18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுடன் சேராமல் தனியாகவே இருந்தது நிஜாம் அரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து இந்தியாவுடன் இணைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் நாவல் விரிகிறது. கதை சந்திரசேகரன் என்னும் பால்ய வயது இளைஞனைச் சுற்றியே செல்கிறது. அவன் படித்த பள்ளி, கல்லூரி, நண்பர்கள், கிரிக்கெட், லான்சர் பாரெக்ஸ் எனும் ரயில்வே குடியிருப்பு, அதில் குடியிருக்கும் பக்கத்து வீட்டினர், இவ்வளவு பிரச்சனையிலும் அவர்கள் வளர்க்கும் பசு பற்றி என நாவலில் ஏகப்பட்ட தகவல்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமியர்களுடன் ஏற்படும் சண்டைகள், பின்னர் ஆட்சி மாற்றத்தில் அவர்கள் காட்டும் வேறுபாடு என சொல்லிக் கொண்டே செல்கிறார் அசோகமித்திரன். ஒரு சாமான்ய மனிதனின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலாறு, அரசியல் மாற்றங்கள் பற்றி எல்லாருமே அறிந்திருந்தாலும், அதற்கு நாம் என்ன செய்வது என்பது போலிருக்கும் சாமானியர்கள். காந்தி கொல்லப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு இஸ்லாமியர் தான் அவரைக் கொன்...