Tuesday, December 26, 2023

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன். 


மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது. 


மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி. 



சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 






Thursday, November 9, 2023

பதேர் பாஞ்சாலி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவது பொருந்தும்.' என இந்நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்கிறார்



சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்நாவலை கொண்டே எடுக்கப்பட்டது. நாவலை அதன் அழகு குன்றாமல் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருப்பார் ராய். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமமே நிச்சிந்தாபுரம். ஹரிஹரனும், மனைவி சர்வஜெயா என சிறு குடும்பம். புரோகிதம் செய்வதால் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடக்கிறது. அப்பு, துர்கா என இரு பிள்ளைகள். பக்கத்து வீட்டில் தூரத்து சொந்தமான வயதான அத்தை பாட்டியும் இவர்களுடன் இருக்கிறார். 

துர்கா வீட்டிலேயே இருப்பதில்லை. கிராமத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கிறாள். கொய்யா, மாங்காய் என தோட்டங்களில் சில காய்கள் பறிக்கிறாள். ஒருகாலத்தில் இவர்களின் சொத்தாக இருந்த அந்த தோட்டத்தில் பழம் பறித்ததற்கு ஜெயாவுடன் சண்டைக்கு வருகிறார்கள் இப்போதைய உரிமையாளர். சாலையில் கிடந்த தேங்காயை பொறுக்கி கொண்டு வந்தாலும் திட்டுகிறார்கள். வறுமை வாட்டும் கொடுமையில் சர்வஜெயா இருப்பதை வைத்து குழந்தைகளுக்கு ஏதாவது செய்து தருகிறாள். 

பழைய வீடு என்பதால் மழைக் காலங்களில் ஒழுகுகிறது. குளிருக்கு போர்த்த சரியான போர்வைகள் கூட இல்லை. 

சரியான வேலை இல்லாமல் திணறும் ஹரிஹரன் நான் வேறு ஊருக்கு சென்று வருமானத்துக்கு வழி பிறக்குமா எனப் பார்க்கிறேன் என்று ஊரை விட்டு கிளம்புகிறார். சென்றவர் இரண்டு மாதங்களை கடந்தும் எந்த தகவலும் இல்லை. கொஞ்சம் பழைய பொருட்களை விற்று சர்வஜெயா சமாளிக்கிறாள்.  கிராமத்திலே மழை அடித்து பெய்கிறது. துர்காவுக்கு காய்ச்சல் வந்து படுக்கையில் இருக்கிறாள். ஒரு உப்பு பிஸ்கெட்டாவது வாங்கி கொடு என்கிறாள் துர்கா, கஞ்சிக்கே வழியில்லை பிஸ்கெட்டுக்கு நான் என்ன செய்வேன் என்கிறாள் ஜெயா. நாளாக நாளாக காய்ச்சல் அதிகமாகி துர்கா உயிர் துறக்கிறாள். எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹரிஹரனுக்கும் தகவல் சொல்ல முடிவதில்லை. 

திரும்ப வரும் ஹரிஹரனிடம் இனி இந்த ஊரில் இருக்க முடியாது, கிளம்புவோம் என சர்வஜெயா சொல்ல அவனும் சரி என்கிறான். காசி சென்று ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். ஹரிஹரன் கோவில் வேலை தவிர, மாலை வேளைகளில் புராண கதைகளை மக்களுக்குச் சொல்கிறான். கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதுவும் பொய்த்து போகிறது. ஹரிஹரன் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். ஜெயாவும் அப்புவும் வேதனையில் மூழ்கிப் போகிறார்கள். 




ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய ஆள் வேண்டும் என்பதை அறிந்து அங்கே போய்த் தங்குகிறார்கள். வேலை அதிகம் என்றாலும் இருப்பதற்கு இடம் கிடைத்ததே என்று இருக்கிறார்கள். ஒருநாள் அங்கே இருக்கும் பிள்ளைகளுடன் சண்டை வர, அந்த வீட்டுப் பெரியவர்கள் அப்புவை அடித்து விடுகிறார்கள். ஜெயா இந்த அடிமை வேலை வேண்டாம், நாம் நம் ஊருக்கே செல்வோம் என நினைக்கிறாள். அங்கே வறுமை இருந்தாலும் நிம்மதியும், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. 

