மாற்றப்படாத வீடு - தேவதேவன்
கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து... இருள் ஓளி கேள்வி இருளுக்கு ஒளி பதிலானது எவ்விதம் ? இருளை உற்று நோக்க நோக்க இருளே ஒளியாயிற்று ஒளி நோக்கும் உந்தலற்று அற்று ஒளியே இருளாயிற்று. இவ்விதமே இருளும் ஒளியும் ஒன்றாகி பேரொளி. கேள்வியும் பதிலும் இணைந்து பெருவியப்பு. =================== துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை. மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால். மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த கணமே பறவை. =================== அழைப்பு கடைசி மத்தாப்பும் உதிர்ந்து மரணம் என்னைச் சூழ.. உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி வானம் என்னை அழைக்கிறது..