Showing posts with label ம.நவீன். Show all posts
Showing posts with label ம.நவீன். Show all posts

Monday, August 12, 2024

தாரா - ம.நவீன்

புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள். 

ஷரியா நிருத்ய என்னும் நடனம் பரதம் போன்ற ஒன்று. நேபாளில் இக்கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இக்கலையில் பிரகாசிக்க தாராவின் அருள் வேண்டும் என்று நம்பப்படுகிறது. 

தாராவைப் பற்றியும்,  ஷரியா நிருத்ய நடனம் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வல்லினம் தளத்தில் கோகிலவாணி எழுதிய பச்சை நாயகி , கடவுளும் கலையும் கட்டுரைகளைப் படிக்கலாம்.  


 
தமிழ், நேபாளி என இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் பூசல் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது எனச் சொல்லும் கதை தாரா. மலேசியாவில் இரண்டு சமூகமும் தன் வாழ்க்கையை அந்நிலத்தில் வாழ, படும் அவலங்களை பேசுகிறது இந்நாவல். முதலாளிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குபவர்கள். உள்ளூர் தொழிலாளிகள் சம்பளம் கூட கேட்டு பிரச்சினை செய்தால், வெளியூரில் இருந்து குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை இறக்குகிறார்கள். குறைந்த கூலிக்கு தன்னுடைய வேலைக்கு  புதிதாக வந்த நேபாளிகள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைச் சீண்டுகிறார்கள். அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் நேபாள் மக்களின் தலைவராக சனில் இருக்கிறான். 

அரசியல்வாதி மருது இப்பிரச்சினைகளை பற்றி பேசும்போது "பட்டா இல்லாத பூமியில் நாம் இருக்கிறோம். அரசாங்கத்துடன் நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. நாம முந்தா நாள் வந்தோம். அவன் (நேபாள மக்கள்) நேத்து வந்தான். அவன் வேலையை அவன் செய்யட்டும். உங்க வேலையை நீங்க பாருங்க." என்று கூறுகிறான். அவரைப் பொறுத்தவரை, அடுத்த தேர்தலில் நேபாள மக்களுக்கு தேர்தல் வாக்குரிமை தந்தால் அதைப் பெற்றாக வேண்டிய கணக்கு அவருக்கு.

ஆனால் அவரின் பேச்சு எடுபடாமல் அந்தக் கம்பத்தைச் சேர்ந்த குகனோடு சேர்ந்து பிரச்சினை வருகிறது. அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு அவன் தலைவன் போல, எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறான். சிறைக்கும் சென்று வருகிறான். அவன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த சனிலை பழிவாங்க  வேண்டும் என அவனின் நண்பர்கள் நினைக்கிறார்கள். 

குல தெய்வம் இல்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு கோயில் ஒன்று கட்டப்படுகிறது. சில பிரச்சினைகள் ஏற்படுவதால் கோவில் பூட்டியே வைக்கப்படுகிறதது. அதற்கு காரணம் அம்மன் கோபமாக இருக்கிறாள் என்று சொல்லுகிறார்கள். முன்னொரு காலத்தில் பழங்குடியினரோடு மோதிய சண்டையில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதால் அம்மன் கோபத்தோடு இருக்கிறாள் என ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அக்குடியின் தலைவன், தமிழ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்  "ஒரு தலைவனிடம் அறம் இல்லாமல் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அக்குடியின் பெண்கள் அறம் பற்றி நினைக்காமல் கொண்டாடுவதைக் கண்டு கவலைப்படுகிறேன்" எனச் சொல்கிறான். அன்று அறம் பிறழ்ந்த தன் மக்களை இன்றும் கோபத்துடன் நோக்குகிறாள் கந்தாரம்மன். எனவேதான் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன எனப் பேசுகிறார்கள் ஊர் மக்கள். 



அந்தக் கோவிலை கட்ட நிலம் கொடுத்த அஞ்சலை, கோவிலை சுத்தம் செய்தல், மாலை கட்டுதல் போன்ற சிறுசிறு வேலைகள் செய்கிறாள். கோவில் சார்பாக அவளுக்கு சொற்ப வருவாய் கிடைக்கிறது. அஞ்சலை வேறு சாதி என்பதால் அவளிடம் தள்ளியே பழகுகிறார்கள் கம்பத்து மக்கள். தன் கணவன் சங்கரனை மதித்த ஊர் சனம் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அவளுக்கு கோபம் இல்லை. கணவன் இறந்த பின்னர் ஒரே மகளான அமிர்தவள்ளி காதல் திருமணம் செய்து ஊரை விட்டுப் போகிறாள். அவளுக்கு பிறந்த மகளான கிச்சி என்கிற மீனாட்சி நகரத்தில் படிக்கிறாள். தன் பாட்டி அஞ்சலையின் வீட்டுக்கு வரும் கிச்சிக்கு பார்க்கும் இடமெல்லாம் பசுமை நிறைந்து இருக்கும் கம்பம் பிடித்துப் போகிறது. ஒவ்வொரு விடுமுறைக்கும் தன் அம்மாவை நச்சி நச்சி பாட்டியிடம் கொண்டு வந்து விடச் சொல்கிறாள். அவளுக்கு அங்கே தோழர்களாக லிங்கமும், கோகியும் அமைகிறார்கள். 

நேபாள் மக்களின் தலைவன் சனிலின் ஒரே மகளான அந்தராவுக்கு ஷரியா நிருத்ய நடனம் மேல் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நடனம் ஒரு சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அந்தராவின் சாதி அந்நடனம் ஆட தடையாக இருக்கிறது. அந்தரா குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களை எளிதாகப் பறிப்பாள். ஷரியா நடனத்துக்கு தாமரைப் பூக்கள் வேண்டும் என்பதால் அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் அவள் அப்படியே ஓரமாக நின்று கற்றுக்கொள்கிறாள். ஒருநாள் தனியாக அவள் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது மேல்சாதி பெண் பார்த்து விட பிரச்சினையாகி அவளை அடித்து விடுகிறார்கள். இந்தப் பிரச்சினையின் காரணமாகவே அந்தராவின் குடும்பம் மலேசியாவுக்கு குடி பெயர்கிறது. அவளைப் பொறுத்தவரை, நடனம் ஆட குரு தேவை. அப்படி குரு அமையவில்லை எனில், நீலத் தாமரையையே குருவாக பாவித்து ஆட தொடங்கலாம். ஆனால் நீலத் தாமரை எல்லா நாட்களிலும், எல்லா குளத்திலும் கிடைக்காது. அதுவும் வருடத்தின் ஒரு முறை மட்டுமே மலரும் நீல மலரை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் அந்தரா. 

கிச்சிக்கும் அந்தராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. கிச்சிக்கு ஆங்கிலம் தெரியுமென்பதால் அவளுடன் உரையாட முடிகிறது. நீலத் தாமரையை நான் போன வருடம் பார்த்தேன், இந்த வருடம் கண்டிப்பாக  பறித்தே விடுவேன் என்கிறாள் அந்தரா. கிச்சி, எங்கள் கோவிலில் உள்ள அம்மனிடமும் நீலத் தாமரை உண்டு என்கிறாள். அதைக் கேட்டு ஆச்சரியப்படும் அந்தரா, உங்கள் தெய்வத்துக்கு சூட்ட நான் நீலத் தாமரையை கொண்டுவருகிறேன் என்கிறாள். 

குழந்தைகள் நீல மலருக்கு காத்துக் கொண்டிருக்க, பெரிய மனிதர்களான இளைஞர்கள் திட்டம் போடுகிறார்கள். குகனை ஒருமுறை எட்டி உதைத்திருக்கிறாள் அந்தராவின் அம்மா திமிலா. ஒரு நேபாள் பையன் தமிழ் பெண்ணை காதலித்து ஊரை விட்டு போவதால், அதை சாக்காக வைத்து பிரச்சினை பெரிதாகிறது. திமிலா பழைய பகையில் கொல்லப்படுகிறாள். சனில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்று விடலாம் என்றால், நீலத் தாமரையை பறித்து விட்டே நான் இந்த ஊரை விட்டு வருவேன் என்கிறாள் அந்தரா. 

பகை முற்றிக் கொண்டே போய், அந்தராவை சீரழிப்பதிலும், சனிலைக் கொல்வதிலும் முடிகிறது. ஆனால் அந்தரா அவ்விரவில் நீல மலரைக் கொண்டு வருகிறாள் கிச்சிக்கு. எல்லோரும் கோவிலில் கூடியிருக்க, தெய்வமேயான அவள் சொல்கிறாள் 'நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்' என்கிறாள். இரக்கமும் கருணையும் நிரம்பிய தாரா தெய்வம் அவளில் இறங்கியிருக்கிறது. அவள் மலரைக் கொடுத்துவிட்டு ஒரு மின்னல் போல காணாமல் போகிறாள். 

அவளின் நிலையைப் பார்த்த தமிழ் பெண்கள் அதற்கு காரணமான தன் பிள்ளைகளான இளைஞர்களை வெட்டுகிறார்கள். அந்த ரத்தம் அம்மனின் காலடியில் விழ, கிச்சி நீல மலரை சூட, முன்னொரு காலத்தில் அறம் பிறழ்ந்த அம்மக்களின் மீது கோபம் கொண்ட அவளின் கோபம் தணிகிறது. 


Thursday, January 7, 2021

பேய்ச்சி - ம.நவீன்

பேய்ச்சி நாவல் பற்றி ஜெயமோகன் தளம் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் படித்த பொழுதே வாங்க நினைத்தேன். வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். நாவல் மீதான தடையை அறிந்த பின்னர் உடனடியாக இந்நாவலை வாங்க முடிவு செய்து பனுவல் தளத்தில் வாங்கினேன். புத்தகம் வந்து சேர்ந்து படித்தும் விட்டேன்.

எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் சிறுகதைகளை இணையத்தில் படித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் சந்திப்பில் அவரைப் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. பேய்ச்சி நாவலில் அவரின் எழுத்து நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது. மூன்று நான்கு தலைமுறை மக்கள் நாவலில் வந்துபோகிறார்கள். 

ரப்பர் தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள், அங்கே அவர்களின் வாழ்க்கை, தம் சொந்த நிலமான தமிழகத்தை விட்டு இங்கே வந்து பின்னர் இதுவே சொந்த மண் என்று நினைக்கும் மக்கள், பக்கத்தில் இருப்பவர்களே சொந்த பந்தங்கள் என விரிகிறது நாவல். ரப்பர் தோட்டங்களில் மரங்கள் வேரோடு  தோண்டப்பட்டு, செம்பனை மரங்கள் நடும்பொழுது ஏற்படும் வேலை இழப்புகள், தோட்டத்தில் இருந்து பிரிய வேண்டிய நேரம் என புலம்பெயர் மக்களின் வாழ்வை பேசும் நாவல்,. ஜப்பான், பிரிட்டிஷ் என மாறி வரும் ஆட்சிகள், சீனர்களின் உழைப்பு என்று கதையோடு சொல்கிறது. 

ஓலம்மாவின் கணவன் மணியம், நல்லவனாக தெரிந்தாலும் சீன பெண் மீது சபலப்படுகிறான். மணியம் அவளைக் கல்யாணம் செய்யும் முன் அவளுக்கு சித்தம் பிறழ்ந்த குமரன் என்னும் மகன் உண்டு. அப்பிள்ளை அவனைத் தொந்திரவு செய்கிறான். வயதாக வயதாக அவனைச் சமாளிக்க முடியவில்லை என்று வைத்தியர் ராமசாமியிடம் புலம்புகிறான். ஓலம்மா அவன் அப்படி இருந்தால் என்ன, எனக்கு எப்பவுமே அவன் பிள்ளைதான் என்கிறாள். மணியம் குமரனைக் கொல்ல முடிவு செய்து, விஷம் வைத்துக் கொல்கிறான். 

ஓலம்மாவுக்கு நண்பனாக வைத்தியர் ராமசாமி. அவரின் அப்பா கோப்பேரன் தமிழகத்திலிருந்து வந்தவர். பேய்ச்சி அம்மனுக்கு பூசாரியாக இருந்த கோப்பேரன், அவரின் மனைவிக்கு பிறந்த ஆறு அல்லது ஏழு குழந்தைகள் இரண்டு வாரங்களில் இறந்து போக, இந்தப் பிள்ளையையும் பேய்ச்சி காவு வாங்கிவிடுவாள் எனப் பயந்து குழந்தையான ராமசாமியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார். பின்னர் ஒரு செட்டியாரிடம் வேலைக்குச் சேர்ந்து மலேசியா வந்து சேர்கிறார். வைத்தியராக கோப்பேரன், ஊரை விட்டு, பேய்ச்சியை விட்டு வந்த பின்னர் யாருக்கும் வைத்தியம் பார்ப்பதில்லை. பேச்சியாக வந்து சொன்னால்தான் வைத்தியம் பார்ப்பேன் என்பவருக்கு ஒரு நாகம் தரிசனம் தருகிறது. பின்னர் வைத்தியம் பார்க்கும் அவர், தன் மகன் ராமசாமிக்கும் வைத்திய முறைகளை சொல்லித் தருகிறார். 

தோட்டத்தில் சாராயக் கடை நடத்தி வரும் சீனர்களான சின்னி மற்றும் ஆங்சோ ஆகிய இருவருக்கும் தொழில் போட்டி வருகிறது. சின்னியின் சாராய ஊறலில் ஆங்சோ விசத்தைக் கலந்து விடுகிறான். சின்னி கடையில் சாராயம் குடித்த அனைவரும் இறக்கின்றனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஓலம்மாவின் கணவன் மணியம், சின்னியை பாலியல் உறவு கொள்கிறான். தைப்பூச விழாவுக்கு சென்றிருந்த ஓலம்மா இதை பார்க்க நேரிடுகிறது. சின்னியையும் மணியத்தையும், வைத்தியர் ராமசாமி துணையுடன் கொல்கிறாள். 

காலங்கள் ஓடி ஓலம்மாவுக்கு வயதாகிறது. இப்பொழுது கிழவியுடன் பேரனான அப்போய் வசிக்கிறான். சிறுவனான அவனிடம் பாசத்தைக் கொட்டி வளர்க்கிறாள். ஆனால் மகள் முனியம்மா அவனை தன்னோடு அழைத்துச் செல்வதாகச் சொன்னவுடன் அவளுக்கு பயம் வருகிறது. பேரன் அப்போய் ராமசாமியுடன் நட்பாக பழகுகிறான். ராமசாமியுடன் அவன் ஒருநாள் காட்டுக்குள் சென்று வந்ததில் காய்ச்சல் வருகிறது. அவனைத் தூக்கிக்கொண்டு முனியம்மா, ஓலாம்மாவிடம் கோபப்பட்டு புறப்படுகிறாள். இதற்கு முன்னர் அம்மாவைத் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியவள், இப்பொழுது எதுவும் சொல்லாமல் போகிறாள். சீன முதலாளி அவள் வீட்டைக் காலி செய்து வெளியே போகுமாறு சொல்கிறான். 

தன் கணவன் குற்றம் செய்தவன் என்று அறிந்தவுடன் அவனைக் கொல்ல முடிவெடுக்கும் ஓலம்மா பேய்ச்சி அம்மனின் இன்னொரு வடிவம் தான். எல்லோரையும் தன் சொந்தமாக நினைக்கும் ஓலம்மா, ஏதாவது பிரச்சினை என்றால் முன்னால் நிற்கிறாள். ஒரு பக்கம் அன்பை பொழிபவளாக மறுபக்கம் தீமை கண்டு பொங்குபவளாக ஓலம்மா. வயதான காலத்தில் தோட்டத்தை விட்டு பிரிய மறுப்பவளுக்கு சீன முதலாளி கெடு  விதித்த பின்னர், தான் ஆசை ஆசையாக வளர்த்த மரங்கள், பிராணிகள் என அழித்து விட்டு தன்னையும் அழித்துக்கொள்கிறாள்.     

சிறுவன் அப்போய் வளர்ந்து இப்பொழுது பெரியவனாகி விட்டான். அவனின் மனைவி மாலதிக்கு குழந்தை வயிற்றில் தங்குவதில்லை. தன் பாட்டியின் ஊரான ஆயேர் தோட்டத்துக்கு செல்கிறான். செம்பனைகளின் நடுவில் பேய்ச்சியின் கோவிலை கண்டுபிடித்து அங்கே இருக்கும் பூசாரியிடம் பேசுகிறார்கள். மாலதியின் கையால் சேவல் அறுத்தால், பேய்ச்சி கனிந்து குழந்தை வரம் அருள்வாள் எனச் சொல்கிறார் பூசாரி. முதலில் மறுக்கும் மாலதி பின்னர் சேவலை அறுக்கிறாள். பூசாரியிடம் இருந்து பறக்க நினைக்கும் சேவலை, ஒரு கையால் பிடித்து இறக்கையை காலால் மிதித்து அவள் சேவலை பலிகொடுக்கும்போது ரத்தம் தெறிக்கிறது. பூசாரி உட்பட எல்லோரும் ஒருகணத்தில் நடுங்கி பின்னர் பேச்சியை வணங்குகிறார்கள் என்பதுடன் நாவல் முடிகிறது. பேச்சிகள் எப்போதும் மறைவதில்லை.

இந்நாவலுக்கு தடை பற்றி சொன்னால், வியப்பாக இருக்கிறது. தமிழ் நாவல்களைப் படிப்பவர்களே கொஞ்சம் பேர். அவர்கள் இந்நாவலைப் படித்து கெட்டுப் போவார்கள் என்று அரசு நினைத்திருக்கலாம். இதில் வரும் பாலியல் சம்பவங்கள் தான் அவர்களை உறுத்துகிறது என்றால் என்ன சொல்வது.

கோவிலுக்குப் போகிறோம். நாள்பட்ட பலகாரங்களை வைத்துக் கொண்டு கடைக்காரர் பார்க்கிறார், சச்சரவு மிக்க மக்கள்,  பக்தியை காசாக்க நினைக்கும் பக்திமான்கள், கோவிலுக்கு வருபவனிடம் பணம் பறிக்க நினைக்கும் மக்கள் என பலபேர் உண்டு. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி கோவில் கருவறை முன் நிற்கும் பொழுது, தரிசனம் பார்க்கும்பொழுது அவை அனைத்தும் மறந்துபோய், பரம்பொருளே மனதில் நிற்கும். அதுபோல இந்நாவலில் பேய்ச்சியின் தரிசனம். அதைவிட்டு, நாவலில் வரும் பாலியல் சம்பவங்களே மனதில் இருக்கிறது என்றால் பிரச்சினை நாவலில் இல்லை.