Wednesday, December 12, 2018

வண்ணதாசன்

அப்பா ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த, இரண்டு வாழைக் கிழங்குகளை வீட்டின் கொல்லையில் நட்டு வளர்த்துவருகிறோம். ஒன்று செவ்வாழை, இன்னொன்று தேன்வாழை. இரண்டிலுமே அவ்வப்போது பழைய பட்டைகளை உரிக்கும்போது, உள்ளே இருக்கும் புது பட்டையின் பசுமை கலந்த அந்த மினுமினுப்பு, கை விரல்களை வைத்து நீவினால் மெலிதாக வரும் ஒலி என எப்போதும் அஃதோர் ஆச்சரியம்.



அதிலும் நெடுநெடுவென வளர்ந்திருக்கும். செவ்வாழையின் செம்மை நிறமும், வனப்பும் கண்களை விட்டு அகலாதவை. வண்ணதாசன் ஒரு கதையில் வாழை மரத்தின் மினுமினுப்பை எழுதியிருப்பார்.

நாம் பார்த்த அதே அரச, ஆல் இலைகள்தான். அதே வாழை மரம்தான். அதே மரத்தின் நிழல்தான். அதே பவள மல்லி, பன்னீர் பூக்கள்தான். அதே மனிதர்கள்தான். அதே உலகுதான். ஆனால், அவரின் வார்த்தைகளில் வெளிப்படும்பொழுது, நாம் பார்க்க மறந்ததை, நாம் உணர மறுத்ததை.. அதுவல்ல இது என்று சொல்கிறார்.

'சின்னத்தேர் என்ன, பெரிய தேர் என்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தானே ரதவீதி இருக்கிறது' - ரதவீதி எனும் கதையில் அவர் சொல்லும்பொழுது, சிறிதென்ன, பெரிதென்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த உலகம் இருக்கிறதே என்று தோன்றும்.

'உயரப் பறத்தல்' கதையில், புகைப்படத்தில் பறவைகள் இருப்பதைக் காட்டி 'எவ்வளவு உயரத்தில் பறக்குது பாரு..' என்று சொல்வார். அதுபோலவே, அவரும் மிக உயரத்தில் இருந்து இவ்வுலகைப் பார்க்கிறார். அன்பெனும் உயரம் அது.


No comments:

Post a Comment