Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts
Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts

Monday, June 11, 2012

எழுத்தின் வல்லமையும் ஒரு குறும்படமும்

அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள், கதைகள் என்று சொல்வதை விட, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை குறிப்புகள் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அவரின் தளத்தில் வெளியாகியிருக்கும், உடனே திரும்பவேண்டும் என்ற கதையில், நம்மூரில் பேருந்தில் இருக்கை பிடிக்க சண்டை போடுவதைப் போல, விமானத்தில் இருக்கை பிடிக்க அவர் பட்ட துன்பங்களைச் சொல்லுகிறார். கதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், சொல்ல முடியாத ஒரு வேதனை இல்லை மனத் துயரம் என்னை ஆட்கொண்டது. அந்த இடத்தில் அவருக்கு உதவும் முன்பின் தெரியாத மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

*******

முன்னரே, சித்ரா என்ற குறும்படத்தைப் பார்த்து மனது ஒரு மாதிரியாக இருந்தது. இப்பொழுது, அந்தப் படத்துக்கு 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' விருதை அறிவித்திருப்பதை தனது தளத்தில்  பகிர்ந்திருந்தார் அ.முத்துலிங்கம். இந்தக் குறும்படத்தை இதற்கு முன்னர் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். குறுகிய நேரத்தில், ஒரு தகப்பனின் வலியையும், மனைவியின் கண்ணீரையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விதம்... நீங்களே பாருங்களேன்.







Thursday, March 22, 2012

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்.


அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து.

எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார்.

அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது.

அ. முத்துலிங்கம் - நேர்காணல்

அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை  சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். "

அனைத்துப் பக்கங்களிலுமே முத்திரை வரிகள் போல சில வரிகள் இருக்கின்றன. படித்துப் பாருங்களேன். முக்கியமாக சில இடங்களில், நமக்கு இதே போல நடந்திருக்கிறதே என்று நினைக்க வைக்கிறார்.  விமான நிலையங்களில் சப்பாத்துக்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பதைப் பற்றிக் கூறுகிறார், அப்போது தான் எனக்கும் நினைவு வந்தது நாம் கூட, பெல்ட், பேனா, பர்ஸ் என்று அனைத்தையும் தூக்கி கூடையில் வைத்து நானும் நடந்திருக்கிறேன் என்பதை. யாருக்காக, எதற்காக இடுப்பில் ஒரு பெல்ட்டை கூட போட முடியாமல், ஏதோ ஒரு நாட்டில், இப்படி கையை மேலே தூக்கி கொண்டு போக நான் என்ன தப்பு செய்தேன்?.

சில வேளைகளில் இலக்கியம் எனபது, நமது வாழ்க்கையையும் சேர்த்தே விவரித்து விடுகிறது.

Monday, January 9, 2012

வயிற்றுப் பசி

பசி பொறுக்காமல் நீங்கள் திருடியது உண்டா? பசி தாங்காமல் குப்பையில் இருந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தது உண்டா? ஒருவேளை சோற்றுக்காக காத்துக் கிடந்தது உண்டா?

அ.முத்துலிங்கம் அவர்களின் இந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன்.

புளிக்கவைத்த அப்பம்

கதையில் இருந்து சில வரிகள்:

"இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பதாக சில நாள் கற்பனை செய்வேன். "


உணவு என்பது, ஒப்பற்ற ஒன்று அல்லவா?.