Wednesday, April 17, 2013

இரை விழுங்கும் பல்லிகள்

அதிகாலையில் அடுத்த அறைக்குச் செல்ல மின் விளக்கு பொத்தானை அழுத்தினேன். அறையில் ஏதோ ஒரு பக்கம் பதுங்கி இருந்த கரப்பான் பூச்சி ஒன்று காலுக்கடியில் ஓடியது. பெரியதும் இல்லை, ரொம்ப சின்ன பூச்சியும் இல்லை. என் காலைக் கடந்து அது மூலைக்கு ஓடியது. அங்கே ஒரு பல்லி இருப்பது அதுக்கு தெரியவில்லை போலும். அந்தப் பல்லியும் சின்னதுதான். பதுங்கி இருந்த பல்லி, அந்த கரப்பான் பூச்சியின் தலையைப் பிடித்துக் கொண்டது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கியது. இரண்டொரு நிமிடத்தில், மொத்தமும் பல்லியின் வயிற்றுக்குள் சென்று விட்டது. பல்லி வீங்கிய வயிற்றுடன் சுவர் மேலே ஏறி விட்டது. 

இந்தப் பல்லி என்று இல்லை. சில வருடங்களுக்கு முன், ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு மானை விழுங்குவதைப் பார்க்க நேர்ந்தது. அப்படியே இறுக்கி பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போனது மான். பாம்பு இறுக்கிப் பிடிக்கும் வேகத்தில், மானின் எலும்புகள் உடைந்து எளிதாக உள்ளே போய் விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நம்மைப் போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றோ அவைகளுக்கு வாய்க்கவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உணவு கிடைக்காமல் போக கூடும் என்ற பயம் அவைகளுக்கு இருக்கக் கூடும். மென்று ருசித்து சாப்பிட எல்லாம் நேரம் இருப்பதில்லை. இரை தப்பி விடக் கூடாது என்ற ஒரே பயம்தான் அவைகளுக்கு.

பாம்பு, பல்லி. முதலை போன்ற உயிர்கள் கூட தன் பசிக்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்கிறது. மனிதன் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன். பேராசை கொண்டவன். சக மனிதனையே விழுங்கும் சக்தி உடையவன் மனிதன். பைன் பியூச்சர், ஈமுக் கோழி என்று மக்களை ஏமாற்றி விழுங்கக் கூடியவர்கள் மனிதர்கள். 

மனிதனைப் பார்க்க, இந்தப் பல்லிகளும், பாம்புகளும் எவ்வளவோ உயர்ந்தவை. ஒரு போதும் அது தன் சக இனத்தை விழுங்குவதும் இல்லை, காட்டிக் கொடுப்பதும் இல்லை.


Monday, April 15, 2013

ஒரு வனதேவதையின் உக்கிரம்
















ஆதியில்
தண் பசுமையும் குளிர் காற்றும்
பட்சிகளின் வாழ்வும்
பகலவனின் ஒளி புகாத
கானகத்தினுள்
ஒரு வேம்பினடியில்
மடித்து வைத்த பாதங்களோடு
அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன்.

கொடும் கரம் கொண்டு பசுமையழித்து
கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு
என்னை ஒரு நாற் சுவருக்குள்
அடைத்தது ஒரு கூட்டம்.

தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய்
மாறிப்போன எனக்கு
தினந்தோறும் பூசைகள்
பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி
தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள்
என எதுவும் பிரியமில்லை.

அறிந்துகொள்ளுங்கள் மக்களே
நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.














படங்கள் : இணையத்திலிருந்து.

Friday, April 12, 2013

சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)



சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால் !) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும். எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம். ஒரு நாள் கூலி இல்லையெனில், பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.



1936 ல் வெளிவந்த படம் மாடர்ன் டைம்ஸ். வேலைக்குப் போகும் ஒருவனைப் பற்றிய படம். முதல் காட்சியில் கூட்டமாக ஓடும் வெண் பன்றிக் கூட்டத்தைக் காண்பித்து, அப்படியே சப்வே-ல் திமிறிக் கொண்டு வரும் மக்கள் கூட்டம் திரையில் வருகிறது. வயிற்றுக்கு இரை வேண்டுமெனில் பன்றியாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் ஓடித்தானே தீர வேண்டும்.

