Showing posts with label சிற்பக்கலை. Show all posts
Showing posts with label சிற்பக்கலை. Show all posts

Monday, July 1, 2024

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார். 

கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது.


கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு எனச்  சொல்கிறார். 

இப்பாறைச் சிற்பத்தில் வடிக்கப்பட்ட விலங்குகள், பறவைகளை இமைய மலையில் கண்டது பற்றி வியக்கிறார். சிற்பத்தின் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கும் அவர், சிற்பம் காட்டும் நேரத்தினையும் குறிப்பிடுகிறார். சிற்பத்தில் இரை எடுக்காமல் இளைப்பாறும் மான், சிங்கங்கள் மற்றும் ஆற்றில் குளிக்கும் யானைகள் ஆகியவற்றை கொண்டு மதிய நேரமே எனச் சொல்கிறார். 




மேலும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் சிறப்பாக செதுக்கப்பட்ட யானைக் கூட்டம் பற்றியும் கூறுகிறார். பெரிய யானைகளுக்கு இடையில் காணப்படும் அனைத்து சிறு யானைகளும்  குட்டிகள் என்றே எல்லோரும் நினைப்பார்கள். அவை எல்லாமே சிறு குட்டிகள் அல்ல, வளர்ந்த யானைகளும் உண்டு, ஏனென்றால் சிலவற்றுக்கு தந்தம் உண்டு. அப்படி என்றால் ஏன் சிறிதாக காட்ட வேண்டும்?. ஆற்றின் கரையில் கொஞ்சம் தள்ளி, தள்ளி அந்த பெரிய யானைகள் குளித்துக் கொண்டிருக்கின்றன. கண்ணால் கண்ட காட்சியை சிற்பத்தில் கொண்டுவர சிற்பிகள் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளனர் என்கிறார் பாலுசாமி. 

ஒரு சிற்பம் உணர்த்த வரும் நிகழ்வை பொத்தாம் பொதுவாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அதற்கு கதைகள், புராணம் பற்றிய தெளிவும்  நிகழும் இடம் போன்ற அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டும் எனத்  தூண்டுவது இந்நூல்.

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் 
ஆசிரியர்: சா. பாலுசாமி
பதிப்பகம்: காலச்சுவடு 

Friday, October 13, 2023

தமிழகக் கோபுரக்கலை மரபு - குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார். 

கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன;  கோபுரத்தின் தோற்றம், கட்டடக் கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள கலைகள் மற்றும் கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு ஆகும். 



கோபுரம் என்ற சொல்லுக்கு பொருளைச் சொல்லி, கோவிலின் நுழைவு வாயில் கோபுரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை விளக்குகிறது இப்புத்தகம். அனலின் வடிவமாகவே கோபுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம் நிலைத்து நிற்க, சரியான இடம் தேர்வு, கற்கள் தேர்வு, அவற்றை அடுக்கிய முறை என பல காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர். 

கோபுரத்தின் பகுதிகளான நிலைக்கால் முதல் சிகரம் வரை ஒவ்வொன்றுக்கும் உரிய மரபு பெயர்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நிலைகளில் ஆரம்பித்து பின்னர் ஏழு, ஒன்பது என கட்டப்பட்ட கோபுரங்கள், கட்டிய மன்னர்கள், திருப்பணி செய்தவர்கள் என ஒவ்வொன்றையும் ஆய்ந்து மிக விரிவாக பேசுகிறது இந்நூல். மேலும் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆய்வுக்கு உதவிய புத்தகங்கள், கல்வெட்டுகள், தகவல்கள் இணைப்பாக உள்ளது.

சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் அடங்கிய கோபுரங்களில் சில வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறவேண்டும். சுதைச்  சிற்பங்களில் விரிசல் இருப்பின் சீர்செய்து வண்ணம் தீட்ட வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்யவேண்டிய இப்பணியை சிலர் திருப்பணி என்கிற பெயரால் அழிக்கவே முயல்கின்றனர். திருவில்லிப்புத்தூர் கோபுரம் திருப்பணிக்கு பின்னர் அதன் அழகை இழந்ததை நினைத்து வருந்தும் ஆசிரியர், மன்னார்குடி கோபுரம் திருப்பணி எந்த பாதிப்பும் இல்லாமல், பழைய பொலிவுடன் சிறப்பாக நடந்ததை வியக்கிறார். 

மணல் வீச்சு என்ற சுத்தப்படுத்தும் முறையில் சில கோவில்களின் கோபுரங்களில் இருந்த பழமையான ஓவியங்கள் சில மணித்துளிகளில் அழிந்து போனதைக் குறிப்பிடுகிறார். சில கோபுரங்களில் செங்கல் மட்டும் கொண்டு சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செங்கல் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட சில கோபுரங்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், அந்தக் கலையை அறிந்தவர்கள் இன்று யாருமே இல்லை என்கிறது.

சிதைந்து போன கோவில்களில் இருந்து கற்களை எடுத்து எடுக்கப்பட்ட கோபுரங்கள் பற்றியும், திருப்பணிகள் செய்த நபர்கள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. மொட்டை கோபுரமாக இருந்து பின்னர் கட்டப்பட்ட கோபுரங்களையும் இந்நூலில் காணலாம். 

கோபுரங்கள், அவை எடுக்கப்பட்ட காலம், மன்னர்கள்  மற்றும் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு களஞ்சியமாக விளங்கும். 


வெளியீடு:
அகரம்
எண் .1, நிர்மலா நகர் 
தஞ்சாவூர் - 613 007



Monday, June 22, 2020

சிற்பம் தொன்மம் - செந்தீ நடராசன்

சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள். 


கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம்,  இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள். 

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும்.

கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனுமன் என்றால் நாம் எளிதாக கண்டுபிடுத்துவிடுவோம். மற்ற சிற்பங்களை நாம் அடையாளம் காண்பது சிரமமே. அப்படிச் சிலைகளை நோக்கி, இனம் கண்டறிய என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்நூல். 



 
கை அமைதிகள்(வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம்.. போன்றவை), சிற்பம் வைத்திருக்கும்  ஆயுதங்கள், அமர்ந்திருக்கும் வாகனம் அல்லது ஆசன வகை, கிரீட வகைகள் போன்றவை மூலம் இச்சிற்பம் இந்த மூர்த்தி என்பதை அறியலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிற்பங்களைக் கொண்டு செந்தீ அவர்கள் விளக்குகிறார். சிற்ப நூல்களில் அந்த மூர்த்திகளுக்கு உண்டான அளவுகளையும் சொல்கிறார். 

சில சிற்பங்களை விளக்கும்போது, வேறு பகுதிகளில் அந்தச் சிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை பற்றி விளக்கும்பொழுது, உமையொரு பாகனின் தலையலங்காரம் ஜடா மகுடமாகவோ அல்லது பாதி ஜடா மகுடம் மீதி கிரீடம் போல இருக்கும், ஆனால் திருச்செங்கோட்டில் உள்ள சிலை முடியை அள்ளி முடித்து குந்தளமாக கட்டி இருப்பதைச் சொல்கிறார். 

வேதங்களில் குறிப்பிடப்படாமல் பின்னர் தோன்றிய நரசிம்ம அவதாரம், அதன் சிலையமதி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல பெருமாளுக்கு தென்னகத்தில் பூதேவி, ஸ்ரீதேவி என இரு தேவிகள், ஆனால் வடக்கில் செல்லும்போது அங்கே ஒரே துணை என்பதையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆந்திராவில் ராமப்பா கோவிலில் உள்ள நடன மங்கையின் சிலை பற்றிய கட்டுரையில், ராமப்பா என்னும் சிற்பியின் பெயர்கொண்டே அந்தக் கோவில் குறிப்பிடப்படுவதை சொல்கிறார்.


 
வீரபத்திரன், கஜசம்காரமூர்த்தி, கங்காள நாதர், பிச்சாடனார் போன்ற சிற்பங்களையும், வரலாற்றையும், புராணக் கதைகளையும் விளக்குகிறது இந்நூல். பவுத்த, சமண சிற்பங்கள் பற்றியும் சில கட்டுரைகள் உள்ளன. புராணம், கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நூல். நூலைப் படித்த பின்னர், எந்த கோவிலுக்குச் சென்று ஒரு சிற்பத்தைக் கண்டால் நின்று பார்த்து விட்டே செல்வோம். அதுவே இந்நூலின் வெற்றி. 

சிற்பம் தொன்மம் 
செந்தீ நடராசன் 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

படங்கள்: இணையத்தில் இருந்து.