Friday, January 11, 2013

உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி

நாம் புரிந்து கொண்டதென்பது ஒன்று. ஆனால் உண்மை என்பது இன்னொன்று. சில சமயங்களில் நாம் புரிந்து கொண்டதிலிருந்து, உண்மையானது வெகு தூரத்தில் இருக்கும்

உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆகவே,  ஒருவர் தான் புரிந்து கொண்டதிலிருந்து கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். யார் சொல்வது இங்கே உண்மை?. உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும்.




அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதைகளின் சிறு தொகுப்பான '1945இல் இப்படியெல்லாம் இருந்தது'' புத்தகத்தை விஷ்ணுபுரம் விருது விழாவில் வாங்கினேன். அந்தப் புத்தகத்தில் தான் 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' என்கிற கதை இருக்கிறது. மிகவும் சிந்திக்கச் செய்த கதை.

ஒரு தம்பதியினர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நடுத்தர காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அத்தை வருகிறாள். அத்தை வந்த பின்னர், வீட்டு வேலை மற்றும் சமையலை அத்தையே பார்த்துக் கொள்கிறார். முதலில் ஒரு குறையும் சொல்லாமல் இருக்கும் அத்தை, போக போக வீட்டில் தான் இல்லாமல் எதுவும் நடக்காது போல உரிமை எடுத்துக் கொள்கிறார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட அத்தையைக் கேட்க கூடிய நிலைமையில் இருக்கிறார்கள் இருவரும்.

ஒருநாள் அத்தை இறந்து விடுகிறார். உறவினர்கள் யார் என்பது தெரியாமல் இவர்களாகவே எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின்னர் கணவன் கேட்கிறான், "இருந்தாலும் உன் அத்தைக்கு நாம் ரொம்ப இடம் குடுத்துட்டோம்" என்கிறான். மனைவி சொல்கிறாள்; "என்னது என் அத்தையா? உங்கள் அத்தை என்றல்லவா இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்".

இவ்வளவுதான் கதை, ஆனால் இத்தனை நாட்களாக நாம் புரிந்து கொண்டவை அனைத்தும் உண்மை அல்ல என்பது நினைவுக்கு வராமல் போகாது.

*****************


'உங்கள் வயது என்ன?' என்ற கதையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

முற்காலத்தில் உயிர்களைப் படைத்த கடவுள், வயதை நிர்ணயம் செய்யாமல் விட்டு விட்டார். எனவே  உலகத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகி, இடம் இல்லாமல் ஆகி விட்டது. இனிமேல், எல்லா உயிர்களுக்கும் வயதை நிர்ணயம் செய்து விடலாம் என முடிவெடுத்து, அப்படியே எல்லா உயிர்களுக்கும் வாழ் நாளை முடிவு செய்தார்.

மனிதன், கழுதை, மற்றும் நாய் ஆகிய மூன்று உயிர்களுக்கு மட்டும் வயதைச் சொல்லவில்லை. மூன்றும் கடவுள் முன்னால் வந்து நின்றன. மூன்றுக்கும் நாற்பது வயது என முடிவு செய்தார்.

கழுதை மட்டும், "என்னால், இத்தனை வருடம் பொதியைச் சுமக்க முடியாது. தயவு செய்து என் வயதை பாதியாக குறைத்து விடுங்கள்" என்றது.

உடனே மனிதன், "அந்த இருபதை  எனக்கு கொடுத்து விடுங்கள்", எனக் கேட்க, கடவுள் ஒப்புக் கொண்டார்.

நாய், "என் வயதையும் குறைத்து விடுங்கள்" என்றது, கடவுள் ஆகட்டும் என்றார்.

மனிதன் உடனே எழுந்து, "சாமி.." என வாய் திறக்க, கடவுள் "அப்படியே ஆகட்டும்" எனச் சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார்

அன்றிலிருந்து தான், முதல் நாற்பது வருடங்கள் மனிதனாகவும், அடுத்த இருபது வருடங்கள் கழுதை போலவும், மீதி இருபது வருடங்கள் நாய் போலவும் அலைய நேரிட்டது.

*****************



'1945இல் இப்படியெல்லாம் இருந்தது', 'தோஸ்த்', 'நாய்க்கடி', 'யார் முதலில்?' போன்ற கதைகளும் அருமையானவை. படித்துப் பாருங்கள்.

புத்தகம் வாங்க;
உடுமலை.காம் 




படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி

1 comment:

  1. @ezhil
    நன்றிங்க..
    உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete