Tuesday, February 5, 2013

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய
சின்னத்தனங்கள்,

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய
துணிச்சல்,

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய
நோய்கள்,

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய
அவமானம்,

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப்பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில்
அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே -

நாளை மற்றுமொரு நாளே !



புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகளே, நாவலின் போக்கைச் சொல்கிறது.



ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை தான் நாவலில் வருகிறது. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, கிடைக்கும் நேரத்தில் உணவருந்தி, அலுவலகம் ஓடி, திரும்ப கூட்டுக்கு ஓடி வரும் பறவை போல மாலை திரும்பும் மனிதர்கள் பற்றிய நாவல் இல்லை இது. சாதாரண மனிதர்கள்தான் நாவலில் வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை, காலி பாட்டில்களை சேகரித்து காசு தேற்றும் நிலை, பத்து ரூபாய் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் தான் நாவல் முழுவதும் வருகிறார்கள்.

கந்தன் என்னும் பாத்திரத்தின் வாயிலாகவே கதை சொல்லப் படுகிறது. நாள், கிழமை என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. ஓரிடத்தில் நாவலில் சொல்வது போல 'நாயுடு, வாடகைக்கு வந்தால் ஆறாம் தேதி' அது மட்டும் தான் அவனுக்கு தெரியும். மற்ற எல்லா நாட்களும் அவனுக்கு ஒரே நாள்தான். இன்னோரிடத்தில், அவன் நண்பன் 'வருங்காலத்துக்கு என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறாய்?' எனக் கேட்கிறான், அதற்கு கந்தன் சொல்கிறான் 'எந்தத் திட்டம் போட்டு நான் சொர்ணத்தம்மாவின் வயிற்றில் வந்து பிறந்தேன்' எனக் கேட்கிறான். சொர்ணம் கந்தனின் அம்மா.

அவன் சேர்த்துக்கொண்ட மனைவியின் பெயர் மீனா. தன்னால் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், வேறோர் இடத்தில அவளைச் சேர்த்துவிட தரகர்களிடம் கேட்கிறான் கந்தன். அவர்களின் ஒரே பையன் சந்திரன், சண்டை போட்டு விட்டு எங்கேயோ ஓடி விட்டான். அவனை இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.

கந்தன் காலையில் எழுந்து, அவன் இடையில் சந்திக்கும் மனிதர்கள் ஊடே கதை ஓடி, அன்று இரவு கதை முடிகிறது. கனவில் தொடங்கும் அவனின் அன்றைய நாள், அவன் கனவு காண்பதிலே முடிந்து விடுகிறது. இடையில், அவனின் கதை சொல்லப் படுகிறது. அவனின் கதை என்பதை விட, கந்தன் மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களின் கதை.



ராக்காயி என்கிற மோகனா, செட்டியார் மற்றும் ஐரீன், சோலை, தரகர் அந்தோணி, குதிரை வண்டி ஓட்டி , ஏட்டையா பொன்னுசாமி, முத்துசாமி, அன்னக்கிளி என நாவலில் அப்படியே வந்து போகிறார்கள். நாம் நேரில் அவர்களைப் பார்த்தால் கூட, சொல்லி விட முடியும். பெரிய விளக்கங்கள் இல்லை, இரண்டொரு வார்த்தைகளில் நம் மனதுக்கு நெருக்கமாக வந்து விடுகிறார்கள்.

தரகர் அந்தோணி, சிறு வயதில் தான் ஒரு பத்து ரூபாய் பணத்துக்காக நிர்வாணமாக ஓடினேன் எனச் சொல்பவர், அன்றில் இருந்து 'இந்தப் பணமே ஒரு மானங் கெட்ட விஷயம்...' என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்கிறார்.

பக்கத்தில் ஒரு சேரி தீப்பற்றி எரிகிறது. இறந்தது பன்னிரண்டு பேர். வீணாக நகர சபைக்கு ஏன் கெட்ட பெயர் என்று மூன்று உயிர்களையே விபத்து குடிதுவிட்டதாகப் பத்திரிக்கைகள் அறிவிக்கின்றன. "அந்தப் பன்னிரண்டு பேருமே சாகவில்லை; அவங்க எல்லோருமே வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க; எப்படியும் அடுத்த தேர்தல்லே ஓட்டுப்போட வந்திடுவாங்க. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம்" என பேசிக்கொள்கிறார்கள் நாவலில்.

**********************

இன்றைக்கு இப்படி இருக்கிறான் கந்தன். அவனுடைய 'நாளை' எப்படி இருக்கும்?. அதைப்பற்றிய கவலை நமக்கு எதற்கு, நமக்கெல்லாம் எப்படி 'நாளை' என்பது உண்டோ, அது போலவே அவனுக்கும் 'நாளை மற்றுமொரு நாளே !'

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி 




3 comments:

  1. எப்பேர்ப்பட்ட ஜனநாயகம்...!

    ReplyDelete
  2. தமிழில் முதல் சர்ரியலியச நாவல் என எழுத்தாளர் சுஜாதா அவர்களால் புகழப்பெற்றது. மிக அருமையான நாவல்!

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன்
    @மதுரை அழகு
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete