Monday, July 1, 2024

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார். 

கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது.


கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு எனச்  சொல்கிறார். 

இப்பாறைச் சிற்பத்தில் வடிக்கப்பட்ட விலங்குகள், பறவைகளை இமைய மலையில் கண்டது பற்றி வியக்கிறார். சிற்பத்தின் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கும் அவர், சிற்பம் காட்டும் நேரத்தினையும் குறிப்பிடுகிறார். சிற்பத்தில் இரை எடுக்காமல் இளைப்பாறும் மான், சிங்கங்கள் மற்றும் ஆற்றில் குளிக்கும் யானைகள் ஆகியவற்றை கொண்டு மதிய நேரமே எனச் சொல்கிறார். 




மேலும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் சிறப்பாக செதுக்கப்பட்ட யானைக் கூட்டம் பற்றியும் கூறுகிறார். பெரிய யானைகளுக்கு இடையில் காணப்படும் அனைத்து சிறு யானைகளும்  குட்டிகள் என்றே எல்லோரும் நினைப்பார்கள். அவை எல்லாமே சிறு குட்டிகள் அல்ல, வளர்ந்த யானைகளும் உண்டு, ஏனென்றால் சிலவற்றுக்கு தந்தம் உண்டு. அப்படி என்றால் ஏன் சிறிதாக காட்ட வேண்டும்?. ஆற்றின் கரையில் கொஞ்சம் தள்ளி, தள்ளி அந்த பெரிய யானைகள் குளித்துக் கொண்டிருக்கின்றன. கண்ணால் கண்ட காட்சியை சிற்பத்தில் கொண்டுவர சிற்பிகள் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளனர் என்கிறார் பாலுசாமி. 

ஒரு சிற்பம் உணர்த்த வரும் நிகழ்வை பொத்தாம் பொதுவாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அதற்கு கதைகள், புராணம் பற்றிய தெளிவும்  நிகழும் இடம் போன்ற அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டும் எனத்  தூண்டுவது இந்நூல்.

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் 
ஆசிரியர்: சா. பாலுசாமி
பதிப்பகம்: காலச்சுவடு 

No comments:

Post a Comment