Thursday, July 25, 2019

அவன் காட்டை வென்றான் - கேசவ ரெட்டி

'அவன் காட்டை வென்றான்' நாவல் ஒரு கிழவரையும், அவர் வளர்க்கும் பன்றிகளையும், காட்டையும் பற்றிய கதை. அவருக்கு பெயர் எல்லாம் நாவலில் இல்லை. அவருடன் வசிப்பது அவரின் பேரன் மட்டுமே. வேறு யாருமில்லை. காடு எப்பொழுதுமே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பியது. காடுகளை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோர்கள் பார்த்த காடுகள் இப்பொழுது இல்லை. காடுகளை நாம் இப்பொழுது மாற்றிவிட்டோம். 

அன்று காலை அவருக்கு முடியாததால், பன்றிகளை மேய்க்க பையனை அனுப்புகிறார். பொழுது சாய்ந்த பின்னரும் பையன் பன்றிகளைத் திருப்பி ஓட்டி வராததால் கிழவர் பயந்து போகிறார். பன்றிகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ இல்லை பையன் எங்காவது போயிருப்பானோ என்றெல்லாம் நினைக்கிறார். திடீரென அவருக்கு, ஒரு சினைப்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பியது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் பன்றிதான் எங்காவது தொலைந்து போய், பையன் தேடிக் கொண்டிருக்கிறானோ என நினைக்கிறார். 

கொஞ்ச நேரம் கழித்து பையன் பன்றிகளோடு திரும்புகிறான். சினைப்பன்றி தொலைந்து போனதால், அதைத் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அழுகிறான் பேரன். சரி, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று கையில் ஈட்டியுடன் கிளம்புகிறார் பெரியவர். 

அவரிடம் இருந்த இரண்டு சினைப்பன்றிகளில் ஒன்று குட்டிகளை ஈன்று குடிசையிலேயே தங்கிவிட்டது. இரண்டு பன்றிகளுமே சிலநாட்கள் முன்பின் தாய்மை அடைந்தவை. அப்படி என்றால் தொலைந்து போன அந்த பன்றி, குட்டிகளை ஈனுவதற்கு இடம் தேடித்தான் போயிருக்கும் என்று நினைக்கிறார். ஈனுவதற்கு தயாராய் இருந்த பெண்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொள்கிறார். 



குட்டிகளை ஈன்ற பெண்பன்றி மிகுந்த கோபமுடன் இருக்கும். யாரையும் பக்கத்தில் நெருங்க விடாது, அப்பன்றியை வளர்த்தவனாகவே இருந்தாலும் கிழித்து சாய்த்து விடும். எப்படியும் கண்டுபிடித்து பன்றி மற்றும் குட்டிகளுடன் திரும்பி வந்து விடுவேன் என்று கிளம்புகிறார் கிழவர். 

பன்றிகள் மேய்ந்த இடத்திலிருந்து, சிறுவன் கூறிய திசையை வைத்து அது காட்டுக்குள் தான் போயிருக்க வேண்டும் என நினைத்து காட்டை நோக்கிச் செல்கிறார். ஒரு ஓடையை கடந்து, எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பம் ஏற்பட்டபோது, தூரத்தில் ஒரு குருவி விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. எனவே பன்றி அங்கேதான் இருக்க வேண்டும் என எண்ணியவாறு குரல் வந்த திசை நோக்கிச் செல்கிறார். 

பக்கத்தில் போனதும் அங்கே பன்றி இருப்பதற்கான தடயங்களை அறிகிறார். ஆனால் பக்கத்தில் சென்றால் பன்றி குதறியெடுத்து விடும் என்று நினைத்து ஒரு மரத்தின் மேலே ஏறிப்பார்க்கிறார். அங்கே தாய்ப்பன்றியைச் சுற்றி குட்டிகள் கிடக்கின்றன. குட்டிகளை எண்ணிப்பார்த்து மகிழ்கிறார். வீட்டில் இருக்கும் குட்டிகளுடன் இந்தக் குட்டிகளையும் சேர்த்தால், எவ்வளவு குட்டிகள் எனக்கு என்று மகிழ்கிறார். அன்று முழுநிலவு. வானத்துக்கு ஒரே நிலவுதான், ஆனால் இங்கே என் அருமைக்குட்டிகள் எவ்வளவு கிடக்கின்றன இந்தப்பூமியில் என்று பூரிக்கிறார். 

குட்டிகளை அருகில் பார்க்க எண்ணி, மரத்தை விட்டு இறங்கி மெதுவாக பக்கத்தில் செல்கிறார். அதற்குள் பன்றி அவரைப் பார்த்து பாய்ந்து வந்து குதறுகிறது. பன்றியிடமிருந்து தப்பித்த கிழவர், சரசரவென மரத்தில் ஏறுகிறார். சிராய்ப்புகளுடனும், உடம்பில் அங்கங்கே வலியுமாக சிரமப்படுகிறார் கிழவர். பன்றிகளை அவருக்கு காட்டிக்கொடுத்த குருவி இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறது. தொலைவில் இருந்து பன்றி ஈன்ற வாசத்தை வைத்து பெரிய விலங்குகள் ஏதாவது வந்து விடுமோ என பயப்படுகிறார். அவர் பயந்தது போலவே, ஒரு நரி மெதுவாக புதரை நெருங்கி வருகிறது. 

தாய்ப்பன்றி அந்த நரியை குதறி எடுத்து விடுகிறது. தான் வளர்த்த பன்றி நரியைப் போராடிக் கொன்றதில் அவருக்கு பெருமை ஏற்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நான்கு நரிகள் ஒரே நேரத்தில் வர, தாய்ப்பன்றி ஒரு நரியைக் கொல்ல, கிழவர் தன் ஈட்டியின் மூலம் ஒரு நரியைக் கொல்கிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் புதருக்குள் புகுந்த மீதம் இரண்டு நரிகள், ஆளுக்கொன்றாக இரண்டு குட்டிகளை கவ்விக்கொண்டு போகின்றன. பத்துக் குட்டிகளில் இரண்டு போனதை நினைத்து வருந்துகிறார் கிழவர். குருவி இன்னும் ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. 

கொஞ்ச நேரம் போனால் பன்றி என்னை அடையாளம் கண்டுவிடும் என்று நினைக்கிறார். விடிந்ததும் முதல் வேலையாக தாய்ப்பன்றியை மீதமிருக்கும் குட்டிகளுடன்  கூட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். திரும்ப நிறைய நரிகள் கூட்டமாக வருகின்றன. என்ன செய்யவென அவருக்கு புரியவில்லை. கூட்டமாக இருக்கும் நரிகளை ஒரு பன்றி எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்து, குறைந்தபட்சம் குட்டிகளையாவது காப்பாற்றுவோம் என எண்ணிக்கொண்டு, தன் ஈட்டியை கணநேரத்தில் பன்றியை நோக்கி வீசுகிறார். பன்றி சாய்ந்துவிட்டது. தான் வளர்த்த பன்றியை தானே கொன்றுவிட்டதை எண்ணி கலங்கியவர், கீழிறங்கி கற்களை எடுத்து நரிக்கூட்டத்தை நோக்கி வீசுகிறார். நரிகள் கொஞ்ச தூரம் திரும்புகின்றன. ஒரு கூடையில் அந்தக் குட்டிகளை எடுத்துவைத்து தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். 

வரும் வழியில் அசதியும் களைப்பும் ஏற்பட, குட்டிகளை எப்படியாவது வீட்டுக்கு கொண்டுபோய்ச் சேர்த்து இன்னொரு தாய்ப்பன்றியிடம் முலையருந்த விடவேண்டும் என நினைக்கிறார். பன்றி குதறியதால் தொடையில் ஏற்பட்ட காயங்களும் சேர்ந்துகொள்ள, ஒருமாதிரி இருட்டிவர கூடையை கீழேவைத்து கண் சாய்கிறார். கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்தால் கூடையைச் சுற்றி கழுகுகள் அமர்ந்திருக்கிறது. அவசரமாக அவற்றை விரட்டி விட்டுப் பார்த்தால்,குட்டிகள் உயிருடன் இல்லை. தாங்கமுடியாத துயரத்துடன் மெதுவாக தன் குடிசையை நோக்கி நடக்கிறார். பொழுது விடியப் போகிறது. தன் குடிசை வாசலுக்கு வந்ததும், பொத்தென்று கீழே படுக்கிறார். பேரன் உள்ளிருந்து அவரைப் பார்த்து ஓடி வருகிறான். 

கிழவர் உண்மையாகவே இந்த நாவலின் தலைப்பு போலவே காட்டை வென்றாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இருந்த அறிவை வைத்து இரவு முழுவதும் அந்தக்காட்டில் வாழ்ந்திருக்கிறார். பன்றியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். குருவிகளின் குரலை, பன்றியின் கோபத்தை, நரிகளின் வருகையை அறிந்துகொள்கிறார்.  அந்தவகையில் அவர் காட்டை வென்றவர்தான். 

No comments:

Post a Comment