Friday, November 15, 2019

பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் (தமிழில் - ரா.கி.ரங்கராஜன்)

செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெற்ற கைதி, சிறையில் இருந்து தப்பிக்க போராடுவதே இந்நாவலின் களம். இந்நூல் பாப்பிலான் என்ற பெயரில் பிரெஞ்சில் வெளியாகி, தமிழில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூலை மானிட சாசனம் என்று சொல்வதற்கு காரணம், எத்தனை துயரங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் மனித மனம் விடுதலை ஒன்றையே தனக்கான பெரும் சொத்தாக நினைப்பதை நாவல் விவரிக்கிறது. அந்தச் சுதந்திரத்துக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க மனிதர்கள் தயாராகவே இருப்பார்கள். 

'விட்டு விடுதலையாகிப் பறப்பாய் இந்தச் சிட்டுக்குருவி போல ' என்று பாரதி சொன்னதுபோல் இந்நாவலில் வரும் நாயகன் பட்டாம்பூச்சி, விடுதலை ஒன்றையே நோக்கமாக கொண்டிருக்கிறான். செய்யாத குற்றத்துக்கு தான் தண்டனை அனுபவிக்க காரணமாக இருந்த ஜூரிகளை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறான் பட்டாம்பூச்சி. கடல் தாண்டி தான் சிறைக்கைதியாக இருக்கும் தீவிலிருந்து தப்பிக்க முயல்கிறான். எதற்கும் அவன் பயப்படுவதில்லை. கொஞ்சம் பணமும் மறைத்து வைத்திருப்பதால் அவனுக்கு அது உதவியாக இருக்கிறது. சில நண்பர்களையும் சேர்த்துக் கொள்கிறான். 

ஒரு முறையல்ல, எட்டு முறை தப்பிக்க முயற்சி செய்கிறான். சில முறை அவனின் முயற்சிகள் தோல்வியடைகின்றன. சில முறை வெற்றிபெற்று கடலைக் கடந்தாலும், அவன் சென்று சேர்ந்த நாட்டின் சட்ட திட்டங்களால் திரும்பவும் சிறைக்கு அனுப்ப படுகிறான். எப்படியும் அவனுக்கு யாராவது ஒருவர் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். அறிவும் பலமும் இருப்பதால் அவன் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அநியாயத்தை தட்டிக்கேட்க அவன் தயங்குவதேயில்லை. 


ஒருமுறை பழங்குடிகள் வாழும் தீவில் வழி தவறி அடைக்கலம் கோர நேர்கிறது. யாரையுமே அனுமதிக்காத அவர்கள் பட்டாம்பூச்சியைப் பார்த்ததும் சேர்த்துக்கொள்கிறார்கள். அவன் அங்கே சில மாதங்கள் தங்கி இரண்டு பெண்களையும் மணக்கிறான். வாழ்க்கை நன்றாகவே செல்கிறது அந்தத் தீவில். ஆனால் அங்கே இருப்பதும் அவனுக்கு ஒரு சிறையாக இருக்கிறது. அங்கே இருந்து கிளம்புகிறான். 

மனிதர்கள் மேல் மிக்க அன்பு உள்ளவனாக இருக்கிறான் பட்டாம்பூச்சி. மற்றவர்களும் அவன் மேல் அன்புள்ளவர்களாகவே இருக்கிறார்கள். நாம்தான் இந்த சிறையில் அகப்பட்டு துயரங்கள் நிரம்பிய வாழ்க்கை விதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து பட்டாம்பூச்சியாவது தப்பிக்கட்டும் என நினைக்கிறார்கள் மற்ற சிறைவாசிகள். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்கள். நண்பர்கள் அவனுக்கு எப்போதும் துணையிருக்கிறார்கள். தப்பிச் செல்லும்போதும், சிறையில் இருக்கும்போதும் சில நண்பர்களை அவன் இழக்க நேர்கிறது. 

தப்பிச் செல்லும்போது கடலில் காவலர்கள் என்னைச் சுட்டால், நான் சுதந்திரமானவனாகவே செத்தேன், சிறையில் அடைக்கப்பட்ட நாலு சுவருக்குள் இல்லையென மகிழ்ச்சியடைவேன் என்கிறான் பட்டாம்பூச்சி. தப்பும் முயற்சியில் தோல்வியுற்று திரும்பவும் சிறைக்கு வரும்போது அவனுக்கு அதிக தண்டனைகள் தரப்படுகின்றன. யாருமேயற்ற தனிமையான அறையில் அவன் அடைபட நேர்கிறது. யாருடன் பேசவும், பார்க்கவும் முடியாது. பூரான்களும், பல்லிகளும் நிரம்பிய அந்த அறையில் அவன் நம்பிக்கையை இழப்பதேயில்லை. கொடுமையான மனச்சிதைவுக்கு உட்தள்ளும் அந்த அறையில் இருந்துகொண்டு, நாளை நான் தப்பி விடுதலையடைவேன் என்றே நம்பிக்கையுடன் நாட்களை கடத்துகிறான். 

எல்லோரும் என்னை ஒரு கைதியாக நினைக்க கூடாது, நானும் ஒரு நல்ல மனிதன்தான். இந்த நாட்டின் சட்ட திட்டங்களால் தவறான தண்டனை பெற்ற எனக்கு அந்த சட்டதிட்டங்களால் எந்தப் பயனும் இருப்பதில்லை என்கிறான் பட்டாம்பூச்சி. பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட அவன் இறுதி முயற்சியில் தப்பி விடுகிறான். பிரெஞ்சு தேசத்துடன் எந்த உறவும் இல்லாத வெனிசுலா தேசம் அவனை சேர்த்துக்கொள்கிறது. எனவே அவனை திரும்பவும் ஒப்படைக்க மாட்டார்கள். பட்டாம்பூச்சி இப்போது சுதந்திரம் பெற்றவன். எதற்காக அவன் இத்தனை வருடங்கள் துன்பப்பட்டானோ அதை அடைந்துவிட்டான். 




Friday, November 8, 2019

சுதந்திரத்தின் நிறம் - லாரா கோப்பா

காந்தியம் என்பது தன் நலனை விட ஏழைகளின் நலனே முக்கியம் என நினைக்க வைப்பது. அதற்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் பின்வாங்காமல் அறவழியில் போராடும் குணம் கொண்டது. ஒரு செயலில் வெற்றி கிடைத்த பின்னர், ஓய்ந்து விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க வைப்பது. 

கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவருமே சுதந்திர போராட்ட வீரர்கள். காந்திய வழியில் நடப்பவர்கள்.  கிருஷ்ணம்மாளைத் திருமணம் செய்யும் முன்னர் ஜெகநாதன் அவரிடம் 'எனக்கென எந்த சொத்தும் சேர்க்க மாட்டேன், ஒரு ஊரில் நிலையாக இருக்க முடியாது. சமைக்கத் தேவையான பாத்திரங்கள் கூட மண் பாத்திரங்கள்தான், ஏனெனில் வேறு ஊருக்குச் செல்லும்போது அப்படியே போட்டுவிட்டு போய்விடலாம். சுமைகள் குறையும்.' எனச் சொல்கிறார்.


சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள், அதை பெற்ற பின்னர் மகிழ்ச்சி அடைய முடிவதில்லை. ஏனெனில், புதிய அரசானது ஏழைகளுக்கு ஏதாவது செய்யும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் காரியங்கள் எரிச்சலை வரவைக்கிறது. அப்பொழுது காந்தியர் வினோபா அவர்கள், நிலங்களைத் தானமாக வாங்கி ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறார். கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவரும் அவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். வினோபாவின் வழியில் தமிழ்நாட்டிலும் நிலங்களைத் தானம் பெற்று ஏழை மக்களுக்கு அளிக்கிறார்கள். 

ஆனால் தானம் அளித்தவர்கள் நல்ல நிலங்களை வைத்துக்கொண்டு பாசன வசதியில்லாத நிலங்களைக் கொடுக்கிறார்கள். நிலம் கிடைத்தும் ஏழைகள் முன்னேற வழியில்லாமல் இருக்கிறது. கிருஷ்ணம்மாள் யோசித்துப் பார்க்கிறார். வினோபாவிடம் கேட்டால், ஒரு ஞானிக்கே உரிய பதிலாக 'இன்று இந்த நிலங்களைத் தருகிறார்கள். பின்னால் நல்ல நிலங்களைத் தானம் கொடுப்பார்கள்' என்கிறார். ஆனால், நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தால் மட்டுமே ஏழைகளுக்கு வருவாய் வரும் என்று உணர்கிறார் கிருஷ்ணம்மாள். 

எனவே நல்ல நிலங்களுக்கு உரிய பணம் தந்து வாங்கி அதை அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் உழைத்து பொருள் ஈட்ட முடியும் என்பதை உணர்கிறார். ஆனால், அதற்கான பெரும் தொகை கடனாக யார் தருவார்கள் என முயன்று, அரசிடம் தனது கோரிக்கையை வைக்கிறார். அப்போதிருந்த காமராஜர் அரசு அதை ஏற்றுக்கொண்டு கடன் தருகிறது. சொன்னது போலவே அனைத்து நிலங்களின் கடன்களும் முன்னரே அடைக்கப்பட்டு நிலம் இப்பொழுது ஏழைகளுக்கு சொந்தமாகிறது. ஆனால், இதில் ஒரு முரணாக பூதான இயக்கத்தினர், நிலத்தை பணம் கொடுத்து வாங்குவது தங்களின் கொள்கைக்கு மாறானது என்று சொல்ல, தனது செயலில் புதுபாதையை கண்ட கிருஷ்ணம்மாள் அங்கிருந்து விலகுகிறார்.

