Thursday, March 15, 2012

வரைதல் என்பது

ஓவியப் பீரியட் என்றால் எங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும். ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருக்கும் ஓவிய ஆசிரியர், கிளாசுக்கு வந்தவுடன் சாக்பீஸை எடுத்து கரும்பலகை முழுவதும் சித்திரங்களாக வரைவார். சின்ன கோடுகள், பெரிய கோடுகள் இணைந்து ஒரு விலங்காகவோ, பறவையாகவோ மாறும். சுமார் முப்பது படங்கள் இருக்கும் ஓவிய புத்தகத்தில் அவர் வரும்பொழுது, அடுத்த வாரம் மூன்று படங்கள் வரைந்து கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுவார். 

இப்படியே ஒவ்வொரு வாரமாக, ஓவியப் புத்தகப் படங்கள் அனைத்தும் எங்கள் திறமையால்(!) நிரம்பி விடும். சில நேரங்களில் கதைகளும் சொல்லுவார். நாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அவர் பத்துக்கு இவ்வளவு மதிப்பெண் என்று போடுவார். பெரும்பாலும் ஐந்து என்றே என் படங்களுக்கு விழும். ஒரு சில படங்களுக்கு அவர் v.good மற்றும் v.v.good என்று எழுதுவார். எனக்கு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் எட்டு மார்க் போட்டு v.good என்று கிறுக்கினார். "டேய் நீ கூட எட்டு மார்க் வாங்கிட்டியாடா" என்று பொறாமைப் பட்டான், எப்பொழுதும் எட்டுக்கு மேல் மார்க் வாங்கும் கண்ணன்.

பெரிய வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல ஓவிய பீரியட் வரவேயில்லை. வண்ணங்களும், கோடுகளும் அதோடு மறந்து விட்டது போலத்தான் இருக்கிறது.

நண்பன் வைத்தீஸ்வரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வரைந்த ஓவியங்களை பகிர்ந்து இருந்தான். எங்கோ சிறுவயதில் தொலைத்த வண்ணங்களை மீண்டும் பார்த்தது போல இருந்தது. ஓவியங்கள் தவிர, காம்பவுண்ட் சுவரில் வரைந்து இருக்கும் படகு, கதவில் நீந்தும் மீன்கள் என எவ்வளவு அற்புதமாய் இருக்கின்றன.

இந்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்ள அனுமதி தந்த நண்பன் வைத்திக்கு எனது வாழ்த்துக்கள்.












1 comment: