Showing posts with label நமது பூமி. Show all posts
Showing posts with label நமது பூமி. Show all posts

Friday, July 25, 2014

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால்,  ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்?. இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா.

***********

நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. 'உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்று சொல்வார்கள் ஊரில். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும்.. அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் என பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை விடுத்து, விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கும்.

இயற்கை முறை விவசாயத்தில், நாம் நுழைவதற்கு தடையாக இருப்பது அந்த பயமே. ஆனால், நம்மாழ்வார் போன்ற சில ஆசான்கள் நமக்கு வழிகளைக் காட்டுவார்கள். நடக்க வேண்டியது நாம்தான்.  அப்படி ஒரு ஆசான்தான், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா அவர்கள்.


இளம் வயதில், தாவரங்களில் வரும் நோய்களைக் கண்டறியும் ஆய்வுகளில் பணி செய்திருக்கிறார். இயற்கை முறை விவசாயம் மீது நாட்டம் கொண்டு, தன் தந்தையின் ஆரஞ்சுப் பழத் தோட்டத்தில் இயற்கை முறையைப் புகுத்துகிறார். ஆனால், ஒரே மாதிரியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், பயிர் வளர்ப்புக்கு பழக்கப்பட்ட அந்த மரங்கள் பட்டுப் போகின்றன. அவரின் தந்தை, இது சரிப்பட்டு வராது எனச் சொல்ல, மீண்டும் ஆய்வு வேலைக்கே செல்கிறார்.

இயற்கை முறை விவசாயம் மீதான ஆர்வம் தணியாமல் இருக்க, எட்டு வருடங்கள் கழிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார் ஃபுகோகா. அதன் பின்னர், எந்த ஒரு நவீன முறைகளைப் பின்பற்றும் உயர்தர பண்ணையைக் காட்டிலும், அவரின் பண்ணையில் விளைச்சல் அதிகரிக்கிறது. அவரின் பண்ணையைத் தேடி வந்து, அங்கேயே அவருடன் தங்கி இளைஞர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்கிறார்கள்.



***********

இயற்கை விவசாயத்துக்கு முக்கியமான நான்கு அடிப்படை விதிகளைச் சொல்கிறார்;

1. நிலம் உழப்படக் கூடாது

நிலத்தை எப்பொழுதும் உழவே கூடாது. நிலத்தை உழும்பொழுது, மேல் மட்டத்தில் உள்ள மண்புழுக்கள், நுண்ணியிரிகள் கொல்லப் படுகின்றன. மண்ணின் அடியில் உள்ள சில களைப் பூண்டுகள், மேலே வந்து களைகளும் பெருகுகின்றன. நிலத்தை உழுவது என்பது, அந்நிலத்தை மேலும் கெடுப்பதே என்கிறார் ஃபுகோகா.

2. உரங்கள்

உரங்கள், இரசாயனங்கள் அன்றி வேறில்லை. அவற்றை முதலில் பயன்படுத்தும் பொழுது, விளைச்சல் அதிகரித்தாலும், ஒவ்வொரு முறையும் உரங்களை அதிகப்படுத்த வேண்டும். செலவும் ஏறிக்கொண்டே போகும். மண்ணின் தரமும் கெட்டு, சூழலையும் கெடச் செய்கின்றன உரங்கள்.

3. களைகள்

நிலத்தை உழாமல் இருப்பதன் மூலம் பாதிக் களைகள் கட்டுப்படும். மீதி இருப்பதை, வைக்கோல்களைப் பரப்புவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களைகள் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை. வழக்கமாக,  களை எடுத்தல் என்பது மிகவும் செலவு வைக்கக் கூடியது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறார் ஃபுகோகா.

4. பூச்சிக்கொல்லிகள்

இயற்கைக்கு ஓர் சமன்நிலை உண்டு. ஓர் உயிர் பெருகும்போது, அதை உண்ண இன்னொரு உயிர் உண்டு. அது ஒரு சங்கிலி போன்றது. [ஒரு சமயம் எங்கள் வீட்டில் வளரும் வாழை மரங்களில், பச்சைப் புழுக்கள் பெருகி இலையை மடித்து வளர்ச்சியைப் பாதித்தன. ஆனால் குருவிகள், அதைக் கொத்தி கொத்தி தனக்கு உணவாக்கிக் கொண்டன. எந்த மருந்தும் தெளிக்காமல், அவைகள் மறைந்து விட்டன] நாம் ஒரு பூச்சியைத் தடுக்க, இன்னொரு பூச்சி பெருகி விடும். இவ்வாறு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது, காலப்போக்கில் சூழலை மிகவும் கெடுத்துவிடும் என எச்சரிக்கிறார் மசானபு ஃபுகோகா.

***********

வைக்கோலும், களிமண் உருண்டைகளும்

இவரின் இயற்கை முறை வேளாண்மையில், முக்கிய இடம் வகிப்பது வைக்கோல். அறுவடை செய்த பின்னர், அந்த வைக்கோலை அதே நிலத்தில் அப்படியே பரவலாகப் போட வேண்டும். இதனால் களைகள் கட்டுப்பட்டு, வைக்கோல் மக்கி கரிம உரமாக மாறிவிடும். ஒவ்வொரு பயிர் சுழற்சியின் போதும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கிறார். இன்று அவரின் நிலத்தில், மண் மிகுந்த வளத்துடன் உயர்ந்துள்ளது.  விதைகளை அப்படியே தூவாமல், ஒரு சிறு களிமண் உருண்டையில் பொதிந்து தூவ வேண்டும் என்கிறார். இதனால், எலி போன்ற விலங்குகள் விதைகளை நாசப்படுத்துவதும் குறைந்து, முளைக்கும் திறனும் அதிகரிக்கும் என்கிறார்.

இயற்கை வேளாண் பொருட்களின் விலை

சந்தையில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள், மற்ற பொருட்களைக் காட்டிலும் விலை அதிகம் தான். இயற்கை முறையில் பயிரிடுவது என்பது, மிகுந்த செலவன்றியும், குறைந்த உழைப்புடனும் செய்யப்படுவதால் விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து என்கிறார் ஃபுகோகா.



ஒற்றை வைக்கோல்

மசானபு ஃபுகோகா சொல்கிறார்;
"இந்த மலைக்குடிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நடுவே, உடலாலும், மனதாலும் சோர்ந்து போன, அனைத்திலும் நம்பிக்கை இழந்த சிலரும் வருவதுண்டு. அவர்களுக்கு ஒரு சோடிக் காலணிகள் கூட வாங்கித் தருவதற்கு சக்தியற்ற இந்த வயதான விவசாயிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

ஒரே ஒரு வைக்கோல்!

இந்த ஒற்றை வைக்கோலில் இருந்து ஒரு புரட்சியைத் தொடங்கலாம். "
***********

இதோ அந்த வயதானவரின் கைகளில், அந்த ஒற்றை வைக்கோல். மசானபு ஃபுகோகா - விடமிருந்து, அந்த ஒற்றை வைக்கோலைப் பெற நாம் முன் வர வேண்டும்.

இந்தப் புத்தகத்தில், இயற்கை முறை விவசாயம் மட்டுமில்லை.. தத்துவம், உணவுமுறை, உடல் நலம் என அனைத்தையும் பற்றிப் பேசுகிறார் மசானபு ஃபுகோகா. 
படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
***********
ஒற்றை வைக்கோல் புரட்சி
ஆசிரியர்: மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்
எதிர் வெளியீடு
படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி 

Monday, July 8, 2013

பள்ளம்

காற்றே இல்லை எனச்
சொல்லும் இதே மனிதன் தான்
வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு
வீட்டைச் சுற்றிலும்
குரோட்டன்ஸ் வைத்தவன்..

ஆற்றில் நீர் இல்லாததை
'பச்..  தண்ணியே இல்லை'
எனக்கடந்து போகும்
இதே மனிதர்கள்தான்
மக்கவியலாத பொருளையும்,
கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்..

நீர் இல்லாதபோது,
நிறைய மணல் அள்ளலாம் எனச்
சிலர் சந்தோசப் படுகிறார்கள்..

ஆற்று நீரை
அப்படியே குடிக்காதீர்கள்
அதில் கழிவுகள் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்..

உழைத்து மூப்பேறிய
மூத்த தலைமுறை விவசாயியின்
ஒடுங்கிய வயிறு
போலான பள்ளங்களோடு
ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..

