Tuesday, November 2, 2010

புதிய இடம்: சுருளி அருவி



சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பனின் திருமணத்துக்காக நிலகோட்டைக்கு நண்பர்கள் சென்றோம். இதுவரைக்கும் செல்லாத இடங்கள். கரூர் டூ மதுரை நெடுஞ்சாலையில் பயணித்து நிலகோட்டையை அடைந்து, மணமக்களை வாழ்த்திய பெரும் வாழ்த்து அட்டைகளையும், ஒலி பெருக்கிகளையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு புகைப்படத்திற்கு சிரித்து விட்டு வெளியே வந்தோம்.

நான் உட்பட நண்பர்கள் நான்கு பேருமே அலுவலுக்கு விடுமுறை போட்டிருப்பதால், வெளியே எங்காவது சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவோம் என்று முடிவு செய்தோம். சாலையை அடைந்து சிலரிடம் 'பக்கத்தில் எங்காவது சுற்றி பார்க்கற மாதிரி இடங்கள் எதாவது இருக்குங்களா ?' என்று கேட்டோம். கும்பக்கரை அருவி, சுருளி அருவி, வைகை என்றார்கள். நண்பனின் அப்பாவிடமும் கேட்டதில் 'சுருளி அருவி நல்லா இருக்கும். அங்க போயிட்டு வாங்க' என்றார். எங்கள் வண்டி சுருளி அருவியை நோக்கிப் பயணித்தது.



நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் அனைவரும் வெளியே செல்வதால் சந்தோசமாக இருந்தது. வழியில் தோன்றிய வழிகாட்டிகளையும், மக்களிடமும் கேட்டு அருவியை அடைந்தோம். தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.



வழியில் ஒரு பெரியவரிடம் கேட்க, வழியைச் சொன்ன அவர் மேலும் 'தம்பி, தப்பா நெனச்சுக்காதிங்க. சில பேரு வந்து தண்ணில விழுந்து பிரச்னை ஆகிடுது, எங்கயோ இருந்து வர்ரிங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க' என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பதிவில் 'அவ்வப்போது வழியில் தோன்றும் மனித மேன்மை கூசச் செய்கிறது' என்று கூறியிருந்தார். அப்படிதான் எங்களுக்கும் தோன்றியது.



அருவிக்கு கொஞ்சம் முன்னால் திராட்சைத் தோட்டங்கள் நிரம்பிய சாலையில் ஒரு அம்மா திராட்சைக் கூடையோடு அமர்ந்திருக்க ஒரு ரெண்டு கிலோ வாங்கி கொண்டு புறப்பட்டோம். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும், அங்கே இருந்த குரங்கார்கள் எங்களை நோக்கின. அருவிக்கு கொஞ்ச தூரம் இறங்கி நடக்க வேண்டும் என்பதால், கொஞ்சம் திராட்சை கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தோம். எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன, திராட்சைக்கு தான் வருகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நடந்தோம். கொத்தை எடுத்த குரங்குகள், அழகாக ஒவ்வொரு திராட்சையாக திங்க ஆரம்பித்தன.



அருவி, ஆறு, ரயில், மழை, மலை, யானை போன்றவை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். மழைக் காலம் என்பதால் தண்ணீர் நிறைய வருவதாகச் சொன்னார்கள். சிறிய அருவி, ஆனால் வேகம் அதிகம். மொத்து மொத்தென்ற விழுந்த குளிர் தண்ணீரில் நடுங்கிக் கொண்டே குளித்தோம்.



ஒரு அரை மணித் துளிகள் அருவியில் நனைந்து விட்டு வண்டிக்கு வந்தால் நம் குரங்குகள் மேலே ஏறி விளையாடியதில் முன் கண்ணாடி முழுவதும் மண்ணும், துப்பப்பட்ட திராட்சைத் தோல்களும் ஒட்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைப் பிடித்து வந்து கழுவி விட்டு கிளம்பினோம்.

ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு, வீடுகளுக்கு கொஞ்சம் சேர்த்து திராட்சைகளை வாங்கி விட்டு, திராட்சைத் தோட்டக்காரரிடம் கேட்டு தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு, கூடுகளை நோக்கித் திரும்பும் பறவைகளாக வீடுகளை நோக்கிப் பயணித்தோம்.



(அருவிக்கு அருகில் இருந்த ஒரு பெரும் மாமரம்)


28 comments:

  1. "wow"...புகைப்படங்களும் சரி..உங்கள் வர்ணனையும் சரி,(குரங்கார்களும்தான்) ரொம்ப அழகு..

    ReplyDelete
  2. Thank you for stirring up my childhood memories!!!!

    HAPPY DEEPAVALI!!!

    ReplyDelete
  3. ஒரு இனிமையான பயணம்...
    விவரிப்புகளும் படங்களும் அருமை.
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இளங்கோ :)

    ReplyDelete
  4. சூப்பர் பாஸ். கட்டாயம் போக வேண்டிய இடம்....

    ///பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே///
    எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்

    ReplyDelete
  5. சுருளி ஃபால்ஸ்ல குளிச்சாச்சு.. ;-) குரங்கார்களுக்கு தர்மம் பண்ணியிருக்கீங்க.... குட். ;-)

    ReplyDelete
  6. ஓர் வருடத்திற்கு முன் பார்த்தது..நினைவை அசை போட வைத்தீர்கள்..அருமை

    ReplyDelete
  7. எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    @ஷஹி
    நன்றிங்க ஷஹி.

    @கார்த்திகேயன்
    நன்றி கார்த்திகேயன்.

    ReplyDelete
  8. @Balaji saravana said...
    நன்றி நண்பரே.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @ வெறும்பய
    நன்றி நண்பரே. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @அலைகள் பாலா

    நன்றிங்க பாலா.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. @RVS
    நன்றி அண்ணா.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. @padaipali
    நன்றிங்க படைப்பாளி. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. a good year படம் பார்த்ததிலிருந்து திராட்சை தோட்டங்களுக்குள் உலாவ வேண்டுமென்பது ஒரு ஆசை.. ம்ம் உங்களுக்கு பலித்திருக்கிறது, எனக்கு எப்போன்னு தெரியலை...

    ReplyDelete
  14. சுருளி அருவிக்கு நேரில் போய் வந்த பிரமை! குரங்குக்கும் மரியாதையா? மனித மேன்மை)):
    "HAPPY DEEPAVALI"

    ReplyDelete
  15. விழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...

    உங்கள் மூலம் கவிதைகளை படிக்க ஆசைப்படுகின்றேன். அறிமுகமே ஒரு கவிதையாய் இருக்கிறது.

    தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  16. ஆழியாறு பற்றி எழுதுங்களேன்.

    ReplyDelete
  17. அருமையாய் விபரித்து இருகிறீங்க. நன்றி பாராடுக்கள். உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. //தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.//

    முழுமையாக இன்னும் விட வில்லை.

    ReplyDelete
  19. //எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன,//

    குரங்குகள் முறைக்காது.. அது மனிதனின் பழக்கம்.. வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம்..

    எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக...

    உங்கள் மனித நேயத்திற்கு என் பாராட்டுகள்..

    ReplyDelete
  20. திராட்சையைப் படம் எடுத்த விதம் அருமை..

    ReplyDelete
  21. @முரளிகுமார் பத்மநாபன்

    நன்றிங்க முரளி. ஒரு நாள் போயிட்டு வரலாம் வாங்க.

    ReplyDelete
  22. @ எம் அப்துல் காதர்

    நன்றிங்க அப்துல்.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. @ ஜோதிஜி

    // உங்கள் மூலம் கவிதைகளை படிக்க ஆசைப்படுகின்றேன். அறிமுகமே ஒரு கவிதையாய் இருக்கிறது.//

    நன்றிங்க ஜோதிஜி. உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

    தீபாவளி திரு நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. @ ஜோதிஜி

    ஆழியாறு ரொம்ப நாட்கள் முன்னாடி போனது. போக வேண்டும், நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற இடம். போய் விட்டு வந்து கண்டிப்பாக இங்கே பகிர வேண்டும்.

    நன்றிங்க.

    ReplyDelete
  25. @நிலாமதி

    நன்றிங்க நிலாமதி. தீபாவளி திரு நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

    //குரங்குகள் முறைக்காது.. அது மனிதனின் பழக்கம்.. வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம்..//

    சரி, "பார்த்தது" என்று மாற்றி விடுகிறேன். :)

    ஆனால், அனைத்து விலங்குகளுக்கும் கோபம், சந்தோசம், போர்க்குணம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

    //திராட்சையைப் படம் எடுத்த விதம் அருமை.. //

    இடமும், சூழலும் அருமையாக இருந்தால் படங்கள் நன்றாக வரும். இது என் செல் போன் காமிராவில் எடுத்தது.

    நன்றி பிரகாஷ்.

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete