திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 'ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் (திருவட்டாறு கோவில் வரலாறு)' . ஒரு கோவிலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும் மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். கோவிலின் வழிபாட்டு முறைகள், வரலாறு, சிற்பங்கள், கதைகள், இலக்கியங்களில், ஆழ்வார் பாடல்களில் இக்கோவில் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் வாய்மொழிக் கதைகள் என ஒன்று விடாமல் எழுதியுள்ளார் ஆசிரியர். ஒரு கோவில் என்பது சாதாரண இடம் அல்ல. பல நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டு, சில மாற்றங்கள் காலப்போக்கில் உருவாகி இன்று நம்முன் வலிமை குன்றாமல் நிற்கிறது. "ஒரு ஆலயத்தின் சிறப்பிற்கு பத்து விசேஷக் குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த ஆலயம் பழமையானதாய், பாரம்பரிம் உடையதாய் இருத்தல்; கோவிலுடன் தொடர்புடையதாக ஓலை ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிடைத்தல்; கோவிலுக்கும் வட்டார வரலாற்றுக்கும் மிகுந்த தொடர்பு இருத்தல்; புராணங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல், தலபுராணங்கள் இருத்தல்; கோவிலில...