Friday, March 15, 2013

பிளாஸ்டிக் பூதம்

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக, அனைத்துக் டீக்கடைகளிலும்  பாலிதீன் பைகளில் டீயை ஊற்றித் தருகிறார்கள். மக்களும் அதைக் குடித்து மகிழுகிறார்கள். பாத்திரம் வேண்டியதில்லை, அதைக் கழுவ வேண்டியதில்லை. ஒரு பார்சல் வாங்கி வந்து(கூடவே இரண்டு பிளாஸ்டிக் தம்ளர்களையும், கடைக்காரரே கொடுப்பார்).. அப்படியே ஊற்றிக் குடித்து விட்டு, வீசி விடலாம். அது மக்கினால் என்ன, மக்காவிட்டால் தான் என்ன?.

சரி, சுற்றுப்புறம் பற்றிதான் கவலையில்லை. பாலிதீன் பைகளில் ஊற்றப்பட்ட டீயைக் குடிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கவலை இல்லை. கொதிக்க கொதிக்க சாம்பாரையும், டீயையும் பாலிதீன் பைகளிலும், பிளாஸ்டிக் பொருட்களிலும் அடைக்கும் பொழுது கண்டிப்பாக அது இளகும். இளகிய கொஞ்சம் பகுதிகள், நாம் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்களில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அதைப் பற்றியும் நமக்கு விழிப்புணர்வு இல்லை.

டாக்டர் விகடன்(16-03-13) இதழில், 'உணவே விஷம் ஆகலாமா?' என்ற கட்டுரையில்;

'தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரொபைலீன் போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்று நோயை உண்டாக்கக் கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது.

பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால் -ஏ'(BISPHENOL-A) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப் பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. ஹார்மோன்களின் சம நிலையையும் இவை  பாதிக்கக் கூடும்.

இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உரைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உரைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.

இந்த கெமிகல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு
.'  என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

நீக்கமற நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது. முடிந்த வரை, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம். நம் உடல் நலனைக் காப்போம்.

பிளாஸ்டிக் எனும் பூதத்தின் வாயில் அகப்பட்டு விட்ட நாம், கொஞ்சம் முயன்றால் வெளியே வந்து விடலாம். இல்லையெனில் அது நம்மை விழுங்கும் நாள் தூரத்தில் இல்லை.

எனது பழைய பதிவுகள்;
பாலிதீன் பைகளில் டீ !
பாலிதீன் என்னும் பிசாசு..

நன்றி: டாக்டர் விகடன்

Wednesday, August 10, 2011

பாலிதீன் பைகளில் டீ !

இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டு வேலைகள் இருப்பதால், வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள். பதினோரு மணிக்கு டீ வாங்க காசு கேட்டார்கள். வேலைக்கு வந்தது மூன்று பேர். ஒருவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்குப் போனார். வரும்போது, பாலிதீன் பையில் வாங்கிய டீயோடு, கூடவே மூன்று பிளாஸ்டிக் கப்புகளும் வாங்கி வந்திருந்தார்.

இப்படி டீ வாங்கி குடிக்காதீர்கள் என்று சொன்னேன். காதிலேயே போட்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவன் போய் சொல்ல வந்துட்டான் என நினைத்திருக்கலாம்.

எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள். இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா?. இப்படி குடிப்பவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்பவர்களே.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டாலும், மறைத்து வைத்து பயன்படுத்தும், நமக்கு அதன் தீமைகள் எப்போது தெரியப் போகின்றன?.

வீதிக்கு நாலு டீக் கடைகள் இருக்கும் நம் ஊர்களில் எப்படி இதை சமாளிப்பது?. என்னதான் தடை போட்டாலும், மக்களாகத் திருந்தாமல் பாலிதீன் என்னும் நஞ்சை அழிக்க முடியுமா?

இந்த உலகை காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் நாம்...?

பழைய பதிவொன்று: பாலிதீன் என்னும் பிசாசு..




Tuesday, January 4, 2011

பாலிதீன் என்னும் பிசாசு..


பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் சுற்றுச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே ஒரு பாலிதீன் பையைக் கொடுத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கேட்டு வாங்குபவர்கள் நிறையப் பேர். இதில் திரும்ப பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சமே, பெரும்பாலும் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களே நம்மை வந்தடைகிறது.

முன்னொரு காலத்தில் எல்லாம் வீட்டில் இருந்து பாத்திரங்களைக் கொண்டு போய் இட்லி, சட்னி, சாம்பார் என வாங்கி வருவார்கள். எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பாட்டில்களை கொண்டு போய் வாங்கி வருவார்கள். இப்பொழுது எல்லாமே கவர்களில். கடைக்கு கையை வீசிக் கொண்டு போய்விட்டு, வரும்போது இரு கை நிறைய பாலிதீன் பைகளை சுமந்து கொண்டு வருகிறோம். சில வருடமாக, டீக் கடைகளில் கொதிக்க கொதிக்க டீயை பாலிதீன் கவர்களில் ஊத்தி தருகிறார்கள்.

ஒவ்வொரு வீதிகளின் குப்பை போடும் இடத்தில் பரந்து கிடக்கும் பாலிதீன் பைகள் எத்தனை. குப்பை வண்டிகள் அள்ளிக் கொண்டு போனாலும் அவர்களும் ஒரு இடத்தில் கொட்டித்தானே வைப்பார்கள். அதுவும் நாம் வாழும் பூமியின் ஒரு இடம்தானே.

அங்கங்கு போடும் பைகள் சாக்கடைகளில் மூழ்கி, மழைக் காலங்களில் தண்ணீர் போக முடியாமல், வழியை அடைத்து விடுகிறது. இன்னும் சில பைகள் மண்ணில் புதைந்து மக்க வழி இன்றி அப்படியே கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் பாலிதீன் பைகள் கிடக்கும் இடங்களில் அங்கே வாழும் சிறு உயிர்களின் வாழ்வாதாரம் கெட்டுப் போகிறது. கண்ணுக்கு தெரியாத எவ்வளவோ உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாளை நம் குழந்தைகள் மண்ணில்(!) விளையாடினால் கல்லும் மண்ணும் கிடைக்கிறதோ இல்லியோ, அவர்களுக்கு கொஞ்சம் நம் காலத்து பாலிதீன் கவர்கள் கிடைக்கும்.

இதெல்லாம் தவிர தண்ணீர் பாட்டில்கள் பெரும் பிரச்சினை. கடையில் மட்டும் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், தற்போது கல்யாணம் மற்றும் இதர விசேசங்களில் இலைக்கு ஒரு பாட்டில் வைக்கிறார்கள்.

இதை விட மற்றும் ஒன்று. குப்பைகள், மீந்த சாதம், பொரியல், எலும்பு, கழிவுகள் என அப்படியே ஒரு காகிதத்தில் கட்டி ஒரு துளி காற்று கூட உள்ளே போக முடியாதவாறு கட்டி போடுவது. அந்தக் கழிவுகள் அப்படியே அந்தக் கவருக்குள்ளே கிடந்து, வேதி வினைகள் ஆற்றி நாம் கடக்கும் போது 'குப்' என்று புரட்டி வருகிறதே, அதற்கு நாமும் ஒரு காரணமல்லவா?.



முற்றிலுமாக நம்மால் தவிர்க்க முடியாதுதான். அதை பின்வரும் வழிகளில் கொஞ்சம் குறைக்கலாமே;

-பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றால் முடிந்த அளவு வீட்டில் இருந்து பைகளை கொண்டு செல்லுங்கள்.

-கையில் கொண்டு வரக் கூடிய பொருட்களுக்கு கடைக்காரர் பாலிதீன் பையில் போட்டு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லுங்கள். (ஒரு சோப்பு, ஒரு பாகெட் பிஸ்கட் வாங்கினாலும் கடைகளில் பாலிதீன் கவர் கொடுப்பார்கள்)

-முடிந்த அளவு REUSE பண்ணலாமே.

-குழந்தைகளுக்கு பாலிதீன் தீமைகள் பற்றி சொல்லிக் கொடுக்கலாம்.

-முக்கியமாக பயன்படுத்திய பின்னர் சரியான முறையில் குப்பையில் சேருங்கள்

- குப்பைகளை பாலிதீன் கவர்களில் கட்டிப் போடாதீர்கள்.

இந்த உலகத்தில் இருந்து எத்தனையோ பெற்றுக் கொண்ட நாம், அதற்கு திருப்பிச் செய்யும் ஒரு நன்றிக் கடனாக இருக்கட்டுமே.

SAY NO TO PLASTIC BAGS..

ஒரு வீடியோ:




SAY NO TO PLASTIC BAGS..

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.