Friday, March 8, 2013

சாந்தக்கா

நாலரை மணி ரயிலுக்கு
நாலு மணிக்கே கூடையுடன் வந்து
ஜங்சனில் அமர்ந்திருக்கும்
கொய்யா விற்கும் சாந்தக்கா

மெல்லிய வெள்ளை வேட்டியை
இரண்டாக மடித்து கூடை மேலே போடப்பட்டும்
கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள்
வெளியே தெரியும்.

கொய்யா வெட்ட பெரிய கத்தியும்
விருப்பமானவர்களுக்கு
உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த
பிளாஸ்டிக் டப்பாவும்
கூடையில் இருக்கும்.

வண்டி வந்து நின்றவுடன்
யாரோ ஒருவர் தூக்கி விட
கூடையுடன் வந்து பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா
திரும்ப இறக்கி வைக்கவும் ஏற்றவும்
யாரோ ஒருவர் உதவுவர்

வண்டி கிளம்பியதும்
கூடையை நகர்த்திக்கொண்டு
கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா

அடுத்த ஸ்டேசனில்
அடுத்த பெட்டி என்று
ஒவ்வொரு பெட்டியாய்
கொய்யா மணம் பரவும்

ஒருநாள் சுமையைத் தூக்கிவிடும்போது
'சொமையா இல்லியா அக்கா?' என்றேன்.
'ம்.. இதென்ன சொமை..
குடிகார புருசனும்
ரெண்டு புள்ளை,  ஒரு பையனையும் விடவா
பெரிய சொமை'
என்று சொல்லிவிட்டு..
'கொய்யாக் காயேய்..' எனக்  கூவிக் கொண்டு
அடுத்த பெட்டிக்கு
அவசரமாகப் போனது சாந்தக்கா..

சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது.





3 comments:

  1. //சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது. //
    ஒட்டு மொத்த கவிதையின் உச்சம் ...!சபாஷ் !
    விரைவில் சிக்னல் மாறட்டும் பச்சைக்கு..... கொய்யாவைபோலவே ..!

    ReplyDelete
  2. @ஜீவன்சுப்பு
    @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete