Thursday, March 22, 2012

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்.


அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து.

எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார்.

அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது.

அ. முத்துலிங்கம் - நேர்காணல்

அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை  சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். "

அனைத்துப் பக்கங்களிலுமே முத்திரை வரிகள் போல சில வரிகள் இருக்கின்றன. படித்துப் பாருங்களேன். முக்கியமாக சில இடங்களில், நமக்கு இதே போல நடந்திருக்கிறதே என்று நினைக்க வைக்கிறார்.  விமான நிலையங்களில் சப்பாத்துக்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பதைப் பற்றிக் கூறுகிறார், அப்போது தான் எனக்கும் நினைவு வந்தது நாம் கூட, பெல்ட், பேனா, பர்ஸ் என்று அனைத்தையும் தூக்கி கூடையில் வைத்து நானும் நடந்திருக்கிறேன் என்பதை. யாருக்காக, எதற்காக இடுப்பில் ஒரு பெல்ட்டை கூட போட முடியாமல், ஏதோ ஒரு நாட்டில், இப்படி கையை மேலே தூக்கி கொண்டு போக நான் என்ன தப்பு செய்தேன்?.

சில வேளைகளில் இலக்கியம் எனபது, நமது வாழ்க்கையையும் சேர்த்தே விவரித்து விடுகிறது.

4 comments:

  1. கண்டிப்பாக படிக்கிறேன் தோழரே

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  2. ம்ம்..என்னோட ஃபேவரட் ஆதர் முத்துலிங்கம் தான் இளங்கோ .."அங்கே இப்ப என்ன நேரம்" தான் ஆகவும் பிடிச்ச கதை எனக்கு ..

    ReplyDelete
  3. @கவிதை காதலன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. @ஷஹி
    ஆமாங்க, மறக்க முடியாத எழுத்து. கண்டிப்பா 'அங்க இப்ப என்ன நேரமும்' படிக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete