Wednesday, June 13, 2012

காட்டை வளர்த்தவர்


அஸ்ஸாம் மாநிலத்தில், ஆற்றின் ஓரத்தில் ஒரு காட்டையே உருவாக்கி உள்ளார் ஜாதவ் பயங்(jadav payeng) என்பவர்.

இவரின் சிறுவயதில், ஆற்றின் மணல் கலந்த திட்டுகளில், மரம் வளர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அவரும் அதில் ஒருவராக இருந்திருக்கிறார். நாளடைவில் அந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் அங்கிருந்து அகன்று விட, இவர் மட்டும் தன் குடும்பத்துடன் அந்தக் காட்டுக்குள்ளேயே தங்கி, மரங்களை வளர்த்துள்ளார். முதலில் மூங்கில் மரம் மட்டும் வளர்ந்த அந்த மண்ணில், எறும்புகளை கொண்டு போய் அங்கே விட்டு, மண்ணை வளமாக்கி அனைத்து மரங்களையும் நட்டு இன்று அதை ஒரு பெரிய வனமாக மாற்றி இருக்கிறார் ஜாதவ் பயங். காட்டின் பரப்பு முன்னூறு ஹெக்டேர்.

இவர் எடுத்த இந்த முயற்சியால் இன்று அந்தக் காட்டில் பல பறவைகளும், விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இதற்கு முன்னர் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி என்கிற தலைப்பில் அய்யாசாமி அய்யாவைப் பற்றி எழுதி இருந்தேன். அவரும் இயன்ற அளவு மரங்களை வளர்த்தவர். மரங்களை வெட்டித் தள்ளி, பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்றவர்களே நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.



எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் இந்த தலைமுறை, இவர்களைப் பற்றி அறிந்திருக்குமா?. அல்லது, நமது அரசுகள் தான் மரம் வெட்டப் படுவதைத் தடுத்து, இவர்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கப் போகிறதா?. இருக்கும் கொஞ்ச நஞ்ச வளத்தையும் காப்பாற்ற வேண்டியது நம் எல்லோரின் கடமை அல்லவா. அடுத்த தலைமுறைக்கு, மரம் இல்லாத பூமியை பரிசளிக்கப் போகிறோமோ?. அடுத்த தலைமுறை என்பது வேறு யாரோ அல்ல, நம் மகன், பேரன்கள்தான் என்பதை எப்போது உணரப் போகிறோம் நாம்?

நாமும் இயன்ற அளவு மரங்களை வளர்ப்போம். மரம் வெட்டப்படுதலைத் தடுப்போம்.

நன்றி: புதிய தலைமுறை

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி


2 comments:

  1. இவரை போல ஊருக்கு ஒருவர் தேவை., இயலாத பட்சத்தில் மாவட்டத்துக்கு ஒருவராவது தேவை..!

    ReplyDelete
  2. தேவையான பகிர்வு .அருமை நண்பரே

    ReplyDelete