Posts

Showing posts from August, 2010

இன்று(30/08/2010) காணாமல் போனோர் தினம்...

Image
புதிய தலைமுறை இதழுக்கு நன்றி, இப்படிப்பட்ட ஒரு தினத்தை அறிமுகம் செய்ததற்காக. காதலர் தினம், அன்னையர் தினம் போல் இதுவும் ஒரு தினமாக கண்டிப்பாக இருக்காது. ஏனெனில், அந்த தினங்கள் நம்மோடு வாழ்பவர்களுக்காக. ஆனால் இந்த தினமோ, உயிரோடு இருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாமல் அனுசரிக்கப்படுகிறது. ஐ.நா. அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து இந்த தினத்தைக் கடை பிடிக்கிறது. அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் காணாமல் போன மக்கள் மிக அதிகம். அடக்கு முறைகளால் கைது செய்யப் பட்டு, குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், என்ன செய்தார்கள் என்ற நிலைமை தெரியாமல் "காணாமல் போனோர்" பட்டியலில் அடைத்து விடுகிறார்கள். பள்ளிச் சிறுவர்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள் எனத் தினமும் காணாமல் போவோர் ஏராளம். ஏதோ ஒன்றுக்கு பயந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சக குடும்பத்தினர் மீது நம்பிக்கை இல்லாமலோ, குடும்பத்தினரின் தொந்தரவுகளினாலோ அவர்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனதன் பின்னர் விளம்பரம் கொடுத்து நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா, இல்லை இன்னும் தேடி...

கழிவறைச் சித்திரங்கள்

Image
ரயில் பேருந்து நிலையம் பள்ளி, கல்லூரியெனப் பொதுக் கழிவறைகளில் பெருகியோடும் காமம் வெறும் கோட்டுச் சித்திரங்களாய் கிறுக்கப்பட்டு சுவர்களில் உறைந்து கிடக்கிறது.

சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

Image
சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால் !) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும். எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள். அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வரு...

உனக்கும்.. எனக்கும்..

Image
ஒவ்வொரு முறையும் சண்டை முடிந்து சமாதானம் ஆகிறோம்.. காக்கையின் முன் வைத்த படையல் இலையில் ஏதோவொன்றை கவ்விக் கொண்டு பறப்பது போல் ... ஏதோவொரு காரணம் கிட்டி விடுகிறது அடுத்த நாள் சண்டையைத் தொடங்க...

புத்தகம் - எனக்குப் பிடிக்கும்

Image
இலக்கியத்தை படிப்பவர்கள் பொழுது போகாமல் இருப்பவர்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. சின்ன வயதில் காமிக்ஸ், சிறுவர் மலர், அம்புலி மாமா என படித்து வளர்ந்த நான் கொஞ்ச நாட்கள் கழித்து, ராணி, தேவி, ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் என்று தொடர்ந்தது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பாலகுமாரன், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள் என்றாகி, இன்றும் இலக்கியங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்கு காரணம் என் அப்பாதான். பள்ளிக்கு செல்லாமலே படித்து, பக்திப் பாடல்கள், ஜோசியம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். சொல்லப் போனால் என் ப்ரோக்ரேஸ் கார்டு-ல் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவார். என் நண்பர்கள், உங்க அப்பா என்ன படித்து இருக்கிறார் என்று கேட்பார்கள் கையெழுத்தைப் பார்த்து. பள்ளிக் கூடமே போனதில்லை என்று சொன்னால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். எங்கள் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. புத்தகங்களைப் படிக்க கற்றுக் கொடுத்ததே அப்பாதான். வீடு பூராவும் ராணி, தேவி, குமுதம் என வார மலர்கள் நிறைந்து கிடக்கும். சாப்பிடும் பொழுது புத்தகம் படித்தால் கூட திட்டாத ஒரே வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும். எங்கள் ஊர் ...

முரண்கள்

அரசு மதுபானக் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி, அரசின் 'குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்' வாசகம். ******** லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்றுதான் இருந்தேன். முட்டிக் கொண்டு வரும்போது, சிறுநீர் கழிக்க ரூ.1 க்கு பதில் ரூ.3 வாங்கும் அவனிடம் சட்டம் பேச நேரமில்லை. ******** இப்போதெல்லாம் மசாலாப்(கம்மர்சியல் ?) படங்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதையும் கை தட்டி ரசித்தோம் என்பதை மறந்து விடுகிறேன். ******** சின்ன வயதில் அப்பா என்ன வாங்கி வந்தாலும் ருசித்தது. இப்போதோ, எதாவது வாங்கி வந்தால் 'நல்ல கடை கெடைக்கலியா?' என்பதே வார்த்தைகளாக வருகிறது. ******** ஆம்பளைப் பையன் பூவை ரசித்தால், ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதுவே கையில் ஒரு ரோஜாவோடு இருந்தால் புன்னகைக்கிறார்கள். (சமயத்தில் அடியும் கிடைக்கக் கூடும்) ******** குளிர் காற்று நிறைந்த அங்காடிகளில் பில் போட்ட விலையைத் தருகிறோம். நடை பாதைக் கடைகளில் ரூ.10 உள்ள பொருளுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். ******** சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஆனோம் என்கிறார்கள். இருந்தாலும் சம்பளம் போதவில்லை என்று கதறுகிறார்க...

ஞாயிற்றுகிழமைச் சுதந்திரம்

ரயில் முன்பதிவு குடும்பத்துடன் சுற்றுலா என எதுவுமில்லாமல் வருகிறது சுதந்திர நாள் ஞாயிற்றுக் கிழமையால்... போலி மருந்துகள் போலிச் சாமியார்கள் போலிச் சான்றிதழ்கள் எனச் சுற்றிலும் போலிகள் சுதந்திரமாய்... கந்துவட்டி, லஞ்சம் கல்விக் கட்டணம் சிறுவர் கொடுமைகள் விலைவாசி எனவும் நமக்கான முடிவுகளை யாரோதான் எடுக்கிறார்கள்... இதற்கெல்லாம் கவலை வேண்டாம் நண்பரே.. அடுத்த வருடம் சுதந்திர நாள் திங்கட்கிழமையில் வருகிறது.. மூன்று நாட்கள் மூழ்கித் திளைப்போம் அடுத்த சுதந்திர நாளன்று...

குறும்படம் - மற்றவள்

Image
ஒரு பக்கம் பள பளக்கும் துணியுடன், முதுகில் புத்தக மூட்டையுடன் பள்ளிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்னொரு பக்கம் எதற்கும் வழியின்றி தெருவோரங்களில் பல குழந்தைகள். காலை நேரங்களில், தெருவின் ஓரங்களில் நடத்தப் படும் பூக் கடை, இட்லிக் கடை, தள்ளு வண்டிக் கடை, சிறு காய்கறி கடைகள் என சிறுவர்களைப் பார்க்கலாம். கொஞ்சம் வசதி இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளுக்காவது தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகிறார்கள். அந்த வசதி கூட இல்லாமல் இருக்கும்பொழுது, மூன்று வேலை உணவா இல்லை கல்வியா என்று வரும்போது அங்கே கல்வி பின்னுக்கு தள்ளப்படுகிறது. பெரும்பாலும், குழந்தை தொழிலாளர்கள் சம்பாதிப்பது கொஞ்சம் தான் என்றாலும் அதுவே அவர்களின் குடும்பத்துக்கு பெரிய உதவியாய் இருக்க கூடும். பெற்றோரை இழந்தவர்கள், மறுமணம் செய்து விட்டு குழந்தைகளைத் தனியாக விட்டு விட்டு செல்பவர்கள் என ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சிறு சிறு வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதில் தாத்தா, பாட்டி போன்றவர்களும், உறவினர்களும் அடக்கம். இதில் தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டான் என்றால், தாயால் உடம்புக்கு மு...

காம்பஸ் ஊசியும்.. தோஷ நிவர்த்தியும்...

குழந்தையை கிழக்கு முகமாக உட்கார வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூசைக்கு வைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...' இது, சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. மீறிப் போனால் ஒரு இருபது பக்கமிருக்கும். குழந்தை பிறந்த 1-நாள் 1-மாதம் 1-வருடம், 2-நாள் 2-மாதம் 2-வருடம் என பன்னிரண்டு வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும். எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தலையணைக்கு அடியில் வைத்து விடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டி விடுவார்கள். இந்த மந்திரங்களை ஒரு பனையோலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கி கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டிருவாங்க. ஊரில் ரெண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக் கொடுப்பார்கள் மற்றவர்களுக்கு. அதற்கு காணிக்கையும் வாங்கிக் கொள்வார்கள். எங்கப்பாவும் ஏடு எழுதிக் கொடு...

சினிமா - விர்டியானா (Viridiana)

Image
நானும் என் நண்பனும் சென்னையில் இருந்த நாட்களில், ரயில் நிலையப் படிகளில், தி.நகர். கடை வீதிகளில், பேருந்து நிறுத்தங்களில் என எங்கெங்கு பார்த்தாலும் கையேந்தி நிற்கும் பிச்சைக் காரர்களைப் பற்றி விவாதித்தது உண்டு. நண்பன் சமூகவியலில் டிப்ளமோ பண்ணிக் கொண்டிருந்தான். எவ்வளவோ பெரிய ஆட்கள், பெரிய முதலாளிகள் சென்னையில் இருக்கிறார்கள், கொஞ்சம் உதவி செய்தால் இவர்களும் நிம்மதியாக வாழலாமே என்று அவனிடம் கூறினேன். அதற்கு அவன் பின்வருமாறு பதில் அளித்தான்; 'நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்குது. ஆனால், பிச்சை எடுத்து வாழ்பவர்கள் சொகுசு வாழ்க்கை போல வாழ்ந்து பழகி விட்டார்கள். கையில் கொஞ்சம் ரூபாய் இருந்தால், கஞ்சா, பீடி, தண்ணி என அடிக்க கிளம்பி விடுகிறார்கள்(பெண்களும்). இவர்களைக் கொண்டு போய் தொண்டு இல்லங்களில் சேர்த்து விட்டால், மீறிப் போனால் ஒரு வாரம், ரெண்டு வாரம் இருப்பார்கள். அதற்க்கு அப்புறம் கெளம்பிடுவாங்க. ஏன்னா, அங்கே உணவு கிடைத்தாலும் காசு கிடைக்காது, சிறு வேலைகளும் செய்ய வேண்டும். இதில் கொடுமை என்னவெனில், பிள்ளைகளை ஊனமாக்கி பிச்சை எடுப்பது. அவர்களாக திருந்தினால்தான் உண்டு' என்றான். அவ...