சில நேரங்களில் நல்ல நோக்கங்களுக்கு போராடியும் கூட, எந்த அரசாங்கம் அமைய உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கினார்களோ, அதே புதிய அரசாங்கம் அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதை வேதனையுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன். 


எத்தனையோ நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வாழ்வளித்த  கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரும் தாண்டிய தடைகள், அப்போதைய தலைவர்களுடன் இருந்த தொடர்புகள், சிறை வாழ்க்கை, உண்ணாநோன்பு போராட்டங்கள் என வரலாற்றைத் திரும்பி பார்க்கும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் காந்திய வழியில் ஆர்வம் கொண்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா. கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரையும் அம்மா அப்பா என்றே அழைக்கிறார் லாரா. இருவருடனும் ஆங்கிலத்தில் பேட்டியாக அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை சொல்லச் செய்து பின்னர் இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை அழகாக தமிழில் மொழி பெயர்த்தவர் B.R. மகாதேவன். அம்மா கிருஷ்ணம்மாள் கையெழுத்துடன் அனுப்பி வைத்த தன்னறம்-குக்கூ பதிப்பகத்துக்கு அன்பு நன்றிகள். 




Wednesday, October 23, 2019

புத்தம் வீடு : ஹெப்சிபா ஜேசுதாசன்

எங்கள் சொந்த ஊரான நல்லகாளிபாளையத்தில் பனை மரங்கள் உண்டு. தெளுவு என்று எங்கள் ஊரில் சொல்கிற பதநீரும், நுங்கும், அதன் பின்னர் பனம்பழம், கிழங்கு என்றும் பனையோடு வாழ்ந்தவர்கள். பனங்கிழங்கைத் தோண்டி எடுத்த பின்னர் விதையை வெட்டினால் உள்ளே கெட்டியாய் தேங்காய் போல பருப்பு இருக்கும். அதையும் தின்று செரித்த நாள் அன்று. பனையேறிகள் நுங்கு வெட்டும் காலத்தில் அவர்களோடு சென்றால் இளநுங்கை எல்லாம் சீவித் தருவார்கள். 

பனையேறிகள் என்றால் அவ்வளவு ஒன்றும் வசதியானவர்கள் அல்ல அப்பொழுது. கருப்பட்டியும், நுங்கும், பனங்கிழங்கும் என வருடம் முழுவதும் பனை கொடுத்தாலும், அதை விற்று வரும் பணம் ஒரு பனையேறியின் குடும்பத்துக்கு பற்றாது. எப்படியும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள். முதியவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். இதில் புகைப்பழக்கமும் குடியும் உண்டென்றால் நித்தமும் குடும்பத்தில் சண்டையே. 

ஹெப்சிபா அவர்கள் எழுதிய புத்தம் வீடு நாவலில் பனையேறும் மக்களும், சொந்த நிலமிருந்தும் வசதியில்லாத மக்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கண்ணப்பச்சிக்கு இரண்டு மகன்கள். சொந்த நிலம் உண்டு. இருக்கும் நிலத்தில் பனை மரங்கள் உண்டு. பனையேற பனையேறிகள் வருவதுண்டு. பனையேறிகளும் நிலத்தின் உரிமையாளர்களும் செல்வது ஒரே சர்ச் என்றாலும் சாதி கூடவே இருக்கிறது. 

கண்ணப்பச்சியின் இரண்டு மகன்களில் மூத்தவர் குடிப் பழக்கம் உள்ளவர். அவருக்கு லிஸி என்ற மகள் உண்டு. இரண்டாம் மகன் வியாபாரம் எனச் சொல்லிக்கொண்டு பணத்தை இழக்கிறார். இரண்டாம் மகனுக்கு லில்லி என்ற மகள். ஆக இரண்டு மகன்களும் சரியில்லை. ஆடு குழை தின்கிறது போல் வெற்றிலை போட்ட கண்ணப்பச்சியின் மனைவி கண்ணம்மை இப்போது உயிருடன் இல்லை. 

சொந்தமாக நிலமிருந்தாலும் வசதிகள் அற்ற வாழ்க்கை. கொஞ்சம் சேர்த்து வைத்து வாழலாம் என்றால் கண்ணப்பச்சியின் இரண்டு மகன்களும் சரியில்லை. ஊரில் மரம் ஏறிப் பிழைப்பவர்கள் கூட படிப்பு, சொந்தமாக கொஞ்சம் நிலம் என்று முன்னேறும்போது தம் மகன்கள் இப்படி இருப்பது அவரை வாட்டுகிறது. இரண்டு பேத்திகளையும் எப்படி இவன்கள் கல்யாணம் முடித்து வைக்கப் போகிறார்களோ என்ற கவலை வேறு. 

மூத்த பேத்தி லிஸி இப்பொழுது வீட்டில் இருக்கிறாள். இரண்டாம் பேத்தி லில்லி பள்ளிக்குப் போகிறாள். அவர்கள் நிலத்தில் மரம் ஏறுபவரின் மகன் தங்கராஜும், லிஸியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அவனுக்கு லிஸியின் மேல் காதல். நேரடியாக பெண் கேட்க தயங்கி சர்ச் பாதிரியிடம் சொல்கிறான். அவரோ இதெல்லாம் தனக்கு தேவையில்லாத வேலை என ஒதுங்கிக்கொள்கிறார். ஆனால் விசயம் வெளியே கசிந்து லிஸி வீட்டாருக்கு தெரியவருகிறது. வேறு சாதி என்பதால் தங்கராசுவின் அப்பாவை அழைத்து எச்சரிக்கை செய்கிறார்கள். அவரும் இனி அவன் இந்த மாதிரி செய்யமாட்டான் எனச் சொல்கிறார். 

பின்னர் அந்தக் கிராமத்தில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர் லிசியைப் பெண் கேட்கிறார். ஆனால் வீட்டாரால் குழப்பமாகி லில்லியை மணக்க நேர்கிறது. மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் செய்வது கண்ணாப்பச்சி, லிஸியின் பெற்றோர் போன்றோருக்கு பிடிப்பதில்லை. கல்யாணம் நடந்து முடிந்து லில்லி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். 

கல்யாணம் முடிந்த அடுத்த நாள் லில்லியின் அப்பா ஒரு மரத்தடியில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். கொலை செய்த அரிவாள் தங்கராசுவினுடையது. எனவே அவனை காவல்துறை பிடித்துச் செல்கிறது. லிசி காதல் விவகாரத்தால் லில்லியின் அப்பாவை கொலை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அதை தங்கையன் மறுக்கிறான். 

முடிவில் இன்பம் போல கதையின் முடிவிலும் சுபமே. ஆனால் கதை மாந்தர்களின் மனதை நேரில் பார்ப்பதுபோல் கதையை கொண்டு செல்கிறார் ஆசிரியர். சிறு வயது வாழ்க்கை, அழகான காதல் கதை, கிராமத்து வாழ்வு, சொத்து பிரச்சினை, சாதி, பனையேறுபவர்கள் பற்றி என ஒரு அழகான சித்திரம் வரைந்திருக்கிறார் நாவலில். 





Monday, September 23, 2019

தத்வமஸி

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தின் யோக வகுப்பில் கலந்து கொண்டபோது இரண்டு சமஸ்கிருத பாடல்களைச் சொல்லிக்கொடுத்தனர். அப்பாடல்களின் மூலம் எது எனத் தெரியாமலே அதை மனனம் செய்துகொண்டேன். அந்தப் பாடல்கள்;

அசத்தோமா சத் கமய
தமசோமா ஜோதிர் கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.

ஸக நா வவது
ஸக நௌ புனக்தூ
ஸக வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதிதமஸ்து
மாவித் விஷா வஹை
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.

மேற்கண்ட இருபாடல்களில் முதல் பாடலுக்கு அர்த்தம் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாடலில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஏதோ ஒரு தமிழ் பக்தி பாட்டில் 'ஸக நா வவது' என்ற வரிகள் வரும். அதைக்கொண்டு இது ஏதோ ஒரு பக்தி பாட்டு என நினைத்து கொண்டேன். ஆனால், இது ஒரு உபநிடத வரி என்று , சுகுமார் அழீகோடு அவர்கள் எழுதிய தத்வமஸி புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது.

வேதம் என்பது அனைவருக்கும் உரிமையானது. வேதம் மந்திரங்கள் அடங்கியவை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அவற்றையும் தாண்டி அறத்தை பேசும் வேதத்தையும், வேதத்தில் இருந்து முளைத்தாலும் தனிசிறப்பு வாய்ந்த உபனிடதங்களையும் சுகுமார் இந்நூலில் அழகுற விளக்குகிறார். வேதம் என்பதே 'வித்' எனும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. வித் என்னும் சொல்லுக்கு 'அறிக' என்பது பொருள். வேதத்தை ஒரு மாபெரும் தரு(மரம்) என எடுத்து கொண்டால் அதில் மலர்ந்த ஒரு மனோகரமான பூ தான் உபநிடதங்கள்.


உபநிஷத் என்ற சொல்லுக்கு 'அருகே அமர்ந்து இருக்கிற', 'அடுத்து அமர்ந்து இருக்கிற'என்ற பொருள் சொல்லப்பட்டாலும், சங்கரரின் விளக்கத்தில் இருந்து 'எந்த வித்யை அறிந்து கொண்டால் நானாவித துன்பங்கள் மறையுமோ அதுதான் உபநிஷத்' என்று சொல்கிறார் ஆசிரியர். 

உபநிடதங்கள் என்பது காலத்தால் மாறாத ஒரு பெரும்பொருளாக இருக்க காரணம் அதன் மூன்று சிறப்புகள். முதலாவதாக வேதத்தில் இருந்து தோன்றிய மறுமலர்ச்சி. இரண்டாவது பழையவற்றை மறுப்பது. மூன்றாவது புதிதாக ஒரு தரிசனத்தைக் கண்டறிவது. இந்த மூன்று நிலையிலும் சிறப்பு வாய்ந்த உபநிடதம் உயர்ந்து இமையம் போல் விளங்குகிறது. 

வேதமும் அதிலிருந்து தோன்றிய யாகங்களுமே முக்கியம் என்ற ஒரு காலகட்டம் இருந்தது. அதன் பயனாய் வளர்ந்தது பிரம்மாணமும், சடங்குகளும்,  யாகத்தில் இருந்து தோன்றிய கண்களை மறைக்கக்கூடிய புகை மண்டலமும் தான். இந்திய தொல் வானில் அந்த மாபெரும் புகை எல்லாவற்றையும் மறைக்கும் சூழலில், ஒரு ஒளிச்சுடராய் தோன்றியது உபநிடதங்கள். அறத்தையும், உண்மையான நிலைத்த பொருள் பற்றியும் உரைத்ததால் பிரம்மாணம் தளர்ந்து உபனிடத ஒளி வீசியது. அதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பின்னரே புத்தர் போன்ற ஞானிகள் வரவும், அவர்கள் கண்ட தரிசனத்தை முன்வைக்கவும் முடிந்தது. இவ்வளவு பெரிய நிலத்தில் வேதம் என்ற ஒன்று மட்டும் இயங்காமல் எல்லாவற்றுக்கும் இடமளிக்க காரணம் உபநிடதங்கள் கூறிய வார்த்தைகளும் அதன் தரிசன முறைகளும்தான்.

மூன்று பகுதிகளாக இருக்கும் இந்நூலில் முதல் பகுதி வேதம், பிரம்மாணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்கள் பற்றி விளக்குகிறது. அவை தோன்றிய வரலாற்றையும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விளக்குகிறார்.

(சுகுமார் அழீக்கோடு)

நூற்றுக்கும் மேற்பட்ட உபநிடதங்களில் முக்கியமான பத்து உபநிடதங்கள் பற்றி இரண்டாம் பகுதியில் இடம்பெறுகிறது. மூன்றாம் பகுதியில் இன்றைய நிலையில் வேதம், உபநிடதங்கள் பற்றிய பார்வையையும், மேலை நாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும் சொல்கிறது. 

உபனிடதங்களை விளக்கும்பொழுது, அதில் வரும் வரிகளுக்கு அர்த்தம் சொல்லும்போது, சங்கரர் முதலாக மேலை நாட்டு அறிஞர்கள் வரை அவர்கள் சொன்ன கருத்துக்களை சொல்கிறார் ஆசிரியர். அந்தக் குறிப்புகளையும் தனியாக ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் கொடுத்திருக்கிறார்.

ஈசம், கேனம், கடம், பிரச்சனம், முண்டகம், மாண்டூக்யம், தைத்திரியம், ஐதேரேயம், சாந்தோக்யம் மற்றும் பிருகதாரண்யகம் முதலான பத்து உபநிடதங்கள் ஏன் முக்கியமானவை, அவற்றின் பிரசித்தி பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவாக சொல்கிறார் ஆசிரியர். 

தத்வமஸி, அகம் பிரஹ்மாஸ்மி, சத்யமேவ ஜயதே, நேதி நேதி, ஈசாவாஸ்யம் இதம் சர்வம் போன்ற  உபநிடத்தில் இடம்பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவுபடச் சொல்கிறார். தத்வமஸி என்ற சொல்லுக்கு, 'நீயே அது' என்ற பொருள் இருந்தாலும், தத்+த்வம் எனப்பிரித்து தத் என்ற சொல்லுக்கு வெளியே இருப்பதையும், த்வம் என்றால் உள்முகமான இருப்பையும் கண்டு , இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை உண்டு. அதைக் கண்டறிவதுதான் தத்வமஸி என்ற சொல்லின் நோக்கம் என சொல்கிறது இந்நூல். மேலும் வாய்மையே வெல்லும் என்ற வரியான சத்யமேவ ஜெயதே எனும் வாக்கியம் இந்திய அரசில் அமைந்தது பற்றியும் சொல்கிறது. 

பிருகதாரண்ய உபனிடதத்தில் ஒரு அவையில் கேட்கப்படும் கேள்விக்கு யாக்ஞவல்கியரின்  பதில் கீழே: 
மனிதனுக்கு ஒளி தருவது எது?
சூரியன்
அஸ்தமித்தால்?
சந்திரன்
இரண்டும் இல்லையென்றால்?
தீ
அது இல்லையென்று ஆகுமானால் ?
சொல்
அதுவும் போனால்..?
ஒரு தேவதை
எதுவுமே இல்லாதிருக்கும்போது?
ஆன்மா.


'ஓம் பூர்ணமத'  எனத் தொடங்கும் உபனிடத சாந்தி பாடலில், பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின்னரும் பூரணமே எஞ்சுகிறது என்ற மாபெரும் அறிவைப் பற்றி ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. அந்த வரிகள்;
ஓம் பூர்ணமத:
பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி

யமனுக்கும் நசிகேதனுக்கும் நடந்த உரையாடல் பற்றியும், மற்ற சில புராணக்கதைகளும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது.

இப்புத்தகம் படித்த பின்னர், வேதம் என்றால் என்ன, உபநிடதங்கள் என்றால் என்ன, எந்த வகையில் அவை முக்கியமானவை, மேலை அறிஞர்கள் வேதம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை, சங்கரர் முதல்கொண்டு அரவிந்தர் வரை உபநிடதம் ஈர்க்க காரணம் என்னவென்பதை அறிய நேர்ந்தது. காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்திய தத்துவம், வேதங்கள், உபநிஷத் பற்றி அறிய விரும்பும் வாசகனுக்கு, இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும். 

தத்வமஸி
சுகுமார் அழீக்கோடு (மலையாள மூலம்)
தமிழில்: ருத்ர துளசிதாஸ்
பதிப்பு: சாகித்ய அகாதெமி




Thursday, July 25, 2019

அவன் காட்டை வென்றான் - கேசவ ரெட்டி

'அவன் காட்டை வென்றான்' நாவல் ஒரு கிழவரையும், அவர் வளர்க்கும் பன்றிகளையும், காட்டையும் பற்றிய கதை. அவருக்கு பெயர் எல்லாம் நாவலில் இல்லை. அவருடன் வசிப்பது அவரின் பேரன் மட்டுமே. வேறு யாருமில்லை. காடு எப்பொழுதுமே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பியது. காடுகளை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோர்கள் பார்த்த காடுகள் இப்பொழுது இல்லை. காடுகளை நாம் இப்பொழுது மாற்றிவிட்டோம். 

அன்று காலை அவருக்கு முடியாததால், பன்றிகளை மேய்க்க பையனை அனுப்புகிறார். பொழுது சாய்ந்த பின்னரும் பையன் பன்றிகளைத் திருப்பி ஓட்டி வராததால் கிழவர் பயந்து போகிறார். பன்றிகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ இல்லை பையன் எங்காவது போயிருப்பானோ என்றெல்லாம் நினைக்கிறார். திடீரென அவருக்கு, ஒரு சினைப்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பியது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் பன்றிதான் எங்காவது தொலைந்து போய், பையன் தேடிக் கொண்டிருக்கிறானோ என நினைக்கிறார். 

கொஞ்ச நேரம் கழித்து பையன் பன்றிகளோடு திரும்புகிறான். சினைப்பன்றி தொலைந்து போனதால், அதைத் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அழுகிறான் பேரன். சரி, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று கையில் ஈட்டியுடன் கிளம்புகிறார் பெரியவர். 

அவரிடம் இருந்த இரண்டு சினைப்பன்றிகளில் ஒன்று குட்டிகளை ஈன்று குடிசையிலேயே தங்கிவிட்டது. இரண்டு பன்றிகளுமே சிலநாட்கள் முன்பின் தாய்மை அடைந்தவை. அப்படி என்றால் தொலைந்து போன அந்த பன்றி, குட்டிகளை ஈனுவதற்கு இடம் தேடித்தான் போயிருக்கும் என்று நினைக்கிறார். ஈனுவதற்கு தயாராய் இருந்த பெண்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொள்கிறார். 



குட்டிகளை ஈன்ற பெண்பன்றி மிகுந்த கோபமுடன் இருக்கும். யாரையும் பக்கத்தில் நெருங்க விடாது, அப்பன்றியை வளர்த்தவனாகவே இருந்தாலும் கிழித்து சாய்த்து விடும். எப்படியும் கண்டுபிடித்து பன்றி மற்றும் குட்டிகளுடன் திரும்பி வந்து விடுவேன் என்று கிளம்புகிறார் கிழவர். 

