விஷ்ணுபுரம் விருது விழா - 2013
நீரைத் தவிர வேறொன்றும் தெரியாது மீன்களுக்கு. நீர்தான் உலகம். அந்த நீர் சூழ்ந்த உலகம் இல்லை என்றால் மீன்களும் இல்லை. நீர் குறைந்த காலத்தில் கூட, சின்ன இடம் என்றாலும், ஒன்றன் மேல் ஒன்று நீந்திக் கொண்டு, முட்டிக் கொண்டு ஒரே இடத்தில வாழ்ந்து விடும். அவைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. சில சமயங்களில் தன்னை விட பெரிய மீன்கள் விழுங்கவும் வரும். அந்தப் பெரிய மீன்களிடம் போராட வேண்டும். தன் இனம் தான் என பெரிய மீன்கள் நினைப்பதில்லை. 'எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!' மீன்கள் மட்டுமல்ல, இதோ நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொன்ன கதை, தெளிவத்தை ஜோசப் அவர்களின் 'மீன்கள்' சிறுகதை. இந்த வருட விஷ்ணுபுர விருது தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன், அவரின் சிறுகதைகள் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளியாகின. முன்னரே அவரைத் தெரியாதிருந்த போதிலும், சில கதைகளைப் படித்தவுடனே மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டார். *********** விழாவில் தெளிவத்தை அவர்கள், 'ஒப்பாரிக் கோச்சி' என்று ஓரிடத்தில் குறிப்பிட்...