ஒன்றும் கேட்பதில்லை. நாகருப்பிள்ளை கோபத்தில்  தன் பெண்ணை கூட்டிக்கொண்டு போய் செவந்த பெருமாள் வீட்டில் விட்டுவிட்டு வருகிறார். ஆனால் அங்கே எதுவும் உண்ணாமல், அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் நாகம்மையை திரும்பவும் கொண்டுவந்து திரவியத்தின் வீட்டில் விட்டு விடுகிறார்கள். 

பெரிய அக்கா உண்ணாமலைக்கு குழந்தை பிறக்கிறது. உண்ணாமலையின் கணவர் சிறிய வருமானம் என்றாலும் மனைவியையும், குழந்தையையும் பாசமாக வைத்திருப்பதைப் பார்த்து, செவந்த பெருமாளின் மீது திரவியத்துக்கு கோபம் வருகிறது. குழந்தை பிறப்பு செலவுகள், அப்புறம் தங்கை விசாலமும் பெரிய பெண் ஆகிறாள். அதற்கு செலவு என ஏகப்பட்ட செலவுகள். 

திரவியம் படித்து முடித்து இப்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்திருக்கிறான். நாகம்மை அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்து விடலாம் என்று நினைக்கிறான். அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்தால், தங்கை சாலத்துக்கு வரன் அமையாமல் போய் விடுமோ என பயந்தவன் முதலில் தங்கைக்கு கல்யாணம் செய்து விட்டால் பின்னால் பிரச்சினை வராது என முடிவுக்கு வந்து, சாலத்துக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு வரதட்சிணை கொடுக்க பணம் இல்லாததால், குடியிருக்கும் வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைக்கிறார்கள். 

நாகம்மை கல்யாணம் வரைக்கும் அந்த வீட்டில் இருந்து விட்டு பின்னர் தான் வேலைக்கு செல்லும் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்து தங்கிக்கொள்ளலாம் என்று அப்பாவிடம் சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். திரவியத்துக்கு குற்றாலம் என்னும் நண்பன் அந்த ஊரில் உண்டு. தாய் இல்லாமல், நோயாளியான தகப்பனை குற்றாலம் தான் கவனித்துக்கொள்கிறான். யாருக்கும் பயப்படாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் அவன் இருப்பதால் ஊரில் அவனைக் கண்டாலே யாருக்கும் ஆகாது. நாகம்மை விசயத்தில் இரண்டாம் திருமணம் செய்த செவந்த பெருமாளை கேட்காத பஞ்சாயத்து இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்று பேசுகிறான். கொஞ்சம் திடகாத்திரம் உள்ளவனாக இருப்பதால் அவனை யாரும் எதிர்ப்பதில்லை. நாகம்மையைத் திருமணம் செய்துகொள்ள குற்றாலம் சம்மதிக்கிறான். அவனுக்கு முன்பிருந்தே அவள் மேல் ஒரு விருப்பம் உண்டு.

திரவியம் செவந்த பெருமாளிடம் சென்று, தன் அக்காவுக்கு குற்றாலத்தை திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்கிறான். இனிமேல் உங்களுக்கு தான் தலைகுனிவு, கட்டிய மனைவியை வைத்து வாழத் தெரியவில்லை என்று ஊருக்குள் பேசுவார்கள் என்று சீண்டுகிறான். நீங்கள் ஆண் பிள்ளையே இல்லை என்று கோபத்துடன் பேசிவிட்டு வந்து விடுகிறான் திரவியம். அடுத்த நாளிலிருந்து செவந்த பெருமாள் ஒருமாதிரி மனம் கலங்கி, சித்தம் திரிந்தவனாக நடந்து கொள்கிறான். 

திரவியத்தின் ஆச்சி மறைந்துவிட திருமணம் தள்ளிப்போகிறது. ஒருநாள் செவந்த பெருமாள் கிணற்றில் குதித்து விடுகிறான். சித்தம் கலங்கிய அவனை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் அவன் மனைவி வடிவு எல்லோரிடமும் கேட்டுப்பார்க்கிறாள். யாரும் உள்ளே இறங்க மறுக்கிறார்கள். அவள் ஓடிப்போய் குற்றாலத்திடம் உதவி கேட்கிறாள். அவனும் சரியென்று கிணற்றில் குதிக்கிறான். ஆனால், குற்றாலம் உள்ளே இறந்த நிலையில் இருக்க செவந்த பெருமாள் உயிருடன் மீட்கப்படுகிறான். செவந்த பெருமாளும், வடிவும் திட்டமிட்டே இதைச் செய்துள்ளார்கள். மனநிலை சரியில்லாதவனை சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. கலங்கிய மனதுடன் அந்த ஊரை விட்டு திரவியம் குடும்பம் புறப்படுகிறது. 

===

நாவலில் உண்ணாமலை ஆச்சி கதைகள் சொல்லியே குழந்தைகளை  வளர்க்கிறாள். ஆச்சியின் அண்ணன் குடும்பம் பக்கத்து வீட்டில் வசிக்கிறது. இரண்டு மூன்று மனைவிகள், அவர்களின் பிள்ளைகள் என பெரிய குடும்பம். மனைவி மக்கள் என எல்லோரும் சொத்தை பிரித்துக்கொண்டு  ஊரை விட்டுப் போன பின்னாலும் தனியே வசிக்கிறார் பெரியவர். அவர்கள் வாழ்ந்த கதைகள், பரம்பரை கதைகள் என ஆச்சி சொல்லிக்கொண்டே இருக்கிறாள். 

ஒரு குடும்பத்தின் பழக்க வழக்கங்கள், குடிப் பெருமைகள், சடங்குகள் என விவரிக்கும் தலைமுறைகள் முக்கியமான நாவல். 


Thursday, April 7, 2022

நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி

சின்ன ஒரு கிராமமாக இருந்தாலும் அங்கே கண்டிப்பாக, நல்லது கெட்டதுகளுக்கு உதவ, அந்நிகழ்வுகளை நடத்தி வைக்க நாவிதரும், வண்ணாரும் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடிநாவிதராக இருப்பவர் இந்நாவலில் வரும் காரு மாமா. ஆறுமுகம் என்ற இயற்பெயர் ஆரானாகி, பின்னர் காரானாக மாறிவிட்டது. 

தன் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் காரு மாமா. அவரின் மனைவி ராசம்மா, இரண்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இன்னொருவருடன் போய்விடுகிறார். ராசம்மாவையும்  குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதன் பின்னர் அவருக்கு வலிப்பு நோய் வந்து சுகமில்லாமல் போய்விடுகிறார். கொஞ்ச வருடங்கள் கழித்து அவர் இறந்தும் போகிறார். அவரின் இளைய சகோதரி முத்துவின் மகனான ராசனின் நினைவுகளில் காரு மாமாவைப் பற்றிய நினைவுகளாக நாவலில் விரிகிறது. 




பாசமலர் படம் வந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்த அண்ணனும் தங்கையும் தங்களை அந்த பாத்திரங்களாகவே நினைத்துக் கொண்டு ஏங்கிய காலம் அது. பட்ட கதைகளும், படாத கதைகளும் நிரம்பிய காலம். பட்ட கதை என்பது தங்கள் வாழ்வில் துன்பப்பட்டு, துயரப்பட்டு, சில சமயங்களில் சந்தோசத்துடனும் வாழ்ந்த கதை. படாத கதை என்பது, தேவதைகளின், தெய்வங்களின் கதை. எப்போதும் கொண்டாட்டமாகவே இருக்கும் படாத கதைகள். இந்நாவல் பட்ட கதை.  சாயப் பட்டறை, லேத்து பட்டறை என இளைஞர்கள் பட்ட துயரங்களை இந்நாவல் சொல்கிறது.

நல்ல தங்காளும் அவளின் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. தங்கை அவளின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரு மாமாவின் ஊரான உடையாம்பாளையத்தில் உள்ள கிணற்றுக்கு அருகில் மாய்த்துக் கொள்ள நிற்கிறாள். அந்த நேரத்தில் ஒரு மாயம் போல அந்த பக்கம் வந்த காரு மாமா, அவர்களை கண்டு அணைத்துக் கொள்கிறார். தெய்வமே என்று அழுகிறார்.

தன் தங்கைக்கு வந்த மாப்பிள்ளை ஆசிரியர் என்பதால், கொஞ்சமாவது நகைகள் போட வேண்டுமென அவரின் அம்மா சொல்ல, வளையல், கம்மல் என எப்படியோ சம்பாரித்து தங்கைக்கு போட்டு அனுப்பி வைக்கிறார். ஊரில் காரு மாமாவுக்கு நல்ல பெயர். அவரின் இறுதி பயணத்தில் மழை வருகிறது. நல்ல மனுஷனுக்கு 'பூவுண்டு, நீருண்டு' எனச் சொல்கிறார்கள் மக்கள்.  

பாசமலர் சிவாஜி போலவே, உன் மகனுக்கு என் பிள்ளையை கட்டிக்கோ என்று தங்கையிடம் சொல்கிறார். ஆனால் அவரின் மனைவியோ குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய்விடுகிறார். அவர் இறக்கும் வரையிலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவதில்லை. உடையாம்பாளையத்தின் அந்த மண் வீட்டில் ஒரு நாள் இறந்து போகிறார் காரு மாமா. நல்லதுக்கு போகாட்டாலும், கெட்டதுக்கு போகணும் என்று சொல்வது போல ஒவ்வொருவராக வருகிறார்கள். காரியங்கள் செய்ய அவரின் மகனும் வந்து விடுகிறான். 

ஒரு வாரம் கழித்து ராசம்மா அத்தை, வறுமையில் மெலிந்து போன தன் மகளுடன் காரு மாமா வீட்டுக்கு வருகிறாள். தாலிச் சடங்கு நடக்கிறது. பின்னர் கிளம்புகிறேன் என்பவளிடம் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகட்டும் எனச் சொல்ல சரி என்கிறாள். அன்றிரவு தான் பட்ட கதைகளை சொல்கிறாள். மகனும் தன்னை மதிப்பதில்லை, இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடலாம் என்றாலும், அதற்கும் வசதி இல்லையே என புலம்புகிறாள். தான் செய்த தவறை எண்ணி எண்ணி அழுகிறாள் அத்தை. 

இந்நாவலில் கதை சொல்லியான ராசனின் அம்மா முத்து தன் அண்ணனின் மனைவியான ராசம்மாவுடன் இணைந்து தாயம் ஆடுகிறாள். தாயத்தில் வெல்ல இரண்டு தேவைப்படும்போது, அதை உருட்டினால் உன் பொண்ணை என் மகனுக்கு கட்டிக்கிறேன் என்கிறாள். தாயம் உருட்டுவதில் வல்லவளான ராசம்மா தாயக்கட்டையை உருட்டத் தொடங்குகிறாள். 

***

வறுமையும் உறவுகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மனிதனை துயரில் ஆழ்த்துகிறது. இந்த வாழ்க்கை, ஆற்றில் செல்லும் புணை போல தள்ளாடிக் கொண்டே செல்கிறது. அவ்வளவு பிரச்சினைகளிலும், ஒரு சிரிப்பு, நல்ல உணவு போன்றவை, ஒரு பூ மலர்தல் போல நாளையை பற்றிய நம்பிக்கையை உண்டாக்குகிறது. காணாமல் போன தன் மகள் என்றேனும் வருவாள் என வளையலும், கொலுசும் எடுத்த வைத்த தகப்பன் காரு மாமா வைத்திருந்த நம்பிக்கை. ஆம் இவ்வாழ்க்கை நீர்வழிப் படூஉம். 


Thursday, September 30, 2021

பாத்துமாவின் ஆடு - பஷீர்

இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. 

இவர் "எங்க உப்பப்பாவுக்கொரு ஆன இருந்தது" என்கிறார்.

"அத தின்னுட்டீங்களா"

"இல்லை, அது அங்கங்கே சுற்றி அலைகிறது"

"பிடிக்க முடியுமா"

பஷீர் சொல்கிறார்: "தெரியவில்லை".

இன்னொரு பைத்தியம் "பட்டாளத்தில் இருந்த நான் நான்கு வருடம் முன் செத்துப் போய்விட்டேன். திரும்பவும் இந்த பூமிக்கு வந்துள்ளேன்" என்கிறது.

'இந்நாவல் ஒரு தமாஷ் கதை. ஆனால் எழுதும்பொழுது மனதுக்குள் வெந்து சாம்பலாகி கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை.' என்கிறார் பஷீர். 

நாவல் எழுதி முடித்து முன்னுரை எழுதுவதைத் தள்ளிப்போட்டு ஐந்து வருடங்கள் கழித்து நாவல் வெளியாகிறது. பத்து பக்கங்களுக்கும் மேல் நீண்ட முன்னுரை. 


******

pathumavin aadu basheer

நாவலில் பாத்திமாவின் ஆடு கதையைச் சொல்பவர் எழுத்தாளர். திருமணம் ஆகாதவர். குடும்பத்தின் மூத்தவர். எழுத்தாளராக இருப்பதால் அங்கங்கே சுற்றிக்கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கொள்ளலாம் என திரும்பி வருகிறார். முன்பு அவருடைய சொந்த ஊரில் குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டுக்கு எதிரே உள்ள சின்ன வீட்டில் இருந்தார். குடும்பத்தின் சண்டை சச்சரவுகள் இன்றி தனியாக அங்கே இருந்தார். எழுத்தாளரான இவர், ஊரில் இல்லாததால் அவரின் தம்பி அவ்வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். எனவே வேறு வழியின்றி அவர் குடும்பத்துடன் தங்க நேர்கிறது. 

அப்துல், ஹனீபா, அபூ என மூன்று இளைய சகோதரர்களும், பாத்துமா, ஆனும்மா என இரண்டு சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். இதில் பாத்துமா மட்டும் கொஞ்சம் தள்ளி வசிக்க, மற்ற எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அபூ தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அவர்களின் குழந்தைகள் வீடு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். குறும்புகள் செய்கிறார்கள். எல்லோருக்கும் பெரியவர் என்பதால் கூடப் பிறந்தவர்களுக்கு 'பெரிய காக்கா', அதாவது பெரிய அண்ணா. குழந்தைகளுக்கு 'மூத்தாப்பா'.

பாத்துமா ஒரு ஆட்டை வளர்த்து வருகிறாள். தினமும் காலையில் பாத்துமா தன் அம்மா வீட்டுக்கு வருவாள். அவளோடு சேர்ந்து பாத்துமாவின் ஆடும் வருகிறது. வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வலம் வருகிறது. எழுத்தாளரான பெரிய காக்காவின் புத்தகங்களைத் தின்கிறது. அவர் மேசையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை தின்கிறது. இத்தனை நாட்களாக ஊரில் இல்லாததால் அவருக்கு இந்த ஆட்டைப் பற்றி தெரியவில்லை. அவர் தன் சகோதரியிடம்  ஆட்டை கட்டிப்போடச் சொல்கிறார். அதற்கு பாத்துமா சொல்கிறாள்; 'கட்டிப்போட்டா அதுக்கு பிடிக்காது பெரிய காக்கா'.

பெரிய காக்காவிடம் எல்லோரும் தனக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அவரின் உம்மா கூட அவ்வப்பொழுது பணம் கேட்கிறார். நேற்று குடுத்தேனே என்று கேட்டால் இன்னொரு மகனிடம் கொடுத்து விட்டதாக சொல்கிறார் அம்மா. 'உனக்கு என்ன ஒண்டிக்கட்டை. முக்கால் ஜாண் வயிறு.. உனக்கு எதற்கு பணம்' என்கிறாள் உம்மா. 

ஒரு சகோதரி கம்மல் கேட்க, இன்னோர் சகோதரி வீட்டுப் பாத்திரங்கள் கேட்கிறார். யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என அவர்களே சொல்லிச் செல்கிறார்கள். ஆனாலும் ஒருத்தர் பொருள் கேட்டது மற்றவருக்கும் தெரிய வருகிறது. எழுத்தாளருக்கு மணியார்டர் வரும் முன்னரே, அந்தப் பணத்துக்கு வீட்டில் உள்ளோர் திட்டம் போடுகிறார்கள்.

பெரிய காக்கா தன் இன்னொரு சகோதரனிடம் குடும்பச் செலவுக்கு பணம் கேட்டால், எப்பொழுதும் ' நான் பட்டாளத்துக்கே போறேன்.' என்று சொல்கிறான். சின்ன வயதில் அவர்கள் செய்த சேட்டைகளையும், பொய்களையும் நினைவு கூர்கிறார். 

வீட்டில் குழந்தைகள் கூட அவரிடமே காசு கேட்கிறார்கள். ஒருநாள் கால் சட்டை பையில் ஆப்பத்தை போட்டு வைத்து தின்கிறான் சிறுவன். பாத்துமாவின் ஆடு அதை இழுத்து பாக்கெட்டோடு தின்று விடுகிறது. அதில் அடுத்த நாள் பென்சில் வாங்க வைத்திருந்த காசும் உண்டு. ஆடு அதையும் முழுங்கி விடுகிறது.  பின்னர் பெரிய காக்காவே அவனுக்கு காசு தருகிறார்.

வீட்டில் இரண்டு ஆடுகள் இருப்பதை கொஞ்ச நாட்கள் கழித்தே பெரிய காக்கா உணர்கிறார். ஒன்று பாத்துமாவின் சினையாக இருக்கும் ஆடு, இனொன்று வீட்டில் ஆனும்மா வளர்க்கும் ஆடு. பாத்துமா தான் அந்த ஆட்டை தன் சகோதரியான ஆனும்மாவுக்கு தந்தாள். ஒரு வாக்குவாதத்தில், 'இந்த உலகத்தில் தங்கச்சிக்கு யாரு ஆடு குடுத்திருக்கா. நான் குடுத்தேனே, நீ இப்படி பேசலாமா?' என பாத்துமா கேட்க, 'அவங்கவங்க யானையே தரங்களாம். இது சின்ன ஆடுதானே' என்கிறாள் ஆனும்மா.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய உணவு வேளையில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரிசி சோற்றை தந்துவிட்டு மரவள்ளிக் கிழங்கு மாவால் செய்த புட்டை உண்கிறார்கள். இதைக் கண்ட பெரிய காக்கா, ஒருநாள் இந்த வறுமையை போக்க வேண்டும் என நினைக்கிறார். 

பாத்துமா பெரிய காக்காவை சாப்பிட வீட்டுக்கு அழைக்கிறாள். மற்ற சகோதரர்களை விட்டுவிடுகிறாள். அவர்களை எல்லாம் அழைத்து விருந்து வைக்க அவளுக்கு மனம் உண்டு. ஆனால் வசதி இல்லை. இதை மற்றவர்கள் கேட்க, ஒருநாள் உங்களுக்கும் விருந்து வைப்பேன் என்று அவர்களிடம் சொல்கிறாள். இப்பொழுது சினையாக இருக்கும் ஆடு குட்டி போட்டு பால் கறந்தால், பாலை விற்று வரும் பணத்தில், நிறைய செலவுகளை சேர்த்துக்கொண்டே செல்கிறாள் பாத்துமா. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள். ஆனால் இழுபறி வாழ்க்கை. 

******

'குடும்பம் ஒரு பாற்கடல்' என்று லா.ச.ரா கதையில் வருவது போல இந்தக் கதையிலும் பெரிய குடும்பம். அள்ள அள்ள அமுது வரும், போலவே விசமும் வரும். 

பாத்துமாவின் ஆடு குட்டி போட்ட பின்னர், அதன் பாலை அவளின் உம்மாவும், தங்கையும் திருட்டுத்தனமாக கறந்து உபயோகிக்கிறார்கள். அதை பார்த்த பெரிய காக்கா, பாத்துமாவிடம் சொல்லித்தருகிறார். பாத்துமா, நீங்க கறக்க வேண்டாம், நானே கறந்து தருகிறேன் எனச் சொல்கிறாள். சொன்னவாறே பாலையும் கொடுக்கிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பால் கறப்பதும் தொடர்கிறது. 

பஷீர் சொன்னது போலவே இந்நாவல் ஒரு நகைச்சுவை கதை. 'பாத்துமாவின் ஆடு' வறுமையிலும் வாழ்க்கையை கொண்டாடச் சொல்லும் கதை. 


Wednesday, June 9, 2021

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார். 

குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள். 



வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். ஊரில் பாதிப்பேர் சொந்தம் எனச்சொல்லி வருவார்கள். இப்பொழுது யாரும் வருவதில்லை. பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை அல்லவா. 

ஒரே பிள்ளை இவர்களுக்கு. குஞ்ஞுபாத்துமா. உம்மா அடிக்கடி அவளிடம் 'பெண்ணே நீ, ஆனைக்காரரோட பொன்னு மவளோட பொன்னு மவளாக்கும். அது பெரீய கொம்பானே' என்று சொல்கிறாள். வசதியாக இருந்தபோது இந்த வார்த்தைகள் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழந்தும் குஞ்ஞுதாச்சும்மாவுக்கு பழைய பெருமை போவதில்லை. பாத்துமாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவர்களின் இப்போதைய நிலை பார்த்து யாராவது திருமணம் செய்ய முன் வரவேண்டும் என்கிறாள் உம்மா. 

அம்மாவுக்கும் மகளுக்கும் சமையல் தெரியாது. வியாபாரம் செய்து கொண்டு வருவதை வாப்பா தான் சமைக்க வேண்டும். அவர் சிலசமயம் தன் மனைவியிடம் 'பொண்ணா பொறந்தவளுக்கு அடுப்பு பத்த வைக்கவாவது தெரிஞ்சு இருக்கணும்' எனச் சொல்ல, உம்மாவோ 'நான் ஆனை மக்காரோட மவளாக்கும்' என்று சண்டைக்கு நிற்கிறாள். வறுமை இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளுடன் கணவன் மனைவி சண்டை வேறு. குஞ்ஞுபாத்துமா அவர்களை பார்த்து கலங்கி நிற்கிறாள். உம்மாவுக்கு அவளின் குடும்பம், யானை பெருமை என சொல்லிக்காட்ட, வாப்பா விட்டுக்கொடுத்துப் போகிறார்.

குஞ்ஞுதாச்சும்மாவுக்கு இஸ்லாம் முறைகள் மீதான பற்று அதிகம். பெண்கள் பூ வைத்தல், அலங்காரம் செய்தல் தவறு என்கிறாள். தன் மகளையும் அவ்வாறே சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால், தன் வறுமையான சூழலில் ஒவ்வொரு நாள் தொழுகையை கைவிடுகிறார். 'அதெல்லாம் ஒரு பாடு தொழுதாச்சு' என்று சலித்து கொள்கிறாள். 

அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் வீட்டுக்கு, நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் குடிவருகிறது. முஸ்லீமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கிறார்கள். நிஸார் அகமது, ஆயிஷா என இரு பிள்ளைகள். ஆயிஷாவும், குஞ்ஞுபாத்துமாவும் தோழிகளாக பழகுகிறார்கள். பூ வைத்தல், புடவை கட்டுதல், தலை முடி அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை பார்த்த குஞ்ஞுதாச்சும்மா, அவர்கள் முஸ்லிம்களே இல்லை காபிர்கள் என்கிறார். 

நிஸார் அகமதுக்கு பாத்துமாவை பிடித்துப்போக காதலிக்கிறான். பாத்துமாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. அகமது கழிப்பறை கட்டுதல், வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தல், பூச்செடிகள் நடுதல் என ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறான். சுத்தத்தை விரும்புவனாக இருக்கிறான். இரண்டு வீட்டினரும் பேசி திருமணம் முடிவு செய்கிறார்கள். அதிக நபர்களை அழைக்காமல் குறைவாகவே திருமணத்துக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்கிறான் அகமது. மீறிப்போனால் ஒரு பத்திருபது பேர். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். 

திருமணம் அன்றிரவு நடக்கப் போகிறது. பிள்ளைகள் வெளியே சத்தம் போட்டு விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். குஞ்ஞுதாச்சும்மா அவர்களிடம் 'எங்க அப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சத்தம் போட, அதில் ஒரு பையன் 'அது குழியான'  என்கிறான். குழியானை என்பது மண்ணில் வட்டமாக சிறு குழி தோண்டி வாழும் சிறு பூச்சி. தன் பெருமை மிக்க குடும்பத்து யானையை, நான்கு பேரை கொன்ற யானையை, பெரிய கொம்புள்ள யானையை குழியானை என்றதும் உம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆற்றாமை வருகிறது. அவர்களைத் திட்டுகிறாள். சத்தம் கேட்டு அங்க வந்த பாத்துமா என்ன என விசாரிக்க 'உங்க உப்பப்பா ஆன.. குழியானையாம் புள்ளே.. குழியானையாம்' எனச் சொல்கிறாள்.  

****


காலம் பழைய பெருமைகளை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு வேண்டுமானால் நம் வீட்டுப்  பெருமை பெரிதாக இருக்கலாம். ஒருகாலத்தில் பெரிய பெருமைகளாக இருந்த எல்லாம் ஒருநாள் மறைந்து விடும். புதிய காலத்துக்கு ஏற்றவாறு நாம் தான் மாற வேண்டும். குஞ்ஞுதாச்சும்மாவுக்கு ஆனைப் பெருமை, வட்டனடிமைக்கு ஊரில் பெரிய தலைவர் எனப் பெருமை. அதெல்லாம் இன்று இல்லை. 

நாவலில் ஓரிடத்தில் 'பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை' என்று வரும். இருக்கும் பணத்தை பெருமைக்காக தொலைத்து விட்டுப் பின்னர் வருந்துவதில் நியாயமில்லை. அதனால்தான் அகமது திருமணத்தைக்கூட எளிதாக நடத்தலாம் என்கிறான். திருமணத்துக்கு ஏக செலவு செய்து கடன் பட்டவர்கள் ஏராளம். 

நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப் 

Wednesday, June 2, 2021

நாலுகெட்டு - எம்.டி. வாசுதேவன் நாயர்

பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது. 

சகோதரன் சகோதரிகளுடன் அந்த வீட்டில் பிறந்தவள் பாருக்குட்டி. எங்கேயும் போகாமல் பொத்தி பொத்தி வளர்ந்த அவள், கோந்துன்னி நாயருடன் காதல் கொள்கிறாள். 'எனக்கு நாலுகெட்டு வீடோ, பெரிய நிலமோ இல்லை. ஆனால் உன்னை காப்பாத்துவேன். உனக்கு நம்பிக்கை இருக்கா?' எனக் கேட்க பாருக்குட்டியும் நம்புகிறேன் எனச் சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறாள். ஒரே ஊர் என்றாலும்  திருமணத்துக்குப் பின்னர் பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லை பாருக்குட்டிக்கு.  வடக்கு வீீட்டில் உள்ளவர்கள், பாருக்குட்டிக்கு புலை(இறந்து விட்டவளாக கருதி செய்யும் சடங்கு) செய்து விடுகிறார்கள். 

சிறு நிலமும், ஒரு வீடும் உள்ள கோந்துன்னியின் மனையில் குடும்பம் நடக்கிறது. பின்னர் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அப்புண்ணி என்று பெயர் வைக்கிறார்கள். அப்புண்ணி கைக்குழந்தையாக இருக்கும்போது கோந்துன்னி நாயர் இறந்துவிடுகிறார். அவரின் கூட்டாளியான செய்தாலி, நாயருக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஊருக்குள் பேச்சிருக்கிறது. ஆனால் செய்தாலியை காவல்துறை எதுவும் செய்வதில்லை.

பாருக்குட்டி தனியாக மகனை வளர்த்து வருகிறாள். இன்னொரு இல்லத்தில் வேலைக்காரியாக சென்று, கொண்டு வரும் சொற்ப பணத்தில் வாழக்கை நகர்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கும் முத்தாச்சி பாட்டி அப்புண்ணிக்கு பழைய கதை எல்லாம் சொல்லுகிறாள். 'கீழ விட்டால் எறும்பு கடிக்கும், மேலே விட்டால் பேன் கடிக்கும்னு வளர்ந்தவ பாருக்குட்டி. இப்போ அவ வேலைக்காரியாக வேலைக்கு போறா. இதுவும் ஒரு யோகம்தான். உனக்கு நெறைய சொந்தம் உண்டு'  என்று சொல்கிறாள் முத்தாச்சி பாட்டி.

ஒருநாள் வடக்கு நாலுக்கட்டு வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறாள் பாட்டி. அன்று அங்கே நாக பூஜை நடக்கிறது. இரவு முழுவதும் பூஜை நடந்ததால் அப்புண்ணி அங்கேயே தூங்கி விடுகிறான். காலையில் அவன் அங்கே இருப்பதை அறிந்த பாருக்குட்டியின் அம்மாவான அம்மும்மா பாட்டி அவனை கொஞ்சுகிறாள். அங்கே இருப்பவர்களுக்கு, பெரிய மாமா வந்தால் திட்டுவார் என பாட்டியிடம் சொல்கிறார்கள். சொன்னவாறே அவர், அப்புண்ணியை திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

எந்த ஆணின் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காத பாருக்குட்டி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறாள். அப்புண்ணி மேல் படிப்புக்காக வேறு பள்ளி மாற வேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் சங்கரன் நாயரை நாடுகிறாள். சங்கரன் நாயரை அவளுக்கு முன்பே தெரியும் என்றாலும் தயங்கி தயங்கியே அவரிடம் சொல்லுகிறாள். எப்படியோ இருக்க வேண்டிய பெண்மணி தன்னிடம் உதவி கேட்டதும், அதை நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்கிறார். பின்னர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலி அமைக்கவும் உதவுகிறார். பாருக்குட்டியும், நாயரும் பேசிக்கொள்வதை ஊர் திரித்துப் பேசுகிறது . சங்கரன் நாயரும் ஒண்டிக்கட்டையாக இருப்பதே அதற்கு காரணம். அப்புண்ணிக்கு ஊரில் பேசிக்கொள்வது தெரியவர, அவனுக்கு அம்மா மேலும் சங்கரன் நாயர் மேலும் கோபம் வருகிறது. ஒருநாள் அவன் அம்மாவிடம் 'உனக்கு சங்கரன் நாயர் இருக்கிறார் ' எனச் சொல்லிவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

வீட்டை விட்டு வெளியேறிய அப்புண்ணி, தன் அப்பாவைக் கொன்றதாக சொல்லப்படும் செய்தாலியை சந்திக்கிறான். செய்தாலி 'நாயர் என்கூட வரணும், இல்ல நாலுகட்டு வீட்டுக்குப் போகணும்' எனச் சொல்கிறான். அங்கே யாரும் தன்னை மதிப்பதில்லை, போனால் வெளியே அடித்து அனுப்பி விடுவார்கள் எனச் சொல்கிறான் அப்புண்ணி. 'அந்த வீட்டில் உனக்கும் பங்கு உண்டு, சொத்துக்களில் நீயும் ஒரு வாரிசு, அதனால் உனக்கு உரிமை உண்டு' என்று செய்தாலி சொல்லி அவனை நாலுகெட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே போனதும் அம்மும்மா பாட்டி மகிழ்ந்தாலும், பெரிய மாமா அவனை அடிக்க வருகிறார். பாருக்குட்டியின் சகோதரனான குட்டன் மாமா 'அவன் மேல் கை படக்கூடாது. அவனுக்கும் உரிமை உண்டு' எனச் சொல்ல, பெரிய மாமா அவனையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியே போகிறார். பெரிய அளவில் அவனுக்கு அங்கே வரவேற்பில்லை என்றாலும், அவன் ஒரு ஓரமாக அங்கே தங்கிக்கொள்ள முடியும். இருப்பதை உண்டு அப்படியே பள்ளிக்கும் சென்று வருகிறான். 

அப்புண்ணி வடக்கு வீட்டுக்குப் போனதும், பாருக்குட்டி தனியாக வசித்து வருகிறாள். ஒருநாள் கடும் மழைவெள்ளம். பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும் வெளியேறுகிறார்கள். பாருக்குட்டியைக் கூப்பிட அவள் போக மறுத்துவிடுகிறாள். மழை வெள்ளம் ஏறி வருகிறது. வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க கதவைத் திறந்தால் அங்கே சங்கரன் நாயர் தோணியுடன் நின்றுகொண்டிருக்கிறார். 'வாங்க போயிரலாம்' எனக் கூப்பிட, தயக்கத்துடன் தோணியில் ஏறி மயங்கி விழுகிறாள் பாருக்குட்டி. கொஞ்ச நேரம் கழித்து விழித்து 'நாம எங்க போறோம்' என நாயரிடம் கேட்க 'தண்ணி ஏறாத மேட்டுக்கு' எனச் சொல்கிறார். 

வடக்கு வீட்டில் இப்பொழுது நிலைமை சரியில்லை. யாரிடமும் காசு இல்லை. அப்புண்ணிக்கு பள்ளியில் உதவித் தொகை கிடைக்கிறது. அதில் பள்ளியின் கல்வித் தொகை போக மீதியை பாட்டியிடம் கொடுத்து வைக்கிறான். பாட்டியோ தன் மகனான குட்டனிடம் கொடுத்து விடுகிறாள். வடக்கு வீட்டில் விளையும் எல்லாச் செல்வமும் பெரிய மாமாவின் இல்லமான பூந்தோட்டத்துக்கு போவதாக சண்டை வருகிறது. சொத்தைப் பிரிக்க வேண்டும் என குட்டன் முடிவுக்கு வருகிறார். பெரிய மாமா அதெல்லாம் முடியாது என முதலில் தெரிவித்தாலும் பின்னர் சரி என்கிறார். வக்கீல்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

அப்புண்ணியின் படிப்பும் முடிகிறது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண். மேலே படிக்க வசதியில்லை என தன் ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு, டீ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போகிறான். அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவது செய்தாலிகுட்டி. அவன் அப்பாவை கொன்றதாக சொல்லும் அதே செய்தாலி தான் அவனுக்கு உதவுகிறார். பாவ மன்னிப்பு போல அவனுக்கு உதவி செய்கிறார். அந்த வேலையில் அவனுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டன. அவன் ஊருக்கே திரும்பிப் போகவில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. 

ஒருநாள் அவன் தன் சொந்த ஊருக்குப் போக முடிவு செய்கிறான். அப்பாவியான மீனாட்சி பெரியம்மா வீட்டில் தங்குகிறான். அவனிடம் பணம் இருப்பதை அறிந்துகொண்டு, உறவு கொண்டாட வருபவர்களை அவன் கண்டுகொள்வதில்லை. பாகம் பிரித்த பின்னர் நாலுகெட்டு வீடு இப்பொழுது பெரிய மாமாவுக்கு சொந்தம். அவருக்கு அந்த வீட்டின் மேல் கொஞ்சம் கடனிருக்கிறது. அப்புண்ணியிடம் அவர் பணம் கேட்க, அப்புண்ணியோ கடன் எல்லாம் தரமுடியாது வேண்டுமானால் இந்த வீட்டை நானே வாங்கிக்கொள்கிறேன் என்கிறான். முதலில் தயங்கும் அவர், பின்னர் சரி எனச் சொல்கிறார். இப்பொழுது நாலுகெட்டு வீட்டுக்கு சொந்தக்காரன் அப்புண்ணி. பாருக்குட்டியின் மகன் அப்புண்ணியின் வீடு. அப்புண்ணி, அம்மா பாருக்குட்டியையும், சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு கூட்டி வருகிறான். எத்தனையோ வருடங்கள் அந்த வீட்டில் பாருக்குட்டியின் காலடி படாமல் இருந்த அந்த பரம்பரை வீடு இப்பொழுது அவளுக்கு சொந்தம். 

இந்நாவலில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மாளு, பெரிய மாமா, பெரிய மாமாவின் பெண் அம்மிணி, முத்தாச்சி பாட்டி, செய்தாலி என பலர். அப்புண்ணிக்கு உதவும் பலர், அவனிடம் என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கும் சிலர் என நாவல் முழுதும் மனித மனங்களின் அழுக்குகளையும், தூய எண்ணங்களையும் பார்க்கலாம். அதிலும் ஒரு பெரியம்மா, தனக்கென சொத்திருந்தாலும் அங்கே போகாமல், நாலுகெட்டு வீட்டில் என்ன கிடைக்கும் என அங்கேயே தங்கியிருந்து, அவ்வப்பொழுது 'நானும் என் பிள்ளைகளும் என்ன செய்வோம்' என புலம்புகிறாள். 

மூன்று தலைமுறைகளை சுற்றி நாவல் சுழல்கிறது. அப்புண்ணிக்கு படிப்பு ஒன்றே வாழ்க்கையின் பிடிப்பாக இருக்கிறது. அவனை மீட்பதும், பின்பு அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர காரணமாக இருப்பதும் படிப்புதான். அந்த வீட்டிலேயே வளர்ந்து படிப்பு வராமல் அதே ஊரில் தங்கி இருக்கும் அவனின் பெரியம்மா பிள்ளைகள் போல அல்ல அப்புண்ணி. பழம் பெருமைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கடைசியில் தான் வாங்கிய அந்த நாலுகெட்டு வீட்டை இடித்து புதிதாக கட்டலாம் என்கிறான் அப்புண்ணி. ஆம், பழம் பெருமைகள் ஒரு வரலாறாக அப்படியே இருக்கட்டும். 

தமிழில் நாவல் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப்