Tuesday, October 15, 2024

நளபாகம் - தி. ஜானகிராமன்

காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும்  காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். 



காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள். 


ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார். ரங்கமணி கணவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள். இப்பொழுது துரைக்கு திருமணம் ஆகி ஏழாண்டுகள் கழிந்தும் குழந்தை இல்லை. 

யாத்திரை ரயிலில் போகும்பொழுது எங்களின் குடும்பத்துக்கு பிடித்த பாவம் போகுமா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா என ஜோதிடர் முத்துசாமியிடம் ரங்கமணி அம்மாள் ஜோசியம் கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் முத்துசாமி, துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆனால் அவனின் மனைவி பங்கஜத்துக்கு பாக்கியம் உண்டு என்கிறார். ரங்கமணி அம்மாள் ஜோதிடரை வியந்து பார்க்கிறாள். 

பக்தியும், நல்ல அழகும் உள்ள இளைஞன் காமேச்வரனை தனது வீட்டுக்கு அழைக்கிறாள் ரங்கமணி. ரங்கமணிக்கு அவன் மேல் ஏற்பட்ட பிரியம் என்ன வகையானது என்பதை நாவல் விளக்கவில்லை. தான் அடையாத ஒன்றை தன் மருமகள் அடையட்டும் என்ற எதிர்பார்ப்பா என்பதும் அப்படியே. தனது தத்து பிள்ளையாக என் வீட்டில் வந்து இருந்து, உன்னுடைய பூஜைகளை நடத்து என அழைக்கிறாள். முன்பே ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்க, நான் அங்கே வந்து இருந்தால் பிரச்சினை வரும், என்னால் உங்கள் சொல்லையும் தட்ட முடியாது.. வேண்டுமானால் ஒரு சமையல்காரனாக நான் வந்து இருக்கிறேன் என்கிறான் காமேச்வரன். எப்படியோ நீ வந்து இருந்து, உன்னால் சில நல்ல விஷயங்கள் நடந்தால் நல்லதே என்கிறாள் ரங்கமணி. 

துரையின் மனைவி பங்கஜத்துக்கு காமேச்வரன் மேல் மோகம் தோன்றியது  போல் இருந்தாலும், அவள் தனது கணவனை நேசிக்கிறாள். சக்தி உபாசகனாக இருக்கும் காமேச்வரனை அவள் மிகவும் மதிக்கிறாள். மாமியார் ரங்கமணியின் நோக்கம் புரிந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் துரையுடன் நெருங்குகிறாள். இதற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி என்றாலும், இப்பொழுதுதான் காதல் செய்வது போல பழகுகிறார்கள். அதன் விளைவாக பங்கஜம் தாய்மை அடைகிறாள். 




அதற்கு முன்பாகவே காமேச்வரன் பிடி அரிசி என்ற திட்டத்தின் மூலம் ஊரில் உள்ள பள்ளியில் பயில வரும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறான். அதற்காக எல்லோரிடமும் உதவி கேட்கிறான். அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தொடர்ந்து ரங்கமணி அம்மாவின் வீட்டில் பூஜை செய்கிறான், ஊரில் உள்ள சிலர் அவனிடம் வந்து குங்குமம் வாங்கிச் செல்கிறார்கள். 

ஆனால் ஊரில் உள்ளோர் வதந்தியை கிளப்புகின்றனர். பங்கஜம் தாய்மை அடைய காரணம் காமேச்வரன் தான் என பேசுகின்றனர். இதை அறிந்த காமேச்வரன், ஜோசியர் முத்துசாமியிடம் சென்று கேட்கிறான். அவரோ, உண்மையாய் நடந்தால் என்ன, நடந்தது போல பேச்சு கிளம்பினால் என்ன இரண்டும் ஒன்றுதான். ஜோசியர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அப்படிச் சொன்னீர்களே, இப்படியாகி விட்டது என்றால் அதற்கும் ஒரு காரணம் சொல்லி தான் சொன்னதே சரி என்று நிற்பார்கள். 

காமேச்வரன் பின்னர் தான் ரங்கமணி வீட்டை விட்டு போக முடிவு செய்கிறான். முன்பு செய்த வேலையான ரயிலில் சமைக்கும் வேலைக்கு திரும்ப போகிறான். அத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்ட காமேச்வரன், தனக்குப் பெண் பார்க்குமாறு ரயில் யாத்திரையை நடத்தும் நாயுடுவிடம் சொல்கிறான். 

ஒரு நல்ல விஷயம் நடக்கிறதென்றால் அதற்கு காரணம் நம்மைச் சுற்றியும் நடக்கும் நல்ல நிகழ்வுகள் மற்றும் நல்ல மனிதர்களே என்பதை நளபாகம் நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகம், பக்தி என்று ஒருபக்கம் இருந்தாலும் நாம்  மனிதர்கள் மேல் வைக்கும் அன்பே நம்மை கடைத்தேற்றுகிறது. யார் செய்த பாவமோ என்று நாம் நினைக்கும் அனைத்தும் அந்த அன்பின் முன்னால் அழிந்து போகின்றன.

 


No comments:

Post a Comment