Showing posts with label புவனா நடராஜன். Show all posts
Showing posts with label புவனா நடராஜன். Show all posts

Tuesday, April 14, 2026

தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை

ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?'  என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு  அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார். 


தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வளவு விசாலமும் அன்பும் பரிவும் அறிவும் கொண்ட மனது? ' என்கிறார் அசோகமித்திரன். 

தேவதாசும் பார்வதியும் சிறுவயதில் இருந்தே பழகி வருகின்றனர். இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் விளையாட்டு, மீன் பிடித்தல் என இருவரின் பொழுதுபோக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாத வண்ணம் இருக்கிறது. தேவதாஸ் அடித்தாலும் பின்னர் இருவரும் சமரசமாகி விளையாட்டைத் தொடர்கின்றனர். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பார்வதி படிப்பைத் தொடராமல் நின்று விடுகிறாள். தேவதாஸை சுற்றியே அவளின் உலகம் சுழல்கிறது. ஒருமுறை தேவதாஸ் பார்வதியிடம் காசை வைத்துக்கொள், பின்னர் வாங்கி கொள்கிறேன் என்று சொல்ல அவளோ தெருவில் பாடிவரும் பாடகர்களுக்கு அந்தப் பணத்தை அளித்து விடுகிறாள். பின்னர் விசயம் தெரிந்து அவன் கேட்கும் கேள்வியும், அதற்கு அவள் அளிக்கும் விளக்கமும்  நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

மேற்படிப்பு படிப்பதற்காக கல்கத்தா சென்று தங்கி படிக்கிறான் தேவதாஸ். அவனுடைய கிராமத்தில் இருக்கும்போதே அவ்வப்பொழுது அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அங்கே அவனுடன் தங்கியிருக்கும் நண்பனுடன் விலைமகளான சந்திரமுகியைச் சந்திக்கிறான். அவளின் உடலைத் தொடாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு  வந்துவிடும் தேவதாஸைக் கண்டு அவளுக்கு தேவதாஸ் மேல் ஒரு நட்பு தோன்றுகிறது. 



இங்கே கிராமத்தில் பார்வதியின் அம்மா தேவதாஸின் அம்மாவிடம் தன் மகளும், தேவதாசும் சிறுவயதில் இருந்தே பழகுவதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசுகிறாள். அதற்கு தேவதாசின் தாய் 'நீங்கள் பொருளை வாங்கி கொண்டு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கும் கூட்டம். இது தேவதாஸின் அப்பாவுக்கு பிடிக்காது' எனச் சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள். தேவதாஸ் குடும்பம் ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். வசதி குறைவான பார்வதியை எப்படி அவனுக்கு கட்டி வைப்பது என்பது தேவதாசுடைய தாயின் எண்ணம். எனவே பார்வதியின் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகின்றனர். அழகியான பார்வதியை மணக்க 40 வயது கடந்த பணக்கார மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி இரண்டு பிள்ளைகளும் உண்டு. முதல் மனைவி இறந்துவிட பார்வதியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்கிறார். 

அவருடனான திருமணத்துக்கு முன்பு பார்வதி தைரியமாக தேவதாஸை அவனுடைய வீட்டில் சென்று சந்திக்கிறாள். அவளே தேவதாஸின் மீதுள்ள காதலைச் சொல்கிறாள். ஆனால் அவனோ தன் பெற்றோரை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறான், மேலும் உன்மேல் எனக்கு எந்த பிரியமும் இல்லை என்று சொல்லிவிடுகிறான். அடுத்த நாளே அவன் கல்கத்தா சென்று விடுகிறான். ஆனால் கொஞ்ச நாளிலேயே திரும்ப வந்து அவளிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், கொஞ்ச நாள் பொறு என்கிறான். அதற்கு அவளோ 'எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள், உன்னை போன்ற பலவீனமான சஞ்சல புத்தியுள்ள மனிதனுக்கு தன் பெண்ணை யார்தான் கட்டி வைப்பார்கள்' என்று சொல்லிவிடுகிறாள். பார்வதியின் திருமணம் நடந்து அவளின் கணவர் வீட்டுக்குச் சென்று விடுகிறாள் பார்வதி. 

பின்னர் தேவதாஸ் குடிக்கு அடிமையாகி அவன் உடல்நலம் கெட்டுப்போகிறது. அவனின் தந்தையும் இறந்துபோகிறார். அவரின் இறப்புக்கு பின்பு கிடைக்கும் பணத்தில் சந்திரமுகிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அவள் அதனைக் கொண்டு ஒரு கிராமத்துக்குச் சென்று தன்னால் ஆன உதவிகளை அந்த மக்களுக்கு செய்கிறாள்.  வயதான அவனின் தாயும் காசி சென்று வசிக்கிறாள். கூடப் பிறந்த அண்ணனுடன் அவனுக்கு பெரிய ஒட்டுதலும் இல்லை. எனவே மனம் போன போக்கில் இருக்கிறான். மீதி இருக்கும்  பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தே அழிக்கிறான் தேவதாஸ். தேவதாஸின் உடல்நிலை மிகவும் கெட்டுபோனதை அறிந்த சந்திரமுகி கல்கத்தா வந்து அவனை தெருவோரம் இருந்து மீட்டு வருகிறாள். கொஞ்ச நாட்கள் அவளிடம் தங்கியிருக்கும் அவன், நான் சொந்த ஊருக்குப் போகிறேன், நீயும் சென்றுவிடு என அவளை அனுப்பிவிட்டு ஊருக்கு கிளம்புகிறான். நீண்ட நாள் வாழமாட்டோம் என்று அவனுக்கு தனது உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிகிறது. 

தேவதாஸின் தந்தை இறப்புக்கு வந்த பார்வதி அவனுடைய உடல்நிலை அறிந்து வேதனைப்படுகிறாள். அவளுக்கு கணவர் வீட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு மகாராணி போல இருக்கிறாள். தேவதாஸோ இங்கே துன்பப்படுவதில் அவளுக்கு மிகுந்த துயரம் ஏற்படுகிறது. 'நீ என் வீட்டுக்கு வந்துவிடு, நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள். அவளின் சிறுபிள்ளைத் தனமான பேச்சை கேட்டு சிரிக்கும் அவன் 'உன் வீட்டில் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களா' எனக் கேட்க, அவளோ 'ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் நீ என்னுடன் வந்து விடு. உனக்கு நான் சேவை செய்கிறேன்' என்கிறாள். 'சரி, எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் கண்டிப்பாக உன்னிடம் வருவேன்' என்கிறான் தேவதாஸ். 

ஊருக்குச் செல்லும் வழியில் பார்வதிக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது. கூட வந்த வேலைக்காரனை ஏமாற்றி விட்டு பாதி வழியில் இறங்கி ஒரு மழைக்கால இரவில் பார்வதியின் வீட்டை நோக்கி மாட்டு வண்டியில் செல்கிறான் தேவதாஸ். செல்லும் வழியிலேயே அவனுக்கு நினைவுகள் மாறி மாறி வருகின்றன, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன்னுடைய பார்வதியை பார்க்க வேண்டும் என நினைக்கிறான். மயக்கம் போட்டு விட்ட அவனை, பெரிய மாளிகை போன்ற பார்வதியின் வீட்டு முன்னால்  இருக்கும் 
மரத்தடி திண்ணையில் இறக்கி படுக்க வைக்கிறான் வண்டியோட்டி. தேவதாஸ் மலங்க மலங்க விழிக்கிறான். வீதியில் உள்ளோர், பார்வதியின் வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் என அனைவருமே, யாரோ ஒரு வழிப்போக்கர் என நினைத்து அவனைப் பார்க்கிறார்கள். ஒரு இரவு முழுவதுமே அவன் உயிர் ஊசலாடுகிறது. பின்னர் பார்வதியைப் பார்க்காமலேயே இறந்து போகிறான் தேவதாஸ். 

காவலர்கள் வந்த பின்னர் அவன் சட்டைப் பையில் இருந்த கடிதங்கள் மூலம் தேவதாஸ் எனத் தெரிய வருகிறது. பார்வதியின் ஊர் என்ற தெரிந்து 'சின்னம்மா வந்து பார்த்தால் யார் என்று சொல்லி விடலாம்' என மகன் சொல்ல கணவனோ அவள் இங்கே எல்லாம் வரமாட்டாள் எனச் சொல்கிறார். தேவதாசின் உடலை சண்டாளன் வந்து கட்டி எடுத்துக் கொண்டுபோய் எரித்துவிடுகிறான். பெரிய பணக்காரன் இங்கே வந்து ஏன் இறந்து போக வேண்டும், மேலும் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என வேலைக்காரர்கள் பார்வதியினிடம் சொல்கின்றனர். யார் என்று அறிந்ததும் அவனைப் பார்க்க வீதிக்கு ஓடி வருகிறாள் ஒரு பைத்தியம் போல. ஆனால் மனம் பேதலித்து மயக்கம் போட்டு விழுந்த அவளை உள்ளே தூக்கிச் செல்கின்றனர். 

இறுதியில் 'தேவதாஸைப் போன்ற துரதிருஷ்டம் பிடித்த பாவிகளைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவனுக்கு ஏற்பட்ட மரணத்தைப் போல உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தபடி அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி நட்பையும், பாசத்தையும் உணர்ந்துகொண்ட நேரத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அந்தக் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப்போக வேண்டும் ' என்று சொல்கிறார் சரத் சந்திரர். 

தேவதாஸ்
சரத் சந்திர சட்டோபாத்யாயா 
தமிழில்: புவனா நடராஜன்