Thursday, December 31, 2009

தொலைந்த எழுத்து

வெகு நாளாக
புரட்டாத புத்தகத்தில்
ஒரு பூச்சி
உயிர் விட்டிருந்தது...

உயிர் விட்டிருந்த
பக்கத்தில்
ஓர் எழுத்தை
மறைத்து கிடந்தது..

பூச்சியை
எடுத்த பின்
அவ்விடத்தில் இருந்த எழுத்தும்
காணவில்லை...

எந்த எழுத்தை
போட்டும் அவ்வாக்கியத்தை
நிரப்ப முடியவில்லை
அதன் உயிரைப் போல...

Tuesday, December 29, 2009

மோகமுள்

மோகத்தை அழித்துவிடு, இல்லால் என் உயிரை போக்கி விடு - என்கிறார் மகாகவி. மோகம், அனைத்தையும் வீழ்த்தி விடும். மோகத்தால் அழிந்தோரின் கணக்கு ராவணனிடமிருந்து ஆரம்பிக்கிறது.


மனித இனம் எப்பொழுது குடும்பம் என்கிற சிறைக்குள் அகபட்டதோ, அப்போதிருந்தே காமமும் அடக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நியதிகள் விதிக்கப்படுகின்றன. மீறியவர்களை ஊர் தவறாக சித்தரித்தது.


ஆணுக்கு பெண் தேடும்பொழுது கூட, அவனை விட வயது குறைந்த பெண்ணை தேடுவது வழக்கம். காதலிக்கும்போதும் ஒத்த அல்லது வயது குறைவான பெண்ணையே தேர்வதும் வழக்கம். தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலிப்பதும், அவள் மறுத்தும், அவளின் சம்மதம் வரும் வரையில் காத்திருக்கிறான், தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய "மோகமுள்ளின்" கதாநாயகன். அவன்தான் பாபு , அவன் காதலிப்பது யமுனாவை.


பாபு தன்னுடைய சின்ன வயதில் இருந்தே, யமுனாவை அக்கா என்றே பழகி வருகிறான். அவனை விட பத்து வயது மூத்தவள். ஆனால் சில சமயங்களில் அவளின் அழகை அவன் ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் கல்யாணம் ஆகாமல் தடை பட, இவன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் சொல்லுகிறான். முதலில் சம்மதிக்காத அவள், கால சக்கரத்தில் சுழன்று எட்டு வருடங்கள் கழித்து அவனிடம் சரி சொல்லுகிறாள். இந்த இடை பட்ட காலங்களில் நடக்கும் கதைக்கும் அவர்களின் உள்ளத்துக்கும் நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார் தி.ஜானகிராமன்.


எட்டு வருடங்கள் கழித்து அவள் கேட்கிறாள்;
"நீ என்னை மறந்திருப்பேன்னு நெனச்சேன். மோகமுள் முப்பது நாள் குத்தும்.. அதுக்கு அப்புறம் மழுங்கிடும்பாங்க. எட்டின மோகம் மட்டும் இல்லை. எட்டாத மோகமும் அப்படிதான். நீ மாறவே இல்லையா பாபு" - யமுனா.


"பழைய காலத்திலே நெருப்பு பெட்டி கிடையாதாம். அதனால ஒவ்வொரு வீட்லயும் ஒரு குண்டான்ல நெருப்பு போட்டு மூடி வெச்சிருப்பாங்க. மறுநாள் காலமே கொஞ்சம் சுள்ளியும் வராட்டியும் போட்டு விசிறினால் போதும். அப்படி காப்பாத்திட்டு வந்தாங்க அக்கினிய" - என்கிறான் பாபு.

இவர்கள் இருவரை தவிர, பாபுவின் அப்பா, அம்மா, நண்பன் ராஜம், பாட்டு வாத்தியார் ரங்கா அண்ணா, யமுனாவின் அம்மா, காவேரி கரை என எல்லாவற்றையும் நேரில் பார்ப்பது போல நாவல் கொண்டு செல்கிறது.

எட்டாத மோகம் எட்டி விட்ட முடிவில் நாவலை முடிக்கிறார் தி.ஜானகிராமன் அவர்கள். ஒரு வரைமுறைக்குள் இருக்கும் ஊர் எதைத்தான் ஒத்து கொண்டது. மோகமுள் எல்லோரிடமும் எப்பவாவது குத்தி கொண்டுதானே இருக்கிறது. ஒரு ஓரத்தில் அதையும் ரசித்து கொண்டுதானே இருக்கிறோம் நாம், வலியைப் பொறுத்துக்கொண்டு.

Monday, December 28, 2009

பேருந்துக்குள் தட்டான்

விரைந்து போன
பேருந்தில்
எப்படியோ உள்வந்த
தட்டான்
கண்ணாடி சன்னலில்
முட்டி மோதியது வெளியேற
கண்ணாடி சன்னலில்
சாய்ந்து தூங்கியிருந்த
பெண்ணின்
முகத்திலும்
அதே
சலனங்கள்...

Friday, December 18, 2009

புகைப்படங்கள்









































































































இவை யாவும் என்னுடைய அலை பேசியிலிருந்து எடுக்கப்பட்டவை..

மேட்டுபாளையம் ஆறு..

சென்னை, அண்ணா பல்கலைகழகம்

கொடைக்கானல்

பழனி

பழனி

ஊட்டி
ஊட்டி

ஒரு புன்னகை
அவினாசி கோவில்

அவினாசி கோவில்

பூக்களின் அழகு
இரவும் மலரும்

மற்றும் ஒரு புன்னகை

ஊட்டி

ஊட்டி

Sunday, December 13, 2009

பாரதியும் ரஜினியும்

டிசம்பர் 11 அன்று மகா கவி பாரதியின் பிறந்த நாள். ஊரும் உலகமும் மறைந்த அந்த கவியை நினைத்து பார்க்க நேரமில்லாமல் இருந்தனர். அக்னி குஞ்சாய் வலம் வந்த பாரதியை நினைக்கவும் ஆள் இல்லை. ஒரு சில வலை தளங்களில் மட்டும் பாரதியை பற்றிய கட்டுரைகள் காணக் கிடைத்தன.

அதற்கு அடுத்த நாள்....

பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரை படங்கள் அனைத்து டிவி களிலும், ஊர் எங்கும் அன்ன தானங்கள், சிறுவர்களுக்கு சில பரிசளிப்புகள், அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க வண்ண புகைப்படம், தலைப்பு செய்திகள், இடை விடாமல் அவர் புகழ் பாட எப்.எம். ரேடியோக்கள், பட்டாசு வெடிப்புகள்... இன்னும் நிறைய நடந்தது..

இதை எல்லாம் விட உச்ச பட்சம்.. அவருக்காக பால் குடம் எடுத்த ரசிக மக்களும், சிறப்பு பிரார்த்தனை நடத்திய மக்களும் தான்...

அவர் வேறு யாருமில்லை.. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்..

ரஜினி கொண்டாட பட வேண்டியவர்தான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் பாரதியின் பிறந்த நாள் அன்று ஊடகங்கள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியவில்லை.. நம் மக்களும் பாரதியை நினைத்து என்ன ஆக போகிறது என்று நினைத்து இருக்கலாம்... காலையில் இருந்து பொழுது சாயும் நேரம் வரையும் ரஜினியை புகழந்து தள்ளிய இவர்களுக்கு, பாரதியை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடவா கிடைக்கவில்லை.. ? அது சரி, ரஜினியை பற்றி நிகழ்ச்சி போட்டால் வருமானம் வரும், இந்த பாரதியை போட்டால் விளம்பரம் கூட கிடைக்காது.. சிட்டுக் குருவிக்கு போட அரிசி கூட வாங்க முடியாது என எல்லாரும் நினத்திருக்கலாம்... !!


இன்னும் சில காலங்களில், புதிய சூப்பர் ஸ்டார்கள் வரலாம். போகலாம். ஆனால் பாரதி போன்றவர்களை காலம் வெல்ல முடியாது

அவரே சொல்வது போல;

தேடி சோறு நிதந் தின்று சில சின்ன சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்புற்று பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையென பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல் நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?



காலனை எட்டி உதைக்க கூப்பிட்ட கவியே, உனக்கு மரணமில்லை....

Friday, December 4, 2009

மீண்டும் சில கொலைகள்

அன்புள்ள குழந்தைகளே,

எமது அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி வழங்குவதிலும், சில முறைகேடுகள் செய்யவுமே நேரம் இருந்தமையால் உங்களையும் உங்கள் பள்ளிகள் பற்றியும் நினைக்க நேரம் இல்லை.

கும்பகோணத்தில் உங்கள் நண்பர்கள் நிறைய பேரை இழந்தும், அரசும் அதிகாரிகளும் கண்களை கட்டி கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.

இப்பொழுதுதான் தடை போடுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் நடப்பது தானே.. என்று நாங்களும் எங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்..

வேதாரண்யத்தில் ஏற்பட்டது விபத்து என்கிறார்கள், உங்களுக்கு தெரியும் இது கொலை என்று... கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நாட்டில் நீங்கள் பிறந்து தொலைத்ததுதான் காரணமோ ?

எப்படியோ போகட்டும், அடுத்த விபத்து நடக்கும் போதும் தடைகள் போடுவார்கள் நிச்சயமாக... ...

எனது கண்ணீர் அஞ்சலிகள் உங்களுக்கு...
பிஞ்சு உள்ளங்களே எங்களை மன்னியுங்கள்....