பெரிய பெரிய இயந்திரங்கள் நிறைந்த ஒரு தொழிற்சாலையில் சாப்ளின் வேலை செய்து கொண்டிருக்கிறார். இரண்டு கையிலும் இரண்டு ஸ்பேனர்களைப் பிடித்துக் கொண்டு, கை ஓயாமல் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால், வேலை முடிந்த பிறகும் அவரது கைகள் அதே நிலையில் ஆடிக் கொண்டிருக்கின்றன. வெளியே வரும் சாப்ளின், சாலையில் போகும் பெண்ணின் சட்டைப் பட்டனைத் திருக்க முற்பட அவள் அங்கே வரும் காவலனிடம் புகார் செய்கிறாள். திரும்பவும் தொழிற்சாலைக்குள் வந்து சாப்ளின் ரகளை செய்ய அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு பெண் கப்பலில் இருந்து வாழை பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தன் வீடு நோக்கி விரைகிறாள். அங்கே தனது இரு சிறிய சகோதரிகளுடன் அதை சாப்பிடுகிறாள். வேலை இல்லாமல் வரும் அவள் அப்பாவும் சாப்பிட ஏதுமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பழத்தைச் சாப்பிடுகிறார். கொஞ்ச நாள் கழித்து, அவள் அப்பாவும் இறந்து விட மூவரையும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். தனது சகோதரிகளை அங்கே விட்டு விட்டு அப்பெண் மட்டும் தப்பித்து விடுகிறாள்.



மருத்துவமனையில் இருந்து திரும்பும் சாப்ளின், வேலை தேட முயல்கிறார். போராட்டம் காரணமாக தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஒரு சாலைத் திருப்பத்தில், லாரி ஒன்று திரும்ப அதன் பினனால் பாதுகாப்புக்காக கட்டியிருந்த சிவப்புக் கொடி கீழே விழுகிறது. அதைப் பார்க்கும் சாப்ளின் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுனரிடம் கொடுக்க லாரியின் பினனால் ஓடுகிறார். ஆனால் அவர்க்குப் பின்னால் போராட்டக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதை அறியாமல் இவர் முன்னால் நடக்க, இவரைத் தலைவன் என்றெண்ணி போலீஸ் கைது செய்ய, சிறை செல்ல நேர்கிறது.

சிறையில் கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை சாப்ளின் முறியடிக்கிறார். எனவே அவரை சீக்கிரமாக விடுதலை செய்கிறார்கள். கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து 'இதன் மூலம் நீ எளிதாக வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என்கிறார் சிறை அதிகாரி. வெளியே வந்தால் வேலை இல்லை. சிறையில் இருந்தாலாவது உணவு கிடைக்கும். என்ன செய்வதெனத் தெரியாமல் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

சிறை அதிகாரி கொடுத்த கடிதத்தைக் காண்பித்து ஒரு கப்பல் கட்டும் இடத்தில் ஒரு வேலைக்குச் சேர்கிறார். சேர்ந்த முதல் நாளே, ஒருவன் ஒரு கட்டை வேண்டும் என்று கேட்க, கட்டையைத் தேடும் நம்ம ஆள் கட்டிக் கொண்டிருந்த ஒரு கப்பலின் அடியில் முட்டுக் கொடுத்திருந்த கட்டையைப் பிடுங்க, கப்பல் கடலில் பாய்கிறது. பிறகென்ன, அங்கே இருந்தும் வெளியேறுகிறார்.



காப்பகத்திலிருந்து தப்பிய பெண் ஒரு பேக்கரியில், பசியால் ஒரு பிரட் பாக்கெட்டைத் திருடிக் கொண்டு ஓடுகிறாள். எதிரே வரும் சாப்ளின் மீது மோதி விழுகிறாள். அப்பெண் திருடுவதைப் பார்த்த இன்னொரு பெண்மணி, அதைக் கடைக்காரனிடம் சொல்ல போலீஸ் அங்கே வருகிறது. போலீசிடம் நான்தான் திருடினேன் என்று சாப்ளின் கூற அவரை அழைத்துச் செல்கிறது. அங்கே வந்த பெண்மணி 'இவன் இல்லை.. திருடியது ஒரு பெண்' எனச் சொல்ல, அவரை விட்டு விட்டு திரும்ப அப்பெண்ணைத் துரத்துகிறார்கள்.

இன்னொரு கடையில் காசில்லாமல் உணவு அருந்தும் சாப்ளினை போலீஸ் பிடிக்கிறது. போலீஸ் வண்டியில் வரும்பொழுது, அப்பெண்ணும் பிடிபட்டு வண்டியில் ஏற்றப் படுகிறாள். போகும் வழியில் இருவரும் தப்பித்து விடுகின்றனர்.



ஒரு கடையில் இரவு வாட்ச்மேன் வேலை காலியாக இருப்பதை அறிந்து அங்கே சேர்கிறார் சாப்ளின். அன்று இரவு அப்பெண்ணும் அங்கே தங்குகிறாள். இரவு அந்தக் கடைக்கு திருடர்கள் வருகின்றனர். பார்த்தால் அவர்கள் சாப்ளினின் பழைய பாக்டரியில் வேலை செய்தவர்கள். இப்பொழுது பசியால் இங்கே வந்தோம் எனப் பேசிக்கொண்டு, மது வகைகளை குடித்து போதையில் தூங்கி விடுகிறார் சாப்ளின்.

மறுநாள் காலை துணிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சாப்ளினை போலீஸ் அள்ளிக் கொண்டு செல்கிறது. அப்பெண் தப்பி விடுகிறாள். மீண்டும் பத்து நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வர, அங்கே அப்பெண் அவரை ஒரு சிறிய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறாள். பழைய மர வகைகளை கொண்டு கட்டிய சின்ன குடிசை அது.

அடுத்த நாள் காலையில் பேகடரி திறப்பதை அறிந்து காலையில் வேலைக்கு சேருகிறார். மதியம் உணவு முடிந்து திரும்பவும் ஸ்டிரைக் ஆரம்பிக்க தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். வெளியே வரும் சாப்ளின் ஒரு கல்லைத் தெரியாமல் மிதித்து விட அங்கே நின்று கொண்டிருந்த போலிசின் மீது பட, திரும்பவும் ஒருவாரம் சிறை வாசம்.



சிறை வாசம் முடிந்ததும் வெளியே வரும் சாப்ளினை வரவேற்று தான் புதிதாக வேலையில் சேர்ந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவளுக்கு நடனம் ஆடும் வேலை. சாப்ளினுக்கு பாடத் தெரியும் என்று சேர்த்து விடுகிறாள். அன்று சாப்ளின் பாடி முடித்து, அப்பெண் ஆட வரும்பொழுது காப்பக அதிகாரிகள் அவளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள்.

ஒரு சாலையின் ஓரத்தில் இருவரும் ஒரு சிறிய மூட்டை முடிச்சோடு அமர்ந்து கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள். அப்பெண் "முயற்சி செய்வதால் என்ன பலனை கண்டோம்?" என அழ ஆரம்பிக்க, "செத்துப் போவோம் என்று ஒரு நாளும் எண்ணாதே. நாம் இன்னும் நிறைய தூரம் செல்வோம்" என்று தேற்றுகிறார். இருவரும் சந்தோசத்துடன் ஒரு நீண்ட பாதையில் நடக்க ஆரம்பிக்க, படம் முடிகிறது.




நெகிழ வைத்தவை:

ஒரு வேலையைச் செய்து கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் நோய்கள் அதிகம். படத்தின் முதலில் சாப்ளின் கை நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே இருக்கும். அங்காடித் தெருப் படத்தில் கூட ஒரு நோயாளி நின்று கொண்டே வேலை செய்ததால் ஏற்படும் நோயைப் பற்றி சொல்லுவார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முதலாளிகள் ஒன்று போலதான் இருக்கிறார்கள். சாப்பிடும் நேரத்தைக் குறைக்க வலியுறுத்தும் நிறுவனங்கள் ஏராளம். இப்படத்தில் கூட, சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்பதால் ஒரு இயந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நல்ல வேளை, அது படத்திலேயே வெற்றி அடையவில்லை.

பசியால், கப்பலில் வைத்திருக்கும் பழங்களை அப்பெண் திருடும் பொழுது, அவள் திருடுவதற்கு இந்தச் சமூகம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

பலசரக்கு கடையில் தன் நண்பனைப் பார்த்தவர்கள் "நாங்கள் திருடர்கள் இல்லை.. எங்களுக்கு பசியாக இருக்கிறது".. என்பார்கள். பசி மட்டும் தானே மனிதனுக்கு கொடிய நோயாக இருக்கிறது.

சாப்ளினும் அப்பெண்ணும் தங்களின் கனவு இல்லம் பற்றி கனவு காண்பார்கள். அதில் அழகான வீட்டுக்கு உள்ளேயே ஆப்பிளும், திராட்சைப் பழங்களும் சன்னலில் காய்த்திருக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பசு பாலை கறந்து கொடுத்து விட்டுச் செல்கிறது.

இறுதியாக, இந்த மாடர்ன் யுகத்தில் நிறைய பேக்டரிகள், நிறைய உணவுகள், நிறைய பொருள்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாருக்கும் வேலை கிடைப்பதும், பசி ஆறுவதும் எவ்வளவு கடினமாக உள்ளது. ஒரு வேளை காட்டுக்கு உள்ளேயே ஆதி வாசிகளாக இருந்திருந்தால் கூட காயோ, கனியோ கிடைத்திருக்கும். காட்டை அழித்து நாட்டை உருவாக்கி, நவீன உலகம் என்கிறோம். மாடர்ன் உலகத்தில் இன்னும் அனைவருக்கும் உணவுதான் கிடைக்கவில்லை.







Tuesday, April 9, 2013

தொலைந்த எழுத்து

வெகு நாளாக
புரட்டாத புத்தகத்தில்
ஒரு பூச்சி
உயிர் விட்டிருந்தது...

உயிர் விட்டிருந்த
பக்கத்தில்
ஓர் எழுத்தை
மறைத்து கிடந்தது..

பூச்சியை
எடுத்த பின்
அவ்விடத்தில் இருந்த எழுத்தும்
காணவில்லை...

எந்த எழுத்தை
போட்டும் அவ்வாக்கியத்தை
நிரப்ப முடியவில்லை
அதன் உயிரைப் போல..


குறிப்பு: முன்னரே இத்தளத்தில் பதிந்த கவிதை.

 

Friday, April 5, 2013

மஞ்சள் நீராட்டு

முதன் முதலாக, மாரியம்மன் கோவில் திருவிழாவன்று சந்திரா அத்தையை புதிதாகப் பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். ஐம்பது வயதாகியும், சின்னஞ் சிறுசுகளுடன் சேர்ந்து கொண்டு மஞ்சள் தண்ணி சொம்பை தூக்கி எல்லோர் மேலும் ஊற்றும் அத்தையை அவர்கள் அப்படிப் பார்ப்பதில் தப்பொன்றும் இல்லை. ஊரில் உள்ளவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பழகிப் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் துரத்திக் கொண்டு இருக்க, எந்த பேதமும் இல்லாமல் கிடைத்தவர்கள் எல்லோர் மேலும் தண்ணி ஊத்திக் கொண்டிருக்கும் அத்தை. சாமி நெரமனை எடுத்து வரும்போது முதலில் மஞ்ச தண்ணியை யாரோ ஒருவர் மேல் ஊற்றி ஆரம்பித்து வைப்பதும் சந்திரா அத்தை தான். திருவிழா ஆரம்பித்து, முடியும் அந்த ஒருவார காலத்தில் சந்திரா அத்தை அவ்வளவு அழகாக இருப்பாள். தினமும் தலைக்கு குளித்து, சிறு கதம்பத்தை வைத்துகொண்டு, மங்களகரமாக கோவிலையே சுத்தி வருவாள்.

சந்திரா அத்தை இப்படி இருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால்,  'இப்படியாவது அவ சந்தோச பட்டுக்கட்டும்'  என்று உச் கொட்டுவார்கள்.


த்தை என்றால், சொந்த அத்தையும் இல்லை, ஏதோ ஒருவகையில் அப்பாவுக்கு தூரத்து சொந்தம். அண்ணே, தங்கச்சி என்றுதான் இருவரும் கூப்பிட்டுக் கொள்வார்கள். அத்தை கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் உயிருடன் இல்லை. அத்தையின்  வயதான அம்மா மட்டும் துணை.
மிக இளைய வயதிலேயே கல்யாணம் ஆகி, புருஷன் வீட்டில் வாழ்ந்தது என்னவோ நாலு மாசம்தான். கட்டியவன் எங்கேயோ போய்விட, வாக்கப்பட்ட ஊரில் இருக்க பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டது அத்தை.  அவ்வபொழுது யார் மூலமாகவோ புருஷன் உயிரோடு இருக்கிறான் என்கிற செய்தியை மட்டும் தெரிந்து கொள்ளுவாள் அத்தை.


ரண்டு மூன்று வருடங்களாக ஊர்த் திருவிழாவுக்கு செல்லவில்லை. இந்த வருடம் போனபோது, வழக்கம் போல் சாமி மக்களைத் தேடிக் கொண்டு வீதியில் வந்தது. சிறியவர்களும், பெரியவர்களும் மஞ்சள் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். சந்திரா அத்தையை காணவில்லை. அம்மாவிடம் கேட்க 'அவ எதுக்கு வர போறா.. அவ புருஷன் போய்ட்டான்..' என்ற பதில் வந்தது. 'எப்போ?', 'அது ஆச்சு நாலு மாசம்.. அது கெடக்கட்டும், அந்த வாழ எலைய இப்படி போடு..'.


பொழுது சாய, ஊருக்குள் நண்பன் கண்ணனைப் பார்க்க நடந்து கொண்டிருந்தேன். வீதி முழுவதும் மஞ்சள் பொடி காய்ந்து கிடந்தது. சந்திரா அத்தை வீட்டைத் தாண்டிதான் கண்ணன் வீட்டுக்குப் போக வேண்டும். திண்ணையில் உட்கார்ந்திருந்த சந்திரா அத்தை, என்னைப் பார்த்ததும் 'மருமவனே.. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க..' என்று நலம் விசாரித்தது. நானும் பதில் சொல்லிக் கொண்டே, அத்தையைப் பார்த்தேன். கட்டி இருந்த சாமியார் கலர் புடவையில் தப்பித் தவறி ஒரு பொட்டு மஞ்சள் கூட  இல்லை.