Showing posts with label பஷீர். Show all posts
Showing posts with label பஷீர். Show all posts

Thursday, September 30, 2021

பாத்துமாவின் ஆடு - பஷீர்

இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. 

இவர் "எங்க உப்பப்பாவுக்கொரு ஆன இருந்தது" என்கிறார்.

"அத தின்னுட்டீங்களா"

"இல்லை, அது அங்கங்கே சுற்றி அலைகிறது"

"பிடிக்க முடியுமா"

பஷீர் சொல்கிறார்: "தெரியவில்லை".

இன்னொரு பைத்தியம் "பட்டாளத்தில் இருந்த நான் நான்கு வருடம் முன் செத்துப் போய்விட்டேன். திரும்பவும் இந்த பூமிக்கு வந்துள்ளேன்" என்கிறது.

'இந்நாவல் ஒரு தமாஷ் கதை. ஆனால் எழுதும்பொழுது மனதுக்குள் வெந்து சாம்பலாகி கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை.' என்கிறார் பஷீர். 

நாவல் எழுதி முடித்து முன்னுரை எழுதுவதைத் தள்ளிப்போட்டு ஐந்து வருடங்கள் கழித்து நாவல் வெளியாகிறது. பத்து பக்கங்களுக்கும் மேல் நீண்ட முன்னுரை. 


******

pathumavin aadu basheer

நாவலில் பாத்திமாவின் ஆடு கதையைச் சொல்பவர் எழுத்தாளர். திருமணம் ஆகாதவர். குடும்பத்தின் மூத்தவர். எழுத்தாளராக இருப்பதால் அங்கங்கே சுற்றிக்கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கொள்ளலாம் என திரும்பி வருகிறார். முன்பு அவருடைய சொந்த ஊரில் குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டுக்கு எதிரே உள்ள சின்ன வீட்டில் இருந்தார். குடும்பத்தின் சண்டை சச்சரவுகள் இன்றி தனியாக அங்கே இருந்தார். எழுத்தாளரான இவர், ஊரில் இல்லாததால் அவரின் தம்பி அவ்வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். எனவே வேறு வழியின்றி அவர் குடும்பத்துடன் தங்க நேர்கிறது. 

அப்துல், ஹனீபா, அபூ என மூன்று இளைய சகோதரர்களும், பாத்துமா, ஆனும்மா என இரண்டு சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். இதில் பாத்துமா மட்டும் கொஞ்சம் தள்ளி வசிக்க, மற்ற எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அபூ தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அவர்களின் குழந்தைகள் வீடு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். குறும்புகள் செய்கிறார்கள். எல்லோருக்கும் பெரியவர் என்பதால் கூடப் பிறந்தவர்களுக்கு 'பெரிய காக்கா', அதாவது பெரிய அண்ணா. குழந்தைகளுக்கு 'மூத்தாப்பா'.

பாத்துமா ஒரு ஆட்டை வளர்த்து வருகிறாள். தினமும் காலையில் பாத்துமா தன் அம்மா வீட்டுக்கு வருவாள். அவளோடு சேர்ந்து பாத்துமாவின் ஆடும் வருகிறது. வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வலம் வருகிறது. எழுத்தாளரான பெரிய காக்காவின் புத்தகங்களைத் தின்கிறது. அவர் மேசையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை தின்கிறது. இத்தனை நாட்களாக ஊரில் இல்லாததால் அவருக்கு இந்த ஆட்டைப் பற்றி தெரியவில்லை. அவர் தன் சகோதரியிடம்  ஆட்டை கட்டிப்போடச் சொல்கிறார். அதற்கு பாத்துமா சொல்கிறாள்; 'கட்டிப்போட்டா அதுக்கு பிடிக்காது பெரிய காக்கா'.

பெரிய காக்காவிடம் எல்லோரும் தனக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அவரின் உம்மா கூட அவ்வப்பொழுது பணம் கேட்கிறார். நேற்று குடுத்தேனே என்று கேட்டால் இன்னொரு மகனிடம் கொடுத்து விட்டதாக சொல்கிறார் அம்மா. 'உனக்கு என்ன ஒண்டிக்கட்டை. முக்கால் ஜாண் வயிறு.. உனக்கு எதற்கு பணம்' என்கிறாள் உம்மா. 

ஒரு சகோதரி கம்மல் கேட்க, இன்னோர் சகோதரி வீட்டுப் பாத்திரங்கள் கேட்கிறார். யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என அவர்களே சொல்லிச் செல்கிறார்கள். ஆனாலும் ஒருத்தர் பொருள் கேட்டது மற்றவருக்கும் தெரிய வருகிறது. எழுத்தாளருக்கு மணியார்டர் வரும் முன்னரே, அந்தப் பணத்துக்கு வீட்டில் உள்ளோர் திட்டம் போடுகிறார்கள்.

பெரிய காக்கா தன் இன்னொரு சகோதரனிடம் குடும்பச் செலவுக்கு பணம் கேட்டால், எப்பொழுதும் ' நான் பட்டாளத்துக்கே போறேன்.' என்று சொல்கிறான். சின்ன வயதில் அவர்கள் செய்த சேட்டைகளையும், பொய்களையும் நினைவு கூர்கிறார். 

வீட்டில் குழந்தைகள் கூட அவரிடமே காசு கேட்கிறார்கள். ஒருநாள் கால் சட்டை பையில் ஆப்பத்தை போட்டு வைத்து தின்கிறான் சிறுவன். பாத்துமாவின் ஆடு அதை இழுத்து பாக்கெட்டோடு தின்று விடுகிறது. அதில் அடுத்த நாள் பென்சில் வாங்க வைத்திருந்த காசும் உண்டு. ஆடு அதையும் முழுங்கி விடுகிறது.  பின்னர் பெரிய காக்காவே அவனுக்கு காசு தருகிறார்.

வீட்டில் இரண்டு ஆடுகள் இருப்பதை கொஞ்ச நாட்கள் கழித்தே பெரிய காக்கா உணர்கிறார். ஒன்று பாத்துமாவின் சினையாக இருக்கும் ஆடு, இனொன்று வீட்டில் ஆனும்மா வளர்க்கும் ஆடு. பாத்துமா தான் அந்த ஆட்டை தன் சகோதரியான ஆனும்மாவுக்கு தந்தாள். ஒரு வாக்குவாதத்தில், 'இந்த உலகத்தில் தங்கச்சிக்கு யாரு ஆடு குடுத்திருக்கா. நான் குடுத்தேனே, நீ இப்படி பேசலாமா?' என பாத்துமா கேட்க, 'அவங்கவங்க யானையே தரங்களாம். இது சின்ன ஆடுதானே' என்கிறாள் ஆனும்மா.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய உணவு வேளையில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரிசி சோற்றை தந்துவிட்டு மரவள்ளிக் கிழங்கு மாவால் செய்த புட்டை உண்கிறார்கள். இதைக் கண்ட பெரிய காக்கா, ஒருநாள் இந்த வறுமையை போக்க வேண்டும் என நினைக்கிறார். 

பாத்துமா பெரிய காக்காவை சாப்பிட வீட்டுக்கு அழைக்கிறாள். மற்ற சகோதரர்களை விட்டுவிடுகிறாள். அவர்களை எல்லாம் அழைத்து விருந்து வைக்க அவளுக்கு மனம் உண்டு. ஆனால் வசதி இல்லை. இதை மற்றவர்கள் கேட்க, ஒருநாள் உங்களுக்கும் விருந்து வைப்பேன் என்று அவர்களிடம் சொல்கிறாள். இப்பொழுது சினையாக இருக்கும் ஆடு குட்டி போட்டு பால் கறந்தால், பாலை விற்று வரும் பணத்தில், நிறைய செலவுகளை சேர்த்துக்கொண்டே செல்கிறாள் பாத்துமா. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள். ஆனால் இழுபறி வாழ்க்கை. 

******

'குடும்பம் ஒரு பாற்கடல்' என்று லா.ச.ரா கதையில் வருவது போல இந்தக் கதையிலும் பெரிய குடும்பம். அள்ள அள்ள அமுது வரும், போலவே விசமும் வரும். 

பாத்துமாவின் ஆடு குட்டி போட்ட பின்னர், அதன் பாலை அவளின் உம்மாவும், தங்கையும் திருட்டுத்தனமாக கறந்து உபயோகிக்கிறார்கள். அதை பார்த்த பெரிய காக்கா, பாத்துமாவிடம் சொல்லித்தருகிறார். பாத்துமா, நீங்க கறக்க வேண்டாம், நானே கறந்து தருகிறேன் எனச் சொல்கிறாள். சொன்னவாறே பாலையும் கொடுக்கிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பால் கறப்பதும் தொடர்கிறது. 

பஷீர் சொன்னது போலவே இந்நாவல் ஒரு நகைச்சுவை கதை. 'பாத்துமாவின் ஆடு' வறுமையிலும் வாழ்க்கையை கொண்டாடச் சொல்லும் கதை. 


Wednesday, June 9, 2021

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார். 

குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள். 



வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். ஊரில் பாதிப்பேர் சொந்தம் எனச்சொல்லி வருவார்கள். இப்பொழுது யாரும் வருவதில்லை. பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை அல்லவா. 

ஒரே பிள்ளை இவர்களுக்கு. குஞ்ஞுபாத்துமா. உம்மா அடிக்கடி அவளிடம் 'பெண்ணே நீ, ஆனைக்காரரோட பொன்னு மவளோட பொன்னு மவளாக்கும். அது பெரீய கொம்பானே' என்று சொல்கிறாள். வசதியாக இருந்தபோது இந்த வார்த்தைகள் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழந்தும் குஞ்ஞுதாச்சும்மாவுக்கு பழைய பெருமை போவதில்லை. பாத்துமாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவர்களின் இப்போதைய நிலை பார்த்து யாராவது திருமணம் செய்ய முன் வரவேண்டும் என்கிறாள் உம்மா. 

அம்மாவுக்கும் மகளுக்கும் சமையல் தெரியாது. வியாபாரம் செய்து கொண்டு வருவதை வாப்பா தான் சமைக்க வேண்டும். அவர் சிலசமயம் தன் மனைவியிடம் 'பொண்ணா பொறந்தவளுக்கு அடுப்பு பத்த வைக்கவாவது தெரிஞ்சு இருக்கணும்' எனச் சொல்ல, உம்மாவோ 'நான் ஆனை மக்காரோட மவளாக்கும்' என்று சண்டைக்கு நிற்கிறாள். வறுமை இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளுடன் கணவன் மனைவி சண்டை வேறு. குஞ்ஞுபாத்துமா அவர்களை பார்த்து கலங்கி நிற்கிறாள். உம்மாவுக்கு அவளின் குடும்பம், யானை பெருமை என சொல்லிக்காட்ட, வாப்பா விட்டுக்கொடுத்துப் போகிறார்.

குஞ்ஞுதாச்சும்மாவுக்கு இஸ்லாம் முறைகள் மீதான பற்று அதிகம். பெண்கள் பூ வைத்தல், அலங்காரம் செய்தல் தவறு என்கிறாள். தன் மகளையும் அவ்வாறே சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால், தன் வறுமையான சூழலில் ஒவ்வொரு நாள் தொழுகையை கைவிடுகிறார். 'அதெல்லாம் ஒரு பாடு தொழுதாச்சு' என்று சலித்து கொள்கிறாள். 

அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் வீட்டுக்கு, நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் குடிவருகிறது. முஸ்லீமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கிறார்கள். நிஸார் அகமது, ஆயிஷா என இரு பிள்ளைகள். ஆயிஷாவும், குஞ்ஞுபாத்துமாவும் தோழிகளாக பழகுகிறார்கள். பூ வைத்தல், புடவை கட்டுதல், தலை முடி அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை பார்த்த குஞ்ஞுதாச்சும்மா, அவர்கள் முஸ்லிம்களே இல்லை காபிர்கள் என்கிறார். 

நிஸார் அகமதுக்கு பாத்துமாவை பிடித்துப்போக காதலிக்கிறான். பாத்துமாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. அகமது கழிப்பறை கட்டுதல், வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தல், பூச்செடிகள் நடுதல் என ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறான். சுத்தத்தை விரும்புவனாக இருக்கிறான். இரண்டு வீட்டினரும் பேசி திருமணம் முடிவு செய்கிறார்கள். அதிக நபர்களை அழைக்காமல் குறைவாகவே திருமணத்துக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்கிறான் அகமது. மீறிப்போனால் ஒரு பத்திருபது பேர். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். 

திருமணம் அன்றிரவு நடக்கப் போகிறது. பிள்ளைகள் வெளியே சத்தம் போட்டு விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். குஞ்ஞுதாச்சும்மா அவர்களிடம் 'எங்க அப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சத்தம் போட, அதில் ஒரு பையன் 'அது குழியான'  என்கிறான். குழியானை என்பது மண்ணில் வட்டமாக சிறு குழி தோண்டி வாழும் சிறு பூச்சி. தன் பெருமை மிக்க குடும்பத்து யானையை, நான்கு பேரை கொன்ற யானையை, பெரிய கொம்புள்ள யானையை குழியானை என்றதும் உம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆற்றாமை வருகிறது. அவர்களைத் திட்டுகிறாள். சத்தம் கேட்டு அங்க வந்த பாத்துமா என்ன என விசாரிக்க 'உங்க உப்பப்பா ஆன.. குழியானையாம் புள்ளே.. குழியானையாம்' எனச் சொல்கிறாள்.  

****


காலம் பழைய பெருமைகளை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு வேண்டுமானால் நம் வீட்டுப்  பெருமை பெரிதாக இருக்கலாம். ஒருகாலத்தில் பெரிய பெருமைகளாக இருந்த எல்லாம் ஒருநாள் மறைந்து விடும். புதிய காலத்துக்கு ஏற்றவாறு நாம் தான் மாற வேண்டும். குஞ்ஞுதாச்சும்மாவுக்கு ஆனைப் பெருமை, வட்டனடிமைக்கு ஊரில் பெரிய தலைவர் எனப் பெருமை. அதெல்லாம் இன்று இல்லை. 

நாவலில் ஓரிடத்தில் 'பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை' என்று வரும். இருக்கும் பணத்தை பெருமைக்காக தொலைத்து விட்டுப் பின்னர் வருந்துவதில் நியாயமில்லை. அதனால்தான் அகமது திருமணத்தைக்கூட எளிதாக நடத்தலாம் என்கிறான். திருமணத்துக்கு ஏக செலவு செய்து கடன் பட்டவர்கள் ஏராளம். 

நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப்