Friday, March 30, 2012

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும்

எட்டுக்காலியும் நானும் ஒண்ணு
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்.

எட்டுக்காலிக்கு எச்சில்
எனக்குப் பொய்

இருவரும் வலை பின்னுகிறோம்
அது எச்சிலைக்கூட்டி
நான் உண்மையைக் குறைத்து

எட்டுக்காலி வலை
ஜீவித சந்தர்ப்பம்
எனது வலை
சந்தர்ப்ப ஜீவிதம்

எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீளமும் ஆயுளும்
எனக்குத் தெரியும்
பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்.

வாய் வித்தைக்காரர்கள் இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி...
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது.

-- சுகுமாரன் (ஆனந்த விகடன்)


குற்ற மனசு

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோ மீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு.

--- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்)

திருத்தப்பட்ட வருத்தம்

இறந்தவன்
இறுதிப் பயணத்தில்
எத்தனை பேர் வருகிறார்கள்
என்று
ஒருமுறை கண்களைத்
திறந்து பார்த்தான்

வாழ்ந்ததற்கு
வருத்தப்பட்டு மறுபடியும்
கண்களை மூடிக்கொண்டான்.

-- தமிழன்பன் (ஆனந்த விகடன்)


2 comments:

  1. ஒன்னும் எழுத தோணலன்னா இப்டி சுட்டு போட்டுடறதா ? ஆனாலும் நல்ல கவிதைகள் இளங்கோ ..

    ReplyDelete
  2. @ஷஹி
    நன்றிங்க :)

    ReplyDelete