Thursday, May 7, 2020

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி.

அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார்.

கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.  



திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது. 

கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத்து பேசும் தங்கம்மாள்; அலங்கார விஷயங்களிலோ, பொதுவான தகவல்களையோ அறிந்திராத கார்த்தியாயினி, எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் தங்கம்மாள் என இரண்டு பெண்களும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில், கார்த்தியாயினி எல்லாம் அறிந்த கணவனுக்கே புத்தி சொல்கிறாள், இக்கட்டான நேரங்களில் ஒரு விவேகியாய் அவனுக்கு வழிகாட்டுகிறாள். மாறாக தங்கம்மாவோ, கணவன் என ஒருவனுக்காக, அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆண்டுகள் பல கடந்து ஆசைப்படுகிறாள்.  

சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்த கேசவபிள்ளை, தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அந்தப் பதவிக்காக காத்திருந்த எல்லோரின் தலைக்கு மேல் பறந்து சென்று அவர் அதை அடைகிறார். அரசு இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒரு பட்டப்படிப்பு படித்தவன் குமாஸ்தா வேலை செய்வதா என அவரை ஏளனம் பேசியவர்கள், இன்று வாயடைத்துப் போகிறார்கள். கொஞ்சம் பொறுமை, தெளிவு என மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு அவர் மேலே செல்கிறார். அதற்கு முதல் படியில் ஏற உதவியது தங்கம்மாள், எனவே அவளை எப்போதும் மறக்காமல் இருக்கிறார். 

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியில் இந்தியா சுதந்திரம் பெற போராட்டம் நடக்கிறது. அதனால் இங்கேயும் போராட்டம் நடக்கிறது. கேசவபிள்ளை காங்கிரஸ் போராட்ட வீரர்களை அடக்கி ஒடுக்குகிறார். திருவாங்கூர் தனி நாடாகும் என நினைத்திருக்கும் கேசவபிள்ளை போன்றோருக்கு அது நடக்காமல் இந்தியாவோடு இணைந்து சுதந்திரம் பெறுகிறது. சுதந்திரம் பெற்றாலும் அரசாங்க இயந்திரம் அதேதானே. இப்பொழுது காங்கிரஸ் ஆட்களுக்கு ஆட்சி நடத்த கேசவபிள்ளையின் உதவி தேவைப்படுகிறது. பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி முடிந்து கம்யூனிஸ்ட் ஆட்சி வரும்போதே கேசவபிள்ளை பதவியைவிட்டு விலக நேர்கிறது. 

சுதந்திரம் பெற்றாலும், அந்தச் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். தியாகிகளுக்கு கொடுக்கக் கூடிய நிலம் கூட மற்றவர்களால் பறிக்கப் பட்டு, அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பின்னர் தளர்ந்து போய், மடிந்து சாகிறார்கள். இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதை தகழி நாவலில் சொல்லிச் செல்கிறார். தியாகம் செய்தவன் வீதியிலும், தியாகம் செய்தது போல நடித்தவர்கள் மின்விசிறிக்கு கீழே அமர்ந்துகொண்டு அடுத்தவர்களை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது.

கேசவனின் பெண்பிள்ளை கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவருக்கு தங்கம்மாளிடம் தொடர்பு ஏற்படுகிறது. ஆசிரமம், சாமியார் என சுற்றிக்கொண்டிருந்த தங்கம்மாள் இப்பொழுது கேசவபிள்ளை தன்னுடன் இருந்தால் போதும் எனச் சொல்கிறாள். கொஞ்ச நாட்களில் அவளிடம் இருந்து விடுபட்டு வருகிறார். தங்கம்மாள் இந்த 45 வயதில் கர்ப்பமாக இருக்கிறாள். கம்யூனிஸ்ட் ஆட்சி வருவதால் தான் வேலையை விட்டு விலக நேரிடும் என நினைக்கிறார் கேசவப்பிள்ளை. மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும், அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என மனைவி சொல்ல; என்று அவருக்கு இப்பொழுது நிறைய பிரச்சனைகள். 

லஞ்சம் ஊழல் என ஒவ்வொரு அரசாங்க காரியத்துக்கும் பணம் கொடுத்தே வெற்றி பெற முடிகிறது. கஞ்சி குடித்தாவது உயிர் வாழ்வோம் என்று சொல்லும் கார்த்தியாயினி கூட ஓரிடத்தில் ஏலக்காய் தோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். இந்த அரசாங்க வேலையால், கேசவபிள்ளை தாய், தந்தையை இழக்கிறார். சொந்த ஊரில் யாரும் அவருடன் பழகுவதில்லை. ஏன் நண்பர்கள் என்று கூட யாருமில்லை. அவர் பெற்ற செல்வம் அதிகம். அவர் மேலே இருக்கும் படிகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் கீழே உள்ளவர்களை மறந்து விடுகிறார். ஒரு காலத்தில் கேசவபிள்ளை எந்த வேலையும் இல்லாமல், காசு இல்லாமல் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம், ஒரு கிழவியின் கடையில் காசு கொடுக்காமல்  சாப்பிட முடிகிறது. நிறைய ஆண்டுகள் கழிந்து அவருக்கு அந்த கிழவியின் முகம் நினைவுக்கு வருகிறது. 

திவான்களின் ஆட்சியில் இருந்து, சுதந்திரம் பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்த அன்றைய திருவாங்கூரின் சரித்திரத்தை சொல்லிச் செல்கிறார் தகழி. பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள், பின்னர் ஊழலில் திளைத்து வருமானம் ஈட்டுபவர்கள், அரசாங்க கதவை தட்ட முடியாத ஏழைகள் என அவர் அன்றைய நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி. 

தமிழில்: சி.ஏ. பாலன்  




No comments:

Post a Comment