Friday, June 1, 2012

சினிமா : செவென் சாமுராய் (Seven Samurai)

ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவாவின் படம் செவென் சாமுராய். நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய கதை. ஒரு மலையோர விவசாய கிராமத்தில், மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அந்தக் கிராமத்தில் பண்டிட்கள் என்னும் திருடர்கள் கூட்டமாக வந்து பொருட்களைத் திருடியும், பெண்களை இழுத்துக் கொண்டும் சென்றுவிடுகிறார்கள். மிகுந்த பலசாலிகளாகவும், துப்பாக்கி போன்ற புதிய ஆயுதங்கள் வைத்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் கிராமத்தினர் அவர்களிடம் நிறைய இழக்கிறார்கள். உழைப்பு ஒன்றே தங்களுக்கு தெரிந்தது என்றிருக்கும் அந்த கிராம மக்கள், திருடர்களிடமிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.




ஒவ்வொரு முறையும் திருடர்களிடம் படும் துன்பம் தாங்காமல், அக்கிராம மக்கள் ஊரிலுள்ள முதியவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அம்முதியவர், 'ஒரு காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் பண்டிட்களிடம் நிறைய இழந்தார்கள். ஆனால் ஒரேயொரு கிராமம் மட்டும் அவர்களிடமிருந்து தபபித்தது ஏனெனில், அந்தக் கிராமத்தினர் சாமுராய்களை காவல் காக்க அமர்த்தியிருந்தனர். எனவே திருடர்களால் அந்தக் கிராமத்தின் பக்கம் கூட வர முடியவில்லை' எனக் கூறுகிறார். 

மக்களோ 'சாமுராயை வேலைக்கு அமர்த்துவது சரிதான். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு கொடுக்க எதுவுமில்லியே. உணவு மட்டும்தான் நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்' என்கின்றனர். முதியவர் 'எனவே, நாம் பசித்திருக்கும் சாமுராய்களைத் தேடி வேலைக்கு அமர்த்த வேண்டும்' எனச் சொல்கிறார்.



கிராமத்திலிருந்து ஒரு சிலர் சாமுராய்களை தேடி, பக்கத்து நகரத்துக்கு கிளம்புகின்றனர். அவர்களால் அவ்வளவு எளிதாக சாமுராய்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், உணவுக்காக மட்டும் வேலைக்கு வரும் சாமுராய்களைத் தேடுவதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு சில சாமுராய்கள் கோபப்பட்டு அவர்களை விரட்டி விடுகிறார்கள்.

ஓரிடத்தில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் துறவி போன்ற ஒரு சாமுராயை அவர்கள் சந்திக்க நேர்கிறது.  அவரின் பெயர் காம்பி. அவரைப் பின்தொடர்ந்து சென்ற கிராமத்தினர், அவரிடம் பேச, அவரும் அந்தக் கிராமத்துக்கு வர ஒப்புக்கொள்கிறார். ஆனால், மலை சூழ்ந்திருக்கும் அந்தக் கிராமத்தைப் பாதுகாக்க குறைந்தது ஏழு சாமுராய்கள் வேண்டுமென்று கூறுகிறார். ஏழு பேர் இருந்தால்தான் உங்கள் கிராமத்தைப் பாதுகாக்க முடியுமென்றும் அவர் சொல்ல, அவருடன் சேர்ந்து மீதிப் பேரை தேடுகிறார்கள்.  அவரே தலைவராக இருந்து மற்ற சாமுராய்களை தேட உதவுகிறார்.



ஆறு சாமுராய்கள் சேர்ந்துவிட, ஒரு சாமுராய் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. இதற்கு முன்பிருந்தே காம்பியைத் தொடர்ந்து கொண்டிருந்த, ஒரு குடிகாரன் போன்ற ஒருவன் விடாமல் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். வேறு வழியில்லாமல் அவனையும் அவர்கள் சேர்த்துக்கொள்கிறார்கள். முன்னர் அவன் சொன்ன பொய்ப் பெயரான கிகிசியோ என்ற பெயரிலேயே அவனை அழைக்கிறார்கள்.

அவர்களை கூட்டிச் சென்ற இரு கிராம ஆட்களும், கிராமத்தை எட்டும் முன்பே கத்திக் கொண்டே செல்கிறார்கள். சாமுராய்கள் கிடைத்துவிட்டார்கள் எனக் கிராமத்தினர் மகிழ்ச்சியடைவார்கள், அவர்களை வரவேற்க சந்தோசமாக வருவார்கள் என எதிர்பார்த்த வேளையில், கிராமம் வெறிச்சோடிக் கிடக்கிறது. திறந்திருந்த சன்னல்கள், வாசல்களை மூடிக் கொள்கின்றனர் கிராமத்தினர்.




கிராமத்துக்கு வரும் சாமுராய்கள், தங்கள் பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என்று பயப்படுகிறார்கள் கிராம மக்கள். ஒரு விவசாயி, தன் அழகான பெண்ணின் கூந்தலை ஒண்ட வெட்டி விட்டு ஆண் போல இருக்கச் சொல்கிறார். எனவே ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாமுராய்களை வரவேற்கவில்லை.

அந்தச் சமயத்தில், பண்டிட்கள்(திருடர்கள்) வந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பிக்கிறது. உடனே எல்லா கிராம மக்களும், தங்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு, சாமுராய்கள் நின்று கொண்டிருந்த திடல் போன்ற இடத்துக்கு வருகிறார்கள். சாமுராய்கள் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, யாரு மணியை அடித்தது என்று வினவ, நான்தான் அடித்தேன் என்று கிகிசியோ சொல்கிறான். கிராம மக்களை காப்பாற்ற வந்திருக்கும் நம்மை வரவேற்க வராமல் ஒளிந்து கொண்ட இவர்களை வரவைக்கவே நான் எச்சரிக்கை மணியை அடித்தேன் என்று சொல்ல, மற்ற சாமுராய்கள் புன்னகைக்கிறார்கள்.



தலைவர் காம்பி கிராம வரைபடம் போட்டு, யார் யாரை எங்கே நிற்க வைப்பது என்று திட்டம் போடுகிறார். சாமுராய்கள், கிராம மக்களும் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்கள். இப்பொழுது அந்தக் கிராமமே பண்டிட்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது.

கிட்டத்தட்ட நாற்பது பண்டிட்கள் இருக்கும் அந்தக் கூட்டத்தை அவர்கள் வெல்ல வேண்டும். கிராமத்தினரிடம் இருந்த குதிரைகளை இதற்கு முன்னரே அவர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். பண்டிட்கள் வந்து விட்டதை அறிந்து கொண்ட மக்களும், சாமுராய்கள் தயாராக இருக்கிறார்கள். எல்லாப் பக்கமும் பாதுகாப்பு இருப்பதால், பண்டிட்கள் எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.



பண்டிட்கள் கிராமத்தை நோக்கி வந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் நடக்கும் சண்டையில், ஒவ்வொரு பண்டிட்களாக கொல்கின்றனர். இவர்கள் பக்கமும் ஒரு சில கிராமத்தினர், சாமுராய்கள் என இழக்கிறார்கள். இறுதி நாளன்று கொட்டும் மழையில், சரியான தூக்கமில்லாமல், உணவில்லாமல், பண்டிட்களை எதிர்க்கிறார்கள். கடைசியில், நான்கு சாமுராய்களை இழந்த பின்னர் வெற்றி கிடைக்கிறது.

இறுதி காட்சியில்,  காம்பி இப்படிச் சொல்கிறார்;

We've lost yet again
With their land, the farmers are the victors.. not us  
(நாம் திரும்பவும் இழந்திருக்கிறோம், வெற்றி பெற்றவர்கள் இந்த மக்களே)

கிராம மக்கள், பாட்டுப் பாடிக்கொண்டு விதை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் தள்ளி ஒரு சின்னக் குன்றின் மீது நான்கு சாமுராய்களின் சமாதி அமைந்திருக்கிறது. அவர்களின் சமாதி மேல், சாமுராய்களின் வாள், ஒரு சின்னக் கொடியுடன் இருக்கிறது.

                               *********************************************

* கிகிசியோ பாத்திரம்தான் படம் நெடுக நம்மை புன்னகைக்க வைக்கிறது, கோபப்பட்டுக் கொண்டே, நம்மை சிரிக்க வைக்கும் அந்த முகம் எப்பொழுதும் மறக்காது.

* ஒரு சாமுராய், கிராமப் பெண்ணை காதலிக்க, அது தெரிந்த விவசாயி தகப்பன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்த பண்டிட்கள் உன் பெண்ணை இழுத்துக்கொண்டு போவதை விட, ஒரு சமுராய் அவளைக் காதலிப்பது ஒன்றும் தப்பில்லை என்று கூறினாலும் விவசாயி அதை மறுக்கிறார். இறுதியில் அந்தக் காதலும் கைவிட்டுப் போகிறது.

* பண்டிட்கள் தங்கி இருக்கும் ஒரு கூடாரத்துக்கு நெருப்பு வைக்கிறார்கள் கிராமத்தினர். வெளியே ஓடிவரும் ஒரு பெண், அந்தக் கிராம ஆளைப் பார்த்ததும், அலறிக்கொண்டு திரும்ப தீக்குள் புகுந்து கொள்கிறாள். அக்கிராம ஆளின் மனைவி அப்பெண் என்பதும், முன்னர் பண்டிட்கள் அவளைக் கவர்ந்து சென்று விட்டனர் என்பதும் தெரிகிறது.

* பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். அதிலும் அந்த சண்டைக் காட்சிகள், உண்மையாக சண்டை நடந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும்.


                             *********************************************


6 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த படம் இது. மிகவும் அற்புதமாய் படத்தை பற்றி எழுதி உள்ளீர்கள்..மிண்டும் படம் பார்த்த பீல் கிடைத்தது..
    அருமையான நடை...

    ReplyDelete
  2. மிக எளிமையாக அழகாக சொல்லி உள்ளீர்கள். பார்க்க முயல்கிறேன். அடிக்கடி இத்தகைய நல்ல படங்களை அறிமுக படுத்துங்கள்

    ReplyDelete
  3. செவன் சாமுராய் பற்றி வந்திருக்கும் பதிவுகளில் தங்கள் பதிவும் சிறப்பாக வந்துள்ளது.

    இப்படத்தின் கதையை விலைக்கு வாங்கி ஹாலிவுட் மெக்னிபிசண்ட் செவன் எடுத்து வெளியிட்டது.
    விலைக்கு வாங்காமல்... திருடி 'ஷோலே'வாக்கியது பாலிவுட்.
    அதையே மட்டரகமான மசாலாவாக்கி
    'அஞ்சாத சிங்கங்கள்'ஆக்கியது கோலிவுட்.

    ReplyDelete
  4. இன்றைய வலைசரத்தில் உங்கள பதிவப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வருகை தந்து உங்கள் மேலான கருத்தளிக்கவும்
    http://blogintamil.blogspot.in/2012/06/6.html

    ReplyDelete
  5. கும்கி கூட இந்த படத்தோட கதைதான்

    ReplyDelete