Thursday, May 24, 2012

பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் 'ஓர் இளம் விஞ்ஞானி' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆனந்த விகடனின் என் விகடனில் வெளியான வலையோசையில் பாலாஜியைப் பற்றிய இந்தப் பதிவும் இடம் பிடித்திருந்தது.

ஆனந்த விகடனில் வெளியான செய்தியை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இந்த வாரத்தில் சோலார் உதவியுடன் இயங்கும் கார் ஒன்றை இப்பொழுது செய்திருப்பதாகவும், அவசியம் அதைப் பார்க்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். எனவே, நாங்கள் போன ஞாயிறு அன்று பாலாஜியின் வீட்டுக்குச் சென்றோம்.


சின்ன கார் பொம்மையில் ஏற்கனவே இருந்த பேட்டரியைக் கழட்டிவிட்டு, சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளியுடன் இயங்குமாறு மாற்றியுள்ளான் பாலாஜி. அவன் கையில் இருந்த ரிமோட்டில் கார் அங்குமிங்கும் அழகாகத் திரும்பியது. சின்ன குழந்தைகள் உட்காரும் கார் என்பதால் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஒட்டினர்.

மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் இப்பொழுது, மாற்று சக்திகளை பயன்படுத்தும் பாலாஜியின் திறமை வியக்க வைக்கிறது. பாலாஜியின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுக்கும் பெற்றோர், சகோதரன் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வருங்காலத்தில் பாலாஜி போன்ற மாணவர்களே இந்த உலகை மாற்றப் போகிறவர்கள். 

பாலாஜிக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Saturday, May 19, 2012

அவசியம் தேவை - டெர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance)

பெரும்பாலும் நாம் எடுக்கும் பாலிசிகள் மற்றவர்கள் சொல்லி எடுத்ததாகவே இருக்கும். அதிலும், நமது நண்பர்களோ, உறவினர்களோ இன்சூரன்ஸ் முகவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் சொன்னதுக்காகவே பாலிசி எடுத்து விடுவோம். பாலிசியில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போவதில்லை. டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்சூரன்ஸ் என்பது முதலீடு அல்ல என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள்.


நம் ஆட்கள் முதலில் கேட்கும் கேள்வி, "இத்தனை ரூபாய் நான் பிரீமியம் கட்டினால் எனக்கு இத்தனை வருடங்கள் கழித்து எவ்வளவு கிடைக்கும்" என்பது. நானும் முதலில் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதாவது பணம் திரும்ப வரும் நோக்கில், இரண்டு மூன்று பாலிசிகளும் எடுத்திருக்கிறேன்.

இந்த வகையான பாலிசிகளில் பணம் கடைசியில் திரும்ப வரும். ஆனால் இழப்பீடு(Coverage) மிகவும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஐம்பது ஆயிரம் பிரீமியம் என்றால் ஐந்து லட்சத்துக்குள் தான் இழப்பீடு இருக்கும். பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த இழப்பீடு(ஐந்து லட்சம்) கிடைக்கும். இல்லையென்றால் பாலிசி முதிர்வு காலத்தில் பாலிசிப் பணம் வரும்.

டெர்ம் இன்சூரன்ஸ் என்பது, பாலிசி முதிர்வுக் காலத்தில் பணம் திரும்பி வராது, ஆனால் இழப்பீடு அதிகமாக இருக்கும். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் இருபது ஆயிரத்துக்குள் தான் இருக்கும். இன்சூரன்ஸ் கம்பெனி, உங்கள் வயசு மற்றும் வருமானத்தைப் பொறுத்து இது கொஞ்சம் மாறும். 

அதிகப் பணம் செலுத்தி குறைவான இழப்பீடு பெறுவதை விட, குறைவான பணம் செலுத்தி அதிக இழப்பீடு பெறலாமே.

உங்களின் ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு மேல் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு, உங்களின் இழப்பு பெரிதுதான் என்றாலும், அவர்களை கொஞ்ச காலத்திற்கு கவலை கொள்ளாமல் இருக்க இந்தப் பத்து மடங்கு பணம் உதவும். நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் வேறு வகையில் லோன் வாங்கி இருந்தால், அதற்கும் சேர்த்து டெர்ம் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

எனக்குப் பணம் திரும்ப வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு; உங்களால் வருடம் ஐம்பது ஆயிரம் பிரீமியம் கட்ட முடியும் என்றால், இருபது ஆயிரத்துக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டு, மீதி இருக்கும் முப்பது ஆயிரத்தை நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்ய முடியுமே.

ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு, இன்னொரு  இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் - முக்கியமாக மெடிகிளைம் பாலிசி எடுக்க வேண்டும். எனவே, வாழ்நாளுக்கும் உங்களுக்கு ஒரு டெர்ம் பாலிசி மற்றும் ஒரு மெடிகிளைம் பாலிசி போதும்.

இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்த பின்னர், வேண்டுமெனில் மற்ற பாலிசிகளில் முதலீடு செய்யலாம்.

குறிப்பு:
நான் இன்சூரன்ஸ் முகவர் இல்லை. இன்சூரன்ஸ் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்துள்ளேன். நாணயம் விகடனைத் தொடர்ந்து படிப்பதால், இன்சூரன்ஸ் பற்றிய சந்தேகங்கள் இப்பொழுது இல்லை. நன்றி - நாணயம் விகடன்.

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.