Sunday, July 4, 2010

மாட்டி வைத்து என்ன பயன்?


உண்டு, உடை, உறை என் மனிதனுக்கு மூன்று தேவைகள். இதில் முதல் இரண்டுக்கும் உறுதுணையாக இருப்பது விவசாயமும், நெசவும். எங்கள் கிராமத்தில் நெசவும் உழவும் இரண்டும் இருந்தன ஒருகாலத்தில். இன்று இரண்டுமே அழிவின் விளிம்பில்.

ஊர் முழுவதும் முப்பது கைத் தறிகள் நெய்த காலம் போய், இன்று இரண்டு தறிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இன்னும் நெய்து கொண்டிருப்பவர்களில் எங்கள் அப்பாவும் ஒருவர். கைத் தறி என்றால், சர்வோதயா சங்க வேட்டி(இப்பொழுது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை). வேட்டியில் கூலி குறைவாக இருந்ததால், பத்து வருடங்களுக்கும் மேலாகவே அப்பா கைத்தறி கொசுவலை நெய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த தலைமுறையில் யாருமே நெசவைக் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ள பிரியபடவும் இல்லை. அப்படியே இந்த தொழில்களை செய்தாலும் குடும்ப வருமானம் தினமும் இருநூறு ரூபாயைத் தாண்டாது. அந்த காலத்தை விட இப்பொழுது கூலி அதிகம் என்கிறார்கள். இதற்கு குடும்பத்தில் மூன்று பேர் உழைக்க வேண்டும். அதே மூன்று பேர் வேறு வேலைக்கு சென்றால், பக்கத்தில் இருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு சென்றால் அறுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார்கள்.

முறை வைத்து 'பாவை'க் காயவைத்து தறி நெயதவர்கள் இன்று இல்லை. பாவு ஓடிய அந்த தூண்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அன்று அந்த கற்களுக்கு மரியாதை இருந்தது, பாவடி கல் என்று. இன்று அந்த வழியாக செல்லும் பழையவர்கள் நினைத்துப் பார்க்க கூடும்.

தறிகளின் சத்தத்தில் பிறந்து, வளர்ந்து இன்று அதை எங்கே கேட்பதென தெரியவில்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து, எங்கள் வாரிசுகளுக்கு அறிமுகபடுத்த கூட முடியாது போல இருக்கிறது.

ஒரு ஜவுளி கடையில், ஒரு பாஷன் புடவைக்கு இருக்கும் மரியாதை சாதாரண நூல் புடவைக்கு கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது 'பிராண்ட்' காக இருக்குமே ஒழிய, அதை நெய்தவனுக்கு அதன் பலன் போய்ச் சேர்வதில்லை.

இந்த தேசத்தில் ஒரு மகாத்மா ஒரு ராட்டையை கொண்டு தனது வலிமையை உலகுக்கு உணர்த்தினார். ராட்டையில் நூல் நூற்று கொண்டு, அவர் அமர்ந்திருக்கும் அந்த படத்தை மட்டும் நம் நாட்டு அலுவலகங்களில் மாட்டிக் கொண்டார்கள். மாட்டி வைத்து என்ன பயன்?

No comments:

Post a Comment