பன்றிகள் மேய்ந்த இடத்திலிருந்து, சிறுவன் கூறிய திசையை வைத்து அது காட்டுக்குள் தான் போயிருக்க வேண்டும் என நினைத்து காட்டை நோக்கிச் செல்கிறார். ஒரு ஓடையை கடந்து, எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பம் ஏற்பட்டபோது, தூரத்தில் ஒரு குருவி விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. எனவே பன்றி அங்கேதான் இருக்க வேண்டும் என எண்ணியவாறு குரல் வந்த திசை நோக்கிச் செல்கிறார். 

பக்கத்தில் போனதும் அங்கே பன்றி இருப்பதற்கான தடயங்களை அறிகிறார். ஆனால் பக்கத்தில் சென்றால் பன்றி குதறியெடுத்து விடும் என்று நினைத்து ஒரு மரத்தின் மேலே ஏறிப்பார்க்கிறார். அங்கே தாய்ப்பன்றியைச் சுற்றி குட்டிகள் கிடக்கின்றன. குட்டிகளை எண்ணிப்பார்த்து மகிழ்கிறார். வீட்டில் இருக்கும் குட்டிகளுடன் இந்தக் குட்டிகளையும் சேர்த்தால், எவ்வளவு குட்டிகள் எனக்கு என்று மகிழ்கிறார். அன்று முழுநிலவு. வானத்துக்கு ஒரே நிலவுதான், ஆனால் இங்கே என் அருமைக்குட்டிகள் எவ்வளவு கிடக்கின்றன இந்தப்பூமியில் என்று பூரிக்கிறார். 

குட்டிகளை அருகில் பார்க்க எண்ணி, மரத்தை விட்டு இறங்கி மெதுவாக பக்கத்தில் செல்கிறார். அதற்குள் பன்றி அவரைப் பார்த்து பாய்ந்து வந்து குதறுகிறது. பன்றியிடமிருந்து தப்பித்த கிழவர், சரசரவென மரத்தில் ஏறுகிறார். சிராய்ப்புகளுடனும், உடம்பில் அங்கங்கே வலியுமாக சிரமப்படுகிறார் கிழவர். பன்றிகளை அவருக்கு காட்டிக்கொடுத்த குருவி இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறது. தொலைவில் இருந்து பன்றி ஈன்ற வாசத்தை வைத்து பெரிய விலங்குகள் ஏதாவது வந்து விடுமோ என பயப்படுகிறார். அவர் பயந்தது போலவே, ஒரு நரி மெதுவாக புதரை நெருங்கி வருகிறது. 

தாய்ப்பன்றி அந்த நரியை குதறி எடுத்து விடுகிறது. தான் வளர்த்த பன்றி நரியைப் போராடிக் கொன்றதில் அவருக்கு பெருமை ஏற்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நான்கு நரிகள் ஒரே நேரத்தில் வர, தாய்ப்பன்றி ஒரு நரியைக் கொல்ல, கிழவர் தன் ஈட்டியின் மூலம் ஒரு நரியைக் கொல்கிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் புதருக்குள் புகுந்த மீதம் இரண்டு நரிகள், ஆளுக்கொன்றாக இரண்டு குட்டிகளை கவ்விக்கொண்டு போகின்றன. பத்துக் குட்டிகளில் இரண்டு போனதை நினைத்து வருந்துகிறார் கிழவர். குருவி இன்னும் ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. 

கொஞ்ச நேரம் போனால் பன்றி என்னை அடையாளம் கண்டுவிடும் என்று நினைக்கிறார். விடிந்ததும் முதல் வேலையாக தாய்ப்பன்றியை மீதமிருக்கும் குட்டிகளுடன்  கூட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். திரும்ப நிறைய நரிகள் கூட்டமாக வருகின்றன. என்ன செய்யவென அவருக்கு புரியவில்லை. கூட்டமாக இருக்கும் நரிகளை ஒரு பன்றி எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்து, குறைந்தபட்சம் குட்டிகளையாவது காப்பாற்றுவோம் என எண்ணிக்கொண்டு, தன் ஈட்டியை கணநேரத்தில் பன்றியை நோக்கி வீசுகிறார். பன்றி சாய்ந்துவிட்டது. தான் வளர்த்த பன்றியை தானே கொன்றுவிட்டதை எண்ணி கலங்கியவர், கீழிறங்கி கற்களை எடுத்து நரிக்கூட்டத்தை நோக்கி வீசுகிறார். நரிகள் கொஞ்ச தூரம் திரும்புகின்றன. ஒரு கூடையில் அந்தக் குட்டிகளை எடுத்துவைத்து தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். 

வரும் வழியில் அசதியும் களைப்பும் ஏற்பட, குட்டிகளை எப்படியாவது வீட்டுக்கு கொண்டுபோய்ச் சேர்த்து இன்னொரு தாய்ப்பன்றியிடம் முலையருந்த விடவேண்டும் என நினைக்கிறார். பன்றி குதறியதால் தொடையில் ஏற்பட்ட காயங்களும் சேர்ந்துகொள்ள, ஒருமாதிரி இருட்டிவர கூடையை கீழேவைத்து கண் சாய்கிறார். கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்தால் கூடையைச் சுற்றி கழுகுகள் அமர்ந்திருக்கிறது. அவசரமாக அவற்றை விரட்டி விட்டுப் பார்த்தால்,குட்டிகள் உயிருடன் இல்லை. தாங்கமுடியாத துயரத்துடன் மெதுவாக தன் குடிசையை நோக்கி நடக்கிறார். பொழுது விடியப் போகிறது. தன் குடிசை வாசலுக்கு வந்ததும், பொத்தென்று கீழே படுக்கிறார். பேரன் உள்ளிருந்து அவரைப் பார்த்து ஓடி வருகிறான். 

கிழவர் உண்மையாகவே இந்த நாவலின் தலைப்பு போலவே காட்டை வென்றாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இருந்த அறிவை வைத்து இரவு முழுவதும் அந்தக்காட்டில் வாழ்ந்திருக்கிறார். பன்றியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். குருவிகளின் குரலை, பன்றியின் கோபத்தை, நரிகளின் வருகையை அறிந்துகொள்கிறார்.  அந்தவகையில் அவர் காட்டை வென்றவர்தான். 

Friday, June 14, 2019

புனலும் மணலும் - ஆ.மாதவன்

ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில். 

அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார். 



தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்றால் தங்கம்மை அவ்வளவு அழகு. கணவன் இறந்த பின்னர் வந்த நாட்களில், நிறையப்பேர் அவளைப் பெண்கேட்டுச் செல்கிறார்கள். அவர்களை மறுத்துவிட்ட அவள், அங்குசாமிக்கு சரி என்கிறாள். அவளின் தகப்பன் சமையல்காரர் குட்டன் , 'இனிமேல் நீங்கள் இந்த மூட்டை சுமக்கும் வேலைக்குச் செல்லக்கூடாது' என்று சொல்லி, ஆற்றுக்கடவில் மணல் வாரும் தொழில் செய்யும் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். மணல் வண்டிகளை கணக்கெடுத்து, மணல் வாரி நிறைப்பதை மேற்பார்வை செய்வது அங்குசாமியின் வேலை. 

தங்கம்மையுடன் பழகிய நாட்களிலேயே, அங்குசாமிக்கு பங்கியைப் பிடிப்பதில்லை. முதல்முறை அவர்கள் தனிமையில் இருக்கும்போது, பங்கி அழுதவுடன் தங்கம்மை எழுந்து போய்விடுகிறாள். அங்குசாமிக்கு எரிச்சல் இருந்தாலும் தங்கம்மைக்காக பொறுத்துப் போகிறார். 

தாமோதரன் என்னும் இளவயதுப் பையனைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் அங்குசாமி. அவனும் அவரைப்போலவே சிறுவயதில் ஊரைவிட்டு வந்தவன். தனது குடிசையை அடுத்து அவனுக்கும் ஒரு குடிசை அமைத்து தங்கவைக்கிறார். சிறுமியாய் இருக்கும் பங்கியுடன் தாமோதரன் விளையாடுகிறான். தன்னுடைய சகோதரி என்றே அவளை எண்ணுகிறான். பங்கி வளர்ந்த பின்னரும் கூட அங்குசாமிக்கு அவள் மேல் கோபம் தீர்வதில்லை. பார்த்தாலே எரிந்து விழுகிறார். ஊரில் உள்ள மற்றவரிடம் பேசுவதிலும், தாமோதரனிடம் பழகுவதில் எந்த பாரபட்சமும் பார்க்காத அங்குசாமிக்கு பங்கி என்றால் மட்டும் ஆகாது. 

பங்கியும் இப்பொழுது ஆற்று வேலைக்கு வருகிறாள். முதலில் அவள் வேலைக்கு வருவதை மறுத்த அங்குசாமியை, தாமோதரன் சமாதானம் செய்து, தான் பார்த்துக்கொள்வதாக வேலைக்கு அழைத்து வருகிறான். சில நாட்களில், தங்கம்மைக்கு வந்த காய்ச்சலால் அவள் இறந்துபோகிறாள். அங்குசாமிக்கு தங்கம்மை போனது பெரும்துயராய் இருக்கிறது. இந்தப் பெண் பங்கி இல்லாவிட்டால், நானும் நீயும் எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று தாமோதரனிடம் சொல்கிறார். முன்பு ஆற்றுக்கடவில் வேலை அவ்வளவாய் இருப்பதில்லை. கூலி வாங்குவதும் தினப்படி செலவுக்கும் சரியாய் இருக்கிறது. 

பங்கியை கல்யாணம் செய்து தரலாம் என்றால், யாரும் அமையவில்லை. ஒருவன் வந்து பங்கியைப் பார்த்துவிட்டு, இப்படி இருப்பவளை நான் கட்ட மாட்டேன்.. வேணும்னா நீ கட்டிக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். தாமோதரன் 'இங்க பாரு, தங்கம்மை அக்கன் கிட்டே உனக்கு கல்யாணம் செய்து வைப்பது என்னோட கடமைன்னு சொல்லி இருக்கறேன். நீ எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி யாராவது வரவில்லை என்றால். நானே உன்னை கட்டுவேன்' என்று பங்கியிடம் சொல்கிறான். பங்கிக்கும் அவன் மேல் பாசம் உண்டென்றாலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவனுக்கு தான் மனைவியாய் இருக்கக்கூடாது என்றெண்ணுகிறாள். 




அங்குசாமிக்கும், பங்கிக்கும் சில நேரங்களில் வாதம் ஏற்படும்பொழுது 'உன்னைக் கொண்டு போய் ஆற்றில் தள்ளினால்தான் எனக்கும், இதோ அடுத்தாப்பிலே இருக்கற தாமோதரனுக்கும் விமோசனம்.' என்று அங்குசாமி கத்துவார். அந்த நேரங்களில் தாமோதரன் வந்து சமாதானம் செய்வான். ஒரு நாள் அங்குசாமி ஆற்றங்கரையில் கீழே விழுந்து கையை முறித்துக்கொள்கிறார். வைத்தியர் எண்ணெய் போட்டு கட்டுப்போட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. தாமோதரனும், பங்கியும் அவருக்குப் பணிவிடை செய்கிறார்கள். பங்கி கொண்டு வரும் காசில் தான் பசியாற வேண்டியிருக்கிறதே என்று இன்னும் கோபம் அதிகமாகிறது அங்குசாமிக்கு. 

கை கொஞ்சம் சரியாகி கட்டுப் பிரித்தாகிவிட்டது. ஆனால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஆற்றில் மணல் அள்ளும் வேலையும் குறைந்துவிட்டது. சில நாட்களாக தாமோதரனும், பங்கியும் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்களில், மழைபெய்ய ஆரம்பிக்கிறது. இடைவிடாத மழை.மூன்று நான்கு நாட்களுக்கு மேல் பெய்கிறது. அவர்கள் குடியிருந்த குடிசையும் ஒழுக ஆரம்பிக்கிறது. இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது. காசிருந்தாலும், வெளியே கடைகள் எதுவுமில்லை. ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம். மழை நின்றாலும், நீர் வடியாமல் ஆற்று வேலைக்குப் போக முடியாது. மழை நின்ற ஒருநாள் தாமோதரன் அக்கரையில் உள்ள சூளையில் வேலை இருப்பதாக அறிந்து அங்கே போகலாம் என்கிறான். ஆட்களைக் கூட்டிக்கொண்டு, அங்குசாமி தாமோதரன் பங்கி என எல்லாரும் ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.

நீர் ஓடும் வேகத்தைப் பார்த்ததும் தாமோதரன் வள்ளத்தில் அக்கரைக்குப் போகத் தயங்குகிறான். அங்குசாமியோ, இது நம்ம ஆறு, நாம தொழில் செய்யற இடம், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது எல்லாரும் வள்ளத்தில் ஏறுங்க என்று அதட்டுகிறார். எல்லோரும் வள்ளத்தில் ஏறிக்கொள்கிறார்கள். தாமோதரன் வள்ளம் வலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கொஞ்ச தூரம் போனதும் ஒரு சுழிப்பில் மாட்டி வள்ளம் கவிழ்ந்துபோகிறது. கரையில் இருந்த ஆட்கள் வள்ளம் முங்குவதைப் பார்த்துக் கத்துகிறார்கள். ஆற்றில் கவிழ்ந்த ஒவ்வொருவராக நீந்திக் கரையேறுகிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறது. இரண்டு பெண்களில் ஒருத்தி இருக்கிறாள். அப்படியென்றால் இன்னொரு பெண்ணான பங்கி ஆற்றோடு போய்விட்டாள். 

'ஆ பங்கியா' என்று கரையேறிய அங்குசாமி நினைத்துப்பார்க்கிறார். ஆற்றில் அவர் நீந்தும்பொழுது ஒரு கை அவர் காலைக் கெட்டியாகப் பிடிக்கிறது. அவர் அந்தக்கையை ஒரு உந்து உந்தி உதறிவிட்டு மேலே நீந்தி வருகிறார். அப்பொழுது அவர் கால்களில் ஒரு பெண்ணின் தலைமுடி படுகிறது. அப்படியென்றால் அது பங்கி தான் என்று எண்ணுகிறார் அங்குசாமி. 

இது அங்குசாமியின் பிழையா என்றால், ஆமென்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். 


Friday, May 24, 2019

கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்

நீங்கள் ஒருவரை நல்லவன் என்றோ,கெட்டவன் என்றோ தீர்மானம் செய்யலாம். ஆனால்  நன்மையும், தீமையும் கலந்தவன் மனிதன்.  ஒரு கொலைகாரன் கோவிலுக்குச் செல்லும்போது அங்கே அவன் பக்தியுள்ளவனாக இருக்கிறான். ஒரு குழந்தையைப் பார்த்து சிரிக்கும்பொழுது அவன் அன்பை உணர்கிறான், அப்பொழுது அவன் கொலைகாரனாக இருப்பதில்லை. எப்படி அவன் கொலை செய்தவன் என்பது உண்மையோ, அதுபோலவே அவன் கோவிலுக்குப் போவதும், அன்பாய் இருப்பதும் உண்மை. மனிதர்களின் இந்த பண்பினை, தனது பெரும்பாலான கதைகளில் சொல்கிறார் ஆ.மாதவன். 



சாலைத்தெருவின் ஒரு ஓரத்தில் அந்த தோட்டவிளை அமைந்துள்ளது. குருஸ்வாமி அதன் சொந்தக்காரர். தாத்தா காலத்தில் அழிந்த சொத்துக்களோடு, அப்பாவும் சேர்ந்து அழிக்க, இந்த தோட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது குருஸ்வாமிக்கு. அந்த தோட்ட வளாகத்தில் அவர் குடியிருக்கும் வீடு தவிர, ஒரு தேவி கோவில், தென்னை மரங்கள் மற்றும் சில குடியிருப்புகள் உண்டு. அந்த குடியிருப்புகளில் ஏழைப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களிடம் வாடகை என ஏதோ ஒரு பணத்தை குருஸ்வாமி வாங்கி கொள்கிறார். ஓவியம் வரையும், சாலைகளில் பாட்டுப் பாடும், பழைய பாத்திரங்களைச் சரிசெய்யும் குடும்பம் என எல்லோரும் சாதாரண மக்கள். அங்கு குடியிருக்கும் எல்லோருமே குருஸ்வாமிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். ஊரிலும் பெரிய மதிப்பு. எல்லாருக்கும் அவர் 'சாமியப்பா'.

குருஸ்வாமியின் மனைவி சுப்புலட்சுமி. இரண்டு குழந்தைகளைப் பெற்று இரண்டும் இறந்துவிட, மூன்றாவது பேற்றில் மனைவியும் இறந்துவிடுகிறாள். மனைவியுடனான வாழ்க்கையை அவர் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். மறுமணம் செய்துகொள்ள மனமில்லை.புத்தக படிப்பும், கோவில் சிற்ப ரசனையும் போக மேல்மாடியில் அமர்ந்துகொண்டு உலகை ரசிப்பதுமாக நாட்கள் நகர்கின்றன. தூரத்தில் வந்தமரும் ஒரு கிருஷ்ணப் பருந்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். சில நாட்கள் வரும் அந்தப் பருந்து சில நாட்கள் வருவதில்லை. அவருக்கு வீட்டு வேலைகளுக்கு உதவியாக பார்வதி என்ற கிழவி உண்டு. அந்த விளையில் உள்ள தேவி கோவிலைச் சுத்தம் செய்யும் பார்வதிக்கு சாமி வருவதுண்டு. 

சின்ன வயதிலேயே படிப்பு வராமல், குருஸ்வாமியின் அரவணைப்பில் வளர்பவன் வேலப்பன். அவனின் தந்தை, அந்த வளாகத்தில் வேலப்பனோடு குடியிருந்தார். தாய் இல்லை. வேலப்பன் வளர, வளர பால் கறப்பதில் தேர்ந்தவனாகிறான். ஒரு மாட்டுப்பண்ணையில் வேலைக்கும் சேர்கிறான். ஒரு நாயர் இனத்தைச் சேர்ந்தவன் மாடு, பால் கறவை என வேலைக்குப் போவது வேலப்பனின் தந்தைக்குப் பிடிக்காமல் அவர் எங்கேயோ போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. வேலப்பனுக்கு இனி குருஸ்வாமிதான் எல்லாம். 


வேலப்பன் தான் வேலை செய்யும் பண்ணை முதலாளியின் மகள் ராணியை காதலிப்பதாக சொல்ல, இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார் குருஸ்வாமி. படிப்பு, வசதி என எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருக்கும் வேலப்பனுக்கு ராணியை கட்டிக்கொடுத்து ஊரை விட்டே அனுப்பிவிட்டார் என அவள் குடும்பத்தார் பேசுகிறார்கள். ஒருமாதம் கழித்து அவர்களை அழைத்து தன் தோட்ட வளாகத்திலேயே வைத்துக் கொள்கிறார் குருஸ்வாமி. ஒரு குழந்தையும் பிறக்கிறது. 

வேலப்பன் ஒரு பால் சங்கம் அமைத்து அதன் மூலம் வருவாய் பார்க்க ஆரம்பிக்கிறான். வருமானம் பார்க்க ஆரம்பித்ததும் குடி, புகை என கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான். அவன் சங்கத்தில் இருப்பவர்கள் கூடிப் பேசும்பொழுது, பணக்காரர்கள் நாம் எப்பொழுதும் ஏழையாகவே இருக்க விரும்புவார்கள்; நம் மேல் பாசம் காட்டுவது போல் நடித்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்வார்கள்; அதற்கும் மேல் நம் வீட்டுப் பெண்களை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் பேச, வேலப்பனுக்கு பொறி தட்டுகிறது. குருஸ்வாமியின் மேல் ஐயம் கொள்கிறான்.

ஒருநாள் யதேச்சையாக சாமியப்பாவின் அறைக்கு வருபவன், அங்கே ஒரு பெண் நிர்வாணமாக இருக்கும் ஓவியத்தைப் பார்க்கிறான். வேலப்பன் அதன் பின்னர் அவரை மதிப்பதில்லை. ராணி அவரிடம் பேசினால், கோபம் கொண்டு அவள் அவருடன் படுக்கையைப் பகிர்வதாகச் சொல்கிறான். ராணி அழுது புலம்புகிறாள். வளாகத்தில் உள்ள அத்தனை மக்களும் அவன் போக்கை கண்டு, உலகத்தில் இப்படியும் ஆட்கள் உண்டோ என ஆச்சரியம் கொள்கிறார்கள். 

ஒருநாள் பார்வதி சாமி வந்து ஆடும் சமயம், வேலப்பன் அவள் கைகளில் சுடு பாயாசத்தைக் கொட்டி விடுகிறான். பார்வதியால் வேலை செய்ய முடியாததினால் ராணி குருஸ்வாமிக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்கிறாள். சாமியப்பாவுக்கு, இப்பொழுது ராணியின் மேல் பார்வை மாறுகிறது. சில நாட்களில் ஒரு சண்டையில், வேலப்பன் சிறை செல்ல நேர்கிறது. சாமியப்பா மனது வைத்தால் அவனை வெளியே கொண்டு வர முடியும். அவரோ அமைதியாக இருக்கிறார். 'நீ என்னை பிரசாதிக்கணும் ராணி' என்று அவளிடம் சொல்கிறார். 

பார்த்தால் எவ்வளவு பெரிய ஆள் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணலாம். அவரும் மனிதர்தானே. துறவி போல் வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளேயும் அவருக்கு ஆசைகள் உண்டு. அல்லது அவரின் ஆசையை ராணி தூண்டியிருக்கலாம். அவள் கேட்கிறாள் 'சாமியப்பா வேலப்பனை வெளியே கொண்டு வந்துருவீங்களா நாளைக்கு'.  அவர் மலங்க மலங்க விழிக்கிறார். 'கொண்டுவர்றேன் ராணி' என்றவாறு தெருவில் இறங்கி ஓடுகிறார். 

சாமியப்பா அவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் அம்மன் தேவியை வழிபாடு செய்பவர். அந்தக்கோவிலின் சுவரில் வரைந்திருக்கும் பிரும்மாண்டமான தேவி ஓவியத்தை அடிக்கடி பார்த்து ரசிக்கிறார். ராணி அவரைத் தழுவும்பொழுது இறைவியான தேவியின் நினைவு வந்திருக்கலாம். அவள் கேட்டவுடனே, இறங்கி ஓடுகிறார் ஒரு பக்தனைப் போல.




Wednesday, March 6, 2019

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுடன் சேராமல் தனியாகவே இருந்தது நிஜாம் அரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து இந்தியாவுடன் இணைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் நாவல் விரிகிறது. 

கதை சந்திரசேகரன் என்னும் பால்ய வயது இளைஞனைச் சுற்றியே செல்கிறது. அவன் படித்த பள்ளி, கல்லூரி, நண்பர்கள், கிரிக்கெட்,  லான்சர் பாரெக்ஸ் எனும் ரயில்வே குடியிருப்பு,  அதில் குடியிருக்கும் பக்கத்து வீட்டினர்,  இவ்வளவு பிரச்சனையிலும் அவர்கள் வளர்க்கும் பசு பற்றி என நாவலில் ஏகப்பட்ட தகவல்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமியர்களுடன் ஏற்படும் சண்டைகள், பின்னர் ஆட்சி மாற்றத்தில் அவர்கள் காட்டும் வேறுபாடு என சொல்லிக் கொண்டே செல்கிறார் அசோகமித்திரன். 

ஒரு சாமான்ய மனிதனின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலாறு, அரசியல் மாற்றங்கள் பற்றி எல்லாருமே அறிந்திருந்தாலும், அதற்கு நாம் என்ன செய்வது என்பது போலிருக்கும் சாமானியர்கள். காந்தி கொல்லப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு இஸ்லாமியர் தான் அவரைக் கொன்றிருக்கவேண்டும் என நினைப்பதைச் சொல்லலாம். நாம் ஒன்றைச் சொல்லி சொல்லியே சாமானிய மனிதரிடம் எதையும் நிலைநிறுத்தி விட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 



இந்திய அரசுடன் இணைந்தால், இப்பொழுது இருப்பது போல சுதந்திரமாக இருக்க முடியாது எனச் சொல்கிறார்கள் நிஜாம் ஆதரவாளர்கள். ஆனால், அதையும் மீறி கலகம் செய்கிறார்கள். கலகமோ, போராட்டமோ எப்பொழுதும் அடி வாங்குவது கீழ்த்தட்டு மக்களே. இந்து, முஸ்லீம் என்பதல்ல, அவன் ஏழையாய் இருக்கிறான் என்பதே தகுந்த காரணமாகி விடுகிறது. எப்பொழுதும் எரிக்கப்படுவது ஏழைகளின் குடிசைகளே. இவ்வளவு நடந்துகொண்டிருக்கும்போதும், சில பணக்கார வீட்டு பையன்களும், பெண்களும் கல்லூரிக்கு காரில் வந்து செல்கிறார்கள். 

இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து, நிஜாம் ஆட்சியைப் பிடிக்கும் நேரத்தில் கலவரம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்கள் அஞ்சி, வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள். கலகம் ஏற்படும்போது, ஒரு இரவு நேரத்தில் அங்கே இருக்கும் சந்திரசேகரன் தப்பி ஓடி ஒரு வீட்டுக்குள் குதிக்கிறான். அந்த வீட்டில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள், குழந்தைகள், ஒரு கிழவி என எல்லோரும் இவனைக் கண்டு பயப்படுகிறார்கள். 

வறுமை தாண்டவமாடும் இஸ்லாமியக் குடும்பம் என்று உடம்பைப் பார்த்தாலே தெரிகிறது. அந்த மூன்று ஆண்களும் சேர்ந்து சந்திரசேகரனைக் கொன்று விட முடியும். ஆனால் அவர்கள் அஞ்சி இருக்கிறார்கள். அங்கே இருந்த பெண்களில் ஒரு இளம்பெண் அவன் முன்னால் வந்து, தன் உடைகளைக் களைந்து 'எங்களை ஒன்றும் செய்துவிடாதே..' என்கிறாள். வறுமையால் அவளின் விலா எலும்புகள் உடம்பில் துருத்திக் கொண்டு இருக்கிறது. முதன் முதலாக பாலிய வயதில், ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்த்த சந்திரசேகரன் தாங்க முடியாத துயரத்துடன் அந்த வீட்டை விட்டு ஓடுகிறான். 'அந்தப்பெண் ஒரு குழந்தை. அவள் குடும்பத்தைக் காப்பாற்ற இந்தவொரு முடிவுக்கு வந்திருக்கிறாள். அதற்கு நானும் ஒரு காரணம். நான் ஒரு அற்ப புழு.' என்று நினைத்தவாறே ஓடி கொண்டிருந்த சந்திரசேகரன், பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான். 



Thursday, January 10, 2019

உப்பு வேலி - ராய் மாக்ஸம் (The Great Hedge Of India - Roy Moxham)

உப்பு மிகச் சாதாரணமாக கிடைக்கிறது இப்பொழுது. ஆனால், ஒருகாலத்தில் மிக அதிக வரி விதிக்கப்பட்டு எளியோர் வாங்கமுடியாத விலையில் இருந்த ஒரு பொருள் அது. ஒரு குடும்பத்தின் ஒரு வருடத்துக்கான உப்பின் விலை, ஒருவனுடைய இரண்டு மாத சம்பளமாகும். வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு உப்புக்கு மட்டுமே செலவு செய்யவேண்டிய கொடுமை. 

1750 ஆம் வருடங்களில், கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் ஆட்சியை நடத்திய பிரிட்டிஷ் பிரபுக்கள் உப்பு, பாக்கு போன்றவற்றுக்கு வரியை அதிகப்படுத்தினர். எளிய மக்கள் உப்பை அதிக விலைகொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வரியோடு சேர்ந்த உப்பின் விலை அதிகமாக இருந்ததால், கடத்தல் அதிகரித்து தரம் குறைந்த உப்பு கலப்படம் செய்யப்பட்டு சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகியது. கடத்தலைத் தடுக்க இந்தியாவின் குறுக்காக புதர் மற்றும் மரங்களினால் ஆன வேலி உருவாக்கி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாவடியில் எண்ணற்ற காவல் அதிகாரிகள் பாதுகாப்பில் குறைந்த கூலியில் அமர்த்தப்பட்டனர். 

இந்த புத்தகத்தை எழுதிய ராய் மாக்ஸம் இங்கிலாந்தில் ஒரு பழைய புத்தகத்தில் இந்த வேலியைப் பற்றிய குறிப்பைப் படிக்கிறார். இதற்கு முன்னரே இந்தியாவுக்கு பல முறை வந்திருக்கிறார். எனவே, இந்தியாவைப் பற்றி எந்த ஒரு குறிப்பு அல்லது புத்தகம் கிடைத்தாலும் அதைப் படிக்கிறார். அப்படித்தான் உப்பு வேலி பற்றிய குறிப்பைப் படிக்கிறார். உப்புக்காக ஒரு வேலி என்பது அவரைத் தூண்டுகிறது. பல நூறு மைல்களுக்கு நீண்டிருந்த வேலி இப்பொழுது கண்டிப்பாக சில இடங்களிலாவது இருக்கவேண்டும் என நினைத்து இந்தியா வருகிறார். ஆனால் அவ்வளவு எளிதாக அவரால் அதைக் கண்டறிய முடிவதில்லை. அப்படி ஒரு வேலி இருந்தது என்பதற்கான எந்த தடயமும், எந்த பதிலும் அவருக்கு கிடைப்பதில்லை. திரும்பவும் இங்கிலாந்துக்குச் சென்று , பழைய ஆவணக் காப்பகங்களில் தேடுகிறார். ஒரு சில வரைபடங்கள் அதில் சிக்கினாலும் தெளிவாக எதுவும் இல்லை. ஒரு வரைபடத்தை முன்மாதிரியாக கொண்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்து தன் தேடலைத் தொடங்குகிறார். 


அந்த வரைபடத்தை வைத்து தேட ஆரம்பிக்கிறார். ஆனால் அது இயலாமல் போகவே திரும்பச் செல்கிறார். மூன்றாவது முறையாக, 1998ல் திரும்பவும் வருகிறார். இந்த முறை வேலியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இத்தோடு கைவிட்டுவிடுவதென நினைக்கிறார். ராய் உப்பு வேலியைப் பற்றிய எந்த ஆவணம் என்றாலும் அதைக் குறிப்பெடுத்து வைக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் ஆவணக் காப்பகங்களை பயன்படுத்துகிறார். ஆங்கிலேய அதிகாரிகள் எழுதி வைத்திருந்த குறிப்புகள், அறிக்கைகள் என எல்லாவற்றையும் படித்து இந்தப் புத்தகத்திலும் கொடுத்துள்ளார். ஒரு பெரிய நிறுவனம் செய்ய வேண்டியதை, தனி ஒரு மனிதனாக வேலியைத் தேடி மூன்று வருடங்கள் இந்தியாவுக்கு வருகிறார்.

ஒரு விவசாய நாட்டில் பஞ்சம் என்பது நிகழ முடியாதது. இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு பக்கம் பஞ்சம் என்றாலும் இன்னொரு பக்கம் விளைச்சல் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சம் இருந்தது, மக்கள் இறந்தனர், ஏன் அதற்கு என்ன காரணம் என்பது நம் வரலாற்றில் இருப்பதில்லை. அப்படி ஏழை மக்கள் இறந்து போனதற்கு, அதிக வரியினால் உப்பு பெற முடியாமல் இருந்ததே என நிறுவுகிறார் ராய். உப்பு குறைபாடு என்பது, வெப்ப நாட்டில் மிகுந்த உடல் உபாதைகளை உருவாக்க கூடியது எனச் சொல்கிறார். காலரா போன்ற கொள்ளை நோய்கள் அதிகமான மக்களை இறப்புக்குத் தள்ளியதற்கும் காரணம் உப்பு குறைபாடே எனச் சொல்கிறார்.

இந்திய வரலாறு என்பது எங்கேயும் ஆவணமாக இருப்பதில்லை. நம் கல்வி நிலையங்களும், பேராசிரியர்களும், பல்கலைக் கழகங்களும் புத்தகத்தில் படித்து இன்னொரு புத்தகத்தையே உருவாக்குகின்றனர். இந்த உப்புவேலியை ஒரு அயல் நாட்டவர் வந்து தேடுகிறார். நமக்கு அதைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. அவர் தேடும்பொழுது செயற்கைக்கோள் மூலமாக படம் பிடித்து தரும் ஒரு அரசு நிறுவனத்தை அணுகுகிறார். அவ்வாறு படம் கிடைத்தால், மரங்கள் செறிவாக இருக்கும் பகுதியை அறிந்துகொள்ளலாம் என முயல்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்க, ராய் அதை மறுத்து தானே சுற்றி தேட ஆரம்பிக்கிறார். உண்மையில் அந்த அரசு நிறுவனம் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமல்லவா?. ஆனால் அப்படிச் செய்யமாட்டார்கள்.


இந்தப் புத்தகத்தில் ராய், மகாத்மா காந்தி ஏன் உப்பு சத்தியாகிரகம் செய்ய தண்டி யாத்திரை செய்தார் என தரவுகளோடு விளக்குகிறார். நில வரி மற்றும் வணிக வரிக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என தனது கட்சி குழுவினர் தெரிவித்தாலும், ஏழை மக்களைப் பாதிக்கும் உப்பு வரியே முதன்மையாக நீக்க வேண்டும் என போராட ஆரம்பிக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால், உப்பு வரியை பிரிட்டிஷார் நீக்கம் செய்யாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டும் வரியை நீக்குகின்றனர். காந்தி கதர் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என அடுத்தடுத்து நகர்கிறார். இந்திய வரலாற்றில் பிரிட்டிஷாருக்கு பெரும் வருவாயையும், ஏழை மக்கள் மாண்டு போவதற்கும் காரணமாக இருந்த உப்பு வரி இந்தியா விடுதலை பெறுவதற்கு ஆறு மாதம் முன்னர்தான் நீக்கப்பட்டது. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்க முக்கியமான ஆளுமையாக இருந்தவர் ஹியூம் (Allan Octavian Hume). ராய் புதர் வேலியை கண்ட இட்டவா மாவட்டத்தில் ஹியூம் ஆங்கிலேயப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர் அவர் சுங்கத் துறையிலும் பணிபுரிகிறார். அவருக்கு கீழ்தான் இந்த சுங்க வேலியும் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய நாட்குறிப்புகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வேலி பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பணி ஓய்வுக்குப் பின்னர், தேசிய காங்கிரஸ் அமைக்கிறார். காங்கிரஸ் ஆரம்பித்த பின்னர் 25 வருடங்கள் கழித்தே காந்தி உள்ளே வருகிறார். உப்பு யாத்திரை தொடங்குகிறார். 

ஆக்ரா, ஜான்சி போன்ற இடங்களில் வேலி சென்றதற்கான எந்த அடையாளங்களும் இப்போதில்லை. அந்த வேலி இருந்த இடங்களில் அதனை ஒட்டிய விவசாய நிலங்களுடன் உழுது சேர்க்கப்பட்டிருந்தன அல்லது அதன் மேல் சாலை போடப்பட்டிருந்தது. மண்ணைக் கொட்டி உயரமான இடத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் அமைக்க வசதியாக இருந்திருக்கிறது. சளைக்காமல் தேடுகிறார் ராய். அதைக் கண்டுபிடிக்கும் நாளும் வருகிறது. இட்டவா என்னும் மாவட்டத்தில் சம்பல் மற்றும் யமுனை நதிகளுக்கு இடையில் உள்ள கிராமத்தில் (பலிகர் கிராமம்), ஒரு முதியவர் இன்னும் மீதியுள்ள வேலியைக் காண்பிக்கிறார். சம்பல் கொள்ளைக்காரர்களுக்கு பேர் போன இடம். எதற்காக மூன்று வருடங்கள் தேடினாரோ, இன்று அதைக் கண்டடைந்துள்ளார் ராய்.   

ராய் இப்படிச் சொல்கிறார்; "கடந்த மூன்று வருடங்களில் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் சிறிது தெரிந்துகொண்டேன். ஆங்கிலேயரின் இந்தியா குறித்து அதிகம் தெரிந்துகொண்டேன். முதலில் நான் ஒரு ஆங்கில மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன். அது உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகம் என்று கண்டடைந்து அதிர்ச்சியுற்றேன். "

உப்பு வேலி 
ராய் மாக்ஸம் (Roy Moxham)
தமிழில்: சிறில் அலெக்ஸ் 
பதிப்பு: எழுத்து 
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியைக் கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளனின் தேடல். 



