எ செபரேசன் படத்தின் கதையை போன
பதிவில் எழுதி இருந்தேன்.
(A Separation) அப்படத்தை பற்றி எனது
பார்வையில் தோன்றியவற்றை இப்பதிவில் எழுதி இருக்கிறேன். சிறந்த
வெளிநாட்டுப் படத்துக்கான, ஆஸ்கார் விருதைப் பெற்ற இப்படம் பற்றி எழுத
நிறைய இருக்கிறது. .
* கணவன் - மனைவி விவாகரத்துக்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது
குழந்தைகள் தான். ஒரு வகையில் அவர்கள் வேறு வழியில்லாமல் விவாகரத்தை
நாடினாலும், பெற்றோர் இருவரிடமும் பாசம் வைத்திருக்கும் குழந்தைகள் படும்
துயரத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தப் படத்தில், நடேர்
மற்றும் சிமினின் மகளான டெர்மி அமைதியாக வந்து போகிறாள். பதினோரு வயதான
அவள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள்.
* இரான் நாட்டை விட்டு மனைவி போக விரும்ப, கணவனோ பயமில்லாமல் இங்கேயே வாழ வேண்டும் என்று சொல்கிறான்.

*
தள்ளாத வயதில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை
பாசத்துடன் கவனித்துக் கொள்கிறான் நடேர். அவருக்கு சவரம் செய்து,
கழிவறைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி என அவருக்காக அவன் செய்யும்
பணிவிடைகளும், அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒரு பாசக்கார மகனாக நடேர்.
* வீட்டு வேலை என்று நடேரின் வீட்டில் சேர்ந்து கொள்கிறாள் ரசியாக். ஆனால்,
அங்கே அந்த பெரியவர் கழிவறைக்கு கூட செல்ல தெரியாமல், தன் உடையிலேயே
கழித்து விட்டதைக் கண்டு.. அவரின் உடைகளை மாற்ற ரசியாக் தயங்குவது, நமக்கு
கண்ணில் நீர் வரவைக்கும் காட்சிகள். அதுவும் ஒரு இஸ்லாமிய நாட்டில், ஒரு
பெண் இது போல வேலைகள் செய்யத் தயங்குவது சாதாரணமே.

* யாரிடம் நாம் பொய் சொல்ல நேர்ந்தாலும், குழந்தைகளிடம் பொய் சொல்ல
முடியாது. பணிப்பெண் ரசியாக்கை, நடேர் தள்ளிவிட்ட பின்னர், நடேர் கோர்ட்
உட்பட, எல்லோரிடத்திலும் ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்கு தெரியாது என்றே
சொல்கிறான். மகள் டெர்மி, நடேரிடம் கேட்கும்போது, தயங்கும் அவன், சில
நொடிகள் கழித்து.. மகளின் கண்களைப் பார்த்து எனக்கு முன்னாலேயே தெரியும்
என்று ஒப்புக்கொள்கிறான். அந்தக் குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டால், இரண்டு
மூன்று வருடங்கள் தண்டனை கிடைக்கும், சிறை செல்ல நேரிடும். அப்படி
சிறைக்குப் போனால், தன் தந்தையையும், மகளையும் யார் கவனித்துக் கொள்வார்கள்
என்பதினாலேயே தான் சொல்லவில்லை என மகளிடம் சொல்கிறான்.
* பணக்கார குழந்தை, ஏழை வீட்டு குழந்தை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
இரண்டு வீட்டு குழந்தைகளும் பாசத்துக்கும், ஆதரவுக்கும் ஏங்குகிறார்கள்.
நடேரின் மகள் டேர்மியும், பணிப்பெண் ரசியாகின் மகள் சொமியாவும் அப்படிதான்.
* யாராக இருந்தாலும் இறுதியில், தன் மனசாட்சிக்கு பயந்தோ அல்லது
கடவுளுக்குப் பயந்தோ குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்கள். முதலில், நடேர் தன்னை
தள்ளி விட்டதால்தான் அபார்சன் ஆனதாக சொல்லும் ரசியாக், இறுதியில் குரான்
கொண்டு வரத் தயங்கி, நடேர் தள்ளிவிட்டதற்கு முதல் நாளே தான் காரில்
அடிபட்டதாக ஒப்புக்கொள்கிறாள்.

* ரசியாக்கின் கணவன், வேலை இல்லாமல் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறான்.
பெருங் கோபம் கொண்டவனான அவன், கடைசியில் பணம் கிடைக்காது என்று
தெரிந்ததும், தன்னைத் தானே அடித்துக்கொண்டு, வீதியில் நின்று கொண்டிருந்த
நடேரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடுகிறான். அவன்
பின்னாலேயே ரசியாக்கும் ஓடுகிறாள். அதற்குப் பின்னர், அவர்களின் மீதி
வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?. அல்லது அவர்களும் விவாகரத்து மன்றத்தில்
நின்று கொண்டிருப்பார்களா?.
* தான் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் இருக்கும் பெரியவர், அப்பாவின்
மேல் உயிரையே வைத்திருக்கும் நடேர், வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு
குடும்பச் சுமையால் வேலைக்கு வரும் ரசியாக், விவாகரத்துக்கு விண்ணப்பம்
செய்திருக்கும் பெற்றோரை நினைத்து வருந்தும் டெர்மி, தன் மகள் தன்னுடன் வர
மறுத்து விடுகிறாள் என்பதை நினைத்து வருந்தும் சிமின், வேலை இல்லாமல்
இருக்கும் ரசியாக்கின் கணவன்....... என எல்லோரும் நம்மைச் சுற்றி இருக்கும்
மனிதர்கள்தான்.
* கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்
தீர்வு கிடைக்கும். ஆனால், அப்படி இல்லாமல் இருப்பதுதான் பெரிய
பிரச்சினையாக இருக்கிறது.
* இறுதிக் காட்சியில், டெர்மியிடம், 'உன்னுடைய முடிவை எடுத்து விட்டாயா..
நீ அப்பாவிடம் இருக்கப் போகிறாயா, அம்மாவிடம் போகிறாயா' என நீதிபதி
திரும்பத் திரும்ப கேட்கிறார். டெர்மி கண்ணில் நீருடன், தயங்கிக் கொண்டே
இருக்கிறாள். பெற்றோர்களை வெளியே போகச் சொல்கிறார் நீதிபதி. வெளியே வந்த
நடேரும், சிமினும் எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு
கண்ணாடி கதவு அவர்களைப் பிரித்துக் கொண்டு நிற்கிறது.

* டெர்மி என்ன பதில் சொல்லியிருப்பாள்? இதற்கான பதில் நமக்குத் தேவையில்லை
தான். எல்லா விவாகரத்து ஆன பெற்றோர்களின் குழந்தைகள் என்ன பதில்
சொல்லியிருப்பார்களோ, அதைதானே அவளும் சொல்லியிருக்க கூடும்.
* குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே சிறு சிறு சந்தோசங்களை பொதிந்து
வைத்திருக்கக் கூடியது. இவ்வளவு பெரிய துயரை, குழந்தைகள் தாங்கிக்
கொண்டாலும், அவர்கள் மனதில் அது ஒரு ஆழப் பதிந்து கிடக்கும்.
* ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். டெர்மி மட்டும் அங்கே நீதிபதி முன் நின்று கொண்டில்லை. நிறையக் குழந்தைகள்
நீதிமன்றப் படியேறி இறங்குகிறார்கள். நம் குழந்தைகளிடம் அந்தக் கேள்வி
கேட்கப்படாமல் இருந்தாலே, நாம் நல்ல பெற்றோர்தான்.