அவன் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கடவுளிடம் எங்களை நிச்சிந்தாபுரத்துக்கு அனுப்பி வை என்று வேண்டுகிறான். அதற்கு கடவுள் சொல்வதாக கீழ்கண்ட வரிகள்; 
'சோனாடங்கா மைதானத்துக்கு முன்னால் இச்சாமதியைக் கடந்து, தாமரை பூக்களால் நிரம்பிய மதுக்காளி ஏரியைத் தாண்டி, வேகவதியை படகில் கடந்து மேலே செல். உன் பாதை முன்னால் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த ஊரை விட்டு அயலூரிலும், சூரியோதயத்தை விட்டுவிட்டு அஸ்தமன திசையிலும், ஞானத்தை விட்டுவிட்டு அஞ்ஞானத்திலும் உழன்று கொண்டிருக்கிறாய்' என்று தெய்வம் மகிழ்ச்சியுடன் கூறியது. 

கிராமங்கள் இயற்கையும் அழகும் நிரம்பி வழியும் இடம். ஆறுகளும் மலைகளும் பசுமையை அள்ளிக் கொடுப்பவை. ஆனால் அங்கே வாழ்வதற்கு பெரிய வருமானம் இல்லை என்றாலும், கொஞ்சமாவது தேவை. தன் கிராமத்தில் ராணி போல இருந்த சர்வஜெயா, வெளி உலகை கண்டு மலைத்துப் போகிறாள். நிச்சிந்தாபுரம் அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்க காத்திருக்கிறது.
  
தமிழில் - ஆர். ஷண்முக சுந்தரம்

Friday, October 13, 2023

தமிழகக் கோபுரக்கலை மரபு - குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார். 

கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன;  கோபுரத்தின் தோற்றம், கட்டடக் கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள கலைகள் மற்றும் கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு ஆகும். 



கோபுரம் என்ற சொல்லுக்கு பொருளைச் சொல்லி, கோவிலின் நுழைவு வாயில் கோபுரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை விளக்குகிறது இப்புத்தகம். அனலின் வடிவமாகவே கோபுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம் நிலைத்து நிற்க, சரியான இடம் தேர்வு, கற்கள் தேர்வு, அவற்றை அடுக்கிய முறை என பல காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர். 

கோபுரத்தின் பகுதிகளான நிலைக்கால் முதல் சிகரம் வரை ஒவ்வொன்றுக்கும் உரிய மரபு பெயர்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நிலைகளில் ஆரம்பித்து பின்னர் ஏழு, ஒன்பது என கட்டப்பட்ட கோபுரங்கள், கட்டிய மன்னர்கள், திருப்பணி செய்தவர்கள் என ஒவ்வொன்றையும் ஆய்ந்து மிக விரிவாக பேசுகிறது இந்நூல். மேலும் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆய்வுக்கு உதவிய புத்தகங்கள், கல்வெட்டுகள், தகவல்கள் இணைப்பாக உள்ளது.

சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் அடங்கிய கோபுரங்களில் சில வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறவேண்டும். சுதைச்  சிற்பங்களில் விரிசல் இருப்பின் சீர்செய்து வண்ணம் தீட்ட வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்யவேண்டிய இப்பணியை சிலர் திருப்பணி என்கிற பெயரால் அழிக்கவே முயல்கின்றனர். திருவில்லிப்புத்தூர் கோபுரம் திருப்பணிக்கு பின்னர் அதன் அழகை இழந்ததை நினைத்து வருந்தும் ஆசிரியர், மன்னார்குடி கோபுரம் திருப்பணி எந்த பாதிப்பும் இல்லாமல், பழைய பொலிவுடன் சிறப்பாக நடந்ததை வியக்கிறார். 

மணல் வீச்சு என்ற சுத்தப்படுத்தும் முறையில் சில கோவில்களின் கோபுரங்களில் இருந்த பழமையான ஓவியங்கள் சில மணித்துளிகளில் அழிந்து போனதைக் குறிப்பிடுகிறார். சில கோபுரங்களில் செங்கல் மட்டும் கொண்டு சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செங்கல் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட சில கோபுரங்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், அந்தக் கலையை அறிந்தவர்கள் இன்று யாருமே இல்லை என்கிறது.

சிதைந்து போன கோவில்களில் இருந்து கற்களை எடுத்து எடுக்கப்பட்ட கோபுரங்கள் பற்றியும், திருப்பணிகள் செய்த நபர்கள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. மொட்டை கோபுரமாக இருந்து பின்னர் கட்டப்பட்ட கோபுரங்களையும் இந்நூலில் காணலாம். 

கோபுரங்கள், அவை எடுக்கப்பட்ட காலம், மன்னர்கள்  மற்றும் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு களஞ்சியமாக விளங்கும். 


வெளியீடு:
அகரம்
எண் .1, நிர்மலா நகர் 
தஞ்சாவூர் - 613 007



Monday, October 2, 2023

படையல் - ஜெயமோகன்

மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக  வரி என மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். இந்தத் தொகுப்பில் ஜெயமோகன் ஆறு கதைகளை எழுதியுள்ளார். 


கந்தர்வன் 



மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அரசோ வரியை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. விளைச்சல் இல்லாத காலத்தில் வரியை எப்படி கொடுப்பது எனத் தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். மன்னனிடம் சொல்லலாம் என்றால் சுத்தியிருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் மன்னன் அருகில் நெருங்க விடவே இல்லை. ஓலை கொண்டு செல்லும் நபர்களைத் தண்டித்தும், சில ஆட்களை கொன்றும் விடுகிறார்கள். 

மிகுந்த பக்தியுள்ள நாயக்க மன்னன் நல்லவன் தான். குறைகளை சொன்னால் வரியைக் குறைப்பான். ஆனால் அவனைச் சந்திக்க சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. எனவே ஊர்த் தலைவர்கள் சேர்ந்து மன்னன் முன்னால் யாராவது கையில் ஓலையுடன்  விழுந்து தற்கொலை செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள். பின்னர் மன்னன் நிச்சயம் காது கொடுத்து கேட்பான். 

தாய்தந்தை இல்லாமல் கோவிலில் வளர்ந்து வரும் அணைஞ்ச பெருமாளிடம் சொல்கிறார்கள். நல்ல உடற்கட்டுடனும், தைரியமும் உள்ள அவன் சரியென்கிறான். மன்னன் கோவிலுக்கு வரும்போது கோபுரத்தில் இருந்து விழ வேண்டும் என்பது திட்டம். வரியே கட்டாத  அவன் விழுந்தால் பிரச்சினை வருமென்பதால் அவனை அந்த ஊரில் அரிசிக்கடை வைத்திருக்கும் முருகப்பன் எனச் சொல்லிவிடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள். 

முருகப்பன் தன் மனைவி வள்ளியம்மையை திட்டிக்கொண்டே இருக்கிறான். கோவிலில் இருக்கும் அணைஞ்ச பெருமாளை அவள் நினைத்துக்கொள்வதாக எண்ணித் திட்டுகிறான். நல்ல திடகாத்திரமாக இருக்கும் அணைஞ்ச பெருமாளை ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் தான் கண்கொண்டு பார்க்கிறார்கள்.  திரும்ப திரும்ப அவன் பெருமாளுடன் தொடர்பு படுத்தி பேசுவதால், "அதனால் என்ன" என்று கேட்கும் வள்ளியம்மையை அவன் அடித்தும் விடுகிறான். 

திட்டமிட்டபடி அணைஞ்ச பெருமாள் கோபுரத்தில் இருந்து மன்னன் முன் வீழ்ந்து உயிர் துறக்கிறான். ஒரு கந்தர்வன் பறந்து வருவது போல கீழே வந்து மரணிக்கிறான். மன்னன்  அவன் கையில் இருந்த ஓலையை வாங்கிப் பார்த்து, இவனுக்கு இறுதி மரியாதையை சிறப்பாகச் செய்யுங்கள், மற்ற விஷயங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று சொல்லிவிட்டு திரும்பிச் செல்கிறான். அவன் வீர மரணம் அடைந்ததால் கல் நட்டு வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள் அவனின் கூட்டத்தார். இறந்தது முருகப்பன் என்பதால் அவன் மனைவி வள்ளியம்மையை கூட்டி வருகிறார்கள். கதறிக்கொண்டே வரும் அவள், அணைஞ்ச பெருமாள் உடலைப் பார்த்ததும் திகைத்து நிற்கிறாள். உடலுக்கு சிதை மூட்டியதும் அவளும் உடன் சிதையில் குதித்து அவனைத் தழுவிக்கொண்டு இறக்கிறாள். முருகப்பன் ஊரைச் சேர்ந்தவர்கள் திகைத்து நிற்கிறார்கள். 

கோபுரத்தில் இருந்து விழுந்தவன் எறிமாடனாகவும், அவனுடன் சிதையேறிய மனைவி உடன் நின்ற நங்கையாகவும் கோவில் கொண்டு மக்களால் வணங்கப்படுகிறார்கள். 


யட்சன் 

கந்தர்வன் கதையின் தொடர்ச்சியாக யட்சன் கதை. இப்பொழுது இறந்தது முருகப்பன். ஆனால் அவன் உயிரோடு இருக்கிறான். மனைவி சிதையேறிவிட்டாள் என்பதை அறிந்து திகைக்கிறான். அவன் ஊரைச் சேர்ந்த சிலர், 'நீ உயிரோடு இருப்பதால்  கோபுரத்தில் இருந்து குதிக்கச் சொன்னவர்களுக்கு பிரச்சினை வரும். எனவே அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள் ' எனச் சொல்லவும் அவன் பயப்பட்டு ஊரை விட்டு போய்விடுகிறான். 

முருகப்பன் போன இடத்தில் நன்கு சம்பாதிக்கிறான். தாசிப் பெண்டிருக்கு எல்லாப் பணத்தையும் செலவழிக்கிறான். பெண்டிர் தொடர்பால் தொழு நோயாளி ஆகி, பின்னர் யாரும் அவனை அண்டவிடுவதில்லை. முருகப்பன் பல வருடங்கள் கழித்து தன் மனைவி கோவில் கொண்டுள்ள ஊருக்கு வருகிறான். உடல் மெலிந்து ஆளே மாறிப் போயிருப்பதால் அங்கே அவனை யாருக்கும் தெரியவில்லை. எறிமாடனின் கோவிலில் அமர்ந்து கொண்டு 'கட்டியவன் நான் இருக்க. கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கி உங்களுக்கு தெய்வமா?' என்று வணங்க வருபவர்களைத் திட்டுகிறான். கோவில் கொண்டு அமர்ந்துள்ள அணைஞ்ச பெருமாளையும் வள்ளியம்மையையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான். 

ஒருநாள் அவன் அங்கேயே இறந்தும் போகிறான். அவனுக்கும் அங்கே ஒரு கல்லை எதிரில் நட்டி விடுகின்றனர். எறிமாடனையும், தன் மனைவியையும் வெறித்துப் பார்த்துக்கொண்டு யட்சனாக எதிரில்  அமர்கிறான் முருகப்பன். 

எரிசிதை 

பெரிய ராணி மங்கம்மாவின் புதல்வன் இறந்துவிட, மருமகள் சின்ன முத்தம்மாள் கர்ப்பமாக இருப்பதால் அவளைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்கள். அவளோ யாரிடமும் எதுவும் பேசாமல், உணவையும் குறைத்துக் கொள்கிறாள். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்து அவள் மகிழ்வதும் இல்லை. பிள்ளை பிறந்த பின்னர் தன்னை சிதையேற்றி விடுவார்கள் என நினைத்து பயப்படுகிறாள். 

வேலைக்காரியான நாகலட்சுமியிடம் கொஞ்சம் நெருங்கி பேசுகிறாள். ராணி படும் இன்னல் கண்டு தேற்றுகிறாள். ராணியின் கருவைக் கலைக்கவும் வேலைக்காரி மூலம் முயல்கிறார்கள். நாகலட்சுமியும் சின்ன முத்தம்மாளிடம் சென்று, இந்த மருந்தைக் குடித்தால் உங்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் விடுதலை என்கிறாள். சரி நான் அப்புறம் குடிக்கிறேன் என்று வாங்கி வைக்கிறாள் ராணி. ஆனால் அந்த இரவு அவளுக்கு வரும் ஒரு கனவின் மூலம் அந்த திட்டம் முறியடிக்கப்படுகிறது. தாய்மை வெல்கிறது. 

====

இத்தொகுதியில் உள்ள மற்ற கதைகளான படையல், மங்கம்மா சாலை மற்றும் திரை ஆகிய கதைகளும் முக்கியமானவை. திரை கதையில் ராணி மீனாட்சி தாயுமானவர் மேல் கொண்ட விருப்பு பற்றி பேசுகிறது. திருச்சியை விட்டு சென்றுவிடும் அவரை திரும்ப வரவழைக்க ராணி விரும்புகிறார். அதற்கு தூதனையும் அனுப்புகிறார். அவன் மூலம் கதை சொல்லப்படுகிறது. அவர் திரும்ப வர மறுத்துவிடுகிறார். ராணி மீனாட்சி சந்தா சாகிப்பின் நயவஞ்சக படையெடுப்பால் இறக்கிறார். 

கள்வர்களும் கொலைகாரர்களும் உள்ள சாலையை ராணி மங்கம்மா எப்படி மாற்றினார் எனச் சொல்கிறது மங்கம்மா சாலை கதை. திறமை வாய்ந்த கள்வர்களை கொல்வது சுலபமில்லை என அறிந்து ராணி தன் படையுடன் சென்று எப்படி அவர்களை தன் ஆட்சியில் கீழ் கொண்டுவந்தார் என விவரிக்கிறது. 


Monday, September 11, 2023

திருடன் மணியன்பிள்ளை - ஒரு திருடனின் சுயசரிதை

களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். வழி தவறிப்போக இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இந்தத் தோல்விகளின் குமுறல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கிறார் பிள்ளை

சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள்.  ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த பிள்ளை, பசியால் வாடுகிறார். அதுவும் பதின் வயதில் இருக்கும் அவருக்கு, வீட்டில் உணவு என்பது கால் வயிறு நிறையும் அளவுக்கே கிடைக்கிறது. 

முதன் முதலில் தான் திருட்டுக்கு எப்படி வந்தேன் எனச் சொல்கிறார் பிள்ளை. சொந்தத்தில் ஒரு அத்தை முறையுள்ள பெண், பக்கத்து வீட்டு குழந்தையின் தங்கச் சங்கிலியை திருடி வரச் சொல்கிறார். மணியன் பிள்ளை அந்தக் குழந்தையிடம் இருந்து சங்கிலியை கொண்டு வந்து தர, அத்தை பயந்து அதை வாங்க மறுக்கிறாள். பின்னர் சிறு சிறு திருட்டுகள், கொஞ்ச நாட்கள் சிறை வாசம் எனப் போகிறது. 





ஒவ்வொரு முறை சிறைக்குச் செல்லும்போதும் அவரை ஜாமீனில் விடுவிக்க அவரின் அம்மா வருகிறார். ஆனால் மணியன்பிள்ளை தரும் எந்த பணத்தையும் அவரின் அம்மா வாங்குவதில்லை. அவரின் சகோதரிகளும் அவ்வாறே அதைத் தொடுவதில்லை. சில சமயங்களில் வழக்கறிஞர் இல்லாமல் அவரே வாதாடுகிறார். நீதிபதி ஒரு முறை ஏன் வக்கீல் இல்லை என்று கேட்க, "நீதிபதி அவர்களே, நான் பணம் கொடுத்து அமர்த்தும் ஒரு வக்கீலைக் காட்டிலும், நான் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு எனக்குத்தானே அதிகம் " என்கிறார். பெரும்பாலான வழக்குகளில் மணியன் பிள்ளையே வாதாடி இருக்கிறார். 

திருடிய பின்னர் வரும் நகைகளை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வாங்க மாட்டார்கள். அதற்கெனவே இருக்கும் ஆட்களிடம் சென்றால் அவர்கள் தரும் சொற்ப பணத்தை வாங்கி குடிப்பது, சிலருக்கு உதவுவது எனச் செலவழிக்கிறார். நண்பர்கள் யாரேனும் உதவி கேட்டால் மறுக்காமல் செய்திருக்கிறார். சில காவல் அதிகாரிகளும், உறவினர்களும் பிள்ளையிடம் வீண் வம்புக்கு வர, அவர்களை காத்திருந்து பழி வாங்குகிறார் பிள்ளை. சட்டத்துக்கும், போலீசுக்கும் பணிந்தே போகிறார் பிள்ளை. அவரை நீதிமன்றம் கூட்டிப் போகும்பொழுது கைவிலங்கு போடாமலே அழைத்துச் செல்கிறார்கள். பிள்ளை தப்பி போக மாட்டான் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையே பின்னாளில் அவர் காவல் நிலையத்தில் பணி புரியவும் வைக்கிறது. 

திருடன் என்று தெரிவிக்காமல் ஒரு பெண்ணை கட்டி வைக்கிறார்கள். பின்னர் தெரிந்து அந்த பந்தம் முறிந்து போகிறது. இன்னொரு பெண்ணுடனான காதலும் அவளின் அம்மாவால் அழிந்து போகிறது. பின்னர் மெகருன்னிஸாவை மணக்கிறார். அவளையும் விட்டுவிட்டு வரும் அவர், சில மாதங்கள் கழித்து ஒருமுறை அவள் மாசமாக இருப்பதை பார்த்து பின்னர் அவளுடனே இருக்கிறார். மகன் பிறக்கிறான்.  இந்த திருட்டு வாழ்க்கை வேண்டாம் என்று மெகருன்னிஸா சொல்லிக்கொண்டே இருக்கிறாள். பிள்ளை கேட்பதாய்  இல்லை. 

கேரளாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டில் புகுந்து கிடைத்த நகைகளுடன் மைசூர் வருகிறார்கள். அங்கே அவர் சலீமாக மாறுகிறார். சிறு டீக்கடை வியாபாரத்தில் துவங்கும் பிள்ளைக்கு அங்கே நன்கு படித்த யூசுபின் துணை கிடைக்கிறது. அவன் துணையுடன் புகையிலை தோட்டங்களில் முதலீடு செய்கிறார். முதலீட்டுக்கு நகைகள் உண்டு. தோட்டத்தில் வேலை செய்யும் பணியாட்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதால், இவரை அங்கே கொண்டாடுகிறார்கள். வருவாய் பெருகுகிறது. கூடவே பெரிய ஆட்களின் தொடர்பும். சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வர, அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என சான்றிதழும் பெறுகிறார். 

இடையில் ஒருநாள் மைசூர் வந்து சென்ற மச்சினன் மூலம் கேரளா போலீஸ் அவரைக் கண்டடைகிறார்கள். ஒரே நாளில் கட்டிய கோட்டை சரிகிறது. அவர் அங்கே சம்பாதித்த சொத்துக்கள், நகைகள் என அத்தனையும் அரசுக்கு செல்கிறது. நீதிமன்ற தீர்ப்பில் மைசூரில் சம்பாதித்த சொத்துக்களில் அவரின் உழைப்பும் உண்டு என்பதால் அவருக்கும் கணிசமான தொகையை பெற உரிமை உண்டு என்கிறது. ஆனால் இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவருக்கு கடைசி வர அந்தப் பணம் கிடைப்பதில்லை. 

இவர் சிறைக்குச் சென்றுவிட மனைவி வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்கிறார். இடையில் ஒரு முறை வந்த மெகருன்னிசா பிள்ளையை சந்திக்கிறார். திரும்பவும் வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் இயற்கை எய்துகிறார். மனைவி இறந்ததில் மணியன் பிள்ளை கலங்கிப் போகிறார். 

ஒருமுறை காவல் துறையிடம் அகப்பட்டால் பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவரின் கைரேகை பதித்திருந்த குற்றங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. வழக்குகளில் தண்டனை முடிந்து  வெளியே வந்தாலும் எங்கேயோ நடந்து போய்க் கொண்டிருந்தால் கூட 'திருட முயற்சி' என்று காவலர்கள் சந்தேகப்படுகிறார்கள். 

வழக்குகளில் இருந்து வெளியே வந்த பின்னர் மகன் அவரைப் பார்த்துக்கொள்கிறான். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. ஏதாவது தொழில் செய்யலாம் என்று அவர் முனைய ஒரு வங்கியில் கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தை வாங்கிய இரவில் குடித்து விட்டு எங்கேயோ கிடக்கிறார். அடுத்த நாள் காலையில் போதை தெளிந்து பார்த்தால் கால் சட்டையில் வைத்திருந்த பணம் திருடு போய்விட்டது. ஒரு திருடனிடம் இருந்தே பணம் திருடப்பட்டதை நினைத்து பிள்ளை வருந்துகிறார்.  

மகனிடம் இருந்து பணம் திருடு போன நாளில் பிள்ளை உண்மையிலேயே விதியை நினைத்து அழுகிறார். தொழிலுக்கென மகன் சென்னைக்கு கொண்டு போன 50,000 ரூபாய் திருடு போகிறது. மருமகளின் நகைகள் உட்பட எல்லாத்தையும் விற்று அந்தத் தொகையை அடைத்தாலும், அதற்கு பின்னர் முன்னேறவே முடியாமல் மகன் திணறுகிறான். நான் செய்த பாவங்களுக்கு கடவுள் எனக்கு தண்டனை வேண்டும் என்றாலும் தரட்டும், மகனை ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று புலம்புகிறார். தனக்கு மட்டும் வலி என்றால் கண்டுகொள்ள மாட்டார், ஆனால் உயிருக்கு மேலான மகனுக்கு நேர்ந்தால் தான் பிள்ளை வருந்துவான் என கடவுள் நினைத்திருக்க கூடும். 

இன்னும் சில வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக கூறும் பிள்ளை, களவு வாழ்க்கை பெரும் கேடாய் முடியக் கூடியது என்கிறார். பிள்ளை சொல்கிறார், "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும்." .

==

திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துகோபன்

தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல் யூசுஃ ப் 

2018-ஆம் ஆண்டின் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற நூல். 

Monday, September 4, 2023

தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

சிறு குடும்பம் சந்திக்கும் சிக்கல்களில் பெரும்பாலும் ஊர் என்ன சொல்லும், பங்காளிகள் என்ன சொல்லுவார்கள் என்று செய்யும் செலவுகள்தான். பழக்க வழக்கம், பாரம்பரியம் என்கிற பெயரில் ஒவ்வொரு விழாவுக்கும் செய்யும் செலவுக்கு பெரிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். இன்று இலைமறை, காய்மறையாக இருக்கும் வரதட்சணை அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய செலவை இழுத்து வைத்துள்ளது. 

தலைமுறைகள் நாவலில் திரவியத்துக்கு, இரண்டு அக்கா மற்றும் ஒரு தங்கை. ஆக மூன்று பெண்கள். பெண்கள் சமைந்த கொஞ்ச நாளிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ள குடும்பம். பெரிய அக்கா உண்ணாமலையை கட்டி கொடுத்ததிலேயே செலவு அதிகமாகி விட, அடுத்த பெண் நாகம்மைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார் அப்பா நாகருப்பிள்ளை. குடும்பத்துக்கு அவரின் ஒரு வருமானம் மட்டுமே, அதுவும் விவசாயத்தில் வருவது. 

சொந்த ஊரிலேயே நாகம்மைக்கு ஒரு வரன் வருகிறது, மாப்பிள்ளையின் பெயர் செவந்த பெருமாள். கொஞ்சம் குறைவாக கொடுத்தாலும் போதும் என்று முதலில் சொல்லும் மாப்பிள்ளையின் அம்மா, பின்னர் ஒவ்வொன்றாக வரதட்சிணை கேட்கிறாள். கடனை வாங்கி அவர்கள் கேட்டவாறே கல்யாணம் செய்து வைக்கிறார்கள். செவந்த பெருமாள் வசதியான குடும்பம் என்பதால், நாளைக்குப் பின்னர் நாகம்மைக்கு எந்த குறையும் வராது என திரவியத்தின் குடும்பம் நினைக்கிறது. 





ஆனால், நாலைந்து மாதத்திலேயே நாகம்மையை கொண்டு வந்து மாப்பிள்ளை விட்டுவிடுகிறார். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின்  பஞ்சாயத்து அவனிடம் பேசிப்பார்க்கிறது. 'அவள் ஒரு ரெண்டும் கெட்ட, பெண்ணே இல்லை ' என்று பழி சுமத்தி விடுகிறான் செவந்த பெருமாள். எவ்வவளவோ பேசிப் பார்த்தும் அவன் அதையே சொல்லுகிறான். நாகம்மை அம்மா வீட்டிலேயே இருக்கிறாள். இந்த கவலையிலேயே குடும்பம் வேதனை அடைகிறது. திரவியமும், தங்கை சாலமும் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். 

நாகம்மையை விலக்கி வைத்தவன், ஊரில் யாருக்கும் தெரியாமல் அதே ஊரில் உள்ள வடிவுவைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊர் பஞ்சாயத்து அதை ஒன்றும் கேட்பதில்லை. நாகருப்பிள்ளை கோபத்தில்  தன் பெண்ணை கூட்டிக்கொண்டு போய் செவந்த பெருமாள் வீட்டில் விட்டுவிட்டு வருகிறார். ஆனால் அங்கே எதுவும் உண்ணாமல், அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் நாகம்மையை திரும்பவும் கொண்டுவந்து திரவியத்தின் வீட்டில் விட்டு விடுகிறார்கள். 

பெரிய அக்கா உண்ணாமலைக்கு குழந்தை பிறக்கிறது. உண்ணாமலையின் கணவர் சிறிய வருமானம் என்றாலும் மனைவியையும், குழந்தையையும் பாசமாக வைத்திருப்பதைப் பார்த்து, செவந்த பெருமாளின் மீது திரவியத்துக்கு கோபம் வருகிறது. குழந்தை பிறப்பு செலவுகள், அப்புறம் தங்கை விசாலமும் பெரிய பெண் ஆகிறாள். அதற்கு செலவு என ஏகப்பட்ட செலவுகள். 

திரவியம் படித்து முடித்து இப்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்திருக்கிறான். நாகம்மை அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்து விடலாம் என்று நினைக்கிறான். அக்காவுக்கு இரண்டாம் கல்யாணம் செய்தால், தங்கை சாலத்துக்கு வரன் அமையாமல் போய் விடுமோ என பயந்தவன் முதலில் தங்கைக்கு கல்யாணம் செய்து விட்டால் பின்னால் பிரச்சினை வராது என முடிவுக்கு வந்து, சாலத்துக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு வரதட்சிணை கொடுக்க பணம் இல்லாததால், குடியிருக்கும் வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைக்கிறார்கள். 

நாகம்மை கல்யாணம் வரைக்கும் அந்த வீட்டில் இருந்து விட்டு பின்னர் தான் வேலைக்கு செல்லும் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்து தங்கிக்கொள்ளலாம் என்று அப்பாவிடம் சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். திரவியத்துக்கு குற்றாலம் என்னும் நண்பன் அந்த ஊரில் உண்டு. தாய் இல்லாமல், நோயாளியான தகப்பனை குற்றாலம் தான் கவனித்துக்கொள்கிறான். யாருக்கும் பயப்படாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் அவன் இருப்பதால் ஊரில் அவனைக் கண்டாலே யாருக்கும் ஆகாது. நாகம்மை விசயத்தில் இரண்டாம் திருமணம் செய்த செவந்த பெருமாளை கேட்காத பஞ்சாயத்து இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்று பேசுகிறான். கொஞ்சம் திடகாத்திரம் உள்ளவனாக இருப்பதால் அவனை யாரும் எதிர்ப்பதில்லை. நாகம்மையைத் திருமணம் செய்துகொள்ள குற்றாலம் சம்மதிக்கிறான். அவனுக்கு முன்பிருந்தே அவள் மேல் ஒரு விருப்பம் உண்டு.

திரவியம் செவந்த பெருமாளிடம் சென்று, தன் அக்காவுக்கு குற்றாலத்தை திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்கிறான். இனிமேல் உங்களுக்கு தான் தலைகுனிவு, கட்டிய மனைவியை வைத்து வாழத் தெரியவில்லை என்று ஊருக்குள் பேசுவார்கள் என்று சீண்டுகிறான். நீங்கள் ஆண் பிள்ளையே இல்லை என்று கோபத்துடன் பேசிவிட்டு வந்து விடுகிறான் திரவியம். அடுத்த நாளிலிருந்து செவந்த பெருமாள் ஒருமாதிரி மனம் கலங்கி, சித்தம் திரிந்தவனாக நடந்து கொள்கிறான். 

திரவியத்தின் ஆச்சி மறைந்துவிட திருமணம் தள்ளிப்போகிறது. ஒருநாள் செவந்த பெருமாள் கிணற்றில் குதித்து விடுகிறான். சித்தம் கலங்கிய அவனை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் அவன் மனைவி வடிவு எல்லோரிடமும் கேட்டுப்பார்க்கிறாள். யாரும் உள்ளே இறங்க மறுக்கிறார்கள். அவள் ஓடிப்போய் குற்றாலத்திடம் உதவி கேட்கிறாள். அவனும் சரியென்று கிணற்றில் குதிக்கிறான். ஆனால், குற்றாலம் உள்ளே இறந்த நிலையில் இருக்க செவந்த பெருமாள் உயிருடன் மீட்கப்படுகிறான். செவந்த பெருமாளும், வடிவும் திட்டமிட்டே இதைச் செய்துள்ளார்கள். மனநிலை சரியில்லாதவனை சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. கலங்கிய மனதுடன் அந்த ஊரை விட்டு திரவியம் குடும்பம் புறப்படுகிறது. 

===

நாவலில் உண்ணாமலை ஆச்சி கதைகள் சொல்லியே குழந்தைகளை  வளர்க்கிறாள். ஆச்சியின் அண்ணன் குடும்பம் பக்கத்து வீட்டில் வசிக்கிறது. இரண்டு மூன்று மனைவிகள், அவர்களின் பிள்ளைகள் என பெரிய குடும்பம். மனைவி மக்கள் என எல்லோரும் சொத்தை பிரித்துக்கொண்டு  ஊரை விட்டுப் போன பின்னாலும் தனியே வசிக்கிறார் பெரியவர். அவர்கள் வாழ்ந்த கதைகள், பரம்பரை கதைகள் என ஆச்சி சொல்லிக்கொண்டே இருக்கிறாள். 

ஒரு குடும்பத்தின் பழக்க வழக்கங்கள், குடிப் பெருமைகள், சடங்குகள் என விவரிக்கும் தலைமுறைகள் முக்கியமான நாவல்.