Friday, January 4, 2019

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாத்ரிக்குட்டி என்னும் பெண்ணால் கேரள மாநிலத்தில் புயல் வீசியது. சடங்குகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு எதிராக இருந்த காலகட்டம். பெண்கள் மார்பின் மேல் போடும் சீலைத்துணிக்கும் வரி விதித்த கொடுமை நடந்த காலம். 

அந்தக் காலத்தின் சாட்சியாய் வரலாற்றில் வாழ்ந்து வருகிறாள் தாத்ரி. தாத்ரிக்குட்டியை சிலர் கலகக்காரியாகவும், சிலர் கீழ்ப்பிறவியாகவும் எண்ணினர். அவ்வாறு அவர்கள் நினைக்க என்ன காரணம்?. 

கேரளாவின் நம்பூதிரி குடும்பங்களில், குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே சொத்துக்கு அதிபதி. போலவே மூசாம்பூரி என்றழைக்கப்படும் மூத்த மகன் மட்டுமே, மற்ற நம்பூதிரிக் குடும்பங்களில் உள்ள பெண்ணை மணக்க முடியும். மற்ற ஆண்பிள்ளைகள் வேறு சாதிப் பெண்களைத்தான் மணக்க வேண்டும். இதனால், நம்பூதிரி குடும்பங்களில் கல்யாணமாகாத பெண்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர். ஒரு மூத்த நம்பூதிரிக்கு பல பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். போலவே, சிறு வயது பெண்ணானாலும், வயதான நம்பூதிரிக்கு வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

கல்யாணம் செய்து கொண்டு நம்பூதிரி கணவன் வீட்டுக்கு வரும் பெண் வேறு ஆண் மக்களுடன் பழக கூடாது. அப்படித் தொடர்பு வைத்திருப்பதாக அறிந்தால், ஸ்மார்த்தர்கள் எனப்படும் சபை அவளை விசாரிக்கும். தனியறையில் அடைத்து வைத்து விசாரணை செய்வார்கள். விசாரணை செய்வதை 'ஸ்மார்த்த விசாரம்' என அழைத்தார்கள். இதற்கு அப்பொழுது ஆண்ட மகாராஜாக்களின் அனுமதியும் உண்டு. விசாரணை முடிவில், பெண் மேல் தவறிருப்பதாக நிரூபித்தால் பெண்ணை வீட்டை விட்டு ஒதுக்கி, பிண்டம்(இறந்தவளாக நினைத்து செய்வது) வைத்து விடுவார்கள். அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவனை(வைத்திருந்தவர்களை), குலத்தை விட்டு நீக்கி(பிரஷ்டு) ஊரை விட்டு அனுப்பிவிடுவார்கள். 

இந்த 'ஸ்மார்த்த விசாரம்' அமைப்பைத்தான் தாத்ரிக்குட்டி ஆயுதமாக பயன்படுத்தினாள். பெண்களைத் தண்டிக்க ஏற்படுத்திய இந்த அமைப்பின் விதிகளைத் திருப்பி, அவ்விதிகளை உருவாக்கிய ஆண்களின் மீதே ஏவினாள். அவர்களைப் பழிவாங்கவும் செய்தாள். விதிகளை மீறமுடியாமல் அவர்கள் பலிகடா ஆனார்கள். தாத்ரிக்கு முன்பும், பல நம்பூதிரிப் பெண்கள் விசாரத்துக்கு உட்பட்டிருந்த போதிலும், அவற்றில் ஆண்கள் தண்டனைக்கு ஆட்பட்டது குறைவு. தாத்ரி விசாரத்திலே, 64 ஆண்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். 

*****

பெண்கள் கல்விபெறாத அந்தக் காலத்தில் தாத்ரிக்குட்டி கற்றவளாக இருந்தாள். அவளைக் கல்யாணம் செய்தது குரியேடத்து நம்பூதிரி. மூத்த நம்பூதிரி திருமணம் செய்ய முடியாமல் நோயாளியாக இருந்தால், சில விதிகளின் படி இரண்டாம் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள முடியும். அவ்வாறு இரண்டாம் நம்பூதிரியை மணந்து குரியேடத்து இல்லத்துக்கு வந்தவள் தாத்ரி. முதலிரவில் தன் கணவனுக்காக காத்திருந்தவளிடம், அவளை அடைய வருகிறார் அவளின் அப்பா வயதுள்ள மூத்த நம்பூதிரி. அப்பொழுதே அவள் நொறுங்கிப்போகிறாள். ஆண்களைப் பழிவாங்க வேண்டும் என அவள் அப்பொழுதே நினைத்திருக்கலாம். 




நம்பூதிரிப் பெண்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் உண்டு. அவர்கள் தாசிகள் என அழைக்கப்பட்டனர். வெளியே போனால், தாசிகள் சூழக் குடை பிடித்துக்கொண்டு, முகத்தை முக்காடிட்டுத்தான் செல்ல முடியும். நம்பூதிரிப் பெண்களை விசாரிக்க வேண்டுமானால், யாராவது ஒருத்தர் புகார் சொல்ல வேண்டும். அப்படிப் புகார் சொல்கிறார், குரியேடத்து மனைக்கு அடுத்த வீடான கண்டஞ்சாத நம்பூதிரி. தாத்ரியே அவரிடம், புகார் சொல்லச் சொன்னதாக சொல்கிறார்கள். புகார் கொடுத்த பின்னர் பணிப்பெண்களான தாசிகளிடம் விசாரணை (தாசி விசாரம்) நடைபெறுகிறது. அதில் உண்மை இருந்ததால், தாத்ரியை அறைக்குள் அடைக்கிறார்கள். அவள் இனிமேல் 'சாதனம்' என்று அழைக்கப்படுவாள். அவளிடம் விசாரித்து தப்பு செய்த ஆண்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை சபை கேட்கும். அனைத்தும் சரியாக இருந்தால் அந்த ஆண்மகன் பிரஷ்டு செய்யப்படுவார். 

தாத்ரியின் விசாரம் நாற்பது நாட்களுக்கு நீள்கிறது. தாத்ரி கொலை செய்யப்படக்கூடும் என்றெண்ணி ஒரே இடத்தில் நடக்காமல் மூன்று இடங்களில் விசாரம் நடக்கிறது. மிகச் சரியாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை அடையாளம் காட்டுகிறாள். அவ்வாறு அறுபத்திநான்கு ஆண்களைச் சொன்னதும், அறுபத்தியைந்து ஆளைச் சொல்லாமல் ஒரு மோதிரம் மட்டும் காட்டுகிறாள். அந்த மோதிரத்தைப் பார்த்ததும் கொச்சி ராஜா உட்பட ஸ்மார்த்தர்கள் அனைவரும் ஆடிப்போகிறார்கள். தாத்ரி அதோடு முடித்துக்கொள்கிறாள். 

64 ஆண்களில், தாத்ரியின் தந்தை சகோதரர் கணவன்மார் உட்பட, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் பலரும் இருக்கிறார்கள். நல்லவர்கள், பெரிய மதிப்பு மிக்கவர்கள், பணக்காரர், ஏழை என தாத்ரி யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை. அதனால்தான் அவளைச் இச்சமூகம் இழிந்தவளாக தன் வரலாற்றில் இழிவுபடுத்துகிறது. 64 பேரில் இருவர் முன்னமே இறந்து போயிருந்ததால், மீதி உள்ளவர்கள் பிரஷ்டு விதிக்கப்படுகிறார்கள். தாத்ரிக்கு ஒரு ஆற்றின் கரையில் கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுக்கப்படுகிறாள். 

****

அதற்குப்பின்னர் தாத்ரிக்குட்டி ஒருவரை மணந்ததாகவும், அவளுக்குப் பிள்ளைகள் பிறந்ததாகவும் செவிவழி செய்திகள் உலவுகின்றன. 

தாத்ரி, அவளது விசாரத்துக்குப் பின்னர் சில சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறாள். நம்பூதிரிப் பெண்களுக்கான சங்கம் ஒன்று நிறுவப்பட்டு, அதில் அவர்களின் நலனை முன்னிறுத்துகிறார்கள். நம்பூதிரி குடும்பச் சொத்துக்களின் மீதும் சில கட்டுப்பாடுகளை நீக்குகிறார்கள். 

****

பிரஷ்டு செய்யப்பட்டவர்களில், ஒரே ஒருவரே தன் மேலிருந்த பழியை நீக்க முனைகிறார். அவர் கதகளி கலைஞரான சங்கரப்பணிக்கர். பிரஷ்டு செய்யப்பட்டதால், அப்போதைய ரசிகர்களான நம்பூதிரிகள், மகாராஜாக்கள் சூழ்ந்த அவையில் அவர் ஆட முடியாது. எனவே, ஏழை மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில மாற்றங்களை தன் ஆட்டத்தில் செய்கிறார். தாத்ரி கலகத்தால் விளைந்த நன்மை என இதைச் சொல்கிறார்கள்.  பல வருடங்களுக்குப் பின்னர் பெரும்பெயர் பெற்ற அவர், ராஜாவின் முன்பும், பிரஷ்டை நீக்கி அரசவையில் ஆடுகிறார். 

****

தாத்ரிக்குட்டியின் குரல், சென்ற நூற்றாண்டில் தன்னை அடக்கி வைத்து ஆண்ட ஆண்களுக்கு எதிரான ஒரு தனித்த கலகக்காரியின் குரல். 

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதியதை யூமா வாசுகி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.