Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts

Monday, March 11, 2013

வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

நீங்கள் எப்போதாவது அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாங்கள் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறோம். பேருந்துகளில், ரயில் நிலையங்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகிறார்கள், வட நாட்டு மக்கள். மொழி புரியாமல் இங்கே வரும் அவர்கள், குறைந்த கூலிக்கு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். சின்ன இடத்தில அவ்வளவு பேரும்  தங்குகிறார்கள். குறைந்த சம்பளத்தை வாங்கி, கொஞ்சம் செலவு செய்து மீதியை தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால், அவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு நாள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நான்கைந்து பேர் ஏறினார்கள். பயணச் சீட்டும் எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும், நடத்துநர் அவர்களிடம் 'டிக்கெட் எங்கே?' எனக் கேட்க, உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தே நின்று விட்டான். அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. நடத்துநர் திரும்பவும் சத்தமாக கேட்க,. எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு மூன்று முறை கேட்டு, எப்படியோ அவர்கள் புரிந்து கொண்டு பயணச் சீட்டை எடுத்துக் காண்பித்தனர். நடத்துநர் சரி பார்த்து விட்டு, புலம்பிக் கொண்டே சென்றார். என் பக்கத்திலிருந்த ஒரு பயணி 'வந்திர்ரானுகோ கெளம்பி..' என்று, கேவலமாகச் சிரித்தார்.

இன்னொரு நாள் சந்தையில், வட நாட்டு இளைஞர்கள் சிலர் உருளைக் கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் ஐந்து கிலோ, பத்து கிலோ என்ற கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தனர் . 'எப்படித்தான் இத்தன உருளக் கெழங்க தின்கிரானுகளோ' என்று பேசிக்கொண்டு நடந்தார் இன்னொருவர்.

இதற்கும், இந்த ''வளைகள் எலிகளுக்கானவை"  கதைக்கும் என்ன சம்பந்தம் என்ன என்று கேட்கிறீர்களா?. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் - 'சூடிய பூ சூடற்க' கதைத் தொகுதியில், 'வளைகள் எலிகளுக்கானவை' என்ற கதை இருக்கிறது. இந்தக் கதையிலும் எங்கோ வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், ரயில் சுற்றுப் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புண்ணிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் ஏறும் நம் ஊர் மக்கள், அவர்களைப் பார்த்து 'வேறு பெட்டிக்கு போகச் சொல்கிறார்கள்.. கூடவே அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் எனவும் பேசி விடுகிறார்கள். அவர்கள் கோபத்துடன், தங்களிடம் இருந்த பயணச் சீட்டை காண்பிக்கிறார்கள். சிறு கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. இறுதியில கலெக்டர் வந்து சமாதானம் செய்து ரயிலைப் புறப்பட வைக்கிறார்.

'நாங்க ஏழைங்க சாப்.. கர்சிரோசி விவசாயிங்க.. வித்அவுட் பிச்சைக்காரங்க இல்ல.. போன வருஷம் காசி போனோம்.. அதுக்கு முந்தி காளிகட் போனோம்.. கன்யாகுமரி வந்து நாங்க ரத்தக் கறையோட போறோம்..'  என்று சொல்கிறார்கள் அவர்கள்.

ரயில் நகர்ந்த பின் வழியனுப்ப வந்த இருவர் பேசிக்கொண்டு போனார்கள். 'காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊர்லே கெடக்காம..பொறப்பிட்டு வந்திருக்கானுகோ.. ஊரை நாறடிக்கரதுக்கு..'

அவர்கள் மேற்கில் மேலாங்கோடும் கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை. தெற்கே கன்னியாகுமரிக் கடலையும் வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்ட முடியாது.


***********

அவர்கள் எங்கேயோ இருந்து கிளம்பி வந்து, இங்கே பிரயாணம் செய்கிறார்கள், கோவிலுக்குப் போகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். நாமோ இருக்கும் இடத்தில இருந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆம், எப்போதும் வளைகள் எலிகளுக்கானவை.

Thursday, February 21, 2013

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்கள் - நாவல் 'சொல்ல மறந்த கதை' யாக திரையில் பார்த்ததை விட, புத்தகத்தில் படிக்கும் பொழுது ஒவ்வொரு வரிகளாக அசை போட முடிந்தது. படம் நன்றாகவே எடுக்கப் பட்டிருந்தாலும், புத்தகத்தில் தான் அதன் உயிரோட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே பத்தியை இரண்டு மூன்று முறை கூட திரும்ப திரும்பப்  படிக்கலாம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் நாவலாக வெளிவந்தது இந்த தலைகீழ் விகிதங்கள்.

முன்பின் எந்த பழக்கமும் இல்லாத இருவர் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அங்கே விட்டுக் கொடுத்தல்கள் இல்லை என்றாலோ, சரியான புரிதல் இல்லை என்றாலோ.. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் முள்ளில் பட்ட துணி போல மாட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும். மருமகன் பெண் வீட்டாருக்கு புதியவன் என்றால், மருமகளோ மாப்பிள்ளை வீட்டாருக்கு புதியவளாக இருக்கிறாள்.

மாமியார் கொடுமை, நாத்தானார் கொடுமை என்றெல்லாம் மருமகள் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் எழுதப் பட்டாலும், ஒரு மருமகனின் கதையைச் சொல்லிச் செல்வது இந்த நாவல்.

*******************

மூன்று பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக இருக்கும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக சிவதாணு. படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவன். பெண் பிள்ளை வீட்டில் இருக்க, மற்ற இரண்டு தம்பிகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பா சிதம்பரம் பிள்ளை சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. தாய் செண்பகம். இவ்வளவு பேரும் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிப்பது அந்த சின்ன வயல் காட்டிலிருந்து வருமானமே. எனவே, சிவதாணு வேலைக்குப் போனால் கொஞ்சம் குடும்ப பாரம் குறையும். ஆனால், அவனுக்கு இன்னும் வேலை இன்னும் கிடைக்கவில்லை.


சொக்கலிங்கம் பிள்ளை வசதியானவர். நகரத்தில் காப்பிக் கடை வருமானம். நீலாப்பிள்ளை அவரின் மனைவி. இரண்டே பெண் பிள்ளைகள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். மூத்தவள் பார்வதிக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இளையவள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். சொக்கலிங்கம், சிவதாணுவின்  ஊரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவரிடம் தன் மகளுக்கு, படித்த நல்ல பையனாக இருந்தால் சொல்லுமாறு கூற, அவர் சிவதாணுவைப் பற்றிச் சொல்கிறார்.

வசதி இல்லாத குடும்பம் என்று தெரிந்ததும், நல்ல பையன், படித்தவன்.. நாளைக்கு சொக்கலிங்கத்தின் செல்வத்தில் பாதி அவனுக்கு தான்.. என்ற நினைப்பில் சொக்கலிங்கம் சரி என்கிறார்.மாப்பிள்ளையை தங்கள் வீட்டிலியே வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லும்  நீலாப்பிள்ளை, வறுமையான குடும்பம் என்பதால்.. 'எம் பொண்ணுக்கு உருப்படியில் ஒரு பொடி தொடப்பிடாது' எனச் சொல்கிறார்.

சிவதாணுவின் வீட்டில், அப்பா அம்மாவுக்கு சந்தோசம். வேலை இல்லாமல், வீடு இருக்கும் நிலைமையில் இப்பொழுது கல்யாணம் செய்து என்ன செய்வது என முதலில் மறுக்கும் சிவதாணுவை 'அவங்கதான் உனக்கு வேலை வாங்கித் தர்றேன்னு சொல்றாங்க..நீயாவது நல்லா இருந்தால் போதும்' என்று சம்மதிக்க வைக்கிறார்கள். பெண் வீட்டில் கொஞ்சம் பணம் வாங்கியே கல்யாணம் நடத்த வேண்டிய வீட்டின் வறுமையை நினைத்துப் பார்க்கும் அவனும் அரை மனதோடு ஒத்துக் கொள்கிறான்.

ஊருக்குள் பலரும் பலவாறு பேசுகிறார்கள். செல்வச் செழிப்பான குடும்பம், வறுமையான சிவதாணு வீட்டில் வந்து ஏன் சம்பந்தம் வைக்க வேண்டும் என்று வினவிக் கொண்டே இருக்கிறார்கள். கல்யாணமாகி அவன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொள்வான், படித்த பையன் காப்பிக் கடைய பார்த்துக்குவான், அங்க தான் ஆண் வாரிசு இல்லையே.. என்று பலவாறு பேசுவது சிவதாணு காதில் விழுகிறது.தன் நிலைமையை நினைத்து நொந்து கொள்கிறான். கல்யாணம் முடிந்து விடுகிறது.

கல்யாணம் முடிந்து, கொஞ்ச நாள் கிராமத்தில் தங்கி இருக்கும் பார்வதி, 'இங்க தான் உங்களுக்கு வேலை இல்லையே.. அங்க அப்பா கடைய பார்த்துக்கிட்டு மாசம் கொஞ்சம் பணம் குடுப்பார்.. அங்கேயே போகலாம்' எனச் சொல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், இப்பொழுது மாமனார் வீட்டில் அவரின் கடையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சம் பணம் பெற்றுக்கொள்கிறான். சொக்கலிங்கம், சிவதாணுவின் வேலைக்கு துரும்பையும் தூக்கி போடாமல் இருக்கிறார். சிவதாணு, ஓரிடத்தில் வேலைக்கு எழுதிப் போட அந்த வேலை கிடைத்து விடுகிறது. அதே சமயம், பார்வதியும் பிள்ளை உண்டாக, சிவதாணு மட்டும் கிளம்பிச் செல்கிறான். மூன்று மாதத்தில் வருவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ 'அம்மா இங்கயோ இருக்கச் சொல்லுறாங்க' என வர மறுத்து விடுகிறாள். அவன் அவ்வப் பொழுது நேரில் சென்று அவளைப் பார்த்து வருகிறான்.



பெண் குழந்தை பிறக்கிறது. மூன்று மாதம் கழித்து, 'இப்பவாவது அங்கே வந்து இரு' என்று கூப்பிட, அவள் மறுக்க.. வார்த்தைகள் தடித்து பார்வதியை சிவதாணு அடித்து விடுகிறான். மாமனார் சொக்கலிங்கம், 'இப்படி அடிக்கவா நான் பிள்ளைய பெத்திருக்கேன்.. வீட்டை விட்டு வெளியே போ..' என அவனைச் சொல்கிறார்.  வீட்டை விட்டும் வெளியேறும் அவன், அதன் பிறகு அந்த வீட்டு படியையே மிதிக்கப் போவதில்லை என நினைத்துக் கொள்கிறான்.

குழந்தையோடு பார்வதி அவள் அப்பா வீட்டில் இருக்க, சிவதாணு தனியாக வேலை செய்யும் இடத்தில இருக்கிறான். பெரியவர் சண்முகம் பிள்ளை செய்யும் சமாதானப் பேச்சுக்கள் அவனிடம் எடுபடுவதில்லை. அங்கே, சொக்கலிங்கமோ 'இவ்வளவு நடந்தப்புறம் எப்படி நான் அவங்க முகத்தில் முழிக்கிறது... எப்படியோ போகட்டும், நான் மட்டும் அங்கே போக மாட்டேன்' என கௌரவம் காட்டுகிறார்.

பார்வதியின் தங்கை பவானி, சிவதானுவுக்கு கடிதம் எழுதுகிறாள். அவனோ அவளுக்கு திருப்பி எழுதுவதில்லை. ஒரு கல்யாணத்திற்கு, பார்வதியின் சொந்த ஊருக்குச் செல்லும் சிவதாணு, காரில் ஏறுவதற்கு போகும் பொழுது 'நில்லுங்கோ' என்ற சத்தம் கேட்க, அங்கே குழந்தையுடன் பார்வதி வந்து கொண்டிருக்கிறாள். காருக்குள் அவளாகவே உள்ளே ஏற, அவனும் உள்ளே ஏறிக் கொள்கிறான். தூரத்தில் பவானி கை அசைத்து, விடை கொடுக்கிறாள்.


*******************

நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கிலேயே கதை செல்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு என் வாயில் கூட, 'என்ன செய்யறது'  என்பதற்கு பதிலாக  'என்ன செய்யி' என்றே வருகிறது.

சில வரிகள்:
'கோழிய கொல்லப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்.. வளர்க்கப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்',
'கப்பல்லே பொண்ணு வருகுதுன்னா.. எனக்கு ஒன்னு.. எங்க அப்பனுக்கு ஒன்னுன்கிற கதையால்ல இருக்கு' 

'விலக்கும் போது விலகி, கையை எடுத்ததும் கூடிவிடும் குழி தாமரைப் பாசிகளைப் போல நினைவுகள் மீண்டும் மீண்டும் மனக் குளத்தைப் போர்த்துகின்றன'

*******************

முதற் பதிப்பின் முன்னுரையில் 'இது என் முதல் நாவல். இது காகமா குயிலா என்ற மயக்கம் உங்களுக்கு வேண்டாம். வசந்த காலம் வரும்போது அது தீர்மானமாகட்டும்' எனச் சொல்கிறார் நாஞ்சில் நாடன். படித்து விட்டு கண்டிப்பாக நீங்கள், இந்நாவல் குயில் என்றே தீர்மானம் செய்வீர்கள். நன்றி.

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.