Thursday, May 10, 2012

புதுமைப்பித்தன்


பல வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் அகப்பட்டது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுவரைக்கும் நான் படித்திராத ஒரு சொல்லாட்சியுடன், நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கும் போக்குடன் கதைகளை எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். அன்றுமுதல் புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேட்டாலே அவரின் கதைகள் மனதில் வந்து போயின. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்ந்த அவரின் கதைகள் ஜீவன் உள்ளவை.

'என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது.. பிறகு நான் எடுத்தாளும் விசயங்கள்; பலர் வெறுப்பது, விரும்புவது..' என்று ஒருமுறை எழுதியிருக்கிறார். அவரின் இயற்பெயர் விருத்தாசலம்.

புதிய வகையில் சிந்திக்க கூடிய கதைகளாக எழுதியிருக்கும் புதுமைப்பித்தன் அவர்களின் சில கதைகளைப் பற்றிச் சில வரிகள்.

                                             ***************************

சாப விமோசனம்

'சாப விமோசனம்' கதை, ராமாயணத்தில் வரும் அகலிகை பற்றிய கதை. கணவன் கோதமன் கொடுத்த சாபம் காரணமாக கற்சிலையாகப் போகும் அகலிகை, அந்த வழியாக வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் பெறுகிறாள். அப்பொழுது ராமன் குழந்தை. காலம் ஓடுகிறது. கோதமனும், அகலிகையும் தீர்த்த யாத்திரை முடிந்து அயோத்திக்குத் திரும்புகிறார்கள். ராமனும் சீதையும் பதினான்கு ஆண்டு கால வனவாசம் முடித்து இன்னும் கொஞ்ச நாளில் திரும்புவார்கள் என்ற சேதியைத் தெரிந்துகொள்கிறாள் அகலிகை.

சீதையும் ராமனும் அவர்களைச் சந்திக்க வருகிறார்கள். அகலிகையும், சீதையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு அக்னிப் பிரவேசம் பற்றித் திரும்புகிறது. ராமன் பிரவேசம் செய்யச் சொல்லிக் கேட்டதை அறிந்த அகலிகை மீண்டும் கல்லாகப் போகிறாள்.

அவர்களிருவரின் வார்த்தைகளை கொஞ்சம் கவனியுங்கள். புதுமைப்பித்தனின் எழுத்தாற்றல் வியக்க வைக்கும்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்கிறாள் அகலிகை.
"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.
"அவன் கேட்டானா?" என்று கேட்டாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.

"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? " என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.

"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.

"நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை.


                                             ***************************



அன்றிரவு

இந்தக் கதை பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் திருவிளையாடல் பற்றிய கதை. 'அழியாச் சுடர்கள்' தளத்தில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.  கதையின் இறுதியில் இருக்கும் ஒரு பத்தியை மட்டும் இங்கே தருகிறேன்.

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின் மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின் மீது அந்த அடி விழுந்தது.
காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. 


                                             ***************************

ஒருநாள் கழிந்தது

இந்தக் கதை, தினமும் குடும்பத்தை நடத்த படாத படும் மனிதர்களில் ஒருவர் பற்றிய கதை. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு கதை எழுதி, குடும்பம் நடத்தி வரும் முருகதாசர் பற்றிய கதை. கடைக்காரன் பாக்கி, அது இதுவென்று நிறையச் செலவாகி விடுகிறது அவருக்கு. யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று முயல்கிறார். ஒருவர் எட்டணாவைக் கொடுக்கிறார்.

கதையில், அவரின் மனைவி கமலத்துடன் முருகதாசர் பேசும் வரிதான் கதையின் தலைப்பு. மனைவி காப்பிப் பொடி வாங்கிவரச் சொல்கிறார்.

"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன் ! அதைக் கொடுத்துவிட்டால்?"
"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்"
"அதற்கென்ன இப்பொழுது?"
"போய்ச் சீக்கிரம் வாங்கிவாருங்கள்"
"திங்கட்கிழமைக்கு?"
"திங்கட்கிழமை பார்த்துக்கொள்ளுகிறது"

                                             ***************************

கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்


விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கதை. கடவுள் கொஞ்ச நாள் மனிதனாக மாறி, இந்தப் பூவுலகுக்கு வந்து வசித்தால் என்ன நடக்கும் என்று சொல்லும் கதை. கந்தசாமிப் பிள்ளையின் இல்லத்துக்கு வந்து தங்குகிறார் கடவுள். கடவுள் அவரின் வீட்டுக்கு வரும்பொழுது, கந்தசாமியின் குழந்தை;

"எனக்கு என்ன கொண்டாந்தே?" என்று கேட்கிறது.
"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்கிறார் பிள்ளை.
"என்னப்பா, தினந் தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்கிறது குழந்தை.
"இதுதானா உம்முடைய குழந்தை" என்று கேட்கும் கடவுளிடம், கந்தசாமி பிள்ளை பேசத் தயங்க
"சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும், பால் தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்கிறார் கடவுள்.

இன்னொரு இடத்தில்;

கடவுள் என்ன வேலை செய்யலாம் என்று நினைத்து, பரதம் ஆடி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து தேவியையும் பூமிக்கு கூட்டி வருகிறார். அவர்களின் ஆட்டத்தைப் பார்த்த கலாமண்டலியின் தலைவர் இப்படிச் சொல்கிறார்;

"ஒய் ! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித் தோலைத்தான் கட்டிக் கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித் தோல் மாதிரி பட்டு கட்டிக் கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங் காணும்"

இறுதியில் கடவுள், "உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்று கூறிவிட்டு, பூமியிலிருந்து கிளம்பிப் போய் விடுகிறார்.

                                             ***************************
இன்னொரு பதிவில் அவரின் மற்ற கதைகள் பற்றி எழுதுகிறேன்.

                                             ***************************

குறிப்பு:

இப்பதிவு  என்னுடைய 200 -  வது பதிவு. அதுவும் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றி எழுதியது தற்செயலே. இந்தப் பதிவுலகத்துக்கு வந்து இவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதே எனக்கு அதிசயமாய் இருக்கிறது. 
தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் எனதன்பு  நன்றிகள்.


படங்கள் - இணையத்தில் இருந்து.

8 comments:

  1. What a legendary writer he was !!

    Congrats for 200th post.

    ReplyDelete
  2. @மோகன் குமார்
    நன்றிங்க

    ReplyDelete
  3. @கோவை நேரம்
    நன்றிங்க

    ReplyDelete
  4. உண்மையில் சிறந்த பதிவுதான் ........பாராட்டுகள் உங்களுக்கு ........நான் கல்லூரி நாட்களில் படிதது மீண்டும் அதை படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி .........தொடர்ந்து பதிவு செய்யுங்கள் உங்களில் பதிந்ததை

    ReplyDelete
  5. மென்மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @சாமக்கோடங்கி
    நன்றிங்க

    ReplyDelete
  7. @கோவை மு.சரளா
    நன்றிங்க

    ReplyDelete